(முன்குறிப்பு : எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. இசையை விமரிசிக்கத் தெரியாது.)
சமீபத்தில் வெளியான ஐந்து புதிய படப்பாடல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் கடவுள் & நந்தலாலா (இளையராஜா). குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் & சிவா மனசுல சக்தி (யுவன்சங்கர் ராஜா). அயன் (ஹாரிஸ் ஜெயராஜ்).
முதலில் நான் கடவுள். சிறிய பிட் பாடல் உள்ளிட்ட ஆறு பாடல்களையும் ஸ்கிப் செய்யாமல் கேட்கத்தோன்றுகிறது. குறிப்பாக மதுபாலகிருஷ்ணன் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்து மனத்தைப் பிசைகிறார். ஒரு காற்றில் அலையும் சிறகாக இளையராஜாவின் வருடல் என்னுடைய என்72வை அடிக்கடி உருக்குகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி ரியாலிட்டி ஷோக்களில் ‘கெமிஸ்ட்டிரி’ என்ற வார்த்தையைக் கேட்டு பழகியிருப்போம். என்னைப் பொருத்தவரை இசையுலகில் இளையராஜாவுக்கும் ஷ்ரேயா கோஷலின் குரலுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி இருப்பதாகவே உணர்கிறேன் (சாதனா சர்கத்தைவிடவும்).
அடுத்தது நந்தலாலா. நீண்ட நாள் கழித்து இளையராஜாவிடமிருந்து ஒரு அருமையான தாலாட்டு. ‘தாலாட்டு கேட்க நானும்..’ பாடலுக்குள் மூழ்கிவிட்டால் மீள்வது கடினமாகத் தான் இருக்கிறது. குரலா அது, குளோரோஃபார்ம். சரோஜா அம்மாளின் குரலில் குறத்திப்பாட்டு என்னவோ செய்கிறது. அருமையான ஆறு பாடல்களில் பலவற்றை மிஷ்கின் படத்தில் பயன்படுத்தவில்லை, இளையராஜா கோபத்திலிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் படித்தேன். ஆகவே பாடல்களைப் பார்க்கமுடிகிறதோ இல்லையோ, கேட்கத் தவற வேண்டாம்.
அப்பாவைப் பார்த்தாயிற்று. இனி பிள்ளை. முதலில் ஷிவா மனசுல சக்தி. ஒரு கல், ஒரு கண்ணாடி தவிர யுவனின் எந்தப்பாடலும் என் மனத்தில் நிற்கவில்லை. நிலைத்து நிற்கும் தரத்தில் அமையவில்லை. ஏழாவதாக வரும் ‘ஒரு பார்வையில்..’ குறும்பாடலுக்கு 99 மார்க்.
அடுத்தது குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும். இதையும் கெமிஸ்ட்டிரி என்றுதான் சொல்லவேண்டும். எஸ்பிபி சரணுக்கும் யுவனுக்குமான கெமிஸ்ட்டிரி. எஸ்பிபியின் குரல் அதிரும் ‘நான் தருமன்டா’ பாடல்தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் சுகம். இதம். சின்னஞ்சிறுசுக – பாடலில் ஒலிக்கும் ஒரு பெண் குரல் (Bela Shende) தவிர மற்ற அனைத்திலும் ஆண்குரலாதிக்கம். ‘கடலோரம்’ பாடலை யுவனும் தனியாகப் பாடியிருக்கிறார். சரணும் பாடியிருக்கிறார். இரண்டாமவருக்குத்தான் முதலிடம். ‘முட்டுக்காடு பக்கத்துல’ – நாகரிகமான குத்து. பாடல்கள் – வாலி, கங்கை அமரன். பல இடங்களில் நச். பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடியில் எடுத்திருக்கிறார்களாம். பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
ஐந்தாவது படம் அயன். வாரணம் ஆயிரத்தில் தொன்னூறுக்கும்மேல் மார்க் வாங்கிய ஹாரிஸுக்கு இதில் ஐம்பதுதான் கொடுக்க முடியும். ஹனி ஹனி – என்றொரு பாடல். சயனோரா என்றொரு பெண் பாடியிருக்கிறார். மின்காந்தக் குரல் என்று சொல்லலாம். படு வித்தியாசம். பாடல் சுமார்தான். அடுத்து குறிப்பிடத்தகுந்த பாடல் ‘விழி மூடி..’ – எல்லாப் பாடல்களிலும் சரணங்களுக்கு இடையில் வரும் இசை ஈர்க்கிறது. கட் செய்து மொபைல் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.
இந்த ஐந்தைத் தவிர சொல்ல வேண்டிய ஆறாவது படம் – ஆனந்த தாண்டவம். அதில் குறிப்பிடத்தகுந்த பாடல் ‘கனா காண்கிறேன்’. ஜிவி பிரகாஷ் – எப்போதாவதுதான் வெளியே தெரிகிறார்.
(பின்குறிப்பு : மேலே உள்ளவற்றை இசை விமரிசனமாகக் கருதி நீங்கள் படித்தால் நான் பொறுப்பல்ல.)