தமிழ் பதிப்புலக ‘வரலாற்றில்’ முதன்முறையாக…

‘அவ்வளவுதான். இனி நம்மிடம் இருப்பது இரண்டே கப்பல்கள்தான். சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் நிச்சயமாக சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நான் தொலைத்துவிட்டேன். இழந்துவிட்டேன்’ – மனத்தளவில் அந்த முடிவுக்கு வந்திருந்தார் மெகல்லன்.

இருக்கும் இரண்டு கப்பல்களையாவது காப்பாற்றியாக வேண்டிய சூழல். ஆனால் அதற்கும் சோதனை தொடங்கியது. அடுத்ததாக ஒரு சூறாவளி வீச ஆரம்பித்தது. டிரினாடாடையும் விக்டோரியாவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேதோ திசைகளில் எல்லாம் அவை கொண்டு செல்லப்பட்டன.

அந்தச் சூறாவளியும் ஓரளவுக்கு ஓய்ந்தது. டிரினிடாடில் இருந்தபடி கடலைப் பார்த்தார் மெகல்லன். கண்பார்வை தூரத்தில்தான் விக்டோரியா இருந்தது. மனத்துக்குள் மெல்லியதாக ஒரு நிம்மதி படர்ந்தது. ஆனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாதபடி விக்டோரியாவின் பாய்மரத் துணிகள் கிழிந்து தொங்கின. சூறாவளி கொடுத்துவிட்டுப் போன பரிசு.

சில மணி நேரங்கள்கூட மெகல்லனின் நிம்மதி நீடிக்கவில்லை. அடுத்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது. கப்பல்களைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேரலைகல் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

கடல், பேரலைகளால் அந்த இரண்டு கப்பல்களையும் பந்துகள் போல எடுத்து, தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பாறையில் மோதி கப்பல் துண்டு துண்டாகிப் போகலாம் என்ற நிலை.

கப்பல்களில் இருந்த எல்லோரும் இறுக்கமாக எதையாவது பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் அலைகளில் ருத்ர தாண்டவம், சிலரை கடலுக்குள் விழ வைத்தது. கடலுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் தவறி விழுந்தார்கள். அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது.

ஒவ்வொரு நொடியையும் மரண பயமின்றிக் கழிக்க முடியவில்லை. இந்த நிலை இரண்டு நாள்கள் தொடர்ந்தது.

அதுவரை ஆடிய ஆட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைதியாக இருந்தது கடல்.

‘இந்த நிமிடம் வரை உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது. எப்படியோ விக்டோரியாவும் தப்பித்து விட்டது. ஆனால் சான் அண்டோனியாவும்  கான்செப்ஷனும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு பாறையிலோ, குன்றிலோ மோதி சிதைந்து போயிருக்கும். யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா? சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.’

உடலெல்லாம் வலி. மனத்தில் அதைவிட. கடல் அமைதியடைந்திருந்தாலும் மெகல்லனால் அந்த இரவில் தூங்க முடியவில்லை.

இருளை தின்றபடியே மெள்ள மெள்ள ஒளி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த அதிகாலை நேரம். யாரோ தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த மெகல்லன் படாரென எழுந்து உட்கார்ந்தார்.

‘கேப்டன்.. கேப்டன்..’

வெளியே ஹென்றியின் குரல் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து நொண்டியபடியே வெளியே சென்றார். முகம் முழுக்க உற்சாகம் வழிய நின்று கொண்டிருந்தான் ஹென்றி. அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவன் கைகாட்டிய திசையில் மெகல்லனின் பார்வை சென்றது.

நம்பவே முடியாத ஆச்சரியம். தன் கண்களை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு அதே திசையில் நோக்கினார். மெகல்லனின் முகத்தில் புன்னகை, சூரியன் போல உதயமானது. கைகள் கூப்பி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

தூரத்தில் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் வந்து கொண்டிருந்தன.

000

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். பாய்மரக் கப்பல்கள்தான் இருந்தன. கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படையோ – எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கப்பலைச் சீரழிக்கக் காத்திருக்கும். நிலப்பரப்பே இன்றி, பயணம் மாதக் கணக்கில் நீண்டு கொண்டே செல்லும். உணவோ , நீரோ கிடைக்காத அவலநிலையால் மரணம் சகஜம்.

இம்மாதிரியான சூழலில்தான் பயணி மெகல்லன், கடல் வழியாக உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். ஐந்து கப்பல்கள். 241 பேர். 69,800 கி.மீ. பயண தூரம். மூன்று வருடப் பயணம். எத்தனை பேர் பிழைத்து வந்தார்கள்? உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் மெகல்லன் என்பது உண்மைதானா?

புரியும்படியாக புவியியலையும் சொல்லி, கூடவே சுவாரசிய நடையில் வரலாற்றையும் கலந்து சொல்வதென்பது சவால்தான். இதற்கு முன்பாக அண்டார்டிகா குறித்து நான் எழுதிய ‘ஸ்…!’ என்ற புத்தகம் பூரண திருப்தி கொடுத்தது. இந்தவருடம் அதே திருப்தி எனக்கு மெகல்லனில் கிடைத்திருக்கிறது.

மெகல்லன் : ப்ராடிஜி வெளியீடு

நான் யார்?

Mugil

இந்த உலகத்தில் எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி இதுதான்.
எங்கிருந்து வந்தேன்?
எங்கே இருக்கிறேன்?
எங்கே சென்று கொண்டிருக்கிறேன்?
நான்
என்பது என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என் ஆழ்மனத்தின் அடியோட்ட இடைவெளியில் அமர்ந்து ஆசனம் செய்தபடியே யோசித்தபோது கிடைத்த பதில்கள்…

தூத்துக்குடியிலிருந்து வந்தேன். சென்னையில் இருக்கிறேன். தினமும் அலுவலகம் முடிந்ததும் பனகல் பார்க் வழியாக அசோக் நகருக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நான் என்பது ஆழ்வார்ப்பேட்டை சூர்யாஸ் ஹோட்டலில் முப்பத்துச் சொச்ச ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு பதார்த்தம்.

என்ன செய்ய, தமிழ் சினிமா கொஞ்சம் அதிகமாகப் பார்த்து மாசுபட்டுக் கிடக்கும் மனம், ஆரம்ப பில்ட்-அப் இன்றி எதையும் எழுத விடமாட்டேன் என்கிறது. சரி, என்னைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக.

பிறந்த ஊர் கோவை. வளர்ந்தது படித்தது எல்லாம் தூத்துக்குடி. வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் (1997-2000). பின்பு அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் (2000-2002). மென்பொருள் துறையில் மனம் அவ்வளவாக லயிக்கவில்லை. காரணம் எழுத்தின் மீதிருந்த ஆர்வம்.

ஐந்தாவது படிக்கும்போதிருந்தே டைரி எழுத ஆரம்பித்துவிட்டேன். தினசரி நிகழ்வுகளை அல்ல. என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவேன். அவற்றில் பலவற்றை கவிதை என்று இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறைக்கு எனது அம்மா வழி தாத்தா – ஆச்சி வீட்டுக்கு வெகு ஆர்வமாகச் செல்வேன். காரணம், புத்தகங்கள். 60, 70, 80களில் கல்கி, குமுதம், விகடன்களில் வந்த தொடர்கதைகளைத் தனியாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்த குண்டு குண்டு புத்தகங்களில் எனது வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது.

பள்ளி அளவில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கவிதை மட்டுமல்ல, என்ன போட்டி வைத்தாலும் நானும் பெயர் கொடுத்து கலந்துகொள்வேன், பாட்டுப் போட்டிகளில்கூட. கல்லூரி எனது கவிதை ஆர்வத்தை வளர்த்தது. சுதந்தர தின பொன்விழா கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாவது பரிசு பெற்றது. அப்போதிருந்து, கல்லூரி அளவுகளில் பல்வேறு ஊர்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளுக்கு எனது கல்லூரி சார்பாகச் செல்லும் போட்டியாளராக மாறினேன். வாங்கிய பரிசுகள் சொற்பமே.

எம்.எஸ்.சி படிக்கும்போது விகடன் மாணவ நிருபர் திட்டத்துக்கு குஜராத் பூகம்பம் பற்றி ஒரு கட்டுரையை இணைத்து விண்ணப்பம் செய்தேன். அடுத்தடுத்த சுற்றுகளில் தேர்வாகி, மாணவ நிருபரானேன்.

2003ல் சென்னை வந்தேன். 78 சதவிகித மதிப்பெண்களோடு எம்.எஸ்.சி. முடித்திருந்தேன். சாப்ட்வேர் இன்ஜினியராக மாறுவேன் என்பது என் பெற்றோர்களின் கனவு. ஆனால் எனக்குத் தூக்கத்தில்கூட அப்படி ஒரு கனவு வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையில் சும்மா இருந்தேன். பொழுதைப் போக்க டேட்டா என்ட்ரி வேலைக்கும் சென்றேன். அப்பா பணமெல்லாம் அனுப்பவில்லை. காரணம், அடிக்கடி நானே தூத்துக்குடி சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்.

பின்பு எனது (விகடன் மாணவ நிருபர்) தோழி கார்த்திகா மூலமாக கோகுலம் சுஜாதா, கல்கி ஏக்நாத் அறிமுகம் கிடைத்தது. அங்கே எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் சீதா ரவிக்கு என் எழுத்து பிடித்திருந்தது. கல்கி இதழோடு சென்னை வாசகர்களுக்கு மட்டும் வாராவாரம் இலவச இணைப்பு ஒன்றைத் தயார் செய்யத் திட்டமிட்டார்கள். அது ’சென்னை ஸ்கேன்’. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தார்கள். அப்போது அதற்காகத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் ஆர். முத்துக்குமார், மருதன், ச.ந. கண்ணன்.

கல்கியில் எங்கள் எழுத்தைக் கண்ட பா.ராகவன், கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். பின்பு நான் கிழக்கில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். மற்ற மூவரும் பிறகு இணைந்தார்கள். கிழக்கு முதன்மைத் துணை ஆசிரியராக என் பயணம் தொடர்கிறது.