லீலை!

எதிர்பாராமல் பெய்த மழையில் நனைந்த சந்தோஷம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரசனையான பாடல்களின் வரத்து மிகவும் குறைந்துபோன இந்த நாள்களில், லீலை – குளுமையாக வந்திருக்கிறது.

சதீஷ் சக்கரவர்த்தியின் (அறிமுக இசையமைப்பாளர்?) இசையில் எந்தப் பாடலுமே காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு.

ஜில்லென்று ஒரு கலவரம் – பாடலை இசையமைப்பாளர்தான் பாடியிருக்கிறார். எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தாலும் இரண்டாவது பல்லவியில் வித்தியாசப்படுத்தி பாடலுக்கு புது நிறம் கொடுத்துவிடுகிறார்.

ஒரு கிளி ஒரு கிளி – இசையமைப்பாளருடன் ஷ்ரேயா கோஷலின் காந்தர்வக் குரல் (அப்படின்னா என்னான்னு கேட்கக்கூடாது!) இதமான டூயட். மெலடி. நிலைத்திருக்கும்.

பொன்மாலைப் பொழுது – பாடல் பென்னி தயாளின் குரலில் அழகு. Summer, Winter, Autumn என்ற வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் அப்படியே பொருத்தமாக உபயோகித்திருக்கிறார்கள். உறுத்தவில்லை.

உன்னைப் பார்த்த பின்பு – காதல் சோகப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் ஹரிசரணின் குரலில். நிச்சயமாக வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தின் நம்பர் 1 பாடல் இதுவே.

படத்தில் வரும் இளமை, காதல் தளும்பும் மூன்று பாடல்களுக்குச் சொந்தக்காரர் வாலி. இவருக்கு மட்டுமே நரைகூடிய பின்னும் வாலிபப் பருவம் திரும்பும் வரம் வாய்த்திருக்கிறது.

பபுள் கம் என்றொரு பாடல். பா. விஜய் வரிகளில். திருஷ்டி.

மழை பெய்து முடித்தபின் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரியும் புல்வெளி போல படத்தில் புகைப்படங்களும் டிரைலரும் ப்ரெஷ்ஷாக இருக்கின்றன. காத்திருப்போம்.