அழுது கொண்டிருந்த என் மகளைச் சமாதானப்படுத்தும் விதமாக நானே ஒரு பாடலை பாட ஆரம்பித்தேன். குழந்தை சமாதானமாவதுபோலத் தோன்றியது. எனக்குள் உற்சாகம். பாடல் வளர்ந்தது. இடையிடேயே பாடல் வரிகளுக்கேற்ப உடல்மொழியை மாற்றிக் கொண்டேன். குரலையும் மாற்றிக் கொண்டேன். என் மகளுக்கு பாடல் மிகவும் பிடித்துப் போனது. பல நேரங்களில் அவளைக் குஷிப்படுத்த, தூங்க வைக்க இந்தப் பாடலைத்தான் பாடுவேன். இதே பாடலை என் மனைவி பாடினால், மகள் தடுத்து நிறுத்தி விடுவாள். இது அவளுக்கு ‘அப்பா பாட்டு.’ அப்பா மட்டுமே பாட வேண்டும். சுமார் ஒரு வருடமாக இந்தப் பாடலை என் மகளுக்காக, மெருகேற்றி, நீட்டித்து பாடிக் கொண்டே இருக்கிறேன்.
இந்தப் பாடல் உங்களுக்குக் கூட உதவலாம். மெட்டு பற்றி கவலைப்பட வேண்டாம். குழுந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் பாடினால் போதும். விலங்குகளின் ஓசை, பறவைகளின் ஓசையைத் தேவைக்கேற்ப கலந்துகொண்டால், அப்படியே சின்னதாக நடனமாடினால், குழந்தைகள் குதூகலிப்பார்கள்.
பாடல் இதோ:
குயிலு என்ன பண்ணுச்சாம்?
குயிலு என்ன பண்ணுச்சாம்?
குக்கூ குக்கூ கூவிச்சாம்!
குக்கூ குக்கூ கூவிச்சாம்!
மயிலு என்ன பண்ணுச்சாம்?
மயிலு என்ன பண்ணுச்சாம்?
தைத்தை தைத்தை ஆடிச்சாம்!
தைத்தை தைத்தை ஆடிச்சாம்!
மான் என்ன பண்ணுச்சாம்?
மான் என்ன பண்ணுச்சாம்?
துள்ளித் துள்ளி ஓடிச்சாம்!
துள்ளித் துள்ளி ஓடிச்சாம்!
குரங்கு என்ன பண்ணுச்சாம்?
குரங்கு என்ன பண்ணுச்சாம்?
வாழைப்பழம் கேட்டுச்சாம்!
வாழைப்பழம் கேட்டுச்சாம்!
காக்கா என்ன பண்ணுச்சாம்?
காக்கா என்ன பண்ணுச்சாம்?
வடை வேணும் கேட்டுச்சாம்!
வடை வேணும் கேட்டுச்சாம்!
குருவி என்ன பண்ணுச்சாம்?
குருவி என்ன பண்ணுச்சாம்?
அரிசி கொத்தித் தின்னுச்சாம்!
அரிசி கொத்தித் தின்னுச்சாம்!
கரடி என்ன பண்ணுச்சாம்?
கரடி என்ன பண்ணுச்சாம்?
தேன் வேணும் கேட்டுச்சாம்!
தேன் வேணும் கேட்டுச்சாம்!
ஆமை என்ன பண்ணுச்சாம்?
ஆமை என்ன பண்ணுச்சாம்?
மெதுமெதுவா நகர்ந்துச்சாம்!
மெதுமெதுவா நகர்ந்துச்சாம்!
தவளை என்ன பண்ணுச்சாம்?
தவளை என்ன பண்ணுச்சாம்?
தாவித் தாவி குதிச்சுச்சாம்!
தாவித் தாவி குதிச்சுச்சாம்!
சிங்கம் என்ன பண்ணுச்சாம்?
சிங்கம் என்ன பண்ணுச்சாம்?
(சிங்கம்போல கர்ஜித்து) கத்திச்சாம்!
(சிங்கம்போல கர்ஜித்து) கத்திச்சாம்!
யானை என்ன பண்ணுச்சாம்?
யானை என்ன பண்ணுச்சாம்?
(யானைபோல பிளிறி) கத்துச்சாம்!
(யானைபோல பிளிறி) கத்துச்சாம்!
முயல் என்ன பண்ணுச்சாம்?
முயல் என்ன பண்ணுச்சாம்?
கேரட் வேணும் கேட்டுச்சாம்!
கேரட் வேணும் கேட்டுச்சாம்!
வாத்து என்ன பண்ணிச்சாம்?
வாத்து என்ன பண்ணிச்சாம்?
குவாக் குவாக் கத்துச்சாம்!
குவாக் குவாக் கத்துச்சாம்!
***
பாடல் இத்துடன் முடிவதில்லை. கொக்கு, கோழி, நரி, புலி, எறும்பு, அணில், சிறுத்தை, பூனை, நாய் – என சேர்த்து பாடிக் கொண்டே போகலாம்.
ஏதாவது புத்தகங்களில் பறவைகள், விலங்குகளைப் பார்க்கும்போதோ, டிஸ்கவரி, அனிமல் பிளானெட் வகையறா சேனல்களைப் பார்க்கும்போதோ, அதில் வரும் உயிரினங்களுக்கான பாடல் வரியை நான் பாட, என் மகள் அதைப் பொருத்திப் பார்த்து புரிந்துகொள்கிறாள்.
ஏட்டுக் கல்வியைவிட, பாட்டுக் கல்வி என்றைக்குமே சிறந்ததுதானே!