பேஸ்புக் ஒழிக!

கொசு விரட்டிகளென ஆயிரத்தெட்டு ப்ராடெக்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. அதற்கெல்லாம் கொசு அடங்குகிறதா இல்லையா என்பது விடை தெரியா கேள்வி. இந்த தலைமுறை கொசுக்கள், ஒழிப்பான்களை எல்லாம் ஏமாற்றும் வித்தை தெரிந்தவை என்பதே என் எண்ணம்.

இருந்தாலும் கொசு அடிக்கும் பேட் – ரட்சகராகத்தான் தெரிகிறது. அதைக் கொண்டு கொசுவைக் கொல்வதில் ஒரு குரூர திருப்தி கிடைக்கிறது.

ஒரு கொசுவுக்கு ஒரு ரன் என்று கணக்கு வைத்துக் கொண்டால்கூட, நாமெல்லாம் கொசு பேட் மூலம் அடித்த ரன்களை, சச்சின்கூட நெருங்க முடியாதுதான்.

சங்ககாலத்தில் எம் பெண்கள் முறம் கொண்டு புலி விரட்டினர். இக்காலத்தில் நம் பெண்கள் பேட் கொண்டு கொசு அழித்தனர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட முடிகிறது.

ஒரு நாளைக்கு நாலைந்து கொசுக்கள் பேட்டில் சிக்கினாலே, வீட்டிலுள்ள கொசுவை எல்லாம் அடித்துக் கொன்றுவிட்டோம் என மனம் நிறைவு கொள்கிறது. அந்த நினைப்பிலேயே, சந்தோஷத்திலேயே நன்றாகத் தூங்க முடிகிறது. அச்சமயத்தில் கொசு என்ன, குளவியே கடித்தாலும் தெரிவதில்லை.

****

‘சிகரெட்டை பிடிக்கறதை தயவுசெஞ்சு நிறுத்துங்க’ன்னு தலீவர் மார்கழி மாசத்துல சொல்லிருக்கக்கூடாதோ?! தலீவர் இப்படி சொல்லிட்டாரேங்கிற டென்ஷன்ல எக்ஸ்ட்ராவா தம் அடிக்காம இருந்தா சரி. # மார்கழி சிந்தனை 483.

****

21 டிசம்பர், 2012…

இப்படியே செத்துச் செத்து விளையாடுவதே இந்த பூமிக்கு வேலையாப் போச்சுது. நாளைக்கும் இன்னொரு தபா உலகம் அழியப் போவுதாம். அடப்போங்கப்பு, போய்புள்ளகுட்டிகளை படிக்க வைங்க!

*
அடியேய்… நாளைக்கு ஒலகம் அழியறத சன் டீவில லைவா காட்டுறாகளாம்!

அய்யோ.. அதைப் பாக்கணும்னா இந்த கரண்டு சனியன் இருந்து தொலையாதே!

*

பவர் ஸ்டாரின் பவர்ஃபுல் காமெடியில் உருவாகியுள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைக் காண்பதற்கு முன்பாகவே உலகம் அழிந்துவிடுமோ என்பது மட்டுமே என்னுடைய ஒரே கவலை!

****

நண்பர்கள், வாசகர்கள் கவனத்துக்கு :

இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டு முக்கிய மாற்றங்கள்.

ஜனவரி 4 முதல் 16 வரை என்று முதலில் அறிவித்திருந்தார்கள். இப்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை புத்தகக் கண்காட்சி.
நடைபெறும் இடம் : நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்.

கடந்த ஆறு வருடங்களாக பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது. அங்கே மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெறுவதால் இந்த இடமாற்றம்.

தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக முக்கியமான பின் குறிப்பு : புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்க அம்மா வரலாம் என்று தகவல். ஆக, முதல்நாள் யாரும் சென்று அவதிப்பட வேண்டாம்.

****

பேஸ்புக் எனக்கெதிராகச் சதி செய்கிறது. வலைத்தளம் பக்கமே என்னை வர விடுவதில்லை. நான் எதை எழுத நினைத்தாலும், அதைத் தன் மீதே எழுத வைத்து விடுகிறது. அதனால்தான் வலைத்தளத்தில் என்னால் எழுத முடியாமல் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட சுயநலத்தோடும் ஆணவத்தோடும் இயங்கிக் கொண்டிருக்கும் பேஸ்புக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என் கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பேஸ்புக்கில் சமீபத்தில் எழுதிய சில ஸ்டேட்டஸ்களை இங்கே பதிந்திருக்கிறேன்.

பேஸ்புக் அராஜகம் ஒழிக!

😉