தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது,  வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள்.  இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.  திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின்  நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த  முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’

இவ்வாறு அழகிரி பேசினார்.

இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத்  தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை  பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை.  டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே  தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின்  குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’

இவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர்  என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி  மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’  இவ்வாறு அவர் கூறினார்.

ஸாரி கங்குலி!

நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்ததில்லை. உதாரணம் – ரஜினி, விஜய், சச்சின் ஆகியோரை என் மனம் கண்டுகொண்டதில்லை. அவர்களது வெற்றியும் கவர்ந்ததில்லை. ஆனால் நம்பர் ஒன்னுக்குச் சமமான தகுதியில் இருப்போரை என் மனம்  கொண்டாடும். கமல், அஜித், இவர்களோடு கங்குலி. இவர்களது முயற்சிகள் ஜெயிக்க வேண்டும்  என்று மனமார விரும்புவேன். இவர்கள் அடையும் சின்னச் சின்ன வெற்றிக்கும் எல்லையில்லாமல்  சந்தோஷப்படுவேன். (இதுகூட ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். ஹாய் மதனைக் கேட்க  வேண்டும்.)

கிரிக்கெட் புலிக்கு சர்வதேச மைதானத்தில் இன்று இறுதிநாள். கங்குலியின் வெறி, துணிச்சல்,  கோபம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். அவரது ஆட்ட நேர்த்தியைப் பாரா பாராவாகப் பேசுமளவு க்கு எனக்கு கிரிக்கெட் தெரியாது. நானொரு பாமர கிரிக்கெட் ரசிகன். புறக்கணிப்புகளை எ ல்லாம் தாண்டி வந்து சரிந்து விழுந்த தனது இமேஜை நிமிர்த்தி, சரியான நேரத்தில் ஓய்வை  அறிவித்துவிட்டு கௌரவமாக விலகும் தாதா சவுரவை…

இப்படி எழுதிக்கொண்டே போனால் ஏதோ இரங்கல் கடிதம் போலாகிவிடும். கோல்கட்டாவுக்காக கேப்டன் கங்குலியின் 20-20 ஆட்டத்துக்குக் காத்திருக்கிறேன்.

ஒரு விஷயம். 2005ல் கங்குலி ஃபார்ம் இழந்து கேப்டன் பதவியிழந்து மீடியாக்களால் கேலி  செய்யப்பட்டு வந்தபோது நானும் அவரைக் கேலி (காலி)செய்து ஜாலிக் கட்டுரை (ஒரு புலியின்  கதை) ஒன்றை தினமணிக் கதிரில் எழுதினேன். இன்றுவரை நான் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் நானே வெறுக்கும் கட்டுரை அதுவே. இப்போது அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஸாரி கங்குலி!

இணையத்தில் அந்தக் கட்டுரை கிடைக்கலாம். தேடாதீர்கள் ப்ளீஸ்!