திடுக் திடுக் – ஞாநி – கிழக்கு மொட்டைமாடி

கிழக்கு மொட்டைமாடியில் இன்று இரண்டாவது கூட்டம். சிறப்பு அழைப்பாளர் ஞாநி. பொருள் :  மும்பை பயங்கரவாதத் தாக்குதல். என்ன பேசினார்கள், எந்த மாதிரியான விவாதம், தப்பு, சரி போன்ற பல விஷயங்களை கண்டிப்பாக மற்ற பல இணைய நண்பர்கள் கண்டிப்பாக எழுதுவார்கள்  (எழுத ஆரம்பித்திருப்பார்கள்). என்னுடைய தனிப்பட்ட பார்வையில் சில ‘பொது’ விஷயங்கள்.

* ஆரம்பத்தில் வெகு சாதாரணமான வார்த்தைகளோடு கூட்டம் ஆரம்பித்தது. கடைசி வரிசையில்  உட்கார்ந்திருந்த எனக்கு கொட்டாவி வந்தது. காபி எப்போது கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

* ஞாநியின் முதற்கட்ட பேச்சு முடிந்தபிறகு, விவாதம் ஆரம்பித்தது. விவகாரங்களும். இருக்கையை உதறி எழுந்த நபர்களிடமிருந்து உத்வேகக் கேள்விகள். நிமிடத்துக்கு நிமிடம் சூடு கூடியது. மொட்டைமாடியில் நிறைய வேண்டாத கட்டைகள், கிரில் கம்பிகள் வேறு கிடந்தன. எனக்கு  சட்டக்கல்லூரி காட்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.

* கிட்டத்தட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு போல சூழல் மாறியிருந்தது. கேள்வி கேட்ட சிலர்  காலில் ஷூ அணிந்திருந்ததும் என் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

* கேள்வி கேட்டுவிட்டு சட்டென அங்கிருந்து நகர்ந்து ஓரம்போன ஒருவர், செல்பேசியில் கொஞ்ச  நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டிப்  பார்த்தேன். ஆட்டோ(க்கள்) தென்படவில்லை.

* நான்கைந்து விமானங்கள் மொட்டைமாடியைக் கடந்தன. கொஞ்சம் திகிலோடுதான் மேலே  பார்த்தேன். எதுவும் தாழ்வாகப் பறக்கவில்லை.

* மும்பையை விட்டு பேச்சு எங்கெங்கோ திசைமாறிப்போனது. மதக்கலவரம், சாதிக்கலவரம் உருவாகிவிடுமோ என்றொரு பயம் வந்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதிலும் சிலர்  அடிக்கடி பின்னங்கழுத்துக்கு அருகே கையைக் கொண்டு சென்றபோது அடிவயிற்றில் பக்.

* குமுதம், ஆனந்தவிகடன், தீம்தரிகிட, ஒற்றை ரீல் – ஞாநிக்கான பிரத்யேக கேள்விகள் தொடுக்கப்பட்டு அதற்கான விளக்கங்கள் சென்றுகொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இருவருக்கிடையே வேறொரு விவாதம். ‘ஞா’வும் ’நி’யும் தனித்தனியே தமிழெழுத்துகள்தான். ஆனால்  ‘ஞாநி’ தமிழ் வார்த்தை இல்லை. இதுக்கு என்ன சொல்லுறீங்க?. ‘யாரெல்லாம் உண்மையான  தமிழன்’ என்ற பிரச்னை கிளம்புவதற்குரிய அறிகுறிகள் முளைத்தன.

இந்த மொட்டை மாடிக் கூட்டத்தின் முடிவில் நான் எடுத்த முடிவு : இதுவரை நான் டூவிலர் காப்பீடு  தவிர வேறெதுவும் எடுக்கவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் தனிநபர் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.