இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!

எம்.ஆர். ராதா நடத்திய நாடகங்களுள் ஒன்று லஷ்மி காந்தன். சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான். ராதாதான் லஷ்மி காந்தனாக வேடமேற்று நடித்தார்.

லஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன.

லஷ்மி காந்தன் தன் உதவியாளருடன் பேசுவது போல ஒரு காட்சி.

‘கோவிந்தா, என்னடா இன்னிக்கு மேட்டரெல்லாம் வந்துருச்சா?’

‘வந்துருச்சுங்க.’

‘சரி, நான் கோர்ட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்.’

‘கோர்ட்டா?’

‘ஆமா கேஸு. இந்த ரமணி பாய் இருக்காளே, அவ என்மேல கேஸ் போட்டிருக்கா.’

‘என்ன கேஸு?’

‘ஏதோ மானம் போயிருச்சாம்.’

‘ஏதாவது வக்கீலை வைச்சுக்க வேண்டியதுதானே?’

‘ஏய். இதுக்குப் போய் வக்கீலா? இது நானே பேசி முடிச்சிட்டு வந்துருவேன்.’

‘எப்படி? புரியலையே…’

‘ஆமாடா. இப்ப அவ என்ன கேஸ் போட்டிருக்கா? மானம் போயிருச்சுன்னு. இப்ப என்னோட வாட்ச் போயிருச்சுன்னு சொல்லுறேன். அப்போ இதுக்கு முன்னாடி நான் வாட்ச் கட்டியிருந்தேன்னு நிரூபிக்கணும்ல. அப்போதானே போயிருச்சுன்னு சொல்ல முடியும். அவ என்ன கொடுத்திருக்கா? இதுக்கு முன்னே அவளுக்கு மானம் இருந்துச்சா? இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு? எந்தப் பக்கமா போச்சு?’

Leave a Comment