ஆரண்ய காண்டம்

* ‘இது ஒரு வித்தியாசமான படம். தமிழில் இதுவரை செய்யப்படாத முயற்சி’ – என்றெல்லாம் டைரக்டர் எங்கேயும் பேட்டி கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவே நிஜம்.

* ஒரு கதாபாத்திரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், என்ன உடல்மொழி தேவை, என்ன மேனரிஸம் – எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து மெனக்கிட்டுச் செதுக்கியிருக்கும் இயக்குநரின் உழைப்பு அபாரம். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வுக்கென தனி விருது இருந்தால் இந்தப் படத்துக்குக் கொடுக்கலாம்.

* வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் அள்ளுகின்றன. (வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.) சில முக்கியமான இடங்களில் புரியவில்லை. வசனம் புரியாமல் போனதால் படத்தின் கதை ஓட்டமே பலருக்குப் புரியவில்லை என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

* வர வர சினிமாக்களில் சிறுவர், சிறுமியராக நடிக்கும் சைல்ட் ஆர்ட்டிஸ்களிடம் மாஸ் ஹீரோக்கள் எல்லாம் டியூசன் போக வேண்டும்போல. இந்தப் படத்தில் கொடுக்காப்புள்ளியாக வரும் சிறுவன் அசால்ட்டாக அசத்துகிறான். டயலாக் டெலிவரியிலும், முக பாவனைகளிலும் ஏக உயரத்தில் நிற்கிறான், ஸாரி நிற்கிறார்.

* காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதை என்பதால் படத்தை முதல் ஸீனிலிருந்து பார்த்தால் மட்டுமே கதையைப் புரிந்து படத்தோடு ஒன்றிப் போக முடியும். அரைமணி நேரம் கழித்து சாவகாசமாக தியேட்டருக்குள் நுழைந்த பின்வரிசை நபர்கள், ‘கதையே இல்லாம என்னத்தை படம் எடுத்திருக்கானுக…’ என்று டைரக்டரை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

* படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் பின்னணி இசை. பாடல்களே இல்லாத ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா. வாழ்த்துகள். ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் சித்தம் கலங்கடிக்கும் இடிஇசையைத் திணிக்காமல், புத்தம்புது விதமாக வயலினும் பிற வாத்தியங்களும் அந்தக் குரூரத்தை மென்மைப்படுத்துகின்றன. இம்மாதிரியான முயற்சிகளை யுவன் தொடர வேண்டும்.

* கேமரா வினோத். புதியவர் என்று நினைத்தேன். வசந்தின் ரிதம், அப்பு படங்கள் செய்துவிட்டு, பின் ஹிந்திக்குச் சென்றவர் என்றது கூகுள். பல காட்சிகள் இருள் சூழ்ந்தவை இருந்தும் மணிரத்னத்தனமாக இல்லாதது பெரிய ப்ளஸ்.

* சிறிய படம்தான். இருந்தாலும் எடிட்டர்கள் (பிரவீன், ஸ்ரீகாந்த்) சில காட்சிகளை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பொறுமையிழந்து கத்தும்போது தோன்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சியில், சம்பத் உயிர் பிழைக்க ஓடும் காட்சியில் ஏதோ வித்தியாசமாகச் சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. அது என்னவென்று என் பாமர அறிவுக்குப் புரியவில்லை.

* படத்தில் மெல்லிய நகைச்சுவையை வசனங்கள் மூலமாகவே ஆங்காங்கே கிரீம்போல தடவியிருப்பது இறுக்கத்தைக் குறைக்கிறது.

* நடிப்பில் முதலிடம் பசுபதியாக வரும் சம்பத்துக்கு. அடுத்தது கொடுக்காப்புள்ளியாக அந்தச் சிறுவனுக்கு. மூன்றாவது கஜேந்திரன் பாத்திரத்தில் வரும் ராம்போ ராஜ்குமாருக்கும், சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவுக்கும்.

* இந்தப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்து ஓடினால் ரசனை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மகிழலாம். குழந்தைகளை அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பெண்கள் இம்மாதிரி படங்களை ரசிக்க மாட்டார்கள் என்று நாம் என்ன சொல்வது?

* தியேட்டரில் சென்று பார்த்தால் மட்டுமே ஆரண்ய காண்டத்தை உணர்ந்து ரசிக்க முடியும். டிவிடியிலோ, பிற்காலத்தில் டீவியில் ஒளிபரப்பாகும்போதோ பார்த்தால் நிச்சயம் பொறுமையைச் சோதிக்கவே செய்யும். ஆகவே நல்ல சினிமா ரசிகர்களே…

கெளம்பிட்டாருயா சுப்புடு!

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தவை மட்டும் இங்கே :

அவன் இவன் (யுவன் ஷங்கர் ராஜா)

சுசித்ரா குரலில் டியா டியா டோலே என்ற தீம் இசைதான் கேட்டதிலிருந்தே மனத்துக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. உற்சாகத் துள்ளல் இசை. அதன் பின் பாதியில் வரும் கிராமிய இசை, அப்படியே நம்மை ஊர்ப்பக்கம் நடக்கும் ‘கோயில் கொடை’க்கு தூக்கிச் சென்று விடுகிறது.

ராசாத்தி போல – ஹிட் ஆவதற்குரிய இசைக்கலவை, ஏற்ற இறக்கங்கள், மாய வார்த்தைகள் கொண்ட பாடல். பிடித்திருக்கிறது. இருந்தாலும் காட்டுச் சிறுக்கியே என்ற வார்த்தை மட்டும் ராவணனால் தொந்தரவு கொடுக்கிறது.

ஒரு மலையோரம் – அருமையான மெலடி. எப்போதும் பச்சை (Ever green) ரக பாடல். ஏர்டெல் சூப்பர் ஜூனியர் சிங்கர்ஸ் ஸ்ரீநிஷா, பிரியங்கா, நித்யஸ்ரீயுடன் விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இளையராஜாவின் பழைய சரக்குதான் என்றாலும் அவன் இவனில் எனக்கு மிகப் பிடித்த பாட்டாக இது உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் முறை, அவனைப் பத்தி – இரண்டுமே காட்சிகளுடன் பார்க்கும்போது, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு பாடல்களிலுமே மரணத்தின் வாசனை தூக்கலாக இருக்கின்றன. அவனைப் பத்தி பாடலில் – சாவு மோளத்தின் பின்னணியில் ஹீரோக்களின் ஆரம்பப் பாடல்போல இருக்கிறது. பாலாவின் டச்! டி.எல். மகாராஜன் குரல் – அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை.

அவன் இவன் – பாலாவின் காமெடி படமென்று கேள்விப்பட்டேன். இல்லையோ?

காதல் 2 கல்யாணம் (யுவன் சங்கர் ராஜா)

எனக்காக உனக்காக – யுவன் டெம்ப்ளேட் டூயட் – நரேஷ், ஆண்ட்ரியா குரல்களுக்காக, கேட்கக் கேட்க பிடிக்கும்.

குறிப்பு : இதே படத்தில், நான் வருவேன் உன்னைத் தேடி, தேடி உன்னை நான் வருவேன், வருவேன் தேடி நான் உன்னை, உன்னை வருவேன் தேடி நான், தேடி வருவேன் நான் உன்னை – இந்த வார்த்தைகள் கூட்டணியில் ஒரு பாடல் இருக்கிறது. கேட்காதீர்கள் 😉

180 (இசை : Sharreth – தமிழ்ல என்ன ஸ்பெல்லிங்?)

கார்க்கியின் வரிகளில் சிறுசிறு கண்ணில் – உத்வேகமூட்டும் வித்தியாசமான பாடல். பாடியிருக்கும் சிறுவர்களின் குரல்கள், பாடலைக் கவனம் பெற வைக்கின்றன.

AJ என்றொரு பாடல் – முழுவதும் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாடலைப் புரிந்துகொள்ள தமிழோடு பிரெஞ்ச், ஜப்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்போல.

தெய்வத் திருமகன் (ஜி.வி. பிரகாஷ்)

விழிகளில் ஒரு வானவில் – இசையமைப்பாளரின் வருங்கால மனைவி பாடிய பாடல். கேட்க இதமாகத்தான் இருக்கிறது. பண்பலை வானொலிகள் மூலம் ஹிட் ஆக ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இருபதோடு இருபத்தொன்றாகத்தான் இருக்கிறது.

இந்த ஆல்பத்தில் என்னைக் கவர்ந்த பாடல்கள் இரண்டு. இரண்டுமே விக்ரம் பாடியவை : பாப்பாப் பாட்டு, கதை சொல்லப் போறேன். இரண்டுமே குழந்தைத்தனமான பாடல்கள். அதனால்தான் எனக்குப் பிடித்திருக்கிறதுபோல.

ஆரிரோ ஆராரிரோ – நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. நா. முத்துக்குமாருக்கும் பெயர் கொடுக்கும் இன்னொரு பாடல், பாடகர் ஹரிசரனுக்கும். இசையில் புதிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட பாடல்.

கோ – படம் சென்றிருந்தேன். இடைவேளையில் தெய்வத்திருமகன் டீஸர் காண்பித்தார்கள். விக்ரம், ஜன்னலைத் திறந்துகொண்டு வந்து, மழலையாகப் பேசும்போது… தியேட்டரே கேலியாகச் சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க நினைத்தால்கூட தியேட்டரில் பார்க்கவிட மாட்டார்கள்போல!

வைரமுத்துவின் கவிதைகள் சில வைரமுத்துவின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல காலத்துக்கும் முன் வந்திருக்கிறது. அந்த அபூர்வ புதையல் இங்கே.

குதிக்குற குதிக்குற குதிரைக்குட்டி…

அழகர்சாமியின் குதிரை பாடல்கள் குறித்து இணையத்தில் முதலில் வந்து விழுந்த விமரிசனங்கள் எல்லாமே எதிர்மறையாக மட்டுமே இருந்தன. ‘எந்தப்பாடலுமே இளையராஜா தரத்தில் இல்லை’, ‘இளையராஜா ஏமாற்றிவிட்டார்’ – இப்படி. அதனால் பாடல்கள் கேட்கும் ஆர்வம் எனக்கு உடனே ஏற்படவில்லை. வார இறுதியில்தான் பாடல்களைக் கேட்டேன். ஏமாந்துபோனதை உணர்ந்தேன். பாடல்களால் அல்ல, பாடல்கள் குறித்த விமரிசனங்களால்.

நந்தலாலாவுக்குப் பிறகு இளையராஜாவின் மிக முக்கியமான ஆல்பம்.

அடியே இவளே ஊருக்குள்ள திருவிழாவாம்…

மிக மிக வித்தியாசமான பாடல். இந்தப் பாடலின் கட்டமைப்பை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எத்தனை விதமான குரல்கள். எத்தனை விதமான இசைக்கருவிகள். எல்லாம் கிராமிய இசைக்கருவிகள். தமிழர் பண்பாட்டு இசைக்கருவிகள் குறித்து குங்குமத்தில் தொடர் எழுதிவரும் நண்பர் நீலகண்டன், இந்தப் பாடல் குறித்து ஏதாவது கட்டுரை எழுதுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து வீடியோ எதுவும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது நிஜமாகவே கலைப் பொக்கிஷம். ஈசன் – ஜில்லாவிட்டு பாடல் புகழ் தஞ்சை செல்விக்கு அமைந்துள்ள மற்றுமொரு அழகான பாடல்.

பூவைக்கேளு காத்தைக்கேளு…

அசல் இளையராஜா பிராண்ட் மெலடி. மீண்டும் கார்த்திக், ஷ்ரேயா கோஷல். புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கேட்கச் சலிக்காத மென்பாடல். பண்பலை வானொலிகளால் சற்றே கவனிக்கப்படும் பாடல் இதுதான். இரவு நேரத் தூக்கத்துக்கு முன் கேட்கும் பாடல் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்.

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி…

இந்த ஆல்பத்தின் ஸ்டார் பாடல் இதுவே. குதிக்கிற குதிக்கிற என இளையராஜா அசட்டுக் குரலில் பாடும்போது எனக்குள் இனம்புரியாத துள்ளலை உணர்ந்தேன். எத்தனைவிதமான மாடுலேஷன். பாடலைக் கேட்கும்போது அந்தக் குரலில் படத்தில் கதாநாயகனான அப்புகுட்டியின் முகம் என் கண்முன் விரிந்தது. ரசித்துக் கொண்டே இருக்கலாம், காலத்துக்கும். இந்தப் பாடலுக்கான விஷுவல்ஸ் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறதென சினிமா துறை நண்பர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

நண்பர் பாஸ்கர் சக்திக்கு என் வாழ்த்துகள்.

படம் குறித்து இளையராஜா, குமுதத்தில் (23.03.2011) பகிர்ந்துகொண்ட கருத்து இது.

ஃபாரின் படங்களைப் பார்த்துட்டு அதுமாதிரி புதுசா சிந்தனை பண்ணி படம் எடுக்க ஆளில்லை. அந்தப் படத்தையே அப்படியே எடுக்க வேண்டியிருக்கு. சமீபத்துல அப்படி ஒரு படத்தை மீடியாக்கள் பாராட்டின அளவுக்கு மக்கள் ரசிக்கலையே. இந்த பாதிப்பு இனி வர்ற நல்ல படங்களுக்கு வந்திடக்கூடாதுங்கற அக்கறையாலதான் இப்ப நான் பேசுறேன். நான் இசையமைக்குற படம் என்பதால சொல்லலை. நான் வேலை செய்யாத நல்ல படங்களும் தோல்வி அடைஞ்சிருக்கு. இது வருத்தமா இருக்கு. உலகத் தரத்தில் படம் எடுக்க நம்ம ஊர்லயும் ஆள் இருக்காங்க என்பது மாதிரி ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தை எடுத்திருக்காங்க. இதுக்கு ஜனங்க சரியான முறையில் ஆதரவு கொடுத்தால்தான் சினிமாவில் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.

பயணம்

* இயக்குநர் ராதாமோகனுக்கு வித்தியாசமான முயற்சி. தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாது.

* டைட்டில் சாங் தவிர வேறு பாடல்கள் கிடையாது. ஓரிரண்டு காட்சிகள் தவிர அநாவசியக் காட்சிகள் இல்லை. நகைச்சுவைக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. தேவையான அளவு செண்டிமெண்ட்.

* நாகர்ஜுனுக்கு ஏற்ற கதாபாத்திரம். தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார். ஆனால் ‘இந்தப் படம் தெலுங்கு டப்பிங்கா?’ என்று இன்று மட்டுமே என்னிடம் மூன்று பேர் கேட்டுவிட்டார்கள்.

* இஸ்லாமிய தீவிரவாதம் சார்ந்த காட்சிகள் வழக்கம்போல உறுத்துகின்றன. அதுவும் சில வசனங்களுக்காகவும், சில காட்சிகளுக்காகவும் ராதாமோகன் கடும் விமரிசனங்களைச் சந்திக்கப் போவது உறுதி.

* ஒரு மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, ஒரு கதாபாத்திரம் மூலமாக இன்னொரு மதத்தைத் தூக்கிப் பிடிப்பது சரியல்ல என்று சுற்றி வளைத்து மறைமுகமாகச் சொல்லலாம். முந்தைய வரியைப் போலத்தான் இயக்குநரும் படத்தில் சில விஷயங்களை மென்று முழுங்கி விமரிசித்திருக்கிறார். இந்தப் பத்தியின் முதல் வரியை நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமிய மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, கிறித்துவத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

* சினிமா சூப்பர் ஹீரோவைக் கடுமையாகத் தாக்கித் தாளிக்கும் இயக்குநர், கடைசியில் காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறார். டிஆர்பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் கடுமையாகத் தாக்கும்படியான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இன்னென்ன சேனல்கள் என்று நேரடியாகச் சொல்லாமல் பூசி மெழுகியிருக்கிறார்.

* படத்தில் கவரும் பயணி கதாபாத்திரங்கள் டாக்டர் ரிஷி, ஏர்ஹோஸ்டஸ் பூனம் கவுர், ரசிகன் பாலாஜி. ஒரு கட்டத்துக்குமேல் எரிச்சலூட்டும் கதாபாத்திரம் பாதிரியார் எம்.எஸ். பாஸ்கர்.

* நகைச்சுவை வசனங்களைப் பளிச்சென வெளிப்படுத்தும் புது வசனகர்த்தா, சீரியஸ் வசனங்களில் கோட்டை விட்டிருக்கிறார். மொழி, அழகிய தீயே படங்களில் விஜியின் வசனங்களை ரசிக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

* பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அளவாக நடித்திருக்கிறார்.

* அடுத்து இன்னென்ன திருப்பங்கள் வரும் என்று பாமரர்களும் யூகித்துவிடக்கூடிய காட்சிகள்தாம். இருந்தாலும் சலிப்பையோ, கொட்டாவியையோ தரவில்லை.

* பயணம் – நிச்சயம் ஆதரிக்கப்பட வேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கலாம், சில விஷயங்களைச் சகித்துக் கொண்டு.

லொள்ளு விருதுகள் 2010

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

தங்கம், தக்காளி, சிலிண்டர், சீயக்காய் தூள், வெங்காயம், வெளக்கெண்ணெய், பெட்ரோல், பெருங்காயம் என எது விலையுயர்ந்தாலும் சகிப்புத் தன்மை ததும்ப வாழப் பழகிக் கொண்டிருக்கும் நாம் எல்லாம்…

16

சிலரது முகம் பரிச்சயம் இல்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னதற்காக போட்டோ கேப்ஷன்ஸ் :
1. நித்யானந்தா, 2. மன்மோகன் சிங் 3. ஒபாமா 4. சுரேஷ் கல்மாடி 5. பிரபுதாரா 6. விக்கிலீக்ஸ் அசாஞ்சே 7. எடியூரப்பா 8. ஜெகன்மோகன் ரெட்டி 9. லலித் மோடி 10. ஈவிகேஎஸ் இளங்கோவன் 11. ராகுல் காந்தி 12. விஜய்-சானியா- லாலு 13. நீரா ராடியா 14. ஆ. ராசா 15. செம்மொழி மாநாடு 2010 16. பொதுஜனம்