கலியுகம் பாடல்கள் – சிறு அறிமுகம்

மூன்று இசையமைப்பாளர்கள், ஐந்து பாடல்கள், கலியுகம் திரைப்படத்தின் பாடல்கள் புதனன்று வெளியாகின. விழாவில் மூன்று பாடல்கள், இரண்டு டிரைலர்கள் திரையிடப்பட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பாடல்கள் குறித்த அறிமுகம் இங்கே.

# ஏடாகூடா ஆசை…

குத்துப் பாடல்கள் மட்டுமல்ல, தன்னால் இளமை பொங்கும் பாடல்களையும் எழுத முடியும் என்று நிரூபிக்க, (ஈசன் ஜில்லாவிட்டு புகழ்) மோகன்ராஜனுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு இந்தப் பாடல். இசை சித்தார்த் விபின். துள்ளலான பாடல். பண்பலை வானொலிகள் அடிக்கடி ஒலிபரப்பினால் இளைஞர்களைக் கவரும் வாய்ப்புள்ளது.

# அஜல உஜல

சென்னை மண்ணின் இலக்கியமான ‘கானா’வை இதுவரை சினிமா பயன்படுத்தியிருக்கும் விதம் வேறு. அதாவது சினிமா பாடல்களைத்தான் ‘கானா’ பாடல்களாக மற்ற ஊர்க்காரர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல், ‘மரண கானா விஜி’யின் புகழ்பெற்ற கானா பாடலான ‘அஜல உஜல’வையும், அவரது மற்ற சில கானா பாடல்களையும் கலந்து கானாவின் வடிவம் சிதையாமல் சினிமா ட்யூன் ஆக்கியிருக்கிறார்கள். இசை அருணகிரி. மரண கானா விஜியின் குரலில் இந்தப் பாடல் நிச்சயம் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கிறேன்.

# சிரபுஞ்சி சாலையிலே…

படத்தில் வரும் ஒரே காதல் பாடல் இதுதான். வரிகள் தாமரை. இசை தாஜ்நூர். குரல் ஹரிச்சரண். ஆந்திராவின் கடப்பாவில் கண்டிக்கோட்டாவில் படமாக்கியிருக்கிறார்கள். கேமராமேன் S.R. கதிர் புகுந்து விளையாடி இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்ட போது ‘விஷுவல்ஸ் பிரமாதம்’ என்று கமெண்ட்டுகள் குவிந்தன. மெலடி பாடலான இது, நிச்சயம் மியுஸிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று நம்புகிறேன்.

# ஏனோ ஏனோ

உன்னைப் போல் ஒருவனில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு பாடல் எழுதியிருந்ததாக செய்தி படித்த ஞாபகம். அதன்பின் கலியுகத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘மனுஷ்யபுத்திரன், தனிமையை அதன் வலியைத் தனது கவிதைகளில் பிரமாதமாக வெளிப்படுத்துவார். இந்தப் பாடலும் அப்படிப்பட்ட வலியை வெளிப்படுத்துவதுதான். அதனால் அவரை எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்’ – இது இயக்குநர் யுவராஜ், இசை வெளியீட்டு விழாவில் சொன்ன தகவல். பாடலைப் பாடியிருப்பவர் ராகுல் நம்பியார். இசை தாஜ்நூர்.

# வெண்ணையில…

படத்தில் இது மிகவும் ஸ்பெஷலான பாடல். இந்த பூமியே ஏங்கி, ரசித்துக் காதலித்த ஒரு பெண்ணின், பேரழகியின், நல்ல மனுஷியின் புகழ்பாடும் விதமாக இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண் சில்க் ஸ்மிதா. நாற்பது வயதுக்காரன் ஒருவனுக்கு இன்னமும் சில்க் தன்னுடன் வாழ்ந்து வருவதாகதே நினைப்பு. அவன் தான் ரசிக்கும் சில்க்கை, அவள் அழகை, அவள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாடும் பாடல் இது. வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்டு முடித்தபின் ஏகப்பட்ட கைதட்டல். எல்லாம் சில்க்குக்குக் கிடைத்த மரியாதை. அந்த மனுஷிக்கு கலியுகம் டீம் செய்யும் மரியாதை. கடந்த இரு தினங்களில் தொலைபேசியில் பேசிய நண்பர்கள் எல்லாம் இந்தப் பாடலைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இசை சித்தார்த் விபின். பாடியவர் முகேஷ். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் மோகன்ராஜன்.

பூமியே காதலிச்ச பொம்பளை மேல

நான் ஆசை வெச்சேனே ராமனைப் போல

சாமியே சைட் அடிச்ச கண்களினாலே

நான் தொலைஞ்சு போனேனடா…

இந்தப் பாடலில் சில்க்கின் கிளிப்பிங்ஸை பயன்படுத்தவில்லை. பதிலாக ஓவியர் இளையராஜா வரைந்த சில்க் ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம் ரசிகர்கள் மனத்தில் நீங்காத பாடலாக இது நிலைத்திருக்கும்.

வழக்கம்போல இணையத்திலும் பாடல்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன்.

குறிப்பு : ‘கலியுகம் படத்தில் பாடல் எதுவும் எழுதியிருக்கிறாயா?’ என்று பலரும் விசாரிக்கிறீர்கள். நான் இந்தப் படத்தில் வசனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். ‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற படத்தில் மட்டுமே ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு எந்தப் படத்திலும் பாடல் எழுதவில்லை. அடுத்தடுத்து வசனம், திரைக்கதை என கவனம் செலுத்தவே விருப்பம்.

 

டாப் ஒன்பதரை பாடல்கள்

தற்போது ரசித்துக் கொண்டிருக்கும் இனி வெளியாகவிருக்கும் தமிழ் பட பாடல்களின் தர வரிசை. அதென்ன ஒன்பதரை? சொல்கிறேன்.

குறிப்பு : சமீபத்தில் வெளியான் யுவனின் இசையில் தீராத விளையாட்டு, ஜிவி இசையில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், இமான் இசையில் கச்சேரி ஆரம்பம் படங்களில் பாடல்கள் எதுவும் எனக்குப் பிடித்தமாதிரி இல்லை.

ஒன்பதரை

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், கார்த்திக்கின் இதமான குரலில் ‘ஊனே உயிரே உனக்காகத் துடித்தேன், விண்ணைத் தாண்டி வருவாயா…’ – சின்னதாக ஒரு பாடல் (அரைப்பாடல்தான். ரஹ்மான் முழு பாடலே போட்டிருக்கலாம்.) – கிடார் இசை சுகம்.

ஒன்பது

பழைய பரத்வாஜ் மீண்டும் கிடைக்கவே மாட்டார்போல. அசல் படத்தில் அசலான பாடல்கள் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஆஹா எஃப் எம் நண்பர் ஒருவர் எனக்கு ஒவ்வொரு பாடலையும் போட்டுக் காட்டி, எது எது எங்கிருந்து எடுத்தது என்று சொன்னார். இருந்தாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் எஃப் எம் புண்ணியத்தால் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது. துஷ்யந்தா – இதுவும் புதிய பறவையின் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் ரீமிக்ஸ்தான். படம் அசலா, இல்லை ஏதாவது ஒரு படத்தின் நகலா என்று இனிமேல்தான் (முடிந்தால்) பார்க்க வேண்டும்.

எட்டு

தன் ‘குடும்ப’ படம் என்றால் மெனக்கிடல் அதிகம் இருக்கும்தானே. கோவாவில் யுவன் மீண்டும் விருந்து படைத்திருக்கிறார். அண்ணன், தம்பி, அப்பா, பெரியப்பா என குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பாடியிருக்கும் ஏழேழு தலைமுறை பண்ணைபுர பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னால் அவர்கள் குடும்பத்தில் யாராவது அரசியலில் இறங்கினால் கட்சிப் பாடலாக உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏழு

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் லீலையின் பாடல்கள் காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு. உன்னைப் பார்த்த பின்பு – காதல் சோகப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் ஹரிசரனின் குரலில். நிச்சயமாக வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தின் நம்பர் 1 பாடல் இதுவே.

ஆறு

அரேபிக் ஸீ பாடல் அண்ட் ரீமிக்ஸ். கோவா. நல்ல ஸ்டைலான பாடல். பலரது ரிங்டோனாக இந்தப்பாடலில் ஆரம்ப இசை மாறிக் கொண்டிருக்கிறது.

ஐந்து

துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஹரிசரன் குரலில் யுவனின் இந்த வருடத்தின் முதல் ரொமாண்டிக் ஹிட். எங்கேயோ, ஏற்கெனவே கேட்டதுபோல லேசாக தோன்றினாலும் சலிக்கவே இல்லை. பையா பட ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல். இந்த இடத்துக்கு என் காதல் சொல்ல நேரமில்லை (யுவன் குரலில்) பாடலையும் பகிர்ந்து கொடுக்கலாம்.

நான்கு

சித்து ப்ளஸ் டூ – பாடல் பூவே பூவே. தரணின் இசையில் யுவன் சங்கர் ராஜா, சின்மயி குரல்களில். பிற இசையமைப்பாளர்களின் ஆல்பத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் பாடும் ஆரோக்கியமான டிரெண்ட் உருவாகி வருவதை வரவேற்கலாம் (பாடகர்கள் மன்னிக்க). எஃப் எம்களில் பாடல் ஏற்கெனவே ஹிட்! சித்து ப்ளஸ் டூ ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல் இதுவே.

மூன்று

கோவாவில் இதுவரை இல்லாத உணர்விது – ஆன்ட்ரியா குரலில் கார்னெட்டோ கோனின் இனிமை. உடன் பாடும் அஜிஸுக்கு இது கன்னிப் பாடல். கேட்கும்போது விஜய் டீவி லோகோவோடு முகம் கண்ணில் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டு

முன்பே வா பாடலுக்குப் பிறகு ரஹ்மானின் இன்னொரு இசைக் கொடை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா… ஷ்ரேயா கோஷல் உச்சரிக்கும்போது ஜிவ்வென்று இருக்கிறது. ரஹ்மானுக்கும் இளையராஜா போல ஷ்ரேயாவோடு டூயட் பாட நீண்ட நாள் ஆசை போல. இந்தப் பாடல் மூலம் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ரசனையான பாடல். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்-ஐ உள்ளே நுழைத்திருப்பது அழகு. இந்த வருடத்தின் நம்பர் ஒன் மெலடி ஆகியிருக்க வேண்டிய பாடல் இது. ஆனால்… தாமரையின் வரிகள் முழுமையான கவிதையாக இல்லாமல் சில இடங்களில் உறுத்தலாக இருக்கிறது. அந்த (வசன) வரிகளை வளைத்து நெளித்துப் பாடுவதற்குப் பாடகர்கள் அதிகம் மெனக்கிட்டிருப்பார்கள் போல. இருந்தாலும் பலரது வாழ்நாள் விருப்பப் பாடலாக மாறிவிடும்.

ஒன்று

ஒரு படத்தில் பாடல்கள் கேட்கும்போதுகூட சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா? தமிழ் படம் பாடல்கள் அந்த இன்பத்தைக் கொடுக்கின்றன. இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கே எதிர்பார்த்தேன். ஹரிஹரன், ஸ்வேதா குரலில் ஓ மஹ ஸீயா பாடலை எக்கச்சக்கமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை மெலடியான பாடலில்கூட எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் கண்ணனுக்கு வாழ்த்துகள். வார இறுதியில் இந்தப் படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். கோவாவெல்லாம் பிறகுதான்.