சிங்கம் – சிங்கர் – ராவணன் – ராமர்

ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் பிரியர்களைத் தானாக தியேட்டருக்குள் இழுக்கும் டிரைலர். கௌபாய்களின் மேலோட்டமான வரலாறோடு இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் ஆரம்பிக்கிறது. காமிக்ஸ் டைப் கதைதான்.

அருமையான செட்டுகள், அழகான, கச்சிதமான உடைகள் (கோயில் பட்டருக்குக்கூட கௌபாய் தொப்பி), ஆங்காங்கே காணப்படும் அறிவிப்பு, பெயர் பலகைகளில் எல்லாம் சிம்புதேவனின் கார்ட்டூன் டச் (தூக்குமேடையில் ‘இங்கே குரல்வளை நெறிக்கப்பட்டும்’), அமெரிக்கா, இலங்கை, இந்தியா, தமிழ்நாடு – அரசியல் குறித்து சிம்புதேவன் பிராண்ட் நக்கல் வசனங்கள், ரசிக்கும்படியான சில கதாபாத்திரங்கள், தன் நிழலைவிட வேகமாகச் சுடும் ஹீரோயிஸ நக்கல் – எல்லாம் தூள்.

திரைக்கதை? படத்தின் வேகம்? ஒட்டுமொத்த சுவாரசியம்? ???? ???????????????????????????????????????

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என்று டைட்டில் போடும்போதே அதிலிருக்கும் சிங்கம் ‘மியாவ்’ என்கிறது. படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது, சோப்ளாங்கி போல.

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நச். இடைவேளைக்கு பிறகு புதையல் தேடிப் போகும் அரைமணி நேரம் சூப்பர். மற்றபடி சோம்பல் முறிக்க வைக்கிறது.

இம்சை அரசனோடு ஒப்பிட்டால் அதில் பாதிதான் இரும்புக் கோட்டை. அறை எண்ணை 305ல் கடவுளைவிட சுவாரசியமான படம் கொடுத்ததற்காக சிம்புதேவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஜி.வி. பிரகாஷ் பாடல்களில் கைகொடுத்திருந்தால், கௌபாயாக வேறு யாராவது மாஸ் ஹீரோ நடித்திருந்தால் அல்லது வடிவேலுவே கௌபாய் ஆகியிருந்தால்  – படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம்.

சதம் அடித்திருக்கலாம், அரைசதத்திலேயே (இரும்புக்) கோட்டை விட்டுவிட்டார்கள்.

ஏதாவது படம் போய்த்தான் ஆகவேண்டும் என்றால், தாராளமாக குழந்தைகளோடு இரும்புக் கோட்டைக்குச் செல்லலாம்.

கொசுறு  : நேற்றிரவு காட்சிக்கு உதயத்தில் சுறா டிக்கெட் சுலபமாகக் கிடைத்தது.

***

விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் சறுக்கல் படு கேவலமாகத் தெரிகிறது. பைனலில் யாரை சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஸ்கிரிப்ட்படி இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பைனலுக்கு வருவதற்கு திறமை தேவையில்லை. சில காரணிகள் போதும் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த வாரத்தில் ‘எலிமினேட்’ செய்யப்பட்ட ஸ்ரீநிஷாவுக்கு வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் கொடுத்து வெளியேற்றினார்கள். ஆனால் ஸ்ரீநிஷா அழுது அலட்டிக் கொள்ளவில்லை. நிஜமாகவே திறமையுள்ள குழந்தை. ‘என்னை ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு?’ என்பதுபோல சிரித்துக் கொண்டே வெளியேறியது.

அடுத்து வைல்ட் கார்ட் ரவுண்ட் என்று இன்னொரு நாடகம் நடத்துவார்கள். அதிலும் ஸ்ரீநிஷா பாடுவாள். இருந்தாலும் ஸ்ரீநிஷா இல்லாத எபிசோடுகளைப் பார்ப்பதாக உத்தேசம் இல்லை.

***

ராவணன் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கேட்கக் கேட்க உள்ளுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கார்த்திக் பாடும் ‘உசிரே போகுதே’ பாடல் நிச்சயம் ஹிட். அடுத்த இடம் ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு.’

அனுராதா ஸ்ரீராமின் குரல் கொஞ்சம் உறுத்துவதால் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலில் முழுமையாக லயிக்க முடியவில்லை. ஆனால் இதே பாடலின் ஹிந்தி வெர்ஸன் அசத்தல். கள்வரே என்ற பாடல், ஷ்ரேயா கோஷல் பாடியது. வழக்கம்போல குரல் தேன். வரிகள் ஹிந்தி மெட்டுக்கேற்ப ஆங்காங்கே துருத்தி கொண்டிருக்கின்றன. வைரமுத்துவின் வார்த்தைகள் வளைந்துகொடுக்கவில்லை.

மணிரத்னம் படங்களில் ஹிந்தி – தமிழ் என இரண்டு மொழிகளிலும் சேர்ந்து பொருந்திப் போகும்படியாக, ரசிக்கும்படியாக ‘உயிரே’ பாடல்கள் இருந்தன. அடுத்ததாக ‘பம்பாய்’ சொல்லலாம். குரு சொதப்பல். அந்த விதத்தில் ராவணன் பாடல்களும் தடுமாறவே செய்கின்றன.

படத்தில் மலை ஜாதி மக்கள் தலைவன் விக்ரம் (ராவணன்), அவரது தங்கை ப்ரியா மணி (சூர்ப்பநகை), போலிஸ் ஆபிஸர் பிரித்விராஜ் (ராமன்), அவரது காதல் மனைவி ஜஸ்வர்யா ராய் (சீதை).

கதை? புரிந்திருக்குமே. படத்தின் ஸ்டில்களும் நம் நினைப்பை உறுதிப்படுத்துகின்றன.

சில பாடல் வரிகள் கவனிக்கப்பட வேண்டியவை.

என் பொறப்பு நீ கண்டா

என் பாதை நீ கடந்தா

என் யுத்தம் நீ செஞ்சா

நீ ராமந்தேன் ராவணந்தேன்..

ரெண்டும்தேன்…

– வீரா என்ற பாடலில் விக்ரமின் கேரக்டரை விளக்குவதாக வரும் வரிகள் இவை.

விக்ரம் தன் இனத்தவர்களுடன் ஆடிப்பாடும் ஒரு பாடல் இப்படி ஆரம்பமாகிறது.

கெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு

மொடா மொடா கள்ளு ஊத்து

….

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்

கட்டில்மேல பாத்தா சூப்பநகை வம்சம்…

– ராவணன் மது, மாமிசம் சாப்பிடுபவரா? சூர்ப்பநகை வரிகள் என்ன சொல்ல வருகின்றன?

ஐஸ்வர்யா ராயைக் கடத்தி காட்டில் வைத்திருக்கும் விக்ரம் மன சஞ்சலத்தோடு பாடும் ‘உசிரே போகுதே’ பாடலில் சில வரிகள்.

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல…

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்திக் கெடக்குதே

***

வழக்கம்போல படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதைப் பற்றி பேச வைக்கும் வித்தையில் வெற்றி கண்டிருக்கிறார் மணிரத்னம். ஆனால் பாடல் வரிகள் ராவணனை நல்லவிதமாகச் சொல்வதாகத் தோன்றவில்லை.

காத்திருப்போம். மணிரத்னத்தின் ராவணன், நல்லவனா அல்லது கெட்டவனா என்று தெரிந்துகொள்ள.

***

எப்போது ஆரம்பித்தார்கள், யார் எடுக்கிறார்கள், யார் நடிக்கிறார்கள், என்ன கதையாக இருக்கும் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து கவனம் ஈர்த்து விட்டார்கள்.

ராமர்.

ராவணன் வரும் நேரத்தில் இந்தப் படமும் நன்றாகவே விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர் ஹிட் பாடல்கள் என்று தினமும் விளம்பரம் வருகிறதே என்று அதையும் கேட்டுப் பார்த்தேன்.

புது இசையமைப்பாளர் போல. சார்லஸ் மெல்வின். பென்னி தயாள், ஹரிசரன் என்று தற்போதைய முன்னணி பாடகர்கள் என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் ‘அட புதுசா இருக்குதே’ என்று புருவம் உயர்த்த வைக்கவில்லை என்றாலும் சிலமுறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன.

திராவக வெண்ணிலா – என்றெல்லாம் தமிழுக்கு புது வருணிப்புகளை அருளியிருக்கிறார் இளைய கம்பன்.

படம் வரட்டும். விமர்சனம் யாராவது எழுதினால் படிக்கலாம்.

***

இந்தக் கட்டுரைக்கு வந்த தம்பி ஒருவர் எழுதிய கமெண்ட்:

ராவணன் படத்தில் இன்னும் ஒருபாடல் இருக்குங்கண்ணா.

‘கோடு போட்ட கொன்னுபோடு ..வேலி போட்டா…’

இந்த்த பாடலை மட்டும் ஏன் நீங்க கேட்கலைய அல்லது புரியலையா? இத மட்டும் தவிர்த்து ஏன்?கொஞ்சம் உண்மைகள் கலந்திருப்பதாலா?

கோடு போட்டா கொன்னுபோடு. வேலிபோட்ட வெட்டிப்போடு. நேத்துவரைக்கும் உங்கசட்டம். இன்னைக்கு இருந்து என்கசட்டம். சோத்துல பங்கு கேட்டா எலய போடு எலய

சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலய

ஊரா வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது….

பாட்டன் பூட்டன் சொத்த யாரும் பட்டா போடகூடாது

பழங்குடி இனமக்களின் போராட்டத்தை நல்லாச்சொன்ன இந்த பாட்டைமட்டும் விமர்சனம் பண்ணாதது இதிலிருக்கும் உண்மையினாலா?
-தம்பி

பதிலை எதிர்பார்க்கிறேன்.

விஜய் – விமர்சனம்

நானும் வேண்டாம், கூடாது, பேசவே கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கு ஓடினாலும் துரத்தித் துரத்தி பயமுறுத்துவதால் ‘சுறா’வைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம்.

இன்று காலையில் சென்னை ஹலோ எஃப்.எம். சுசித்ரா நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் : தொடர்ந்து பல படங்களாக ஒரே ஃபார்முலாவில் நடித்துக் கொண்டிக்கும் விஜய் அதை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

போனில் பேசியவர்கள் எல்லோருமே ‘கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சிலரது கருத்துகள் :

ஒரு பெண் : விஜய்க்கு டான்ஸ் மட்டும்தான் ஆடத் தெரியும். அதுலயும் வித்தியாசமா, கஷ்டப்பட்டு பண்றதா நினைச்சு தரையில படுத்து தவழ ஆரம்பிச்சுடுறாரு. பாவமா இருக்கு.

***

ஒரு குடும்பத் தலைவி : இந்த படமாவது நல்லாயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டு ஒவ்வொரு விஜய் படமும் தியேட்டர்ல போய் பார்க்கத்தான் செய்யுறேன். ஆனா ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமா இருக்குது. வெறுப்பா இருக்குது. இன்னிக்கு நைட்கூட சுறா போகலாம்னு இருக்கேன். விஜய் வேற மாதிரி நடிச்சா நல்லாயிருக்கும்.

***

ஒரு குடும்பத் தலைவர் : நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்.

***

ஒருவர் : விஜய் தன்னைக் கண்டிப்பா மாத்திக்கணுங்க. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள மாதிரி கேரக்டர் பண்ணனுங்க.

சுசித்ரா : அந்த ரிஸ்க் எடுக்கணுங்கிறீங்களா? அவரால முடியுமா?

ஒருவர் : ஏங்க, ஐம்பது படம் நடிச்சுட்டாரு. இன்னும் இந்த ரிஸ்க் கூட எடுக்கலேன்னா எப்படி?

***

நேயர் : விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கணும். அப்படி ஒரு படத்துல நடிக்கணும்.

சுசித்ரா : அவர் உங்ககிட்ட தேசிய விருது வேணும்னு கேட்டாரா?

நேயர் : இல்லீங்க. நெம்பர் ஒன் இடத்துல இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. ஒரு விருதாவது வாங்கி அந்த இடத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டமா?

***

நிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் விஜயின் படங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் டப்பா படங்களுக்குக் கூட எஃப்.எம்.களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி விஜயைக் கேலி செய்ய வலுவான களம் அமைத்துக் கொடுத்ததுபோல அமைந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சுசித்ரா கடைசியில் சொன்ன வழிசல் வார்த்தைகள்.. ஹிஹி!

விஜய் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவரோட டான்ஸ் சான்ஸே இல்ல. அவர் சொன்ன தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். அடுத்து அவர் நடிக்கிற த்ரீ இடியட்ஸ்ல ஒரு ஸீன்கூட மாத்தக்கூடாதுன்னு சொல்லிருக்காராம்.

சுசித்ராவுக்கு ஒரு கமெண்ட் : உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாடிய பாடல்களை மட்டும் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒலிப்பரப்பு செய்வது ரொம்ப ஓவர்.

***

விஜய் கதைத் தேர்வில் இம்மியளவுகூட ரிஸ்க் எடுப்பதில்லை. மக்கள்தான் அவருடைய படத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுக்க வேண்டியதிருக்கிறது. எனவே விஜய் நடித்த படங்கள் பார்ப்பதை விட்டு பட வருடங்களாகிவிட்டன.

பழைய விஜய் படங்களில் எனக்குப் பிடித்தவை – 1. குஷி 2. காதலுக்கு மரியாதை 3. லவ் டுடே.

கடைசியாக தியேட்டருக்குச் சென்று (அதாவது நண்பர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதால்) பார்த்த விஜய் படம் : சிவகாசி.

சுறா பார்க்கும் துர்பாக்கியமான சூழல் என் வாழ்க்கையில் அமைந்துவிடாது என்று எல்லாம் வல்ல கோடம்பாக்கீஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன்.

அது சரி. விஜய் மாற வேண்டியது பற்றி என் கருத்து…?

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்துன்னு பாட நான் என்ன விஜயா? அட போங்கப்பு… நாட்டுல மாத்த வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதை விட்டுப்புட்டு…

ஜே.கே. ரித்தீஷின் சொத்து மதிப்பு எவ்வளவு?

ரஜினி சாருக்கு எப்படி பாலச்சந்தர் சாரோ, சினிமான்னா எனக்கு குரு சின்னி ஜெயந்த் சார்தான். நடிக்கத் தெரியாத ஒரு நடிகனும் – நாந்தான், டைரக்‌ஷன் தெரியாத ஒரு டைரக்டரும் – என் குருநாதர் சின்னி ஜெயந்த் – சேர்ந்து எடுத்த படம்தான் கானல் நீர்.

– ஜே.கே. ரித்தீஷ் உதிர்த்த அருமையான வார்த்தைகள் இவை. தொடர்ந்து கானல் நீர் பற்றி அவர் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் ஹாஹாஹா…

கேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா?

பதில் : படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.

கேள்வி : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல?

பதில் : அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.

கடந்த ஞாயிறு (மார்ச் 28, 2010) விஜய் டீவியில் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பான வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் இந்த வார கெஸ்ட் ஜே.கே. ரித்தீஷ்.

டெல்லி கணேஷ், அப்துல்லா (X பெரியார்தாசன்), புஷ்பவனம் குப்புசாமி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் செம நக்கல். ரித்தீஷும் கொஞ்சம்கூட டென்ஷனே ஆகாமல் நகைச்சுவையுடனேயே சமாளித்தார்.

சில கேள்விகள்

* அய்யா, நீங்க டெல்லிக்குப் போனதால, கோடம்பாக்கமே அப்படியே வெறிச்சோடிப் போயிருச்சாமே? யார் கையிலயும் காசில்லை, ஒண்ணும் நிலைமை சரியில்லையாமே?

* திடீர்னு சுனாமி மாதிரி வந்தீங்க, அரசியல், சினிமான்னு. நீங்க யாரு? எங்க இருந்து வந்தீங்க?

* சினிமால உங்களுக்கு நிறைய க்ளோஸ்-அப், பேனர், பேப்பர்ல எல்லாம் உங்களை அடிக்கடி பார்க்கறோம். பார்லிமெண்ட்லயும் கேமரா இருக்கு. ஆனா ஒரு தடவைகூட அந்த கேமராவுல நீங்க வரலியே?

* யாரைக் கேட்டாலும் நிறைய அள்ளிக் கொடுப்பாரு ரித்திஷுன்னு சொல்றாங்க. சார், எத்தனைக் கோடி உங்க கைவசம் இருக்கும்?

* இங்க சினிமாவுல நல்ல ஃபைட்லாம் பண்றீங்க. பார்லிமெண்ட்லயும் அதுக்கான வாய்ப்பெல்லாம் இருக்குது. எப்படி பண்ணிருக்கீங்களா?

* நீங்க கட்-அவுட் வைச்சா மட்டுமே யாருமே எடுக்கச் சொல்ல மாட்டேங்கறாங்களே, ஏன் சார்?

* நாயகன் செமயா ஃபைட் போட்டீங்க. ஜே.கே. ரித்தீஷ் சார் இருக்குறாரு, தீவிரவாதிகளுக்குச் சவால் விடுறோம். இப்போ வந்து பாருங்கடா பார்லிமெண்டுக்கு…

* இந்த கவுன்சிலரு, வார்டு உறுப்பினரு, எம்.எல்.ஏ.ன்னு படிப்படியா வராம, டைரக்டா எம்.பி.ன்னு முடிவு பண்ணுனீங்களே, எப்படி?

* செட்டிலானா லைஃப்ல ஜே.கே.ரித்தீஷ் மாதிரி செட்டில் ஆவணும்னு பொதுவா பேசிக்கறாங்களே, நீங்க கேள்விப்பட்டீங்களா?

* அண்ணன்னு ஒரு படம், தம்பின்னு ஒரு படம் – ரெண்டு படத்துலயும் நடிக்க ஒரே நேரத்துல கால்ஷீட் கேட்டு வராங்க. நீங்க எதுல நடிப்பீங்க?

நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.

அதே தினத்தில் வெளியான தினமலர் செய்தி : கேள்வியே கேட்காத ஆறு தமிழக எம்.பி.,க்கள் : பார்லியில் தான் இந்த நிலைமை

அங்காடித் தெரு

அங்காடித் தெரு – விமரிசனங்களால் முன் நிறுத்தப்பட வேண்டிய படம் அல்ல; தியேட்டருக்குச் சென்று உணர்ந்து நெகிழ வேண்டிய படம். இதுவரை வெளிவந்த சிறந்த தமிழ்ப் படங்களில் இது மிக முக்கியமானது. எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமான படம். வசந்தபாலன், இனி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கியமான (தைரியமான) இயக்குநர். அங்காடித் தெரு, உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட அடையாளம் பெற்றுத்தரப் போகிறது. ரங்கநாதன் தெருவில் கூடும் கூட்டத்தில் ஒரு பங்கு அங்காடித் தெரு ஓடும் தியேட்டர்களில் நிறைந்தால், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டுவிட்டது என்று மகிழலாம்.

படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் அல்ல, நன்றி.