தேர்தல் 2009 – சிறப்பு பாடல்!

(தேர்தல் பிரசாரத்தில் எந்தக் கட்சியினரும் இந்தப் பாடலை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.)

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

அன்னையும் அம்மாவும் தந்ததா
இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா
கூட்டணி நான் அறியாததா
புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்
யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்
வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்
அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்
பல பதவி பல லகரம்
ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
அரசியல் வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!
வாக்குறுதி தருகிறேன்
வாழ்வளிக்க வருகிறேன்
உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

– கவிஞர் ஓட்டாண்டி