சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 20, 2013

இன்று புத்தகக் கண்காட்சியில் உச்சபட்ச கூட்டம். சென்ற மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்குக் குவிந்த ரசிகர்களைவிட, இன்று திரண்ட வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். காலை முதலே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது. கண்காட்சி அரங்கில் நடு வரிசையில் உள்ள அரங்குகளுக்குள் நுழைய முடியவில்லை – காற்றில்லாமல் மூச்சு திணறியது. பபாஸியின் அருமையான அரங்கு கட்டமைப்புக்கு வாசகர்களின் சார்பில் கோடானு கோடி நன்றி.

பலரும் நடக்க முடியாமல் ஆங்காங்கே அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள் பலர், பாலூட்ட – உணவூட்ட தகுந்த இட வசதியின்றி தவித்ததைக் காண முடிந்தது. 750 அரங்குகளை அமைப்பவர்கள், வயதானவர்கள் – தாய்மார்கள் சற்று ஓய்வெடுக்கத் தகுந்த சிறு அறைகளை அடுத்த முறையாவது அமைத்துக் கொடுத்தால் புண்ணியம்.

இன்று கண்காட்சியில் நண்பர்கள் பலரை நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தேன். சொக்கனை மிஸ் செய்துவிட்டேன். நாளை சந்திக்க வேண்டும்.

கிழக்கில் ஆர். முத்துக்குமாரின் தமிழக அரசியல் வரலாறு இரண்டு தொகுதிகளும் நன்றாக விற்பனை ஆயின. மருதனின் (சே-யின்) மோட்டார் சைக்கிள் டயரியும் டாப் கியரில் விற்பனை ஆனது.

கிழக்கு ஸ்டாலை கடந்த ஓர் இளைஞன், தன்னுடன் வந்த இளைஞனிடம் அடித்த கமெண்ட் காதில் விழுந்தது. ‘ச்சே… இதையெல்லாம் போய் புக்கா கொண்டு வந்திருக்காங்க பாரு… படமே இப்போ அப்போன்னு இழுத்துக்கிட்டு இருக்குது…’ – அந்த இளைஞன் குறிப்பிட்டுச் சொன்னது இரா. முருகனின் விஸ்வரூபம் நாவலை.

தினத்தந்தியும் வழக்கம்போல வரலாற்றுச் சுவடுகளுக்கென தனி ஸ்டால் அமைத்துள்ளது. அங்கே விற்பனை டல். காரணம் இரண்டு வருடத்துக்கு முன்பு ரூ. 300க்குக் கிடைத்த சுவடுகளின் தற்போதைய விலை ரூ. 500. கழிவு கிடையாது.

வரலாற்றுச் சுவடுகளை மட்டும் சொல்ல முடியாது. காகித விலையேற்றம் முதற்கொண்டு பல காரணங்களால் எல்லா புத்தகங்களுமே கடந்த வருடத்தை விட 20லிருந்து 30 சதவிகிதம் வரை விலையேற்றம் கண்டுள்ளன. உதாரணம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சென்ற ஆண்டு ரூ. 500, தற்போது ரூ. 650.

சிக்ஸ்த்சென்ஸில் வெளியாகியிருக்கும் எனது புதிய புத்தகமான வெளிச்சத்தின் நிறம் கருப்பு, நன்றாக விற்பதாக பதிப்பாளர் புகழேந்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கோபிநாத்தின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க-வின் ஆங்கிலப் பதிப்பு புத்தகக் கண்காட்சியில் வெளியாகி 2000 பிரதிகளைத் தாண்டிவிட்டதாகத் தகவல் சொன்னார். என் சைஸுக்கு ஒரு கோட் வாங்கி மாட்டிக் கொண்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து முகம் காட்ட வேண்டும் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். சிக்ஸ்த் சென்ஸில் பலரும் விசாரித்துச் செல்லும் சுபவீயின்  ‘ஈழம் தமிழகம் நான்’ புத்தகம் நாளை மாலை முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தியா பதிப்பகத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு (வரலாற்று) நூல்களை இந்த ஆண்டும் கொண்டு வந்துள்ளார்கள். யுவான் சுவாங் (மூன்று தொகுதிகள்) வாங்க வேண்டும்.

இன்று சில புத்தகங்களை மட்டும் வாங்கினேன். வாங்கிய புத்தகங்களை பிறகு மொத்தமாகப் பட்டியலிடுகிறேன்.

கேண்டீன் குறிப்பு :

ஒரு டெல்லி அப்பளம் ரூ. 30, ஒரு கப் சோளத்தின் விலையும் அதே. அதிகம்தான். கேண்டீனில், அரங்கில் கிடைக்கும் காபியின் சுவை சரியில்லை. இரவு ஏழு மணிபோலஅரங்கின் வெளியே ஆறு ரூபாய்க்கு ஓர் இளைஞர் சைக்கிளில் வந்து சுக்கு காபி விற்கிறார். அபார ருசி.

முக்கியக் குறிப்பு:

புத்தகக் கண்காட்சி ஞாயிறே கடைசி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 23, புதன் வரை கண்காட்சி உண்டு. அடுத்த மூன்று நாள்கள் அவ்வளவாக கூட்டம் இராது. தேடித் தேடி புத்தகம் வாங்குபவர்கள் தாராளமாக வரலாம்.

Leave a Comment