கெளம்பிட்டாருயா சுப்புடு!

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தவை மட்டும் இங்கே :

அவன் இவன் (யுவன் ஷங்கர் ராஜா)

சுசித்ரா குரலில் டியா டியா டோலே என்ற தீம் இசைதான் கேட்டதிலிருந்தே மனத்துக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. உற்சாகத் துள்ளல் இசை. அதன் பின் பாதியில் வரும் கிராமிய இசை, அப்படியே நம்மை ஊர்ப்பக்கம் நடக்கும் ‘கோயில் கொடை’க்கு தூக்கிச் சென்று விடுகிறது.

ராசாத்தி போல – ஹிட் ஆவதற்குரிய இசைக்கலவை, ஏற்ற இறக்கங்கள், மாய வார்த்தைகள் கொண்ட பாடல். பிடித்திருக்கிறது. இருந்தாலும் காட்டுச் சிறுக்கியே என்ற வார்த்தை மட்டும் ராவணனால் தொந்தரவு கொடுக்கிறது.

ஒரு மலையோரம் – அருமையான மெலடி. எப்போதும் பச்சை (Ever green) ரக பாடல். ஏர்டெல் சூப்பர் ஜூனியர் சிங்கர்ஸ் ஸ்ரீநிஷா, பிரியங்கா, நித்யஸ்ரீயுடன் விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இளையராஜாவின் பழைய சரக்குதான் என்றாலும் அவன் இவனில் எனக்கு மிகப் பிடித்த பாட்டாக இது உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் முறை, அவனைப் பத்தி – இரண்டுமே காட்சிகளுடன் பார்க்கும்போது, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு பாடல்களிலுமே மரணத்தின் வாசனை தூக்கலாக இருக்கின்றன. அவனைப் பத்தி பாடலில் – சாவு மோளத்தின் பின்னணியில் ஹீரோக்களின் ஆரம்பப் பாடல்போல இருக்கிறது. பாலாவின் டச்! டி.எல். மகாராஜன் குரல் – அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை.

அவன் இவன் – பாலாவின் காமெடி படமென்று கேள்விப்பட்டேன். இல்லையோ?

காதல் 2 கல்யாணம் (யுவன் சங்கர் ராஜா)

எனக்காக உனக்காக – யுவன் டெம்ப்ளேட் டூயட் – நரேஷ், ஆண்ட்ரியா குரல்களுக்காக, கேட்கக் கேட்க பிடிக்கும்.

குறிப்பு : இதே படத்தில், நான் வருவேன் உன்னைத் தேடி, தேடி உன்னை நான் வருவேன், வருவேன் தேடி நான் உன்னை, உன்னை வருவேன் தேடி நான், தேடி வருவேன் நான் உன்னை – இந்த வார்த்தைகள் கூட்டணியில் ஒரு பாடல் இருக்கிறது. கேட்காதீர்கள் 😉

180 (இசை : Sharreth – தமிழ்ல என்ன ஸ்பெல்லிங்?)

கார்க்கியின் வரிகளில் சிறுசிறு கண்ணில் – உத்வேகமூட்டும் வித்தியாசமான பாடல். பாடியிருக்கும் சிறுவர்களின் குரல்கள், பாடலைக் கவனம் பெற வைக்கின்றன.

AJ என்றொரு பாடல் – முழுவதும் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாடலைப் புரிந்துகொள்ள தமிழோடு பிரெஞ்ச், ஜப்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்போல.

தெய்வத் திருமகன் (ஜி.வி. பிரகாஷ்)

விழிகளில் ஒரு வானவில் – இசையமைப்பாளரின் வருங்கால மனைவி பாடிய பாடல். கேட்க இதமாகத்தான் இருக்கிறது. பண்பலை வானொலிகள் மூலம் ஹிட் ஆக ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இருபதோடு இருபத்தொன்றாகத்தான் இருக்கிறது.

இந்த ஆல்பத்தில் என்னைக் கவர்ந்த பாடல்கள் இரண்டு. இரண்டுமே விக்ரம் பாடியவை : பாப்பாப் பாட்டு, கதை சொல்லப் போறேன். இரண்டுமே குழந்தைத்தனமான பாடல்கள். அதனால்தான் எனக்குப் பிடித்திருக்கிறதுபோல.

ஆரிரோ ஆராரிரோ – நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. நா. முத்துக்குமாருக்கும் பெயர் கொடுக்கும் இன்னொரு பாடல், பாடகர் ஹரிசரனுக்கும். இசையில் புதிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட பாடல்.

கோ – படம் சென்றிருந்தேன். இடைவேளையில் தெய்வத்திருமகன் டீஸர் காண்பித்தார்கள். விக்ரம், ஜன்னலைத் திறந்துகொண்டு வந்து, மழலையாகப் பேசும்போது… தியேட்டரே கேலியாகச் சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க நினைத்தால்கூட தியேட்டரில் பார்க்கவிட மாட்டார்கள்போல!

வைரமுத்துவின் கவிதைகள் சில வைரமுத்துவின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல காலத்துக்கும் முன் வந்திருக்கிறது. அந்த அபூர்வ புதையல் இங்கே.

அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)

அப்பாவும் புள்ளையும் பின்ன ஹாரிஸூம்

(முன்குறிப்பு : எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. இசையை விமரிசிக்கத் தெரியாது.)

சமீபத்தில் வெளியான ஐந்து புதிய படப்பாடல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் கடவுள் & நந்தலாலா (இளையராஜா). குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் & சிவா மனசுல சக்தி (யுவன்சங்கர் ராஜா). அயன் (ஹாரிஸ் ஜெயராஜ்).

முதலில் நான் கடவுள். சிறிய பிட் பாடல் உள்ளிட்ட ஆறு பாடல்களையும் ஸ்கிப்  செய்யாமல் கேட்கத்தோன்றுகிறது. குறிப்பாக மதுபாலகிருஷ்ணன் பிச்சைப் பாத்திரம்  ஏந்திவந்து மனத்தைப் பிசைகிறார். ஒரு காற்றில் அலையும் சிறகாக இளையராஜாவின்  வருடல் என்னுடைய என்72வை அடிக்கடி உருக்குகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி  ரியாலிட்டி ஷோக்களில் ‘கெமிஸ்ட்டிரி’ என்ற வார்த்தையைக் கேட்டு பழகியிருப்போம்.  என்னைப் பொருத்தவரை இசையுலகில் இளையராஜாவுக்கும் ஷ்ரேயா கோஷலின்  குரலுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி இருப்பதாகவே உணர்கிறேன் (சாதனா சர்கத்தைவிடவும்).

அடுத்தது நந்தலாலா. நீண்ட நாள் கழித்து இளையராஜாவிடமிருந்து ஒரு அருமையான  தாலாட்டு. ‘தாலாட்டு கேட்க நானும்..’ பாடலுக்குள் மூழ்கிவிட்டால் மீள்வது கடினமாகத் தான் இருக்கிறது. குரலா அது, குளோரோஃபார்ம். சரோஜா அம்மாளின் குரலில் குறத்திப்பாட்டு என்னவோ செய்கிறது. அருமையான ஆறு பாடல்களில் பலவற்றை மிஷ்கின்  படத்தில் பயன்படுத்தவில்லை, இளையராஜா கோபத்திலிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் படித்தேன். ஆகவே பாடல்களைப் பார்க்கமுடிகிறதோ இல்லையோ, கேட்கத் தவற வேண்டாம்.

அப்பாவைப் பார்த்தாயிற்று. இனி பிள்ளை. முதலில் ஷிவா மனசுல சக்தி. ஒரு கல், ஒரு  கண்ணாடி தவிர யுவனின் எந்தப்பாடலும் என் மனத்தில் நிற்கவில்லை. நிலைத்து நிற்கும் தரத்தில் அமையவில்லை. ஏழாவதாக வரும் ‘ஒரு பார்வையில்..’ குறும்பாடலுக்கு 99 மார்க்.

அடுத்தது குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும். இதையும் கெமிஸ்ட்டிரி என்றுதான் சொல்லவேண்டும். எஸ்பிபி சரணுக்கும் யுவனுக்குமான கெமிஸ்ட்டிரி. எஸ்பிபியின் குரல்  அதிரும் ‘நான் தருமன்டா’ பாடல்தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் சுகம். இதம். சின்னஞ்சிறுசுக – பாடலில் ஒலிக்கும் ஒரு பெண் குரல் (Bela Shende) தவிர மற்ற அனைத்திலும் ஆண்குரலாதிக்கம். ‘கடலோரம்’ பாடலை யுவனும் தனியாகப் பாடியிருக்கிறார்.  சரணும் பாடியிருக்கிறார். இரண்டாமவருக்குத்தான் முதலிடம். ‘முட்டுக்காடு பக்கத்துல’ –  நாகரிகமான குத்து. பாடல்கள் – வாலி, கங்கை அமரன். பல இடங்களில் நச்.  பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடியில் எடுத்திருக்கிறார்களாம். பார்க்க ஆவலாக  இருக்கிறேன்.

ஐந்தாவது படம் அயன். வாரணம் ஆயிரத்தில் தொன்னூறுக்கும்மேல் மார்க் வாங்கிய ஹாரிஸுக்கு இதில்  ஐம்பதுதான் கொடுக்க முடியும். ஹனி ஹனி – என்றொரு பாடல். சயனோரா என்றொரு  பெண் பாடியிருக்கிறார். மின்காந்தக் குரல் என்று சொல்லலாம். படு வித்தியாசம். பாடல்  சுமார்தான். அடுத்து குறிப்பிடத்தகுந்த பாடல் ‘விழி மூடி..’ – எல்லாப் பாடல்களிலும்  சரணங்களுக்கு இடையில் வரும் இசை ஈர்க்கிறது. கட் செய்து மொபைல் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.

இந்த ஐந்தைத் தவிர சொல்ல வேண்டிய ஆறாவது படம் – ஆனந்த தாண்டவம். அதில்  குறிப்பிடத்தகுந்த பாடல் ‘கனா காண்கிறேன்’. ஜிவி பிரகாஷ் – எப்போதாவதுதான்  வெளியே தெரிகிறார்.

(பின்குறிப்பு : மேலே உள்ளவற்றை இசை விமரிசனமாகக் கருதி நீங்கள் படித்தால்  நான் பொறுப்பல்ல.)