ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்…

சமீபத்தில் கவர்ந்த பாடல் வரிகள். அதனோடு பொருந்திப்போகும் அரசியல் நிகழ்வுகள். வரிகள் மாற்றியும், மாற்றப்படாமலும்.

***

ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்

ஜிந்தாக்குதா…

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப

நல்ல புள்ளை இல்லை

ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம்

நான் செல்லப் புள்ளை இல்லை

சிபிஜ அன்புப் புள்ளை

கட்சியின் கவர்ச்சிப் புள்ளை

என்னோட பேரு இல்லா மீடியா நியூஸே இல்லை

ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா

ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா

*

என்னமோ ஏதோ…  

எண்ணம் திரளுது கனவில்!

டெல்லி பிரளுது நினைவில்!

கண்கள் இருளுது நனவில்!

என்னமோ ஏதோ…

முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

விட்டுப் பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை

ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…

*

யாரது யாரது

யாரது யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தைத் தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது

யாரது யாரது

யாரது யார் யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது

விலகாமல் விலகி நிற்பது

விடையாகக் கேள்வி தந்தது

தெளிவாகக் குழம்ப வைத்தது

யாரது யாரது…

*

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ  

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப்போல் நீக்கொத்துரதால

அட கூட்டணி வெக்கத்தான் அழைப்பாய்களா

இல்ல, திராட்டுல வுட்டுத்தான் வதைப்பாய்ங்களா

தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம

தடுமாறிப் போனேனே

நானே நானே!

யாத்தே யாத்தே யாத்தே…

*

ஒரிஜினல் வரிகளுக்குச் சொந்தக்காரர்களான நா. முத்துக்குமார், மதன் கார்க்கி, யுகபாரதி, சிநேகன் ஆகியோருக்கு நன்றி.

மன்மத அம்பு

கூடம் முழுக்க ஆண் வாசனை. கமல் வயதை (பதினைந்து) ஒத்தப் பையன்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடிக் கொண் டிருந்தார்கள். ஒன்றரை டஜன் தேறும். டான்ஸ் ரிகர்ஸல். தமிழ்நாட்டில் கமலை யாரும் சட்டை செய்யவில்லை. மஹாராஷ்டிரா வரவேற்றது. அம்மாவின் கை வளையல்களே முதலீடு. மும்பை தவிர மற்ற இடங்களிளெல்லாம் கமலின் நடனக்குழு பறந்து பறந்து ஆடியது – பாங்க்ரா, கதக், மயில் டான்ஸ். மகாராஷ்டிரா காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
‘கமல் புதுசா ஒரு பொண்ணு உன்னைப் பார்க்கணும்னு வந்ததிருக்கா’ – சத்யப்ரியா கமலிடம் கூறினார். (பின்னாளில் கமலுடன் ஜோடியாக‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ படத்தில் நடித்தவர். இப்போது அம்மா நடிகை.)
கமலுக்கு அப்போது மராத்தியோ, இந்தியோ தெரியாது. அந்தப் புதிய பெண்ணை முதன் முதலில் பார்த்தபோது எதுவுமே பேசத் தோன்றவில்லை. சந்தித்த வேளையிலேயே கமல் தனக்குள் காதல் அரும்பிவிட்டதை உணர்ந்தார்.
பெயரைக்கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவளை கிருஷ்ணகுமாரி என்று அழைத்தார்கள். அந்த அழகை வருணிக்க வார்த்தைகளைத் தேடுவதிலேயே கமல் நேரத்தை செலவிட்டார். கமலின் நடனக்குழுவில் ஆட விருப்பம் தெரிவித்து வந்திருந்தாள். அவளை மனதார வரவேற்றார்.
‘என்னடா இவன் கிருஷ்ணகுமாரியோடயே சுத்தறான் எப்பவும். மச்சான், மச்சம்டா உனக்கு. இன்னும் முளைச்சு வெளியில வரல மீசை. அதுக்குள்ள லவ்வு!’ – குழுவினர் கமலைக் கலாய்த்தனர்.
உதிர்வதற்காகவே மலரும் பூபோல கமலோடு ஆடத் தொடங்கிய சில வாரங்களிலேயே அகால மரணம் அடைந்தாள் கிருஷ்ணகுமாரி.
கமலின் காதல் சோகத்தைக் கால்கள் பேசின. தன்னையே மறந்து ஆடத் தொடங்கினார். எம்பி எம்பி குதித்து ஆடியதில் பந்து கிண்ண மூட்டு விலகி மேடைக்கு வெளியே விழுந்தார். உயிரைப் பிழியும் வலி. சிவாலயா நடனக் குழு பாதியிலேயே சென்னைக்குத் திரும்பியது.

*

தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளர் வேலை. கமல் சம்பாதிக்க ஆரம்பித்தார். ஒரு பாடலுக்கு இருநூறு, முன்னூறு என்று கம்பெனிக்கு ஏற்றவாறு கிடைத்தது. குட்டி நடிகனாக கமலைக் கொஞ்சிய கலைஞர்கள் அவரை இப்போது நடன உதவியாளராகவேப் பார்த்தார்கள். கமலும் தன் எல்லையில் எட்டி நின்று அவர்களுக்கு ஆடக் கற்றுத் தந்தார்.

கமலின் மூட் இப்போது திசைமாறி இருந்தது. நிறையவே ரகம் ரகமாகப் பெண்கள் அவரைப் பாதித்தார்கள். திரையுலகில் மிக இயல்பாக அமைகிற சுகம் அது.

‘டெம்ப்டேஷன்ஸ் ரொம்ப ஜாஸ்தி இந்த ஃபீல்டுல. ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்வார் தங்கப்பன் மாஸ்டர். ஏதாவது பெண்ணோட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா ‘டேய் அரட்டை அடிக்காத. வேலையைப் பாரு’ன்னு சொல்வார்.’

*

‘நான் சொல்றதைக் கேளு. ஒரு மந்திரம் கத்துத் தரேன். திரும்பத் திரும்பச் சொல்லு.’
‘அது சான்ஸ் வாங்கித் தருமா?’
கமல் தந்தையிடம் ஆவேசமாகக் கேட்டார். அப்பா அழுத்தம் திருத்தமாக அந்த வாசகத்தைக் கூறினார்.
‘நான் தேய்ந்து அழிவேனேயன்றி துருப்பிடித்து அழிய மாட்டேன். இதைச் சொல்லிண்டே இரு. படம் வரலன்னாலும் பக்குவம் கிடைக்கும். உன் அம்மா கருத்துப்படி எதைச் செய்யறியோ அதைத் திருந்த செய். சிறந்த டான்ஸ் மாஸ்டர்னு பேர் வாங்கு முதல்ல’
‘நான் மைசூர் கிளம்பறேன். நான் அவனில்லை ஷூட்டிங்’.
‘இன்னொரு விஷயம்…’ அப்பா தயங்கினார்.
‘சொல்லுங்க சீக்கிரம்…’
‘பீடி-சிகரெட், பொண்ணு, தண்ணி எதுலயும் ஈடுபட மாட்டேன்னு சத்தியம் செய்.’
‘காந்தி கதையா மறுபடியும்’
‘ஆமாம். வீணா கெட்டுப் போகாதே. இன்னும் ஒழுங்கா நடிக்கவே ஆரம்பிக்கல. உடம்பு முக்கியம்.’
‘நான் ஏன் பிறந்தேன் ஷூட்டிங்லயே எம்.ஜி.ஆர் சொல்லி எக்சர்சைஸ் பண்ணத் தொடங்கினேன். அவர் எனக்கு வாத்தியார் இதுல. நீங்க சொன்னதுல ரெண்டு ஓகே. சிகரெட், தண்ணி ‘கப்பு’ – விட்டுடலாம். மூணாவது முடியும்னு படல. வரட்டுமா.’
‘யூ டோன்ட் நோ’ இது கமலின் பன்ச் டயலாக். ராகத்தோடு பெண்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேனில் பேசினார். போன் நம்பர் கொடுப்பார். அது கமலின் நிஜமான தொலைபேசி எண் என்று மார்கழி இரவுகளில் எட்டரை மணியிலிருந்து ரசிகைகள் மாறி மாறிப் பேசி அழைத்தனர். அது உதயம் புரொடக்ஷன்ஸ் போன் நம்பர். சில விஐபி விசிறிகளுக்கு கமலின் நிஜமான எண் தெரியும். அவர்களும் உரிமையுடன் கமலிடம் உறவாடினார்கள்.

‘ரசிகைகள் எனக்கே புல்லரிக்க கன்னம் சிவக்க போனிலேயே முத்தமிட்டுப் பேசியது ஆசை மொழிகள்.’

*

கமல் பாலசந்தரின் ஆள் என்ற முத்திரை பலமாகக் குத்தப்பட்டது. அவருக்கு வேலை இருந்தாலும் இல்லையென்றாலும் கலாகேந்திராவுக்குப் போய் வந்தார். கமலுக்கு வாய்த்த மற்ற படங்களில் அவர் மேனி அழகை மட்டுமே காட்ட முயற்சித்தனர்.
‘Girls Hero, Sex Symbolனு என்னைச் சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கலை. பொம்பிளை ஜெயமாலினி மாதிரி ஆம்பிளை ஜெயமாலினியா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்களோன்னுகூட நினைச்சேன். இந்த இமேஜ் அட்டை மாதிரி என்னோட ஒட்டிட்டு இருக்கு. இது போய் நான் ஆக்டர்னு பேர் வாங்கணும்.’

*

வாணியுடனான காதலும் நாளொரு நளினமும் பொழுதொடு பொலிவுமாக வளர்ந்தது.
‘முதல் பரிசு Brute Perfume. அதற்குப் பின் ரெகுலரா கொலோன்கள் சட்டைகள் வாங்கி அனுப்புவேன். வெளி நாடுகளுக்குப் போகும் போதும் நிறைய வாங்கி வந்து தந்திருக்கிறேன். Elite of Madras என்று சொல்லக் கூடிய நண்பர்கள் மூலம். ‘அவருக்கு ஒரு பார்சல் தரணும். எனக்காக ப்ளீஸ் எடுத்துண்டு போறீங்களா’ என்பேன்.
கமல், அவர்கள் வீட்டுக்குப் போய் கிஃப்ட் பார்சல்களை வாங்கிக் கொள்வார்.’
சென்னையில் கிடைக்காத சராஹ் சட்டைகள் மும்பையில் மேல்தட்டு மக்களிடையே பிரபலம். அந்த ஷர்ட் வகைகளில் CD என்று போட்டிருக்கும். கமலுக்கென அவற்றை அனுப்பிக் கொண்டே இருந்தார் வாணி. கமலுக்கும் ‘சராஹ்’ பிடித்துவிட்டது. சதா சர்வ காலம் வாணியின் சராஹ் சட்டைகள் கமலைத் தழுவிய படியே வலம் வந்தன. வாணி சென்னைக்கு வரும்போதெல்லாம் மன்னி கலாட்டா செய்தார்.
‘இதோ பார். உன் ஷர்ட் தொங்குது. இதன் பேர் வாணி ஷர்ட். கவச குண்டலம் மாதிரி இதையே அவன் நாலு நாளாப் போட்டுண்டு இருக்கான். அது கிழியற வரைக்கும் விடமாட்டான் போலிருக்கு.’
இடையில் அவள் ஒரு தொடர்கதையின் வங்காள வடிவத்துக்காக கல்கத்தா போனார். இரண்டு நாள்களில் சென்னையில் பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சி. கமல் – ஸ்ரீப்ரியா நடிக்க கே. பாலசந்தர் இயக்கும் நாடகம் ஒன்றும் அதில் இடம் பெறவிருந்தது. அதற்கான ஒத்திகை வேறு.

கல்கத்தாவில் மாலா சின்ஹாவுக்கு கமலை விடவே மனசு வரவில்லை. மிக மூத்த நடிகை. ஆனாலும் சவுகார் ஜானகி போல் இளமையாக வாழ நிறைய முயற்சிகள் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக கமலை Can I kiss you? என்று மாலா சின்ஹா மரியாதை நிமித்தமாகக் கேட்டார்.

மறுக்க மனம் வரவில்லை கமலுக்கு. சரி என்றார். இச் என்ற சத்தத்தோடு அவர் நெற்றியில் மாலாவின் லிப்ஸ்டிக் வளர்பிறையாகி பதிந்தது.

*

‘திருமணம் என்ற பழைய சட்டத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லாதவன் நான். ஒரு பெண்ணின் நட்பும் உறவும் அவசியப்படும்போது மட்டும் கூடுவது நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனமானது. நான் மணக்கப் போகும் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு அகராதியில் நட்பு, காதல் என்ற இரண்டு விளக்கங்களே காணப்பட்டன.
‘நட்புத் திருமணம்’ என்ற வழக்கமில்லாத வார்த்தையைவிட காதல் என்பது பத்திரிகைகாரர்களுக்கு வசதியாக இருந்தது. ஆகவே அந்தப் பழையப் பெயர் பலகையையே நானும் கழுத்தில் கட்டிக் கொண்டு விட்டேன்.
மொத்தத்தில் இது என் சகஜீவிகளையும் என்னையும் சண்டை இல்லாமல் திருப்திப்படுத்தும் ஏற்பாடு. எனக்குப் பிடித்திருக்கிறது.’
கமலின் வாணியுடனான திருமண அறிவிப்பு கட்டுரை அது.

*

சரிகாவைக் கண்டதும் எஸ்.பி.எம். யூனிட்டில் ஆச்சர்யம் காட்டினார்கள். திடீரென்று ஓர் இளம்நடிகையுடன் கமல் செட்டுக்கு வந்திருக்கிறாரே, நமக்கெல்லாம் அவரை அறிமுகப்படுத்துவாரா என்று ஆர்வம் தலை தூக்கியது. எட்டாவது ஃப்ளோர் எதிர்பார்ப்பில் இருக்க கமல் கிண்டல் அடித்தார்.

‘உங்க யாருக்கும் அவங்கள அறிமுகப்படுத்தமாட்டேன். அவங்க எனக்கு மட்டும் ஃப்ரண்டு.’

*

2002ல் கமலின் இரு படங்களிலும் சிம்ரன் கதாநாயகி. பஞ்ச தந்திரத்தில் நகைச்சுவையாக சிம்ரனுக்கு சக்களத்திப் போர். போட்டிப் பாடல், அதைவிட கமல் – சிம்ரன் ரகசியக் காதலை குழந்தைகளும் உணரும் வகையில் ஒரு டூயட்.
‘என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா?
ஊரெங்கும் வதந்திகாற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா?
வளைக்க முயன்றது யாரு
நீயா நானா?
வளைந்து கொடுத்தது யாரு
நீயா நானா?
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது.’
சிம்ரனோடு தொடர்ந்தது தோழமையா அல்லது காதலா என்பதை கமல் மட்டுமே அறிவார். அது இரண்டும் அற்றதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பஞ்சதந்திரம் படத்துக்கு விளம்பர பரபரப்பை ஏற்படுத்தியது.

*

‘ஹலோ நான் டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் பேசறேன். பஞ்ச தந்திரம்னு ஒரு படம் பண்றேன். கமல் சார் நடிக்கிறாரு. சிம்ரன் கதாநாயகி. உங்களுக்கு ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு. நீங்க செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்.’
‘ஸாரி மிஸ்டர் ரவி. கமல் சாரோட ஹீரோயினா நாலு பெமிலியர் மூவில நடிச்சுட்டேன், மறுபடியும் சின்ன வேஷம் பண்ணா சரி வராது. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ. எனிவே என்னை ஞாபகம் வெச்சிருந்து கூப்பிட்டதுக்கு நன்றி.’

ரவிகுமாருக்கு ஏமாற்றமாகிவிட்டது. கவுதமி வீட்டில் மீண்டும் போன் ஒலித்தது. இந்த முறை கமல் லைனில் இருந்தார்.
‘வை டோன்ட் வீ மீட் அகெயின் கவுதமி?’

மந்திரம்போல் ஒலித்தது. கமலின் குரல். சந்தித்தார்கள். இணைந்தார்கள். வழக்கமான காஸ்ட்யூம் டிஸைனர் போஸ்ட், குடும்பத் தலைவி அந்தஸ்து இரண்டும் காலியாகவே
இருந்தது. கவுதமி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கவுதமி, கமலின் பெண்களுக்கும் அம்மா ஆனார். சுப்புலட்சுமி கமலை அப்பா என்று அழைத்தார்.

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. கவுதமியும் கமலுக்காக வழக்கம்போல் மேக்-அப் சாமான்கள் வாங்கினார். கவுதமியுடனான உறவு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கமலுக்கு வழங்கியது.

*

பா. தீனதயாளன் எழுதி சென்ற வருடம் வெளியாகி ஹிட் ஆன கமல் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

படங்கள் நன்றி : எஸ்.வி. ஜெயபாபு.

ஈசன் – முருகேசன்

முருகேஷ் என் நெருங்கிய நண்பன். நல்ல படைப்புத்திறன் உள்ளவன். எனக்கும் அவனுக்குமான ரசனை அலைவரிசை ஒன்றே. கல்லூரி நாள்கள் தொடங்கி இன்று வரை எங்களுக்கிடையேயான உரையாடல்களில் சினிமாவே அதிகம் இடம்பெறும். தற்போது அவன் ஹைதரபாத்தில் சாஃப்ட்வேரில் (வேண்டா வெறுப்புடன்) கல்லுடைத்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்த்த, அவனைக் கவர்ந்த படங்களுக்கான விமரிசனம் எழுதி எனக்கு அனுப்புவான். அவனுடைய நண்பர் வட்டத்துக்கும் அனுப்புவான். அதிலுள்ள பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருக்கும். இதோ இன்றுதான் ஈசன் விமரிசனம் அனுப்பினான். நானும் ஈசன் பார்த்துவிட்டேன். அதற்கான விமரிசனத்தை நான் எழுதவில்லை. பதிலாக, நண்பன் முருகேஷின் கருத்துகளுடன் என்னுடைய சில கருத்துகளும் இணைந்த ஈசன் விமரிசனம் இதோ.

***

பார்த்துப் பார்த்து பழகிப்போன பாடாவதியான பழிவாங்கும் கதைதான். ஆனா, ‘வைக்கிறவ வச்சா ரசம் கூட திராச்சை ரசம்’ மாதிரியான கைப்பக்குவ மேட்டர்தான் ஈசனை ரசிக்க வைக்கிறது.

முக்கிய மந்திரி ஏ.எல் அழகப்பனின் (திமுகவின் ஒரு முக்கிய அமைச்சரின் மேனரிஸங்களை பிரதிபலிக்கிறார்) மகன் வைபவ் (கதாபாத்திரத்தின் பெயர் ‘செழியன்’). மந்திரிக்கே உரிய எல்லா தந்திரங்கள் கொண்ட தந்தை. மந்திரி பிள்ளைக்கே உரிய எல்லா ‘நல்ல்ல்ல’ பழக்கங்களுடன் பிள்ளை. அந்த தங்கமான புள்ள அங்கமெல்லாம் அடிவாங்கி கொலை செய்யப்படுகிறார். ஏன்? எப்படி? நடந்தது என்ன என்று விளக்குவதுதான் இரண்டாம் பாதி.

இது, அக்மார்க் அரசியல்வாதிக்கும், பொளந்து கட்டுற போலீஸுக்கும் நடக்கப் போற மோதல் கதையா? இல்லை, கோடீஸ்வரன் மகளுக்கும் கேடி மகனுக்கும் நடக்கிற காதல் கதையா? இல்லை, பண பலத்தையும் பதவி பலத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிற வாடிக்கையான கதையா? ஒரு தெளிவே இல்லாமல் போகிறது திரைக்கதை, ஆனால் தெளிவான காட்சிகளுடன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இலக்கே இல்லாமல் வீசுகிற காற்று மாதிரி, எங்கே போகிறதென்று தெரியவில்லை. இருந்தும், சில்லென்றுதான் இருக்கிறது.

இரண்டாம் பாதியில், ஃப்ளாஸ்பேக் ஓப்பன் பண்ணும்போதே, விக்டிம் யாரு, கல்ப்ரிட் யாரு, இப்போது பழிவாங்குவது யார் என எல்லா விஷயங்களும் ரசிகர்களுக்கு முன்னமே தெளிவாகப் புரிந்துவிடுகிறது. சசிகுமாரும் அதில் பெரிதாக எந்த டிவிஸ்டும் வைக்க விரும்பவில்லை. இப்படித்தான் கதை போகுமெனத் தெரிந்தபின், ரசிகர்களை கட்டிப்போட்டு உட்கார வைப்பது ரொம்ப சிரமம். ஆனால், அந்த வேலையை சுலபமாகச் செய்துள்ளது சசிகுமாரின் மூளை. கேமரா ஆங்கிள், கதையோட பின்னணி, அங்கங்கே பார்க்க புதுசாக ஒரு சில காட்சிகள், நடிகை அபிநயா மேல் ரசிகர்களுக்கு இருக்கிற பிரியம், இப்படி எல்லாம் சேர்ந்து இழுவையான இரண்டாம் பாதிக்கு வலிமை சேர்க்கிறது.

அரசியல்வாதியில் ஆரம்பித்து அல்லக்கை வரைக்கும் அப்படியொரு அட்டகாசமான நடிகர் தேர்வு. ஈசன் கேரக்டர் ‘துஷ்யந்த்’, இந்த படத்துக்காகவே பிறந்த மாதிரி ஒரு அமைப்பு (‘பசங்க’ வாத்தியார் ஜெயபிரகாஷின் இரண்டாவது பையன். முதல் பையனும் இதில் நடித்திருக்கிறார், வைபவின் நண்பன் வினோத் பாத்திரத்தில்.). கொஞ்சம்கூட மீறாத மிரட்டல்.

அபிநயாவின் ஒவ்வொரு உணர்வையும் ரசிகர்களின் முகத்திலே பார்த்துவிடலாம். அவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியும், அழும்போது துயரமும் நம்மோடு ஒட்டிக்கொள்வதை மறுக்க முடியாது. அதுதான் அவரதும் வெற்றியும் கூட. குடிப்பது காபி இல்லை எனத் தெரிந்ததும், இயல்பாக நடிக்கிறது அவரது முகம்.

ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களைக் கையைப் பிடித்து கூட்டி போகிற யுக்தி தெரிகிறது. நல்ல விஷயம்தான் என்றாலும், தேவைக்கும் அதிகமான நீளமாகத் தெரிகிறது. சுப்ரமணியபுரத்தில் சில முக்கியமான விஷயங்களைக்கூட கதாபாத்திரங்கள் பேசும் ஒருவரி டயலாக்கில் சொல்லிக் கொண்டுபோன சசிகுமார்தானா இது என்ற உறுத்தல் ஏற்படுகிறது. பல ஊர்களில் படத்தின் இரண்டாவது பாதியில் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கத்தரித்துவிட்டார்களாம். சந்தோஷம்.

ஈசனோட அறிமுகக் காட்சியில் இருக்கும் த்ரில், அமைச்சர் கேரக்டர் வழியாக கிழிக்கப்படும் நிகழ்கால திராவிட அரசியல்வாதிகளின் முகங்கள், அங்கங்கே பட்டாசாகச் சிதறுகிற காமெடி ஒன் லைனர்ஸ், பல இடங்களில் பளிச்சிடும் கூர்மையான வசனங்கள் – இன்னும் நிறைய இருக்கிறது நிறை என்று சொல்ல.
இருந்தாலும், பொழுதுபோக்குக்காக அரங்கினுள் நுழையும் ஜனரஞ்சக சினிமா ரசிகனின் பார்வையில் பார்க்கும்போது, ‘பழைய கதை, பபுள்கம் காட்சிகள், எதிர்பார்த்த ஃபிளாஸ்பாக்’ என்பதெல்லாம் பெரும் குறைகள்தாம்.

‘ராம்’ ஜீவாவுக்கும் ‘ஜித்தன்’ ரமேஷுக்கும் உள்ள சம்மந்தம்தான், ஈசனின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும். ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த மாதிரி ஓர் உணர்வு. இருந்தாலும் ஈசன், எந்த உலகப் படத்தையும் நினைவுபடுத்தவில்லை. சசிகுமாரும் தான் ஓர் உலகப் படத்தைப் படைத்துவிட்டதாக சேனல்களில் சொகுசு சோபாக்களில் அமர்ந்து மார்தட்டிக் கொள்லவில்லை. புதிய கதைக் களத்தில் ஒரிஜினலாக ஒரு படம் பார்த்த திருப்தி ஈசனில் கிடைக்கிறது.

படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் சசிகுமாரும் நடித்திருக்கிறார் என்ற நினைப்போடு வந்து ஏமாந்துபோனார்கள். எல்லாம் டிரெய்லர் செய்த வேலை. ஒருவேளை, பாதிக்கப்பட்ட அக்காவுக்காக பழிவாங்கும் தம்பி என்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் அண்ணனாக சசிகுமார் நடித்திருந்தால் படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம். ஏனென்றால் நட்சத்திர வேல்யூ இல்லாத ஒரு படத்துக்கு இத்தனை பெரிய ஓப்பனிங் கிடைக்கிறதென்றால், அதற்கான ஒரே காரணம் சசிகுமார் மட்டுமே.

ஈசன் – சிற்பி கொத்தியிருக்கும் அம்மி. என் பார்வையில் சிலையாகத்தான் தெரிகிறது.

– முருகேஷ்

‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?’

காலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது விடுவான். மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் என்று ‘மாடி வீட்டு ஏழை’ படமெடுக்கத் துணிந்தேனோ அன்று முதல் ‘மொடாக்குடி’ என்று கூறுவீர்களே, அப்படிக் குடிக்க ஆரம்பித்தேன். அந்த மயக்கமும் போதாமல்தான் ‘பெத்தடினுக்கு’ வந்தேன். நடிகனுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்போது, ஊதியமும் சேர்ந்து உயரத்தான் செய்யும்.

மனிதன் எதற்காக உழைக்கிறான்? ஊதியத்திற்காகத்தானே? அது கிடைக்காதபோது ஷூட்டிங்குக்கு போகாமலிருக்கிறேன். பணம் தராத படத் தயாரிப்பாளர்களின் படங்களில் சில சமயங்களில் நடிக்கப் போகாமலிருந்ததுண்டு. பிறகு நானே வருத்தப்பட்டு போகிறது பாவம் கஷ்டப்படுகிறார் என்றுணர்ந்து நடிக்கச் சென்று விடுவேன். உண்மையான ஒரு கலைஞன் ஷூட்டின் இருக்கிறது என்றறிந்த பிறகும் போகாமல் இருக்கமாட்டான்.

அவரது ஊதியத்தை பேசியபடி கொடுக்காத தயாரிப்பாளர்களுண்டா?
நல்ல கறவை மாடு என்றறிந்தால்தான் மிஸ்டர் எம்.ஜி.ஆர். நடிக்கவே ஒப்புக் கொள்வார். இதுதான் உண்மை. நான் எந்தத் தயாரிப்பாளரையும் சரி செட் போடுங்கள் என லட்ச ரூபாய்க்கு செட் போடச் சொல்லிவிட்டு, பிறகு செட்டைப் போய்ப் பார்த்து, இது நன்றாக இல்லை கலைந்து விடுங்கள் என்று சொன்னதில்லை.

உடன் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு நாளை நான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீ இல்லாமல் படமெடுக்க முடியாது. உன்னை அழைக்க வந்தால், மாத விலக்கு என்று கூறிவிடு என சொல்லிவிட்டு நான் தப்பித்துக் கொண்டதில்லை.

ஷூட்டிங் இருக்கும் நாளில் கண்வலி என்று சொல்லி கன்னியருடன் விளையாடிக்கொண்டிருந்ததில்லை. முக்கியமாக எடிட்டிங் அறைக்குப் போனதே இல்லை. போனாலும் என் காட்சிகள் தவிர மற்றவர் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, எடிட்டர் மீது பழி போட்டதே இல்லை. தொழிலில் நான் அன்றும் சரி, இன்றும் சரி, மிகவும் நாணயமாக நடந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நான் ரசிகர்களை மதிக்கிறேன். நீங்கள் எனக்களித்த ஏகோபித்த வரவேற்பால்தான் சாதாரண மீனவக் குடிமகனான நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன். வாழ்ந்தேன். இன்றும் உங்களால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?

கட்சிக்காரர்கள், ரசிகர்கள் தொல்லை தருகிறார்கள். அதனால்தான் அயல்நாடுகளில், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றல்லவா கூறியிருக்கிறார். நான் என்றும் அப்படி கூறியதில்லை. அவுட்டோர் ஷூட்டிங் என்றால் எனக்கு ஒரே ‘குஷி’யாக இருக்கும். நமது திறமையை மக்களுக்கு நேரில் காட்டுவோம் என்றெண்ணி உற்சாகமாக உழைப்பேன்.

என்னிடமும் சில குறைபாடுகள் உண்டு. ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காது.
ஆனால் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் உள்ள குறைபாடுகள், என்னைப் போன்ற ஏமாளிகளைத் தெருவில் நிறுத்தி விடும்.

சமீபத்தில் எனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் திருமணத்திற்காக நான் சென்றிருந்தேன். முன் வரிசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டது. பலர் என்னையே பார்த்தார்கள். என்ன விஷயம் என்று தெரியாமல் நான் திகைக்க, முன் வரிசைக்கருகே மிஸ்டர். எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

கை கூப்பி வணங்க கையைத் தூக்கியவர் என்னைக் கண்டதும் எதையோ பார்த்தவர் போலானார். விருட்டென்று அருகிருந்த கதவுப் பக்கம் ஓட்டமும் நடையுமாக ஓடி கதவைத் தட்டினார். அது திறக்கப்படவில்லை.

பின் வேகமாக என் பாதை வழியாக முகத்தை திருப்பியபடி சென்று மறைந்தார்.
என்னைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைய வேண்டும்? நானென்ன பேயா.. பூதமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா! ஆத்திரப் படவேண்டிய நான் அமைதி அடைந்து விட்டேன். தர்மத்தை கண்டு பொறுக்காமல் அதர்மம் ஆத்திரப்படுகிறது. இப்படித்தான் நான் அன்று எண்ணிக் கொண்டேன்.’