* ‘இது ஒரு வித்தியாசமான படம். தமிழில் இதுவரை செய்யப்படாத முயற்சி’ – என்றெல்லாம் டைரக்டர் எங்கேயும் பேட்டி கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவே நிஜம்.
* ஒரு கதாபாத்திரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், என்ன உடல்மொழி தேவை, என்ன மேனரிஸம் – எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து மெனக்கிட்டுச் செதுக்கியிருக்கும் இயக்குநரின் உழைப்பு அபாரம். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வுக்கென தனி விருது இருந்தால் இந்தப் படத்துக்குக் கொடுக்கலாம்.
* வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் அள்ளுகின்றன. (வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.) சில முக்கியமான இடங்களில் புரியவில்லை. வசனம் புரியாமல் போனதால் படத்தின் கதை ஓட்டமே பலருக்குப் புரியவில்லை என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.
* வர வர சினிமாக்களில் சிறுவர், சிறுமியராக நடிக்கும் சைல்ட் ஆர்ட்டிஸ்களிடம் மாஸ் ஹீரோக்கள் எல்லாம் டியூசன் போக வேண்டும்போல. இந்தப் படத்தில் கொடுக்காப்புள்ளியாக வரும் சிறுவன் அசால்ட்டாக அசத்துகிறான். டயலாக் டெலிவரியிலும், முக பாவனைகளிலும் ஏக உயரத்தில் நிற்கிறான், ஸாரி நிற்கிறார்.
* காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதை என்பதால் படத்தை முதல் ஸீனிலிருந்து பார்த்தால் மட்டுமே கதையைப் புரிந்து படத்தோடு ஒன்றிப் போக முடியும். அரைமணி நேரம் கழித்து சாவகாசமாக தியேட்டருக்குள் நுழைந்த பின்வரிசை நபர்கள், ‘கதையே இல்லாம என்னத்தை படம் எடுத்திருக்கானுக…’ என்று டைரக்டரை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
* படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் பின்னணி இசை. பாடல்களே இல்லாத ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா. வாழ்த்துகள். ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் சித்தம் கலங்கடிக்கும் இடிஇசையைத் திணிக்காமல், புத்தம்புது விதமாக வயலினும் பிற வாத்தியங்களும் அந்தக் குரூரத்தை மென்மைப்படுத்துகின்றன. இம்மாதிரியான முயற்சிகளை யுவன் தொடர வேண்டும்.
* கேமரா வினோத். புதியவர் என்று நினைத்தேன். வசந்தின் ரிதம், அப்பு படங்கள் செய்துவிட்டு, பின் ஹிந்திக்குச் சென்றவர் என்றது கூகுள். பல காட்சிகள் இருள் சூழ்ந்தவை இருந்தும் மணிரத்னத்தனமாக இல்லாதது பெரிய ப்ளஸ்.
* சிறிய படம்தான். இருந்தாலும் எடிட்டர்கள் (பிரவீன், ஸ்ரீகாந்த்) சில காட்சிகளை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பொறுமையிழந்து கத்தும்போது தோன்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சியில், சம்பத் உயிர் பிழைக்க ஓடும் காட்சியில் ஏதோ வித்தியாசமாகச் சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. அது என்னவென்று என் பாமர அறிவுக்குப் புரியவில்லை.
* படத்தில் மெல்லிய நகைச்சுவையை வசனங்கள் மூலமாகவே ஆங்காங்கே கிரீம்போல தடவியிருப்பது இறுக்கத்தைக் குறைக்கிறது.
* நடிப்பில் முதலிடம் பசுபதியாக வரும் சம்பத்துக்கு. அடுத்தது கொடுக்காப்புள்ளியாக அந்தச் சிறுவனுக்கு. மூன்றாவது கஜேந்திரன் பாத்திரத்தில் வரும் ராம்போ ராஜ்குமாருக்கும், சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவுக்கும்.
* இந்தப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்து ஓடினால் ரசனை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மகிழலாம். குழந்தைகளை அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பெண்கள் இம்மாதிரி படங்களை ரசிக்க மாட்டார்கள் என்று நாம் என்ன சொல்வது?
* தியேட்டரில் சென்று பார்த்தால் மட்டுமே ஆரண்ய காண்டத்தை உணர்ந்து ரசிக்க முடியும். டிவிடியிலோ, பிற்காலத்தில் டீவியில் ஒளிபரப்பாகும்போதோ பார்த்தால் நிச்சயம் பொறுமையைச் சோதிக்கவே செய்யும். ஆகவே நல்ல சினிமா ரசிகர்களே…
Thanks…! Will watch it on big screen 🙂
அவர் ராம்போ ராஜ்குமார் இல்லை. ரெண்டு நாள் ஷூட்டிங்க்குப் பிறகு ராம்போ இறந்துவிட்டார். பிறகு அந்த ரோலில் நடித்தவர் பாக்ஸர் ஆறுமுகம். எந்திரனிலே பார்த்த நினைவு இருக்கிறதா? ஹூஸ் செல்லாத்தா… சீன்
செம விமர்சனம்.. நீங்கள் ரசித்தபடி கலக்கல் வசனங்களை ஐ ஆம் டைப்பிங்க்.. 3 மணிக்கு ரிலீஸ்..
பிரமாதம் இன்று முதல் நீர் சினிமா சுப்புடு ஆகக் கடவதாக!
Neenga indha padatha paaratuveenganu naan ninaikkave illai. 😀 But nijamave enakku padam romba pudichirundhudhu but inga 1 week than oduchu 🙁