சிங்கம் – சிங்கர் – ராவணன் – ராமர்

ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் பிரியர்களைத் தானாக தியேட்டருக்குள் இழுக்கும் டிரைலர். கௌபாய்களின் மேலோட்டமான வரலாறோடு இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் ஆரம்பிக்கிறது. காமிக்ஸ் டைப் கதைதான்.

அருமையான செட்டுகள், அழகான, கச்சிதமான உடைகள் (கோயில் பட்டருக்குக்கூட கௌபாய் தொப்பி), ஆங்காங்கே காணப்படும் அறிவிப்பு, பெயர் பலகைகளில் எல்லாம் சிம்புதேவனின் கார்ட்டூன் டச் (தூக்குமேடையில் ‘இங்கே குரல்வளை நெறிக்கப்பட்டும்’), அமெரிக்கா, இலங்கை, இந்தியா, தமிழ்நாடு – அரசியல் குறித்து சிம்புதேவன் பிராண்ட் நக்கல் வசனங்கள், ரசிக்கும்படியான சில கதாபாத்திரங்கள், தன் நிழலைவிட வேகமாகச் சுடும் ஹீரோயிஸ நக்கல் – எல்லாம் தூள்.

திரைக்கதை? படத்தின் வேகம்? ஒட்டுமொத்த சுவாரசியம்? ???? ???????????????????????????????????????

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என்று டைட்டில் போடும்போதே அதிலிருக்கும் சிங்கம் ‘மியாவ்’ என்கிறது. படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது, சோப்ளாங்கி போல.

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நச். இடைவேளைக்கு பிறகு புதையல் தேடிப் போகும் அரைமணி நேரம் சூப்பர். மற்றபடி சோம்பல் முறிக்க வைக்கிறது.

இம்சை அரசனோடு ஒப்பிட்டால் அதில் பாதிதான் இரும்புக் கோட்டை. அறை எண்ணை 305ல் கடவுளைவிட சுவாரசியமான படம் கொடுத்ததற்காக சிம்புதேவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஜி.வி. பிரகாஷ் பாடல்களில் கைகொடுத்திருந்தால், கௌபாயாக வேறு யாராவது மாஸ் ஹீரோ நடித்திருந்தால் அல்லது வடிவேலுவே கௌபாய் ஆகியிருந்தால்  – படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம்.

சதம் அடித்திருக்கலாம், அரைசதத்திலேயே (இரும்புக்) கோட்டை விட்டுவிட்டார்கள்.

ஏதாவது படம் போய்த்தான் ஆகவேண்டும் என்றால், தாராளமாக குழந்தைகளோடு இரும்புக் கோட்டைக்குச் செல்லலாம்.

கொசுறு  : நேற்றிரவு காட்சிக்கு உதயத்தில் சுறா டிக்கெட் சுலபமாகக் கிடைத்தது.

***

விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் சறுக்கல் படு கேவலமாகத் தெரிகிறது. பைனலில் யாரை சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஸ்கிரிப்ட்படி இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பைனலுக்கு வருவதற்கு திறமை தேவையில்லை. சில காரணிகள் போதும் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த வாரத்தில் ‘எலிமினேட்’ செய்யப்பட்ட ஸ்ரீநிஷாவுக்கு வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் கொடுத்து வெளியேற்றினார்கள். ஆனால் ஸ்ரீநிஷா அழுது அலட்டிக் கொள்ளவில்லை. நிஜமாகவே திறமையுள்ள குழந்தை. ‘என்னை ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு?’ என்பதுபோல சிரித்துக் கொண்டே வெளியேறியது.

அடுத்து வைல்ட் கார்ட் ரவுண்ட் என்று இன்னொரு நாடகம் நடத்துவார்கள். அதிலும் ஸ்ரீநிஷா பாடுவாள். இருந்தாலும் ஸ்ரீநிஷா இல்லாத எபிசோடுகளைப் பார்ப்பதாக உத்தேசம் இல்லை.

***

ராவணன் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கேட்கக் கேட்க உள்ளுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கார்த்திக் பாடும் ‘உசிரே போகுதே’ பாடல் நிச்சயம் ஹிட். அடுத்த இடம் ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு.’

அனுராதா ஸ்ரீராமின் குரல் கொஞ்சம் உறுத்துவதால் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலில் முழுமையாக லயிக்க முடியவில்லை. ஆனால் இதே பாடலின் ஹிந்தி வெர்ஸன் அசத்தல். கள்வரே என்ற பாடல், ஷ்ரேயா கோஷல் பாடியது. வழக்கம்போல குரல் தேன். வரிகள் ஹிந்தி மெட்டுக்கேற்ப ஆங்காங்கே துருத்தி கொண்டிருக்கின்றன. வைரமுத்துவின் வார்த்தைகள் வளைந்துகொடுக்கவில்லை.

மணிரத்னம் படங்களில் ஹிந்தி – தமிழ் என இரண்டு மொழிகளிலும் சேர்ந்து பொருந்திப் போகும்படியாக, ரசிக்கும்படியாக ‘உயிரே’ பாடல்கள் இருந்தன. அடுத்ததாக ‘பம்பாய்’ சொல்லலாம். குரு சொதப்பல். அந்த விதத்தில் ராவணன் பாடல்களும் தடுமாறவே செய்கின்றன.

படத்தில் மலை ஜாதி மக்கள் தலைவன் விக்ரம் (ராவணன்), அவரது தங்கை ப்ரியா மணி (சூர்ப்பநகை), போலிஸ் ஆபிஸர் பிரித்விராஜ் (ராமன்), அவரது காதல் மனைவி ஜஸ்வர்யா ராய் (சீதை).

கதை? புரிந்திருக்குமே. படத்தின் ஸ்டில்களும் நம் நினைப்பை உறுதிப்படுத்துகின்றன.

சில பாடல் வரிகள் கவனிக்கப்பட வேண்டியவை.

என் பொறப்பு நீ கண்டா

என் பாதை நீ கடந்தா

என் யுத்தம் நீ செஞ்சா

நீ ராமந்தேன் ராவணந்தேன்..

ரெண்டும்தேன்…

– வீரா என்ற பாடலில் விக்ரமின் கேரக்டரை விளக்குவதாக வரும் வரிகள் இவை.

விக்ரம் தன் இனத்தவர்களுடன் ஆடிப்பாடும் ஒரு பாடல் இப்படி ஆரம்பமாகிறது.

கெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு

மொடா மொடா கள்ளு ஊத்து

….

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்

கட்டில்மேல பாத்தா சூப்பநகை வம்சம்…

– ராவணன் மது, மாமிசம் சாப்பிடுபவரா? சூர்ப்பநகை வரிகள் என்ன சொல்ல வருகின்றன?

ஐஸ்வர்யா ராயைக் கடத்தி காட்டில் வைத்திருக்கும் விக்ரம் மன சஞ்சலத்தோடு பாடும் ‘உசிரே போகுதே’ பாடலில் சில வரிகள்.

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல…

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்திக் கெடக்குதே

***

வழக்கம்போல படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதைப் பற்றி பேச வைக்கும் வித்தையில் வெற்றி கண்டிருக்கிறார் மணிரத்னம். ஆனால் பாடல் வரிகள் ராவணனை நல்லவிதமாகச் சொல்வதாகத் தோன்றவில்லை.

காத்திருப்போம். மணிரத்னத்தின் ராவணன், நல்லவனா அல்லது கெட்டவனா என்று தெரிந்துகொள்ள.

***

எப்போது ஆரம்பித்தார்கள், யார் எடுக்கிறார்கள், யார் நடிக்கிறார்கள், என்ன கதையாக இருக்கும் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து கவனம் ஈர்த்து விட்டார்கள்.

ராமர்.

ராவணன் வரும் நேரத்தில் இந்தப் படமும் நன்றாகவே விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர் ஹிட் பாடல்கள் என்று தினமும் விளம்பரம் வருகிறதே என்று அதையும் கேட்டுப் பார்த்தேன்.

புது இசையமைப்பாளர் போல. சார்லஸ் மெல்வின். பென்னி தயாள், ஹரிசரன் என்று தற்போதைய முன்னணி பாடகர்கள் என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் ‘அட புதுசா இருக்குதே’ என்று புருவம் உயர்த்த வைக்கவில்லை என்றாலும் சிலமுறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன.

திராவக வெண்ணிலா – என்றெல்லாம் தமிழுக்கு புது வருணிப்புகளை அருளியிருக்கிறார் இளைய கம்பன்.

படம் வரட்டும். விமர்சனம் யாராவது எழுதினால் படிக்கலாம்.

***

இந்தக் கட்டுரைக்கு வந்த தம்பி ஒருவர் எழுதிய கமெண்ட்:

ராவணன் படத்தில் இன்னும் ஒருபாடல் இருக்குங்கண்ணா.

‘கோடு போட்ட கொன்னுபோடு ..வேலி போட்டா…’

இந்த்த பாடலை மட்டும் ஏன் நீங்க கேட்கலைய அல்லது புரியலையா? இத மட்டும் தவிர்த்து ஏன்?கொஞ்சம் உண்மைகள் கலந்திருப்பதாலா?

கோடு போட்டா கொன்னுபோடு. வேலிபோட்ட வெட்டிப்போடு. நேத்துவரைக்கும் உங்கசட்டம். இன்னைக்கு இருந்து என்கசட்டம். சோத்துல பங்கு கேட்டா எலய போடு எலய

சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலய

ஊரா வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது….

பாட்டன் பூட்டன் சொத்த யாரும் பட்டா போடகூடாது

பழங்குடி இனமக்களின் போராட்டத்தை நல்லாச்சொன்ன இந்த பாட்டைமட்டும் விமர்சனம் பண்ணாதது இதிலிருக்கும் உண்மையினாலா?
-தம்பி

பதிலை எதிர்பார்க்கிறேன்.

டாப் ஒன்பதரை பாடல்கள்

தற்போது ரசித்துக் கொண்டிருக்கும் இனி வெளியாகவிருக்கும் தமிழ் பட பாடல்களின் தர வரிசை. அதென்ன ஒன்பதரை? சொல்கிறேன்.

குறிப்பு : சமீபத்தில் வெளியான் யுவனின் இசையில் தீராத விளையாட்டு, ஜிவி இசையில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், இமான் இசையில் கச்சேரி ஆரம்பம் படங்களில் பாடல்கள் எதுவும் எனக்குப் பிடித்தமாதிரி இல்லை.

ஒன்பதரை

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், கார்த்திக்கின் இதமான குரலில் ‘ஊனே உயிரே உனக்காகத் துடித்தேன், விண்ணைத் தாண்டி வருவாயா…’ – சின்னதாக ஒரு பாடல் (அரைப்பாடல்தான். ரஹ்மான் முழு பாடலே போட்டிருக்கலாம்.) – கிடார் இசை சுகம்.

ஒன்பது

பழைய பரத்வாஜ் மீண்டும் கிடைக்கவே மாட்டார்போல. அசல் படத்தில் அசலான பாடல்கள் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஆஹா எஃப் எம் நண்பர் ஒருவர் எனக்கு ஒவ்வொரு பாடலையும் போட்டுக் காட்டி, எது எது எங்கிருந்து எடுத்தது என்று சொன்னார். இருந்தாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் எஃப் எம் புண்ணியத்தால் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது. துஷ்யந்தா – இதுவும் புதிய பறவையின் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் ரீமிக்ஸ்தான். படம் அசலா, இல்லை ஏதாவது ஒரு படத்தின் நகலா என்று இனிமேல்தான் (முடிந்தால்) பார்க்க வேண்டும்.

எட்டு

தன் ‘குடும்ப’ படம் என்றால் மெனக்கிடல் அதிகம் இருக்கும்தானே. கோவாவில் யுவன் மீண்டும் விருந்து படைத்திருக்கிறார். அண்ணன், தம்பி, அப்பா, பெரியப்பா என குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பாடியிருக்கும் ஏழேழு தலைமுறை பண்ணைபுர பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னால் அவர்கள் குடும்பத்தில் யாராவது அரசியலில் இறங்கினால் கட்சிப் பாடலாக உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏழு

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் லீலையின் பாடல்கள் காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு. உன்னைப் பார்த்த பின்பு – காதல் சோகப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் ஹரிசரனின் குரலில். நிச்சயமாக வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தின் நம்பர் 1 பாடல் இதுவே.

ஆறு

அரேபிக் ஸீ பாடல் அண்ட் ரீமிக்ஸ். கோவா. நல்ல ஸ்டைலான பாடல். பலரது ரிங்டோனாக இந்தப்பாடலில் ஆரம்ப இசை மாறிக் கொண்டிருக்கிறது.

ஐந்து

துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஹரிசரன் குரலில் யுவனின் இந்த வருடத்தின் முதல் ரொமாண்டிக் ஹிட். எங்கேயோ, ஏற்கெனவே கேட்டதுபோல லேசாக தோன்றினாலும் சலிக்கவே இல்லை. பையா பட ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல். இந்த இடத்துக்கு என் காதல் சொல்ல நேரமில்லை (யுவன் குரலில்) பாடலையும் பகிர்ந்து கொடுக்கலாம்.

நான்கு

சித்து ப்ளஸ் டூ – பாடல் பூவே பூவே. தரணின் இசையில் யுவன் சங்கர் ராஜா, சின்மயி குரல்களில். பிற இசையமைப்பாளர்களின் ஆல்பத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் பாடும் ஆரோக்கியமான டிரெண்ட் உருவாகி வருவதை வரவேற்கலாம் (பாடகர்கள் மன்னிக்க). எஃப் எம்களில் பாடல் ஏற்கெனவே ஹிட்! சித்து ப்ளஸ் டூ ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல் இதுவே.

மூன்று

கோவாவில் இதுவரை இல்லாத உணர்விது – ஆன்ட்ரியா குரலில் கார்னெட்டோ கோனின் இனிமை. உடன் பாடும் அஜிஸுக்கு இது கன்னிப் பாடல். கேட்கும்போது விஜய் டீவி லோகோவோடு முகம் கண்ணில் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டு

முன்பே வா பாடலுக்குப் பிறகு ரஹ்மானின் இன்னொரு இசைக் கொடை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா… ஷ்ரேயா கோஷல் உச்சரிக்கும்போது ஜிவ்வென்று இருக்கிறது. ரஹ்மானுக்கும் இளையராஜா போல ஷ்ரேயாவோடு டூயட் பாட நீண்ட நாள் ஆசை போல. இந்தப் பாடல் மூலம் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ரசனையான பாடல். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்-ஐ உள்ளே நுழைத்திருப்பது அழகு. இந்த வருடத்தின் நம்பர் ஒன் மெலடி ஆகியிருக்க வேண்டிய பாடல் இது. ஆனால்… தாமரையின் வரிகள் முழுமையான கவிதையாக இல்லாமல் சில இடங்களில் உறுத்தலாக இருக்கிறது. அந்த (வசன) வரிகளை வளைத்து நெளித்துப் பாடுவதற்குப் பாடகர்கள் அதிகம் மெனக்கிட்டிருப்பார்கள் போல. இருந்தாலும் பலரது வாழ்நாள் விருப்பப் பாடலாக மாறிவிடும்.

ஒன்று

ஒரு படத்தில் பாடல்கள் கேட்கும்போதுகூட சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா? தமிழ் படம் பாடல்கள் அந்த இன்பத்தைக் கொடுக்கின்றன. இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கே எதிர்பார்த்தேன். ஹரிஹரன், ஸ்வேதா குரலில் ஓ மஹ ஸீயா பாடலை எக்கச்சக்கமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை மெலடியான பாடலில்கூட எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் கண்ணனுக்கு வாழ்த்துகள். வார இறுதியில் இந்தப் படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். கோவாவெல்லாம் பிறகுதான்.

குஹாவும் ரஹ்மானும்

ஞாயித்துக்கிழமை (ஆகஸ்ட் 2) ரெண்டு முக்கியமான விஷயம் நடக்க இருக்குது.

இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 (India After Gandhi) – ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகத்தின் அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு – நாளை வெளியீட்டு விழா.

நேரம் : காலை 11 மணி, ஆகஸ்ட் 2, 2009

இடம் : நுங்கம்பாக்கம் அபெக்ஸ் பிளாஸா லேண்ட் மார்க்.

சிறப்பு விருந்தினர் : ராமச்சந்திர குஹா மற்றும் நீங்கள்.

மறக்காம வந்துருங்க நண்பர்களே.

அடுத்த விஷயம், ஞாயிறு பகல் 12 – 1 ஒளிபரப்பாகிற கிழக்கு பாட்காஸ்ட் சம்பந்தப்பட்டது.

ஆஹா FM 91.9ல இந்த வார டாபிக் ஏ.ஆர். ரஹ்மான்.

என். சொக்கன் எழுதி தமிழ்ல முதல் முறையா ஏ.ஆர். ரஹ்மானோட வாழ்க்கை புத்தகம் வெளியாகி இருக்கிறது. ரஹ்மான் குறித்து நிகழ்ச்சில நம்மகூட பேசப்போறது சொக்கனும், தமிழ் சினிமா ஆய்வாளருமான பா. தீனதயாளனும்.

அன்னிக்கு நிகழ்ச்சி ரஹ்மான் பற்றி இருந்தாலும், பேசுனதுல பாதிக்குமேல் ராஜா Vs ரஹ்மான் – ஒப்பீடாகவும் சர்ச்சைகளாகவும்தான் போச்சுது. அதுவும் நிகழ்ச்சிக்கு இடையில ‘இளையராஜாவின் முரட்டு பக்தர்’ ஐகாரஸ் பிரகாஷ் போன் பண்ணி, வெறித்தனமா ஒரு கேள்வி கேட்டு சொக்கனை மிரட்டினார். அப்புறம் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துல பாடுன பாடகி ஸ்ரீமதுமிதாவும் போன் வழியா நிறைய பேசினாங்க, பாடுனாங்க.

மொத்தத்துல ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அந்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ரொம்ப சுவாரசியமாகவே அமைஞ்சுது. நாளைக்கு பகல் 12-1, ஆஹா 91.9, கேட்க மறந்துடாதீங்க.

இன்னொரு ஹாலிவுட் விருது!

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப், பாப்தா. அடுத்து ஆஸ்கர் கிடைப்பதற்கான வாய்ப்புகள்  அதிகம் இருக்கின்றன. சந்தோஷம். ஜாஹிர் ஹுசைனுக்கு கிராமி விருது. மகிழ்ச்சி.  அயல்தேச உயரிய விருதுகள் எல்லாம் இந்த ஆண்டில் இந்தியர்களுக்குக் கிடைக்க  ஆரம்பித்திருப்பது குறித்து திருப்தி.

ஒரு வருத்தம். சென்ற ஆண்டின் இறுதியிலேயே தமிழர் ஒருவர், இசைத்துறையில்  அயல்தேச விருதை அள்ளி வந்துள்ளார். விஷயம் மீடியாவில் பெரிதாகப் பேசப்படவில்லை. தி ஹிந்து உள்பட ஓரிரு ஆங்கில நாளிதழ்களில் செய்தி வந்தது. தமிழ் மீடியாவில்?  ம்ஹும்.

போகட்டும். அந்த விஷயத்தை இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம்.

கணேஷ் குமார். இசையமைப்பாளர். கவிதாலயாவின் துள்ளித் திரிந்த காலம் படம் மூலம்  கோலிவுட்டுக்கு அறிமுகமானவர். கே. பாலச்சந்தரின் அநேக தொலைக்காட்சி சீரியல்களில் இசைப் பங்களிப்பு அளித்திருக்கிறார். மற்றபடி, கோலிவுட் குத்தாட்ட பாடல்களில் விருப்பம் இல்லாதவர். அவரது இசைப்பணிகள் பெரும்பாலும் இங்கே திரைப்படம்  தவிர்த்ததாகவும், அயல்தேச இசைக்கலைஞர்கள் சார்ந்ததாகவுமே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பாலாஜி கே. குமார். தமிழர்தான். ஹாலிவுட்டில் அவர் எடுத்த முதல் படம் 9 Lives of  Mara. கணேஷின் சில இசைக்குறிப்புகளைக் கேட்ட பாலாஜி, லாஸ் ஏஞ்சல்ஸில்  இருந்து தொடர்பு கொண்டிருக்கிறார். படத்தின் theme சொல்லியிருக்கிறார். மாரா படத்தின் தீம் மியூஸிக்கை அமைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். மூன்று வாரங்களில் கணேஷும் இசையமைத்து அனுப்பினார். உலக அளவில் மொத்தம் 18 இசையமைப்பாளர்கள் தங்களது தீம் மியூஸிக்கை அனுப்பியிருந்தார்கள். கணேஷுக்குத்தான் வெற்றி.

நன்றி : Tabloid Witch

‘கணேஷ், எப்ப லாஸ் ஏஞ்சல்ஸ் வர்றீங்க?’ – படக்குழுவினரின் கேள்வி இது.

‘நான் சென்னையிலிருந்தே செஞ்சு கொடுக்கிறேன்.’ – கணேஷின் பதில் இது.

‘ஆர் யூ ஜோக்கிங்?’ – என்று கேட்ட அவர்கள், ஓப்பன் டிக்கெட் ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள்.

‘இங்கிருந்தே செய்கிறேன். எந்தக் குறையும் வராது’ என்று கணேஷ் அவர்களைச் சம்மதிக்க வைத்தார். படத்தின் Sound Track மேற்கு மாம்பலத்தில் லேக் வியூ  ஸ்டூடியோஸில் தயாரானது. ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்துக்கான இசையை அமைத்த கணேஷ், மூன்று மாதங்களில் வேலையை முடித்தார்.

‘ஓகே கணேஷ். மிக்ஸிங்குக்கு இங்க வந்துருங்க’ – மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து  அழைப்பு. கணேஷ், மிக்ஸிங் செய்த மாதிரியை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். அவர்களுக்கு அதில் பரம திருப்தி. பதில் வந்தது ‘Go ahead!’

ஃபைனல் மிக்ஸிங் டிவிடியை கணேஷ், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் ரிலீஸுக்குத் தயார் என்ற நிலையில் 2008க்கான  TABLOID WITCH AWARDS அறிவிப்பு வந்தது. அதாவது சிறந்த திகில் படங்களுக் கான வருடாந்திர ஹாலிவுட் விருது இது. திகிலிலேயே பல தினுசுகள் உண்டு. அதில் 9  Lives of Maraவுக்கு 5 விருதுகள். சிறந்த சவுண்ட் டிராக் விருது கணேஷ் குமாருக்கு.

படத்துக்கான வேலைகளை எல்லாம் இங்கேயே தனது ஸ்டூடியோவிலேயே செம்மையாகச் செய்துமுடித்த கணேஷ், விருது வாங்குவதற்காகத்தான் யுஎஸ் சென்றுவந்தார்.

விருதுப் பட்டியலைத் தெரிந்துகொள்ள

இது குறித்த தி ஹிந்து செய்தி

கணேஷ் குமாரை வாழ்த்த : <ganeshaestheticmusic@yahoo.com>

கணேஷ் எனது மரியாதைக்குரிய நண்பர். அவரோடு இணைந்து சில பணிகள்  செய்துள்ளேன். அந்த சுவாரசியமான நிமிடங்களைப் பிறிதொரு சமயம் பகிர்ந்துகொள்கிறேன்.