புத்தம் புது பூமி வேண்டும்!

ஓர் இயக்குநர். முதல் படம் ஹிட். அடுத்த படம் ரிலீஸ் ஆகப்போவதற்கு முந்தைய நாள். அந்த இயக்குநரின் மனநிலை எப்படி இருக்கும்? வரப்போகும் வெள்ளிக்கிழமையை (ஏப்ரல் 16, 2010) எதிர்நோக்கி நான் அதே மனநிலையோடுதான் காத்திருக்கிறேன்.

அகம் புறம் அந்தப்புரம் முதல் அத்தியாயம் – குமுதம் ரிப்போர்ட்டரில் 2007 ஜூலை 22 இதழில் வெளியானது. அது எனது முதல் வரலாற்றுத் தொடர். அப்போது பரவசம் அதிகம் இருந்தது. சென்னை சாலைகளில் என் பெயர் ஏந்திய போஸ்டர்களைப் பார்க்கும்போது சந்தோஷம். 50 அத்தியாயங்கள் எழுதிவிடலாம் என்று ஆரம்பித்து, நூறாக வளர்ந்து, 185 அத்தியாயங்களாக நிறைந்த தொடர் அது. அந்த இரு வருடங்களில் என் வாழ்க்கையில் தினசரி வேலைகளில் அகம் புறம் அந்தப்புரத்துக்காக உழைப்பதுவும் சேர்ந்துகொண்டது. அது புத்தகமாக வெளிவந்தபின்பு, அதன் கனம், விலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி.

க்டந்த ஏழெட்டு மாதங்களாகவே அடுத்த தொடருக்கான விஷய சேகரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான முழு தயாரிப்பில் இறங்கியிருந்தேன். இதோ நாளை வெளிவரப்போகிறது – புத்தம் புது பூமி வேண்டும்.

இந்த முறை  தமிழக அரசியல் இதழில் எழுதுகிறேன். அண்டார்டிகா குறித்த புத்தகம் எழுதும்போதே சாகசப் பயணிகள் குறித்து இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமானது. அடுத்து உலகைப் பாதி சுற்றி வந்த மெகல்லன் குறித்து ஒரு புத்தகம் எழுதினேன். உலக வரைபடத்தை முழுமையாக்கிய ஒவ்வொரு பயணியின் பயணத்தை வைத்தும் தொடர் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலில் அதற்கான இடம் கிடைத்திருக்கிறது.

ஆரம்பித்துவிட்டேன்.

புத்தம் புது பூமி வேண்டும் என்று தொடருக்காக அழகான தலைப்பை வைத்த பாராவுக்கு நன்றி. அகம் புறம் அந்தப்புரத்தைவிட, சவாலான களம் இது. கிமுவில் தொடங்கி சென்ற நூற்றாண்டு வரை சரித்திரத்தை மாற்றியமைத்த சாகசப் பயணங்களை மீண்டும் நான் செய்து பார்க்க வேண்டும். என்னோடு நீங்களும்.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

பின் குறிப்பு : சினிமாவின் ரிசல்ட் – முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். பத்திரிகைத் தொடருக்கு அப்படியல்ல.

Leave a Comment