சல்மாவும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸும்

நேற்று இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். வீட்டில் டீவியில் NDTV Hindu சேனல் ஓடிக் கொண்டிருந்தது. நைட் விஷன் என்றொரு நிகழ்ச்சி. ஓர் அதீத லிப்ஸ்டிக் ஆன்ட்டியும், வழுக்கைக்கு முந்தைய நிலையில் கேச அமைப்பு கொண்ட முதிர் இளைஞரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் நுரைபொங்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடவே அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாதது போல ஓர் அம்மணி.

எங்கோ அந்த அம்மணியைப் பார்த்ததாக ஞாபகம். யோசித்துப் பார்த்தேன். அட, கவிஞர் சல்மா. அந்த இரண்டு ஆங்கில அதிமேதாவிகளும் எதைப் பற்றி, சல்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கவுன்சிலிங், போலீஸ் ஸ்டேஷன், டிவோர்ஸ், பெண்கள் – போன்ற வார்த்தைகள் அடிக்கடி பரிமாறப்பட்டன. என்ன விஷயம் என்றே புரியவில்லை. (பிறகு நெட்டில் தேடி படித்துக் கொண்டேன்.)

ஆனால் நேற்று சல்மாவின் பேட்டியைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒன்று அவர் மீதோ அல்லது சேனல் மீதோ நிச்சயம் கோபமோ, வருத்தமோ வந்திருக்கும். என் வருத்தம் சல்மா மீதுதான். அறியப்பட்ட தமிழ் கவிஞர். தமிழில் நன்றாகப் பேசவும் கூடியவர். ஆனால் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதற்குள் திணறிப் போய்விட்டார்.

மனத்துக்குள் ஒரு வார்த்தையை யோசித்து அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி, பின் இடைவெளிவிட்டு அடுத்த வார்த்தையை யோசித்து மொழிபெயர்த்து பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் – நிஜமாகவே பரிதாபமாக இருந்தது. டென்ஷனில் டென்ஸ் தெரியாமல் பெரும்பாலும் பாஸ்ட்டிலும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸிலுமே சல்மா பேசியதைக் கேட்கும்போது எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்றே நினைக்கத் தோன்றியது.

‘தமிழில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்’ – என்று ஆங்கில சேனல்காரர்களிடம் ஒரு தமிழ் கவிஞரால் நேரடியாகச் சொல்ல முடியாதா என்ன? தேவைப்பட்டால் சேனல்காரர்கள் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டுக் கொள்ளட்டும். எல்லா ஹிந்திக்காரர்களும் சேனல் பேட்டிகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்களா என்ன? தான் சொல்ல வந்ததைக்கூட சரியாகச் சொல்லமுடியாமல், சல்மா இப்படி ஒரு பேட்டி கொடுக்க வேண்டுமா?

அடச்சே, ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். முதலிலேயே ஞாபகம் இருந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன். தி ஹிந்து எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானதுதானே.

எடிட்டிங்னா என்ன செய்வீங்க?

நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்வதென்பது அதிக சலிப்பைத் தரும். பதில் சொல்லுவதற்கே அவ்வளவு அலுப்பாக இருக்கும்.

என்ன வேலை பார்க்குறீங்க? – புதியவர்களோ, சொந்தங்களோ என்னைக் கேட்பார்கள்.

எடிட்டரா இருக்கேன் – பதில் சொல்லுவேன்.

எடிட்டர்னா? என்ன பண்ணுவீங்க? – அடுத்த கேள்வி வந்து விழும்.

ஒரு பப்ளிகேஷன்ல வேலை பார்க்குறேன் – இந்த பதிலோடு திருப்தியடைந்துவிடுவார்கள் என்று சொல்லிப் பார்ப்பேன். விடமாட்டார்கள். அடுத்த கேள்வி ஏடாகூடமாக வந்துவிழும்.

அப்படின்னா என்ன? ப்ரிண்டிங் பிரஸ்ஸா?

புஸ்தகங்கள் போடுற கம்பெனி.

வாரப்பத்திரிகையா?

இல்ல. பொதுவான புத்தகங்கள்.

கதை புஸ்தவமா? நாவல் மாதிரியா?

அரசியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம்னு பல தரப்பட்ட புஸ்தகங்கள் பண்ணுறோம்.

மாசா மாசம் வருமா? அங்க நீங்க என்ன வேலை பண்ணுறீங்க?

எடிட்டரா இருக்கேன். புஸ்தகங்கள் எடிட் பண்ணுவேன். எழுதுவேன்.

எடிட் பண்ணுறதுன்னா?

கேள்விகள் வளர்ந்துகொண்டே போகும். அதென்னவோ தெரியவில்லை.  ‘சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்குறேன்’ என்று சொன்னால் அடுத்த கேள்விகள் எழுவதில்லை. ‘மார்க்கெட்டிங்ல இருக்கேன்’, ‘இன்ஜினியரா இருக்கேன்’, ‘மெடிகல் ரெப்பா இருக்கேன்’ – இந்த பதில்களுக்கெல்லாம் எதிர்கேள்வி எழுவதில்லை. எடிட்டராக இருக்கிறேன் என்றால் எதிரெதிரெதிர் கேள்விகள் முளைத்துக் கொண்டே போகின்றன. பொறுமையாக உட்கார்ந்து பலருக்குத் தெளிவாக விளக்கியும் இருக்கிறேன். ம்ஹும். அப்படியும் கேள்வி கேட்பவர்களின் முகத்தில் சந்தேகம் பாவனை காட்டிக் கொண்டிருக்கும். ஒருவித அதிருப்தியோடுதான் எழுந்து செல்வார்கள்.

யாரைச் சொல்லியும் குற்றமில்லை. இந்தத் துறை பற்றிய புரிந்துணர்வு வெகுஜன புரிதலுக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கிறது.

இன்று காலையில் எடிட்டிங் துறை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்கும் கட்டுரை ஒன்றை தி ஹிந்து – Education Plusல் படித்தேன். கட்டுரை இங்கே. இனிமேல் என் வேலை பற்றி கேட்பவர்களிடம் இந்தக் கட்டுரையை அச்செடுத்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

டெயில்பீஸ் : எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் வீட்டுக்காரர்களிடம் எனது துறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் எனது அப்பா, அம்மா விளக்குவதற்குப் படும்பாடு இருக்கிறதே.. அது தனி புராணம்.