வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல!

இன்னாமா பண்ணலாம்
வோட்டுக் கேட்கப் போவலாம்
குவாலிஸில் ஏறலாம்
நோட்டு நோட்டா வீசலாம்.
அல்ரெடி நாளுமாச்சு
தேர்தல் தேதி நெருங்கிப் போச்சு

வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் திருமங்கலத்துல பார்ட்டி.
வேர் இஸ் தி பார்ட்டி?
அழகிரி வூட்டுல பார்ட்டி
உள்ளவா உள்ளவா…. வா வா வா….

சன் டீவி இப்போ நம்ம செட் ஆனதே
சன்-இன்-லாஸ் டீலிங்கு ஃபிக்ஸ் ஆனதே
As usual ஏடிஎம்கே ஹர்ட் பண்ணுதே
வாயால விஜி தம்பி பைட் பண்ணுதே
பாமககூட இப்போ சேக்காளி இல்லபா
அம்மா டீவி கேமரா ரொம்ப ரொம்ப தொல்லைபா

என்னடா எலக்ஷன் இது?
ரூலிங் பார்ட்டிக்கு ரூல்ஸ் ஏது?

வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் மாட்டுத்தாவணில பார்ட்டி
வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் ஆரப்பாளையத்துல பார்ட்டி

வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
சத்யமூர்த்திபவன்ல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
சுப்ரமண்யசாமி வூட்ல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
கோபாலபுரத்துல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
தல்லாகுளத்துல..

(தேர்தல் அன்று)
இன்னாபா இது குடைச்சாலாகீது. Polling ஃபாஸ்ட் இல்லாம ஊத்திக்குது.

(அஞ்சாத நெஞ்சிலிருந்து எழும் குரலில்)
நீ ஒண்ணும் கவலைப்படாத… நாங்க குத்துனா தமிழ்நாடே நமக்குத்தான்.

லொள்ளு அவார்ட்ஸ் 2008

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

சிறந்த குடும்பச் சித்திரம்

சிறந்த உண்மை விளம்பி

சிறந்த சுய விளம்பரதாரர்

சிறந்த ஆக்‌ஷன் காட்சி

சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல்

சிறந்த உலக சினிமா

சிறந்த ரங்க ராட்டினம்

சிறந்த காதல் காட்சி

சிறந்த ட்யூப் லைட்

வாழ்நாள் சாதனையாளர் விருது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.)

டாப் 10 புத்தகங்கள் – 2008

இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல்.

10
மனம் is a மனம்
ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா
மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது! – இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. ‘சத்சங்க அகாதெமி’ விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(இது ஓர் உள்ளீடு வெளியீடு, கீழ்ப்பாக்கம். பக்கம் : 238ல் ஆரம்பித்து 11ல் முடிகிறது. விலை : 17$.)

9
30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர் : இங்கிலீஷ்காரன்
‘ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபௌட் ஹௌ டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரௌனன்ஷேசன்’ – இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக் கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறேங்கும் தமிழ் தேடினாலும் கிடையாது.
(வெளியீடு : ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420. விலை : ஏதாவது பாத்துப் போட்டுக் கொடுங்க.)

8
சாம்பார் வைப்பது எப்படி?
ஆசிரியர் : முருங்கைப்ரியா
சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்கு தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர்செய்ய வேண்டும் என ஆ’ரம்ப’த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப்படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்து விடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.
(வெளியீடு : பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம் : 222 விலை : ரூ.100)

7
பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர் : ஜுஜுபி
ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் ‘பிரேக்கூ’ என்கிறார் கவிஞர்.
‘துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு’
என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து ‘வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்!’ என்று முடிவதாக நம்பப்படுகிறது!
(வெளியீடு : எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம் : 534, விலை : ரூ.94.15)

6

உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்
ஆசிரியர் : தொப்பையப்பன்
இது மனிதர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
(வெளியீடு : யாரென்று போடவில்லை. பக்கம் : 120, யானை விலை.)

5
வாஸ்து உங்கள் தோஸ்து!
ஆசிரியர் : வாஸ்தவா
வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத்தூங்கினால் ‘பீஸான’ மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35டிகிரி சாய்வாக டீ.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
(வெளியீடு : செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம் : 84 1/2 பக்கம் விலை : ஒரு லோடு மணலின் விலை.)

4
குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர் : ரௌத்ரப்பித்தன்
இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்லவருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ‘நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை’ என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.
(வெளியீடு : பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம் : எண்ண முடியவில்லை. விலை : ரூ.800)

3
108 வகைக் கோலங்கள்
ஆசிரியர் : புள்ளிராணி
விதமிதமான புள்ளிக் கோலங்களை போடக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் ‘புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து’ விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப்புத்தகமாகிவிட்டது.
(வெளியீடு, பக்கம், விலை : ரொம்ப முக்கியம்!)

2
எலக்கன பிலையின்ரி எலுதுவது எப்டி?
ஆசிரியர் : தமிழ்க்கோடாரி
‘இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! ‘ஆ’ என்பதை ‘அ¡’ எனவும், ‘ஈ’ என்பதை ‘இ¡’ எனவும், மேலும் ‘உ¡’, ‘எ¡’, ‘ஒ¡’ என பல புதிய எழுத்துக்களை கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.
(வெளியீடு : நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம் : 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்.) விலை : ரூ. 33)

1
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர் : சதக் செல்லப்பா
இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது.) கதையின் முதல்பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப் போகும் கோயிந்தசாமியும் காணாமல் போய்விட, கோயிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். ‘மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்’ என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தை படித்தே முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
(வெளியீடு : காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம் : 171. விலை : போடவில்லை.)

கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி?

பிரபல வாரமிருமுறை பரபரப்பு பத்திரிகையின் ஆசிரியர் அறை. கொஞ்சம் சூடாகவே இருக்கிறார் ஆசிரியர். ‘சீனியர் புறா’, ‘சுவாமி சுனாமியானந்தா’ என்ற புனைப் பெயரில் எழுதும் இரு உதவி ஆசிரியர்கள் அவர் முன் அமைதியாக பவ்யமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் : போன நாலு இஸ்யூல நம்ம சர்க்குலேஷன் பத்து சதவிகிதம் குறைஞ்சிருக்கு. நம்ம போட்டி பத்திரிக்கைக்கு ஏழு சதவிகிதம் கூடியிருக்கு. இப்படியே போனா ஊத்திக்கும். எல்லாரும் வேற எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தூண்டில் போட வேண்டியதுதான். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோன்னு எனக்குத் தெரியாது. பத்திக்குற மாதிரி ஒரு மேட்டரை கெளப்பி விடுறீங்க. அந்த மேட்டரை வைச்சே இன்னும் ஏழெட்டு இஸ்யூவோட கவர் ஸ்டோரியை காரசாரமா பண்ணிடனும். விட்ட சர்க்குலேசனை கிச்சுன்னு ஏத்தணும். எந்த அரசியல்வாதி வாயைப் புடுங்குறீங்களோ, இல்ல எந்த நடிகையை சர்ச்சையில மாட்டி விடுவீங்களோ, எந்த கிளுகிளு சாமியாரை உருவாக்குவீங்களோன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல என் டேபிள்ல சூட்டைக் கெளப்புற கவர் ஸ்டோரி இருக்கணும். நீங்க போகலாம்.

கொஞ்சம் கிறுகிறுக்கும் தலையுடன் வெளியே வரும் சுனாமியும், புறாவும் பேப்பர் பேனாவுடன் சென்று ஒரு டேபிளில் அமர்கின்றனர். ஐந்து நிமிட மௌனத்துக்குப் பிறகு.

சுனாமி : ஆங்.. ஐடியா. நம்ம அரசியல்வாதி கால்’வாய்’ கண்ணாயிரத்துக்கு போனைப் போடு. அவங்கிட்ட எதையாவது போட்டு வாங்கலாம். அதை வைச்சு ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிரலாம்.

(புறா போனை டயல் செய்து ரிஸீவரைத் தர)

சுனாமி : அண்ணே வணக்கம்னே.. நாந்தான் சுனாமி பேசறேன். சுகம்தானா?

கால்வாய் : வணக்கம்வே! என்னவே போனமொற நம்ம பத்திரிக்கையில நம்ம கட்சிக்காரப்பயலைப் பத்தி இப்படி கண்டதும் எழுதிப்புட்ட! நானே உனக்கு பூசை போடணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தன்! நீயா வந்து வசமா சிக்கிக்கிட்டவே!

சுனாமி : என்னண்ணே நீங்க. என்னப் போயி சந்தேகப்படுறீங்களேண்ணே! நான் நீங்க வெட்டிப் போட்ட நகத்துல இருக்குற அழுக்கைப் பத்திக் கூட தப்பா எழுத மாட்டேன், உங்களுக்குத் தெரியாதாண்ணே! அது ஒரு புது ரிப்போர்ட்டர் பய செஞ்ச வேலைண்ணே! போன வாரம் நான் லீவுண்ணே! அதான் என்னை மீறி இப்படி ஆயிடுச்சுண்ணே! பாத்தீங்களாண்ணே, எம்புட்டு விசுவாசமுள்ள என்னைப் போயி..

கால்வாய் : அதானப் பாத்தேன். சரி விடுவே! இப்ப என்னவே விசேஷம்?

சுனாமி : அதை நீங்கதாண்ணே சொல்லணும். நேத்து மொளச்ச பயலுக திமிரா எகத்தாளமா ஏதாவது ஏடாகூட அறிக்கை விட்டுக்கிட்டு தலைப்புச் செய்தி ஆக்கிட்டு இருக்காணுங்க! உங்க பவரை நீங்க காட்ட வேணாமாண்ணே!

கால்வாய் : இப்ப என்ன பண்ணனுங்கற?

சுனாமி : புதுசா அந்த நடிகரு ரமணராஜ் கட்சி தொடங்கியிருக்காரே அவரு உங்ககூட கூட்டணி வைக்க தொங்கிக்கிட்டு இருக்கறதா பேச்சு அடிபடுதே, உண்மையாண்ணே?

கால்வாய் : சும்மாக் கெடவே! அவன் நம்ம சாதிக்காரப் பய. அரசியல்ல பழம் தின்னு கொட்ட போட்டவன் நான். ஒரு மருவாதைக்கு தேடிவருவான்னு நெனைச்சேன். இதுவரைக்கும் வரல. எலெக்ஷன் வரும்ல அப்ப பாத்துக்கலாம்.

சுனாமி : சரிங்கண்ணே. நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கோங்கண்ணே! வைச்சிடுறேன். (போனை கட் செய்து விட்டு, புறாவிடம்) செம மேட்டர் கிடைச்சுடுச்சு. டைட்டில் இதுதான். ‘தலைகணத்தில் தடுமாறுகிறாரா ரமணராஜ்?!’ – தலைவர்கள் அதிருப்தி. எப்படி?

புறா : அப்படிப்போடு. இதை அப்படியே விடக்கூடாது. இன்னும் கெளறி விடலாம். கொஞ்சம் இருங்க. (ஒரு எண்ணை டயல் செய்கிறார்.) வணக்கம். நான் புறா பேசுறேன். புரட்சி லீடர் ரமணராஜ் இருக்காருங்களா.

எதிர்முனை : வணக்கம். வணக்கம். நான் லீடரோட செகரட்டரி லிங்கம்தான் பேசறேன். லீடர் ஹைதராபாத் ஷூட்டிங் போயிருக்காரு. என்ன விஷயம்ணு சொல்லுங்க. எதுவும் முக்கியம்னா நான் லீடர்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்.

புறா : என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? அந்த சாதிக் கட்சித் தலைவர் ‘நம்ம லீடருக்கு பணிவே கெடையாது. அவுத்த வுட்ட ஜல்லிக்கட்டு காளை மாதிரி திமிறிக்கிட்டு அலையறாரு. மக்கள் மூக்கணாங்கயிறு போட்டுருவாங்க’ன்னு இஷ்டத்துக்கு அறிக்கை விட்டிருக்காரு. நீங்க என்னடான்னா ஒண்ணும் நடக்காத மாதிரி கேக்கறீங்க?

எதிர்முனை : அப்படியா! எதுல சொன்னாரு. எனக்கு ஏதும் நியூஸ் வரலியே?

புறா : அவரோட சேனல்லதான் சொன்னாருங்கிறேன். அதுபோக இப்பத்தான் அவரை பேட்டி எடுத்தோம். அதுலயும் நம்ம லீடரை இப்படியெல்லாம் பேசிப்புட்டாரு. மனசு கேக்கல. அதான் உங்க காதுல விசயத்தைப் போட்டுட்டு, அப்படியே லீடர்கிட்ட கருத்து வாங்கிடலாம்னுதான் போனைப் போட்டேன்.

எதிர்முனை : லீடர் ஷூட்டிங் முடிச்சுட்டு, தன் பையன் பொறந்த நாளை சித்தூர் பக்கத்துல உள்ள ஒரு கோயிலுக்கு போய் கொண்டாடிட்டு நாலு நாள் கழிச்சுத்தான் சென்னைக்கு வர்றாரு. அப்ப லீடர் கண்டிப்பா நேரம் ஒதுக்கிப் பேசுவாரு.

புறா : ரொம்ப நல்லது சார். (போனை கட் பண்ணி விட்டு) மேட்டரை டெவலப் பண்ணிக்கோங்க.. ‘ஆந்திரா பக்க்கத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரமணராஜ் ரகசிய யாகம்! நரபலி கொடுத்தது உண்மையா?’ எப்படி.

சுனாமி : சூப்பரப்பு.

புறா : ஆனா மேட்டர்ல பரபரப்பு இருக்கு. ஆனா கிளுகிளுப்பே இல்லையே. என்ன பண்ணலாம்?

சுனாமி : எதாவது நடிகையை இழுத்து உட்டுடலாம். பரபரப்பு + கிளுகிளுப்பு. நாமளும் பேஜ் லே-அவுட்டை கவர்ச்சியா பண்ணலாம்.

புறா :  இந்த இஸ்யூக்கு இது தாங்கும். அடுத்த இஸ்யூக்கு நடிகை கிஷிதாவை கிள்ளி உட்டுருவோம்.

சுனாமி : எப்படி?

புறா : ‘டேட்டிங்’ பத்தி ஏதாவது கேப்போம். அது தமிழ் தெரியாம ஏதாவது உளறி வைக்கும். ‘டேட்டிங் போவது பெண்களின் கடமை’ன்னு நியூஸ் ஆக்கிருவோம். அப்புறம் கொடும்பாவி எரிப்பாங்க. கேஸ் போடுவாங்க. ஆர்ப்பாட்டம் நடத்துவாங்க. ‘டேட்டிங்’குக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனுங்க கூட தெனாவெட்டா அறிக்கை உடுவாங்க.

சுனாமி : இப்படி ஒரு பிரச்னையைக் கெளப்பி விட்டா கண்டிப்பா கால்வாய் ‘கலாசாராம் காராச்சேவு’ன்னு கொதிச்சு எழுவாரு. ஆனா கிஷிதா நம்ம ரமணராஜோட தொடர்ந்து மூணு படம் சோடி கட்டிட்டு வர்ற நடிகை. அதனால ரமணராஜ் வேற வழியில்லாம படத்துல இருந்து கிஷிதாவைத் தூக்கிக் கெடாச வேண்டியது வரும்.

புறா : இதை அப்படியே விடலாமா, எவனாவது இந்த கேப்ல நெட்ல கிஷிதா மூஞ்சை மார்ஃப்பிங் பண்ணி ஏதாவது கிளுகிளு போட்டாவை விடுவான். உடனே கிஷிதாவுக்கும் சர்வதேச கொலைகாரன் அமாம் உபருல்லாக்கும் தொடர்பிருக்குன்னு தெரிஞ்சதாலதான் ரமணராஜ் தன்னோட படத்துல இருந்து தூக்குனாருன்னு ஒரு கவர் ஸ்டோரி பண்ணிடலாம்.

சுனாமி : இதுல ஏதாவது சாமியாரை இழுத்து விட்டுட்டோம்னா இன்னும் கனலா இருக்கும்.

புறா : அவ்ளோதான. ‘முழியாங்கண்ணன்பட்டி மயிர் சாமியார்’னு ஒரு கேரக்டரை உள்ள நுழைச்சுருவோம். இந்த சாமியார்கிட்டதான் அமாவாசை அன்னிக்கு நைட்டோட நைட்டா போயி ரமணராஜ் மயிர் ஜோசியம் பாத்தாரு. அவரோட மயிர் அமைப்புப்படி அவருக்கு முன்னந்தலைல மூணு சென்டி மீட்டருக்கு சொட்டை விழுந்துருக்கறதால அவரு கட்சியோட பேரை மாத்தணுமாம். ‘க’ எழுத்துல பேரு ஆரம்பிக்குற அரசியல்வாதிங்க கூட கூட்டணி வெச்சுக்கக்கூடாதாம். அதுக்கு பரிகாரமா அடுத்த அமாவாசைக்கு 108 வழுக்கைத் தலையர்களுக்கு விக் தானம் பண்ணப் போறாராம். அதுக்காக 108 சொட்டை மண்டைங்கள கட்சிக்காரங்க மும்முரமா தேடிக்கிட்டு இருக்காங்களாம். எப்படி நம்ம நியூஸ்?

சுனாமி : அந்த முடி சாமியார் மேல நாலு கேஸ் இருந்தாத்தான் மேட்டர் வெயிட்டா இருக்கும். எப்படியாவது தோண்டித் துருவி அந்த சாமியார் மேல கேஸைக் கொண்டு வந்துரலாம். அதுவும் சுண்டக் கஞ்சி கடத்தல் கேஸ் ஏதாவது இருந்தா கலக்கலா இருக்கும்.

புறா : சாமியார் கூட ‘சுண்டக் கஞ்சி கடத்தல்’ல தொடர்பு வைச்சிருந்த அழகின்னு எவளாவது அடுத்து சிக்காமலா இருப்பா. ‘சுண்டக் கஞ்சி கடத்தல் தேவதை’யோடு தொடர்புடைய அரசியல்வாதிகள்னு எல்லாக் கட்சியில இருந்தும் வந்து தானா பட்சிங்க சிக்குவாங்க.

புறா : இப்படியே போனா அடுத்த சட்டசபைத் தேர்தல் வர்ற வரைக்கும் கவர் ஸ்டோரிக்கு தட்டுப்பாடே வராது. கலக்கிப்புடலாம்.

சுனாமி : சரி சரி. நான் ஸ்டோரியை எழுதுறேன். நீ போய் முன் அட்டையையும், போஸ்டரையும் லே அவுட் பண்ண ஆரம்பி. ஏதாவது போட்டோ தேறுதான்னு பார்ப்போம். எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி கெளப்பி விட வேண்டியதுதான்.

புறா : சூப்பரு. இந்த இஸ்யூ சர்குலேசன் ஓஹோதான்.  நீ எடிட்டர்கிட்ட ஓ.கே. வாங்கிடு. நான் லே-அவுட்டுக்குப் போறேன்.

(லொள்ளு தர்பார் – கிழக்கு வெளியீடு)

வீடுகள், மனைகள் விற்பனைக்கு

போட்-ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்

வழங்கும்

பெருமையான வாய்ப்பு!

சென்னையின் புறநகர்ப்பகுதிகளான வேளஏரியில் உதயமாகியிருக்கிறது  எங்களது குடைக்குள் மழை நகர். அங்கீகரிக்கப்பட்ட புறம்போக்கு  நிலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அருமையான வீடுகள்.

  • வீட்டின் அளவு 1100 ச.அ. (புயல் காலங்களில் எல்லைகள் கிடையாது.)
  • இரண்டு படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் (நவம்பரில் மட்டும்)
  • நல்ல நீரோட்டமுள்ள சாலைகள்
  • அம்சமான படகு பார்க்கிங்
  • வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள்.
  • குறிப்பிட்ட மாதங்களில் முட்டுக்காடுக்கு உல்லாசப் படகு சவாரி  உண்டு.
  • அருகிலேயே உயர்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி, மரு த்துவமனை மற்றும் வெள்ள நிவாரண முகாம்கள் உள்ளன.

லோன் மற்றும் வெள்ள நிவாரண நிதி வசதிகள் செய்து தருகிறோம்.

மழைப்பாக்கம், ஆறூரில் 1200 ச.அ. அளவுள்ள மீன்பிடிமனைகள்  விற்பனைக்கு உள்ளன.

மேலும் விவரங்களுக்கு :

போட்-ஹவுஸ் பிரமோட்டர்ஸ்,
எண் – 420, மழைப்பாக்கம் சாலை,
ஆறூர். 044 44420420, 9999900420.

குறிப்பு : தினமும் எங்கள் அலுவலகத்திலிருந்து சைட்-விசிட்டுக்காக  காலை பதினோரு மணிக்குப் படகு கிளம்பும்.