சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்
விலை ரூ. 200.


அறிவிப்பு 2 : ரஜினி
ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.
விலை : ரூ. 275
வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு
2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 125


அறிவிப்பு 5 : அண்டார்டிகா
‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு
சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.
வெளியீடு : மதி நிலையம்.



அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.
கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.
ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

‘கல போல வருமா!’

க்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

யாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).

தும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட(?) இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.

தவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.

அஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.

ரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா?’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.

சொதப்பல் ஸ்டாரின் அடுத்த மூவ்! – மிஸ்டர். காக்கையார்

ங்கிருந்தோ லவட்டிய ஊசிப்போன வடையுடன் ஸ்டைலாக வந்து உட்கார்ந்தார் காக்கையார்.

‘என்ன அமெரிக்கா ரிட்டர்ன் மாதிரி ஸ்டைலா வர்றீர்?’ என்றோம்.

‘எவன் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனா சூப்பர் ஸ்டார் போயிட்டு வந்தா மட்டும் மேட்டர் ‘சொத்’துனு ஆயிருது’ – காக்கையார் கச்சேரியை ஆரம்பித்தார். நாமும் கேள்விகளை அவிழ்த்துவிட்டு ஸ்ருதி ஏற்றினோம்.

‘முடிவா சூப்பர் ஸ்டார் என்னதான் சொல்ல வர்றாராம்?’

‘நான் முடிவெடுத்துதான் ஆகணும்னு யாரும் முடிவா என்னை முடிவெடுக்கச் சொல்ல முடியாது. அப்படி நான் முடிவெடுக்கணும்னு நினைச்சா முடிவுல என்ன முடிவெடுத்துருக்கிறேன்னு என்னாலேயே சொல்ல முடியாது.’

‘என்னய்யா அது, ஏற்கெனவே பன்ச்சர் ஆகிக்கிடக்குற இமேஜை பன்ச் டயலாக் விட்டு மேலும் பாழ்படுத்துறார்.’

‘படுத்தத்தான் செய்யுறார். அதுதாங்காம, கோவையில அவர்கிட்ட கேட்காமலேயே கட்சி, கொடின்னு ஆரம்பிச்ச ரசிகர் மன்றத்தினர், அடுத்த எலெக்ஷன்ல வடிவேலுவுக்கு ஆதரவா களமிறங்கப் போறாங்களாம்’ என்று புது ஸ்கூப் நியூசைக் கிளப்பிவிட, நிமிர்ந்து உட்கார்ந்தோம். ‘நாயர் கடையில சாயா சொல்லியாச்சா?’ என்றபடியே வடையைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார் காக்கையார்.

‘ஆமா ரஜினி, தன் பொண்ணு சௌந்தர்யாவுக்கு ஏதோ ரகசிய ப்ராஜெக்ட் அசைன் பண்ணியிருக்காராமே?’ – காக்கையாரிடம் கொக்கி போட்டுப் பார்த்தோம்.

‘அதற்குள் விஷயம் வெளியில் கசிந்துவிட்டதா’ என்று செல்லமாகச் சலித்துக் கொண்டவர், தொடர்ந்தார். ‘குசேலனில் குளத்தில் டால்பின் விட்ட சௌந்தர்யாவின் க்ரியேடிவிட்டி குறித்து ரஜினிக்கு எப்போதுமே பெருமிதம் உண்டாம். சக்கரகட்டி படத்தில் ‘சின்னம்மா’ பாடலில் மம்மியை எல்லாம் மானாவாரியாக அலையவிட்டு, தனது அழகியலை நிரூபித்த மகளை உச்சி முகர்ந்து பாராட்டினாராம் சூப்பர் ஸ்டார். கூடவே, ‘சுல்தான் தி வாரியர்’ பொம்மைப் படத்தின் கதையைக் கொஞ்சம் மாற்றி அதில் அரசியல் போர்ஷனை அதிகமாக்கச் சொல்லியிருக்கிறாராம். ஷங்கரிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி ‘முதல்வன்’ பட அரசியல் காட்சிகள் சிலவற்றை அதில் அப்படியே இடம்பெறச் செய்யப் போகிறாராம். கொதித்துப் போயிருக்கும் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தவே இந்த முயற்சி’ – காக்கையார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடான சாயா வந்து சேர்ந்தது.

‘ஆமா, சேனல்காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் நாளைக்கு ஏதோ அவசரமா மீட்டிங் போடப்போறாங்களே, என்ன விஷயம்?’ – காக்கையாரைத் தூண்டினோம்.

‘எல்லாம் சூப்பர் ஸ்டார் விஷயமாத்தான். இனிமே ரஜினி மேட்டரை யாரும் கவர்-ஸ்டோரியா போட்டு பத்திரிகை சர்குலேஷனைக் குறைச்சுக்க வேண்டாம்னு முடிவெடுக்கப்போறாங்களாம். எந்தச் சேனல்ல ரஜினி படம் போட்டாலும், ‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது’ மாதிரி, சூப்பர் ஸ்டாருக்குச் சொந்தமில்லாத, அடுத்தவங்க எழுதிக் கொடுத்த பன்ச் டயலாக்கை எல்லாம் ‘கட்’ பண்ணிட்டுத்தான் ஒளி பரப்பப்போறாங்களாம்.’

‘ஆமா, ரஜினி அடுத்து அமெரிக்காவுக்குப் போறதுக்கு முன்னாடி ஹைதராபாத் விசிட் செய்யப்போறாராமே. உண்மையா?’ – அடுத்த கேள்வியைத் தவழ விட்டோம்.

சாயாவை பாயாபோல் உறிஞ்சிமுடித்த காக்கையார், கண்கள் மின்ன தொடர்ந்தார். ‘ஹைதராபாத் விசிட்டுக்கு ரஜினி ப்ளான் பண்ணுனது உண்மைதான். ‘ஏன் சிரு, இப்படி கட்சியெல்லாம் ஆரம்பிச்சு என்னைச் சிக்கல்ல மாட்டிவிட்டுட்டீங்க’ன்னு சிரஞ்சீவியைப் பார்த்து, உரிமையோட கண்டிக்கிறதுக்காகவாம். ஆனா விஷயத்தைக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி, எங்க ரஜினி, ஹைதராபாத் வந்து நேர்ல சந்திச்சா, தன்னோட இமேஜ் சரி ஞ்சிடுமோன்னு பயந்து, எங்கியோ குக்கிராமத்துல தலைமறைவா இருக்கிறாராம்.’

சொல்லிமுடித்த காக்கையார் அடுத்த நிமிடமே பறபற!