Main menu:

தமிழக அரசியலில் எனது தொடர் புத்தம் புது பூமி வேண்டும்

எனது புத்தகங்கள்

அகம் புறம் அந்தப்புரம்
முகலாயர்கள்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
செங்கிஸ்கான்

Site search

Recent Posts

Categories

நட்பு வட்டம்

Archives

site stats

RSS RSS

ஆயிரம் தீவுகள்

தமிழக அரசியல் இதழில் எழுதிவரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.

ப்போது வானமும் பூமியும் ஒன்றாக ஒட்டித்தான் கிடந்தன. ரூ என்ற கடவுள்தான் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தி வைத்தார். பின்பு ரூ, புதிதாக படகு ஒன்றைக் கட்டினார். எதற்கு? பூமி முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக. அது, ரூவின் அழகான சகோதரி ஹினாவின் ஆசை.

இந்த பூமி எவ்வளவு பெரியது? எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? எங்கெல்லாம் புதிதாக நிலங்கள் இருக்கின்றன? இப்படி அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம். படகு கிளம்பியது. ஹினா, புதிய நிலப்பகுதிகளைக் கண்டு சொல்வதற்காக படகின் முன்புறம் இருந்துகொண்டாள். ரூ, படகின் பின்புறம் இருந்தபடி துடுப்பு போட்டார். ‘உலவும் கடல் காற்றினிலே’ என்று பகலில் பாடல்களோடு பயணம். இரவில் ரூ உறங்கினார்.

எட்டுத்திசைகளிலும் சுற்றி வந்தார்கள். புதிதாக பல தீவுகளைக் கண்டுபிடித்தார்கள். பயணம் நீண்டுகொண்டே சென்றது. ஒருநாள். சூரியன் மறையும் வேளை. எதிர்த்திசையில் கடலிலிருந்து நிலா பாதி வெளிப்பட்டு தெரிந்தது. அதன் ரம்மியத்தைக் கண்டு மயங்கி நின்ற ஹினாவுக்கு நிலவுக்குச் செல்ல ஆசை பிறந்தது. படகு நிலவை நோக்கி நகர்ந்தது.

அத்தனை அழகான நிலவில் சென்று இறங்கிய ஹினா, திரும்பிவர மனமின்றி அங்கேயே தங்கிவிட்டாள். ரூவின் பயணங்கள் தொடர்ந்தன. நிலவிலிருந்தபடியே தன் சகோதரனுக்கு வழிகாட்ட ஆரம்பித்தாள் ஹினா.

இது பல நூற்றாண்டுகளாக பாலிநேசியர்கள் சொல்லி வரும் புராணக் கதை. யார் அவர்கள்?

பாலிநேசியர்களின் பயணம்

பாலிநேசியர்கள், ஆதி உலகின் ஆகச் சிறந்த கடல் பயணிகள். தீவுகளில் வசித்தவர்கள். படகு கட்டுவதில் கில்லாடிகள். மீன்பிடித்தல் முக்கியத் தொழில். மீன் பிடிக்க கடலில் புது பகுதிகளைத் தேடி முன்னேறும்போது புதிய தீவுகள் தென்பட்டன. ‘நான் மீனைப் பிடிக்கப் போனேன். ஒரு தீவைப் பிடித்து வந்தேன்’ என்று சந்தோஷமாக பெண்டாட்டி, பிள்ளைகளோடு தீவு விட்டு தீவு தாவி குடியேற்றத்தைப் பரப்பினார்கள்.

அவர்களது படகுகள் மரம், கல், எலும்பு, தேங்காய் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை. நீண்ட தூரப் பயணங்களுக்கென இரண்டு படகுகளுக்குக் குறுக்கே சில கட்டைகள் வைத்து இணைத்துக் கட்டினார்கள். இந்த இரட்டைப் படகுகளில் ஒன்று மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு. இன்னொன்று உணவுப் பொருள்களுக்கு. குளிர், மழை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு திறந்த படகில் பல நூறு மைல்கள் பயணம்.

சரி, பாதையை எப்படி நினைவில் வைத்துக் கொண்டார்கள்? இயற்கையே துணை. வானமே வழிகாட்டி. சூரியன், நிலவு, குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து பாதைகளை யூகித்துக் கொண்டார்கள். கடல் நீரோட்டம், மேகங்கள் நகரும் திசை, பறவைகள் உள்பட இன்னும் சில விஷயங்கள் அவர்களை வழி நடத்தின. வானம் தெளிவாக இருக்கும்வரை எல்லாம் சரி. புயல் மழை நாள்களில்? பிழைத்துக் கிடந்தால் பயணம் தொடரும். இல்லையேல், ஜல சமாதி.

அருகில் தீவு ஏதாவது தென்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பாலிநேசியர்கள் கடைபிடித்த உத்தி சுவாரசியமானது. பயணத்தில் ஃப்ரிகேட் என்ற கடல் பறவைகளையும் தங்களோடு கொண்டு சென்றார்கள். அவை நீண்ட தூரம் கடலில் பறக்கும் திறன் இல்லாதவை. நீரில் இறக்கைகள் நனைந்துவிட்டால் அவற்றால் பறக்க இயலாது. அருகில் நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே அவை நீர்மேல் பறக்கும். பாலிநேசியர்கள் தம் படகிலிருந்து ஃப்ரிகேட் பறவைகளைப் பறக்க விடுவார்கள். அவை வெகு சீக்கிரத்தில் படகுக்குத் திரும்பிவந்துவிட்டால் அருகில் நிலப்பரப்பு இல்லை என்று பொருள். அவை திரும்பவேயில்லை எனில், தீவை நெருங்கி விட்டதாக அர்த்தம். உணவு தேடி கூட்டமாகப் பறந்து செல்லும் பிற பறவைகளை வைத்தும் புதிய தீவுகளைக் கண்டடைந்தார்கள்.

இப்படி பாலிநேசியர்கள் கண்டடைந்த தீவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரத்துச் சொச்சம் இருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின், பசிபிக் கடலில் ஐரோப்பியர்களின் நெடும் பயணங்கள் ஆரம்பமாயின. அப்போது பாலிநேசியர்களின் தீவுகளைச் சென்றடைந்த ஐரோப்பியர்களுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, எக்கச்சக்க ஆச்சரியம்.

எத்தனை தீவுகள். அத்தனையிலும் மக்கள். ஆனால் இன்னும் கற்கால மனிதர்கள் போலவே இருக்கிறார்களே. எந்தவிதமான உலோகத்தையும் இவர்கள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லையே. பல மைல்கள் கடந்து ஒரு தீவை விட்டு இன்னொரு தீவுக்கு எப்படி இடம் பெயர்ந்திருப்பார்கள்? அடடா, எவ்வளவு பெரிய படகுகள்? எப்படி வடிவமைத்திருப்பார்கள்?

அட, கரும்பு, தென்னை, மூங்கில், வாழை, மலை ஆப்பிள் – இத்தனை விதமான பயிர்களை விளைவிக்கிறார்களே. எல்லா தீவுகளிலும் இந்தப் பயிர்கள் இருக்கின்றனவே, எப்படி? சர்க்கரை வள்ளிக் கிழங்கும் இருக்கிறதா? அது தென் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்லவா? அது எப்படி இங்கு வந்தது?

இன்னும் சொல்லப்போனால் அநேக பாலிநேசிய தீவுகளில் மக்கள் பேசும் மொழியும் ஏறக்குறைய ஒரேபோலத்தான் இருந்தது. அவர்களது கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் – இப்படி பல விஷயங்கள் பொதுவாக இருந்தன. தங்கள் தீவைச் சுற்றியிருந்த பல தீவுகளோடு அவர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். எந்தெந்த தீவுகள் எவ்வளவு தொலைவில் எந்தெந்த திசைகளில் அமைந்திருக்கின்றன என்று தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.

கடல் பயணம் குறித்த பாலிநேசியர்களின் அறிவைக் கண்டு ஐரோப்பியர்களுக்குத் தலை கிறுகிறுத்தது. மெகல்லன், வாஸ்கோ ட காமா, கொலம்பஸ் இவர்களுக்கெல்லாம் தாத்தன்கள் இங்கே இருக்கிறார்களே என்று வாய்பிளந்து நின்றார்கள். ஐரோப்பியர்கள் அந்தத் தீவுகளில் கால்பதித்த பின்னரே பாலிநேசியர்களின் சிறப்பை உலகின் மற்ற பகுதியினர் அறிய ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகே பாலிநேசியர்களின் பயணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.

வரைபடத்தில் பாலிநேசியாவின் அமைவிடம் எது?

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில்  மீன்களுக்கு அள்ளிப்போட்ட பொரிபோல, ஆயிரத்துச் சொச்ச தீவுகள் உள்ளன. ஆரம்ப கதையில் வந்த அண்ணனும் தங்கையும் பயணம் செய்ததாகச் சொல்லப்படுவது இங்குதான். இந்தப் பகுதிகளில் கி.மு.வில் ஆரம்பித்த குடியேற்றங்கள், மெள்ள மெள்ள கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கின்றன. எந்த எல்லைவரை? ஆஸ்திரேலியாவுக்கு நேர்கிழக்கில் ஈஸ்டர் தீவுகள் வரை. தென்கிழக்கில் நியு ஸிலாந்து வரை. வடகிழக்கில் ஹவாய் (Hawai) தீவுகள் வரை.

இந்த மூன்றையும் வரைபடத்தில் கோடுகளால் இணைத்துப் பார்த்தால் குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் தெரியும். அந்த முக்கோணத்துக்குள் அடங்கிய தீவுகள் சேர்ந்த பகுதிதான் பாலிநேசியா (Polynesia, கிரேக்க மொழியில் ‘பல தீவுகள் சேர்ந்த பகுதி’ என்று பொருள்). அங்கே குடியேற்றத்தை ஏற்படுத்தியவர்களே பாலிநேசியர்கள் (Polynesians).

சரி, பாலிநேசியர்களின் முன்னோர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும்?

உலகின் முதல் கடல் கடந்த குடியேற்றம் பிலிப்பைன்ஸில் நடந்திருக்கலாம்.  கி.மு. 50000 சமயத்தில் இந்தோனேஷியாவின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு மனிதன் இடம் பெயர்ந்திருக்கலாம். அப்போது அந்தக் குட்டித் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கடல் மட்டம் இப்போது இருப்பதைவிட சுமார் நூறு மீட்டர் வரை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் என்ன, பாலம் கட்டிக் கொடுக்க இதிகாச ராமருக்கு அனுமன் அமைந்ததுபோல, அந்த மக்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. ஆக, படகுகள் மூலம்தான் அவர்கள் ஆஸ்திரேலியாவிலும் நியு கினியாவிலும் குடியேறியிருக்க வேண்டும். பின் அங்கிருந்து அருகிலுள்ள தீவுகளுக்கு குடியேற்றங்கள் பரவியிருக்க வேண்டும்.

கிறித்துவுக்கு முன்னரே ஹவாய் தீவுகளை பாலிநேசியர்கள் அடைந்திருக்க வேண்டும். கி.பி. 440ல் ஈஸ்டர் தீவில் குடியேறியிருக்க வேண்டும். கி.பி. 1150ல்தான் நியு ஸிலாந்தில் கால் பதித்திருக்க வேண்டும். இவை எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தகவல்கள்.

ஆனால் வரலாறு பாலிநேசியர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்ன பெயருடைய பாலிநேசியர், இந்த ஆண்டில், இன்ன தேதியில் இந்தத் தீவைக் கண்டடைந்து தம் ரைட் லெக்கைப் பதித்தார் என்று எழுதப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. பாலிநேசியர்கள் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சிகள் வழி கிடைப்பவையே.

நிலவில் பெண் உருவமாகத் தெரியும் ஹினா (நமக்கு வடை சுடும் பாட்டி), பாலிநேசியர்கள் செய்யும் கடல் பயணங்களுக்கெல்லாம் ரூட் மேப் போட்டுக் கொடுக்கிறாள் என்பது பாலிநேசியர்கள் நம்பிக்கை. இம்மாதிரியான புராண கதைகளும், நாடோடிக் கதைகளும் பதிவு செய்யப்படாத பாலிநேசியர்களின் சாகசப் பயணங்களை இன்றுவரை உயிரோடு வைத்திருக்கின்றன.

எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்?
ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன்
கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)
ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக…
கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்…
ராம : நான் யார் தெரியுமா? ராமன்! தசரத மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
கா.வ.: (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.
ராம : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்து தாரங்களை மணக்கலாமே. அரசீ! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள்; அடிமையாக வாழ்கிறேன். கண்ணே உன்னைக் கண்டதுமே காதல்…
கா.வ.: காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே, என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?
ராம : பொறுமைக்கும் அளவுண்டு… பொன்மானே!
கா.வ.: நீ எருமை
ராம : நான் ஆண்.. ஆரியன்!
கா.வ.: அசல் கோழை!
ராம : நீ தனிமையில் இருக்கிறாய்.
கா.வ.: நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக்குண்டு.
ராம : உன்னை அடையாது விடமாட்டேன். (தாவிப் பிடிக்கிறான்)
கா.வ.: உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது. (எட்டி உதைக்கிறாள். ராமன் கத்துகிறான்.)
ராம : தம்பி லட்சுமணா ஓடிவாயேன். அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போராளே, அவளை உருக்குலைத்து விடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி.. தம்பி… (லட்சுமணன் ஓடிவந்து காமவல்லியைத் தடுக்கிறான்.)
லட்சுமணன் : ஏய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி…
கா.வ.: மானத்தை விட்டவனே, மரியாதையாகப் பேசு.
(இருவருக்கும் ஏற்பட்ட வாள் சண்டையில் லட்சுமணன் அவளது மூக்கையும் காதையும் வெட்டிவிடுகிறான்.)
கா.வ.: அய்யோ, அண்ணா! போய்விட்டதே தமிழன் பெருமை! ஆரியன் என்னை அவமானப்படுத்தி விட்டானே!
(காமவல்லி அங்கிருந்து அலறி ஓடுகிறாள். தான் சந்திக்கும் கரன், தூஷ்ணனிடம் ராமனும் லட்சுமணும் தனக்கு செய்த அவமானங்களைச் சொல்லிக் கதறுகிறாள்.
கா.வ.: என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள், பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா! (சாகிறாள்.)

**
மானைப் பிடிக்கச் சென்றிருக்கிறான் ராமன். சீதைக்குக் காவலிருக்கிறான் லட்சுமணன். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, லட்சுமணன் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது அங்கு வரும் ராவணனை சீதை வரவேற்கிறாள்.)

ராவணன் : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்.
சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை.
ராவ : இல்லை உன் உருவம். பேரழகி, நீ யாரோ?
சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்.
ராவ : ஜானகி… ராமனின் மனைவி.
சீதை : ஆமாம்.
ராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவற்றின் அமைப்புக்கே எடுத்துக்காட்டு!
சீதை : பெரியவரே! உங்கள் பிரியமொழிகள் என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!
ராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்… வேல்விழி…
சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போது உரையாடும் தாங்கள் யாரோ?
ராவ : நான் இலங்கையின் வேந்தன்… ராவணன்.
சீதை : (திடுக்கிட்டு) ராவணன்! ராட்சதன்!
ராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள், நான் மனிதன்… மறத்தமிழர் மன்னன்.
சீதை : (நடுங்கிக்கொண்டே) காமவல்லியின் அண்ணன்.
ராவ : ஆமாம்.
சீதை : அய்யோ, மோசம் வந்துவிட்டதே, நாதா! லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!
ராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க.
சீதை : ஏன் இங்கு வந்தாய் நான் தனிமையாக இருக்கும்போது?
ராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்கு புத்தி கற்பிக்க.
சீதை : அதற்கு அவரிடம் போ.
ராவ : இல்லை, அவன் வரவேண்டும் என்னிடம்.
சீதை : அதற்காக.
ராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்.
சீதை : அது அநீதி! (கத்துகிறாள்)
ராவ : இல்லை; அரச மரபு.
சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.
ராவ : நீ பாவிகளின் மனைவி. என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய். அந்த ஒரு குற்றத்துக்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னை அல்ல; உன் கணவனை.
சீதை : அதற்கு?
ராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு. (நெருங்கிப் பிடிக்கிறான். சீதை அலறுகிறாள்.)
சீதை : வேண்டாம்! என்னை விட்டுவிடு.
ராவ : விட்டுவிடலாம். அதனால் அந்த மட்ட ரகங்களுக்குப் புத்தி வந்துவிடாது. உம் வந்துவிடு.
(அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு தேரிலே ஏறிப்போகிறான்.)

***

தன் படத்தில் ராவணனை நல்லவனாகக் காட்டுகிறார் மணிரத்னம் என்ற பேச்சு பரவலாக இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு முன்பே ஆர். எஸ். மனோகர் தனது லங்கேஸ்வரன் நாடகத்தில் அசல் ராவணனைக் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் பெரியார், எம்.ஆர். ராதா. எழுத்தின் மூலம் பெரியார், தமிழர்களுக்கான ஒரிஜினல் ராமாயணத்தை உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார். எம்.ஆர். ராதா, தனது ராமாயணம் நாடகம் மூலம் செய்த பகுத்தறிவுப் புரட்சி மிரட்டலானது. எம்.ஆர்.ராதா, ராமன் கதாபாத்திரத்தில் நடித்த ராமாயணம் நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகளுக்கான வசனங்களைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

நாடகத்தில் ராமனாக எம்.ஆர். ராதா (குனிந்திருப்பவர்)

நாடகத்தின் முழு வசனமும் என்னிடம் உள்ளது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக தகவல் திரட்டும்போது பெரியார் திடல் நூலகத்தில் எனக்கு இந்த நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடித்த, எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் இருந்த சிலரோடு பேசியிருக்கிறேன். அவர்களது அனுபவங்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். ராதா நடித்து அந்த நாடகத்தைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ராதாவின் நாடகம் You Tubeல் கிடைத்தால் எப்படி இருக்கும்!

***

நாடகம் குறித்து அண்ணாதுரை

நடிகவேள் இராதா நடத்தும் ‘இராமாயணம்’ நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாகக் கூறிக்கொண்டு, கம்பன் தமிழகத்தாருக்கு கரைபடிந்த காவியத்தை தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் தேவகதை ஆக்கப்பட்டது. இன்று நடைபெற்று வரும் ‘கலாச்சாரப் போரின்’ விளைவாக, ஆரிய காவியங்களின் உண்மைகளும் தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன.

குத்தூசி எஸ். குருசாமி

வடநாட்டில் இராவணனைப் போன்ற உருவத்தைச் செய்து தீயிட்டுக் கொழுத்துகின்றனர். அதுபோல தென்னாட்டில் தமிழகத்தில் ஆரிய இராமனைப் போன்ற உருவஞ்செய்து கொழுத்தப்படும் நிலையை உண்டாக்க வேண்டும். தமிழன் வீட்டில் இராமன் படம் இருத்தல் கூடாது. இராமன் தமிழ் இனத்தின் எதிரி என்பதை உணர வேண்டும். இதுவே இந்நாடகத்தின் இலட்சியம்.

பெரியார்

நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வி. எஸ். சந்தானம் அய்யங்கார்

நண்பர் இராதா அவர்கள் நடத்தும் இராமாயணத்தைப் பார்க்கா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். பலர் சாஸ்திரத்துக்கு முரண்பாடாய் இருப்பதாக என் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வியுற்றேன். அப்படி நினைப்பவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்களென்பது திண்ணம். தற்காலம் இராதா அவர்கள் விபரமாக உண்மையை (இராமாயணம்) எடுத்துக் காட்டுகிறார்கள். இதை எவ்விதத்திலும் முறை தவறுதல் என்று பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் கூற ஞாயமில்லை.

ஸ்ரீநிஷா – The Winner

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.

இப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.

வருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.

ஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்!

பைனல்ஸ் வரை தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள்! இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.

ஸ்ரீநிஷாவுக்கான ஃபோரம்

ஸ்ரீநிஷா பற்றி அண்ணாச்சி

ஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்! டௌன்லோட் செய்ய.