நீங்க டைரக்டரா?

என்னைச் சந்திக்க வரும் சினிமா நண்பர்களுக்கு எங்கள் அபார்ட்மெண்ட் பூங்கா பிடித்தமான ஓரிடம். ஒருமுறை அங்கே அமர்ந்து பேசும் நண்பர்கள், மறுமுறை வரும்போதும் பூங்காவில் பேசுவதைத்தான் விரும்புவார்கள். நிறைய மரங்கள். சறுக்கு, ஊஞ்சல், சீஸா உள்ளிட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள். நடைபாதை. உட்கார்ந்து பேச சிமெண்ட் பெஞ்சுகள். சாலையை ஒட்டி அமைந்திருந்தாலும் பேசுவதற்கு ஏற்ற அமைதியும் நிழலும் எப்போதும் நிலவும்.

பொதுவாக இயக்குநர்களுடன், உதவி இயக்குநர்களுடன் பூங்காவில் பேசுவது வழக்கம். எனவே அங்கே விளையாடும் குழந்தைகள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இரு தினங்களுக்கு முன்பு நண்பரும், சினிமா நடிகருமான ஒருவருடன் பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகள் சைக்கிளில் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டுக் கொண்டார்கள். இன்று ஓர் அவசர வேலையாக பூங்காவைக் கடக்கும்போது அந்தக் குழந்தைகள் கண்கள் நிறைய கேள்விகளுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அந்த உரையாடல்…

‘அங்கிள் அன்னிக்கு நீங்க பார்க்ல யார்கூட பேசிக்கிட்டிருந்தீங்க?’

‘ம்… அவர் ஒரு நடிகர்.’

‘ஓ… நான் அவரை சினிமால பார்த்திருக்கேன்.’

‘அவர் உங்க ஃப்ரெண்டா?’

‘ஆமா.’

‘உங்களுக்கு சினிமால நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டா?’

‘கொஞ்ச பேரு.’

‘சூர்யா உங்க ஃப்ரெண்டா?’

‘ம்ஹூம்.’

‘கார்த்தி?’

‘எனக்கு சிவகுமாரைத்தான் தெரியும்.’

‘வேற யாரு உங்க ஃப்ரெண்ட்?’

சில நண்பர்களின் பெயரைச் சொன்னேன். குழந்தைகள் எதிர்பார்த்த பெயர்கள் இல்லைபோல. அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவினார்கள்.

‘நீங்க சினிமால இருக்கீங்களா?’

‘ஆமா?’

‘டைரக்டரா?’

‘இல்ல.’

‘புரொடியூசரா?’

‘ம்ஹூம்.’

‘இல்ல.’

‘அப்போ என்னதான் பண்றீங்க?’

‘ரைட்டர்.’

‘எல்லாரையும் இண்டர்வியூ பண்ணுவீங்க. கரெக்டா?’

‘இல்ல. இது வேற.’

‘புரியல. அதை விடுங்க. எப்போ சூர்யாவை ஃப்ரெண்டு பிடிப்பீங்க?’

இதற்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. ‘ஃப்ரெண்ட் ஆன உடனே சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

மேலுள்ள வரியோடு இந்தப் பதிவை முடித்தால், முற்றுப்பெறாததுபோல் தெரியும் என்பதால் கூடுதலாக இந்த வரியையும் சேர்த்துக் கொள்கிறேன் முற்றுப்புள்ளி