செங்கிஸ்கான் எங்க தாத்தா!

The American Journal of Human Genetics என்ற ஆய்வு இதழ், மார்ச் 2003ல்  ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஐரோப்பியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 2000 பேரிடம் மரபணு சோதனை  நடத்தினார்கள். கிடைத்த முடிவு இது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல ஆண்களுக்கு கிட்டத்தட்ட ஒரே  மாதிரியான மரபணு அம்சங்கள் இருந்தன. சோதனையை விரிவாக்கியதில், பசிபிக் முதல் காஸ்பியன் கடல்வரை பதினாறு மில்லியன் ஆண்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.

அதாவது, கிட்டத்தட்ட ஆயிரம் வருடத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரிடமிருந்து தோன்றிய சந்ததி அது. எந்தப் பகுதியில்? யார் அந்த மனிதர்? மங்கோலியா. விடை கிடைத்ததுமே உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.  செங்கிஸ்கான்!

இன்று, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரையைச் சார்ந்தவர்கள்.

0

நெப்போலியன் பற்றி பல இடங்களில் படித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் பற்றியும் படித்திருக்கிறேன். அதேவரிசையில் உள்ள மாவீரரான செங்கிஸ்கான் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆசைப்பட்டேன். சொல்லப்போனால்,  சில பத்திரிகைகளில் வந்த துணுக்குகள், தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள் தவிர – வேறு எதிலுமே (தமிழில்) செங்கிஸ்கான் தட்டுப்படவில்லை.

2008ல் செங்கிஸ்கான் பற்றிய புத்தகம் எழுதவேண்டும் என்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டேன். ஜனவரி முதலே அதற்கான விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் வாங்கினேன். டாகுமெண்டரி, திரைப்படங்கள் தேடிப் பிடித்தேன். (அதிலும் பிபிசி வெளியிட்டுள்ள டாகுமெண்டரி ஈடுஇணையற்றது.) மே மாதம் செங்கிஸ்கான் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன்.

எழுதுவதற்குச் சவாலாகத்தான் இருந்தது. குறிப்பாக மங்கோலிய கலாசாரத்தை சரிவரப் புரிந்துகொண்டால்தான் அடுத்தடுத்த வரிகளை எழுத முடியும் என்ற அளவிலான சவால். அப்புறம் மங்கோலியப் பெயர்கள் – டெமுஜின், ஜமுக்கா, யெசுகெய், சாகெட்டெய், டயாங் கான் – இப்படி ஆள்களின் பெயர்கள். கெரியிட், ஜெர்செட், நய்மன், போர்ஜிகின் – இப்படி இனக்குழுக்களின் பெயர்கள். ஆனான், கெர்லென், புர்கான் கல்டுன் – இப்படி இடங்களின் பெயர்கள். எல்லாமே நாக்கையும் மூக்கையும் சேர்த்துப் பயன்படுத்தி உச்சரிக்க வேண்டிய  வார்த்தைகள். எது இடம், எது இனம், எது பெயர் என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்வதற்குள் அய்யய்யோ!
தனியாக நோட்பேட் ஒன்றில் இம்மாதிரி வார்த்தைகளை எல்லாம் தனித்தனியாக விளக்கங்களுடன் எழுதிவைத்து சில நாள்களுக்கு மனப்பாடம் செய்தேன்.

எழுதும்போதே எனக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது இந்தப் பெயர்கள்தான் – ‘வாசகர்கள் மனத்தில் பெய ர்கள் நிற்குமா? குழப்பத்தைக் கொடுக்குமா? வாசிப்பு வேகத்தைக் கெடுக்குமா?’ அதற்காக டயாங் கானை  ஷாருக் கான் என்று பெயர் மாற்றி எழுத முடியாதே. மங்கோலியக் கடவுளான தெங்ரி மீது பாரத்தைப் போட்டு  விட்டு தொடர்ந்து எழுதினேன்.

டெமுஜின் என்றழைக்கப்படும் செங்கிஸ்கானின் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் சுவாரசியத்துக்கோ,  விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லை. ஆனால் செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின்தான். செங்கிஸ்கான் என்பது மங்கோலியா என்ற ஒரு தேசத்தை அவர் உருவாக்கும்போது கொடுக்கப்படும் பட்டம். அதன் அர்த்தம்  மங்கோலியர்கள் மிகவும் மதிக்கும் ஓநாய்களின் தலைவன்.

அதற்காக ஹாஃப் வே ஓப்பனிங் எல்லாம் கொடுத்து, ‘அவர்தான் செங்கிஸ்கான்’ என்று ஓப்பனிங் சாங் வை த்து, ப்ளாஷ்பேக்குக்குச் சென்று… எழுதும் சரித்திரப் புத்தகத்தின் அழகை நான் பாழாக்க விரும்பவில்லை.

ரிஸ்க்தான் எடுத்தேன். புத்தகத்தில் கிட்டத்தட்ட பாதியில்தான் டெமுஜின், செங்கிஸ்கான் ஆகிறார். ‘என்னய்யா  இது, ஏமாத்தறான். பக்கம் பக்கமா போய்க்கிட்டே இருக்குது, இன்னும் கதாநாயகனே வரலை’ என்று  வாசகன் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டால்? ஆகவே புத்தக்கத்தின் முதல் சேப்டரிலேயே டெமுஜின் = செங்கிஸ்கான் என்று பொடி எழுத்தில் அடிக்குறிப்பு கொடுத்து நிம்மதி அடைந்தேன்.

புத்தகத்தை எழுதி முடிக்க இரு மாதங்கள் பிடித்தன.

0

புத்தகம் வெளியாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. நெப்போலியனை, அலெக்ஸாண்டரை விரும்பும் அளவுக்கு செங்கிஸ்கானையும் தெரிந்துகொள்ள வெகுஜன வாசகர்கள் விரும்புவார்களா என்று எனக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. என் சந்தேகம் நிஷா புயலுக்கு முன்பாகவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. கிழக்கின்  மார்க்கெட்டிங் துறை நண்பர்கள் கொடுக்கும் ரிப்போர்ட், கருத்துகள் எல்லாம் என்னை ஆச்சரியப்படத்தான்  வைக்கின்றன. செங்கிஸ்கானை அமோகமாக விரும்பும் தமிழ் வாசகர்களுக்கு என் நன்றி.

0

வெள்ளிக்கிழமை (26 டிசம்பர்) மாலை ஆறு மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் புத்தகத்தை விமர்சிக்க இருக்கிறார் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ். அன்றைய அறிமுகத்திற்கான இன்னொரு பு த்தகம் நண்பர் குணசேகரன் எழுதிய இருளர்கள் – ஓர் அறிமுகம். அதை விமர்சிக்க இருப்பவர் நண்பர் பிரவாஹன். இரண்டு புத்தகங்களுமே இரு இனங்கள் குறித்தவை. இன மோதல்கள் வராது என்று நம்புவோம்.

வெள்ளிக்கிழமை விழாவுக்கு மங்கோலியர்களின் ஆஸ்தான வாகனமான குதிரையில் அலுவலகத்துக்குச் செல்லலாம் என்றொரு ஆசை. என்னைப்போலவே ஆசைப்பட்டு குணசேகரனும் இருளர்களின் செல்லப்பிராணியோடு வந்துவிட்டால்?

நாயகன் எம்.என். நம்பியார்

நம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான் நடக்காது.


நம்பியார் : ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.
நம்பியார் : தோல்வியையே அறியாதவன் நான்.
எம்.ஜி.ஆர் : தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார் : நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர் : உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
நம்பியார் : ஆ…

***

தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர்  அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறி யிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி.

திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

***

கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். எம்.ஜி.ஆரோடு  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜியோடு ‘உத்தமபுத்திரன்’ – மறக்க முடியாதவை.

‘திகம்பர சாமியார்’ – நம்பியார் கதாநாயகனாகப் பதினொரு வேடங்கள் அணிந்து நடித்த படம். அந்த மர்மக்கதை சினிமா பெரும் வெற்றியும் பெற்றது. மக்களைப் பெற்ற  மகராசியில் ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ என்று எம்.என். ராஜத்தோடு நம்பியார் பாடும்  டூயட், என்றும் இனியது.

பக்தி படங்களில் வைணவம் சார்ந்த கதைகள் ஓடாது என்று தமிழ் சினிமாவில் ஒரு  செண்டிமெண்ட் உண்டு. அதை முறியடித்துக் காட்டுகிறோம் என்று ‘சுப்ரபாதம்’ என்றொரு படம் எடுத்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள பல வைணவத்தலங்களில் கதை நகரும். நம்பியார் இதில் பக்தராக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை.

***

அகில இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஐயப்ப பக்தரான நம்பியார்தான் குருசாமி.  அமிதாப் பச்சன் உள்பட பல நட்சத்திரங்கள் அவரோடு சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

சுத்த சைவத்தைக் கடைபிடித்து வந்த நம்பியார் பசும்பால்கூட சாப்பிட மாட்டாராம்.  பொதுவாக அந்தக்கால பத்திரிகைகளில்கூட நம்பியார் பற்றி அவ்வளவு விஷயங்கள்  வந்ததில்லை. தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு அவர் இடம் கொடுத்ததில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்பதைக் கொள்கையாக கடைபிடித்த நம்பியார், பத்திரிகையாளர்களையும் பெரும்பாலும் தவிர்த்தே வந்தார்.

1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நம்பியாரைக் கௌரவப்படுத்தும்விதமாக யாரும்  எந்தவிருதும் அளித்ததில்லை.

***

சந்திரபாபு, எம்.ஆர். ராதா – வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளேன். நம்பியாரைப் பதிவு  செய்யும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தப்படுகிறேன். முன்பு கல்கியில் நம்பியார்  குறித்த ஒரு தொடர் வந்துள்ளது.

# இந்தக் கட்டுரைக்காக குறிப்புகள் தந்து உதவிய நண்பர் பா. தீனதயாளனுக்கு நன்றி.