பிரபஞ்சனின் புதிய தொடர்

இரும்பு, பயன்பாட்டுக்கு வந்தபின் ஆற்றங்கரை ஓர மக்கள், காடழித்து விவசாயத்தில் ஈடுபட்டார்கள். நெற்பயிர், பயன்பாட்டுக்கு வந்தபின் மக்கள் வளம் அடையத் தொடங்கினர். வெளிநாட்டு வர்த்தகமும் சேர சொத்து சேரத் தொடங்கியது. வாழ்க்கைக்குத் தேவையான மாடுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். கொள்ளையில் அதிக வீரம் காட்டி, அதிக மாடுகளைக் கொள்ளையடித்தவன் அரசன் ஆகிறான். அதிகாரம் அவனிடம் குவியத் தொடங்கியது. உபரி செல்வம் அல்லது சொத்துக்குத் தம் பிள்ளைகள் வாரிசாயினர். தம் பிள்ளைகள்தான் என்பதற்கான உத்தரவாதத்தைக் குடும்பமும், படி தாண்டாத மனைவியும் தந்தார்கள். ஆகவே குடும்ப அமைப்பு மகிமைப்படுத்தப்பட்டது.

நிலமற்ற விவசாயி முதன் முதலாக ‘வினைவலன்’ அல்லது வேலையாள் உருவாகிறான். குழுத் தலைவர்கள் அல்லது குறுநில மன்னர்களுடன் நெருங்கிய உறவும் நட்பும் கொண்ட பாணர்கள் என்கிற இசை நடன, நாடகக் கலைஞர்கள் காமத் தரகர்களாக மாறுகிறார்கள். கலைஞர்களாகிய பாணர்களின் மனைவிமார்கள் அல்லது கலைத் தோழர்கள், பல வேளைகளில் பரத்தையர்களாகிறார்கள். பாணர்கள் இருந்த இடங்களில் பார்ப்பனர்கள் மன்னர் அவைகளில் அமர்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில், தொழில் வழிப் பிரிவுகள், பிறப்பு வழிச் சாதிகளாகின்றன. உழைக்கும் மக்களை இழிசனர்கள், புலையர்கள், துணி வெளுக்கும் பெண்கள் புலத்தியர்கள் ஆகிறார்கள். உழவுப் பெண்கள் ‘கடைசியர்கள்’ ஆகிறார்கள். போரில் தோற்றவர்கள் அடிமைகள் ஆகிறார்கள்.

…..

எல்லையற்ற அதிகாரத்தைக் குவித்துக் கொண்ட மன்னர்களைத் தம் சாதுர்யத்தால் வளைத்துப் போட்ட பார்ப்பனர்கள், தங்கள் ஆரிய வருணாசிரம விஷத்தைத் தமிழர் வாழ்க்கையில் கலந்தார்கள்.

மானுட குலத்துக்குள்ளேயே ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட கொடுமை, சுமார் 1500 ஆண்டுகளாகவே இங்கே நீடிக்கிறது.

இப்படிப் பெரும்பான்மை உழைக்கும் மக்களைப் புறக்கணித்து, சொத்துள்ளவர்களை மட்டுமே பாடிய தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியம் ஆகுமா? என்பதே என் கேள்வி. இன்றைய சொல்லாடலில், பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோர்களைப் புறக்கணித்து மிச்சம் உள்ள பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதி இந்துக்களை மட்டும் ஒரு மொழியின் இலக்கியம் பதிவு செய்யுமானால், அதை அந்த தேசிய இனத்தின் இலக்கியம் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

0

எழுதப்படாத சரித்திரம் – பிரபஞ்சன் எழுதும் புதிய தொடர். தமிழக அரசியல் இதழில் கடந்த இரு வாரங்களாக விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

காந்தியையும் அம்பேத்கரையும் வைத்து பிரபஞ்சன் எழுதிய முதல் அத்தியாயமே தொடர் குறித்த முழு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது அத்தியாயத்திலிருந்து சிறு பகுதி. இதுவரை பதிவு செய்யப்படாத புறக்கணிப்படும் மக்களின் சரித்திரத்தை பிரபஞ்சனின் ஆவேச எழுத்தில் வாசிக்க வாரந்தோறும் காத்திருக்கிறேன்.

இரண்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படிக்க இங்கே.