அழிந்து கொண்டிருக்கிறோம்!

ஈழத்தமிழர்களுக்காக இறுதி வேண்டுகோள்.

பதினைந்து நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி இது. இதில் வரும் சில காட்சிகள் உங்கள் மனத்தைப் பாதிக்கலாம், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இன்றைய ஈழத்தமிழர்களில் நிலையே ஒட்டுமொத்த உலகத்தால் தவிர்க்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கிறது.  பாதிக்கட்டும், பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அதற்கான இணைப்புகளைத் தருகிறேன். பாதித்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது?

பகுதி 1 :http://www.youtube.com/watch?v=YZ_qbOyz4Ms&NR=1

பகுதி 2 :http://www.youtube.com/watch?v=d8kXCDiW98o&NR=1

ஸ்ரீலங்காவில் இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை என்று சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பேட்டி கொடுத்துள்ளார்.

திருவாசகம். ஐநா சபையின் நியு யார்க தலைமையகத்தில் பொறித்து வைத்துக் கொள்ளட்டும். தமிழினத் தலைவர்களே டெல்லியில் முடிந்தவரைக்கு ஆதாயம் ஈட்டுவதில் முனைப்புடன் இருக்கும்போது, யாரோ ஒரு மூன்றாவது மனுசன் ஆதாரம் இல்லையென்று சொல்வதில் வியப்பில்லையே.

ரமணன் இன்று மழை பெய்யும் என்று சொன்னாரா? கந்தசாமி ரிலீஸ் தள்ளிப்போகிறதா? பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா? 20-20 வேர்ல்ட் கப்ல தோனி மறுபடியும் ஜெயிப்பாரா? – நமக்கென்று வாழ்க்கையில் இப்படி ஆயிரம் யதார்த்தக் கவலைகள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி, நமது இன உணர்வு பீறிட,  அதிகபட்சம் ‘உச்’ கொட்டி கண்ணீர் சிந்துவோம். உள்ளுக்குள் கோபம் கொந்தளிக்கும். நாலு பேரைத் திட்டிப் பேசுவோம், எழுதுவோம். பிறகு,அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.

இந்த வீடியோவைப் பார்த்து கண்ணீர் சிந்தக்கூட அருகதையற்றவனாகத்தான் என்னை நினைக்கிறேன்.