சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள் (2)

11 ஜனவரி, புதன்கிழமை

* இன்றைக்கு பிளாட்பார வியாபாரிகள் மட்டுமல்ல; புத்தகக் காட்சி வியாபாரிகளுமே மழையைச் சபித்துக் கொண்டிருந்தார்கள். மாலை ஆறு மணிபோல ஆரம்பித்த மழை அடுத்த 45 நிமிடங்களுக்கு தாண்டவமாடியது. கண்காட்சிக் கூரையில் பல இடங்களில் ஒழுக ஆரம்பிக்க, புத்தகங்கள் நனைய ஆரம்பிக்க, வியாபாரிகளெல்லாம் புத்தகங்களைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓட… பபாசி அடுத்த முறையாவது ஒழுகாத வண்ணம் கூரைகள் அமைக்கப் பாடம் கற்றுக் கொண்டால் சரி.

* பிளாட்பாரத்தில் இந்தமுறை இதுவரை எனக்கு எந்தப் பொக்கிஷமும் கிட்டவில்லை. இன்னும் ஓரிரு முறை சென்று மேய வேண்டும். காவ்யாவின் பல புத்தகங்கள் ரூ 20க்கும் ரூ 30க்கும் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

* இந்தியாவுக்கு முதல் தேவை என்ன? விவசாயத்தில் வளர்ச்சிதான் என்று எடுத்துச் சொல்வதுபோல கண்காட்சியின் முதல் ஸ்டாலாக ‘நவீன வேளாண்மை’ அமைந்திருப்பது சிறப்பு. அந்த ஸ்டாலுக்குள் சென்று புத்தகங்களைப் புரட்டும்போது, எங்கிட்டாவது குக்கிராமத்துல துண்டு நெலம் வாங்கி, சோளம் கம்புன்னு பயிறு செஞ்சு… அப்படியே கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு காத்து வாங்கிட்டு… கூழு குடிச்சிட்டு…  நடந்தா நல்லாயிருக்கும்!

* நற்றிணை பதிப்பகத்தில் சட்டெனக் கவரும் அழகான அட்டைகளுடன் இந்த முறை பல புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். பிரபஞ்சனின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ’மயிலிறகு குட்டி போட்டது’ புத்தகமும், ‘துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்’ என்ற புத்தகமும் கவனம் கவருகின்றன.

* கோலிவுட்டில் அதிகப் பாடல்களை எழுதும் ரேஸில் சமீப வருடங்களில் முன்னணியில் இருக்கும் நா. முத்துக்குமாரின் புத்தகங்கள், அவரது ‘பட்டாம்பூச்சி’ பதிப்பகத்தில் கிடைக்கின்றன. அவருடைய பழைய கவிதைப் புத்தகங்களும் புதிய அட்டைகளுடன் ஈர்க்கின்றன.

* பொன்னியின் செல்வன் – கல்கி – இளைஞர் பதிப்பு – என்ற அந்த நூலைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அட்டையில் விஜயும் சூர்யாவும் ராஜா கெட்-அப்பில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லா விழாக்களிலும் பரிசளித்து மகிழ மலிவு விலையில் மகத்தான காவியம் – என்று வேறு அட்டையில் போட்டிருந்தார்கள். (விலை ரூ. 100 என நினைவு.) அதாவது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களைச் சுருக்கி, இளைஞர்கள் சட்டென படித்து முடித்து வகையில் ஒரே பாகமாக வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே. சுப்பிரமணியன் என்பவர். ஓய்வுபெற்ற ஆசிரியராம். இன்றைய தலைமுறை இளைஞர்களிடமும் பொன்னியின் செல்வனைக் கொண்டு செல்ல இந்த முயற்சியாம்! லாப நோக்கின்றி சேவை நோக்கில் செய்யப்பட்டதாம்! அவரை வாழ்த்துவதா, திட்டுவதா?

* இன்றும் வாழும் சோழ மன்னர்கள், இன்றும் வாழும் பல்லவ மன்னர்கள் – என சோழ, பல்லவ வாரிசுகள் குறித்த ஆவணப் படங்கள் ரூ. 50 விலையில் இரண்டு சிடிக்களாக தென்பட்டன.

 

 

 

 

 

 

 

* எல்லா புத்தகக் காட்சியிலும் ஹீரோவாக வலம் வரும் சே குவாரா, இந்த முறை படக்கதை வடிவில் (மொழி பெயர்ப்பு புத்தகம்) நல்ல ஓவியங்களுடன் கிடைக்கிறார். கவனம் கவர்ந்த இன்னொரு படப் புத்தகம் – கார்டூனாயணம். அண்ணா குறித்து வெளிவந்துள்ள கார்ட்டூன்களின் தொகுப்பு. தொகுப்பாளர்களில் ஒருவர் டிராஸ்கி மருது.

* மதி நிலையத்தில் பாராவின் குற்றியலுலகம் முதல் 1000 பிரதிகளைக் கடந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிந்துகொண்டேன். சொக்கன் எழுதிய விண்டோஸ் 7 கையேடு – பலரது கவனத்தையும் ஈர்க்கும் புத்தகமாக அமைந்துள்ளது.

* விகடனில் டாப்பில் இருப்பது பொன்னியின் செல்வன். அடுத்தடுத்த இடங்களை சுகாவின் மூங்கில் மூச்சு, நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விகடன் பொக்கிஷம், காலப்பெட்டகம் போன்றவை பிடித்த்துள்ளன. கிழக்கிலும் சுகாவின் தாயார் சந்நிதி வேகமாக விற்று வருகிறது. நல்ல எழுத்தாளர்களின் ஊர் சார்ந்த அனுபவங்களை வாசகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

* சென்ற முறை கிழக்கில் 80 பிரதிகளுக்கும் மேல் விற்ற அகம் புறம் அந்தப்புரம் (ரூ. 950), இந்தமுறை விற்பனைக்கு இல்லை. ஸ்டாக்கில் இருந்த ஐந்து புத்தகங்களும் ஓரிரு நாள்களிலேயே விற்றுவிட்டன.

* தென்னிந்தியப் பதிப்பகத்தில் – காமிக்ஸ் பிரியர்களின் ஆதரவால் எப்போதும் கூட்டம்தான். கிங் விஸ்வா மொத்தமாக அள்ளிச் செல்வோர் அனைவரையும் போட்டோ எடுத்துக் கொள்கிறார். நானும் ஒரு செட் வாங்கிவிட்டேன். உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள். லயன் ComeBack எடிசனும் வந்துவிட்டது.

* இந்தப் புத்தகக் காட்சியில் நான் கவனித்த ஒரு பொதுவான விஷயம் : வாசகர் கூட்டம் குறையவில்லை. அவர்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம். அதாவது கடந்த ஆண்டுகளில் ஒரு வாசகரால் 500 ரூபாய்க்கு 5 புத்தகங்கள் வாங்க முடிந்ததென்றால், இந்த ஆண்டு அதே 500 ரூபாய்க்கு 3 புத்தகங்கள்தான் வாங்க முடிகிறது. புத்தகங்களின் விலையேற்றம்தான் காரணம். புத்தகங்களின் விலையேற்றத்துக்குப் பல காரணங்கள்.

* ஒரு ஸ்டாலில் நடந்த உரையாடல் :
‘ஆர்னிகா நாசரோட விஞ்ஞான நாவல்லாம் உங்ககிட்ட இருக்கா?’
‘ஆர்னிகா நாசர், எங்ககிட்டதான் எல்லா கதையும் கொடுத்து வைச்சிருக்காரு. விஞ்ஞான கதைகள் நாங்க போடல. யோசிக்கணும்.’
‘எப்போ கொண்டு வருவீங்க?’
‘யாரு வாங்குவா? அவரென்ன சுஜாதாவா? அந்தளவு மார்க்கெட் இல்லியே.’
‘ஓ… சரி, எந்திரன் கதை தன்னோடதுன்னு கேஸ் போட்டாரே. என்னாச்சு?’
‘சங்கரு தாத்தாவாகுற வரை அந்தக் கேஸு நடக்கும்.’

 

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

பக்கடாவும் மனோன்மணியும்!

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வந்துள்ள ஒரே படம் என்று அஞ்சலியை பலகாலமாக வேறுவழியின்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அஞ்சலி குழந்தைகளுக்கான படமா என்ன?

இனி நாமும் துண்டை, கௌரவமாகத் தோளில் போட்டுக் கொள்ளலாம். பசங்க வந்துவிட்டது. குழந்தைகளுக்கான முதல் தமிழ் சினிமா வந்தேவிட்டது. இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரைப் பார்த்து கேட்கத் தோன்றும் கேள்வி, இத்தனை நாளா எங்க சார் இருந்தீங்க?

முதல் படத்துக்கு ‘சின்னப்பசங்க’ கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைஞ்ச இயக்குநர் பாண்டிராஜுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்திதான். இந்தக் கதையை பல மசாலா தயாரிப்பாளர்கள் இடதுகையால் நிராகரிச்ச சம்பவங்கள் கண்டிப்பாக நடந்திருக்கலாம். சமீபத்தில் மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்த அந்த நிறுவனமும் நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன். இப்போது வருத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

விகடனில் 50 மார்க் போட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. மக்களை தியேட்டருக்கு இழுக்க இந்த மார்க் மிகவும் உபயோகப்படும். இரு தினங்களுக்கு முன்பு நானும் சூரியனில் பசங்க பார்த்தேன், பசங்களோடு. பக்கடா, மனோன்மணி, குட்டிமணி உள்பட சில சிறுவர்களை படத்தின் உதவி இயக்குநர்கள் தியேட்டருக்கு அழைத்து வந்திருந்தார்கள். அனைத்து பகுதிகளிலிருந்தும் ரிசல்ட் பாசிட்டிவாக வருகிறது என்றார் அந்த உதவி இயக்குநர். ஜீவா, அன்பு தவிர மற்ற எல்லோரும் புதுக்கோட்டை பசங்க. படத்தில் வரும் பள்ளி, டைரக்டர் படித்த இடம். எல்லோரையும் கவர்ந்த கதாபாத்திரமான புஜ்ஜியின் சொந்த வீட்டில்தான் அவன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடித்த பசங்க, தியேட்டர் தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம், நம் வீட்டுப் பசங்களோடு தியேட்டருக்குச் சென்று அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.

படத்தில் குறைகளே இல்லையா? நீளமான காட்சிகள், சேராத பின்னணி இசை, க்ளைமாக்ஸ் என்று குறைகள் இருக்கின்றன. ஆனால் நிறைகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக யதார்த்தம் மீறாத காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள்.

அவ்வளவு உயர்தரமான படமா? ரெண்டாம்தர கதைகளோடும், மூன்றாம்தர வசனங்களோடும் வரும் கேடுகெட்ட சினிமாக்களே நமக்கு விதிக்கப்பட்டது என்று நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. அந்தக் குப்பைகளோடு ஒப்பிடத் தேவையே இல்லை. பசங்க, பெரியவங்க!

இயக்குநருடன் போனில் பேசும் வாய்ப்பு அமைந்தது. ‘அடுத்த படத்துல நீங்களும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள்ள சிக்கிக்காதீங்க’ என்றேன். ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்றார் அழுத்தமாக.

நம்புகிறேன்.

‘கூத்தடிக்க வேண்டாம்’ – எஸ்.எஸ். வாசன்

ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர்கள் சிலருக்கு ஒரு நாடகக் குழு ஆரம்பித்தால் என்ன என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனந்த விகடன் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் ஒரு  நாடகக் குழுவை ஆரம்பித்தார்கள். முதல் முயற்சியாக தேவன் எழுதிய மிஸ்.மைதிலியை அரங்கேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

நாரதர் ஸ்ரீனிவாச ராவ்தான் நாடகத்தின் கதாநாயகன், எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் மகன் எஸ். வி. ரங்கா, விகடனில் சர்குலேஷன் இலாக்கா மேனேஜராக  பணியாற்றினார். அவருக்கு வில்லன் வேடம். கதை எழுதிய தேவனுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது. அவர்தான் கதாநாயகி  மிஸ். மைதிலியின் தந்தை.

விகடன் ஆர்ட் ஸ்டூடியோ இருந்த  பங்களாவின் மாடியில் உதய சங்கரின் கல்பனா படத்தின் நடன ஒத்திகை நடக்கும்  என்று சொன்னேன் அல்லவா? அவர் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்டுப் போய்விட்டதால்,  அந்த மாடி காலியாகத்தான் இருந்தது. அங்கேதான் எங்களுடைய நாடகத்தின் ஒத்திகை நடக்கும் எல்லோரும் தினமும் அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் கரெக்ட்டாக ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். எங்களின்  தவறாத வருகைக்கு எங்களுடைய நடிப்பு ஆர்வம் மட்டுமே காரணமில்லை. தினமும் ரிகர்சலின் போது சுடச்சுட போண்டா சப்ளை ஆகும். அந்த போண்டாவும் சேர்த்துதான் எங்களை ஒத்திகைக்கு இழுத்தது.

நாடக அரங்கேற்ற தேதி நெருங்க நெருங்க எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எல்லாரும்  ஈடுபாட்டுடன் நாடக அரங்கேற்றத்துக்காக உழைத்தோம். ஜெமினி, விகடன் அதிபரான வாசனைத்தான் அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க அழைத்திருந்தோம். குடும்பத்துடன் வந்திருந்து நாடகத்தைப் பார்த்து  ரசித்து, எங்களை ஊக்கு விக்க  வேண்டும் என்று அவரைக்  கேட்டுக் கொண்டோம். சம்மதித்தார். அரங்கேற்ற நாள் வந்தது.

சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில்தான் அரங்கேற்றம். குறித்த நேரத்தில் வாசன் தனது குடும்பத்தினருடன்  நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். நாடகக் குழு ஆரம்பிக்க ஆர்வம் காட்டி, முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தவர்  விகடன் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்த   வைத்யநாதன். நாடகம் ஆரம்பித்தது. நடிகர்கள் அனைவருக்கும் மேடை நடிப்பில் முன் அனுபவம் ஏதுமில்லை என்பதால் சிலர் வசனம் பேசத் தடுமாறினார்கள். சிலர் வசனங்களை ஒப்பிப்பதுபோலப் பேசினார்கள். இன்னும் சிலரது நடிப்பு மிகவும் செயற்கையாக இருந்தது. நாடகத்தைப் பார்த்த வாசன், மேடை ஏறி ஏதோ இரண்டொரு வார்த்தைகள் சம்பிரதாயமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவுடன் நாடகக் குழுவினர் அனைவரையும் கூப்பிட்டு அனுப்பினார். நேற்று எங்கள் நாடக முயற்சியைப் பற்றி பப்ளிக்காக ரொம்ப பாராட்டாவிட்டாலும், இப்போது நாலு வார்த்தை பாராட்டிச் சொல்லப்போகிறார்  என்ன நினைப்போடு சென்றோம். அனைவரும் வாசன் முன்னால் நின்று கொண்டிருந்தோம்.  பேச ஆரம்பித்தார் வாசன்.

‘ஆனந்த விகடன் மக்களுக்குச் செய்து கொண்டிருக்க நகைச்சுவைத் தொண்டே போதுமானது. நீங்கள் இப்படி எல்லாம் நடித்து, மேடையில் நகைச்சுவை என்று கூத்தடிக்க வேண்டாம். இத்துடன்  நாடகம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.’

****

விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு.  சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம்.

ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் – கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூட சொல்லலாம்.

ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்! 2009 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கிழக்கு பதிப்பகம் கொண்டுவரும் மிக முக்கியமான பதிவு – எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!

பாவம் ராவணன்! – போகோ கட்டுரை ;)

(இந்தக் கட்டுரை குழந்தைகளுக்கும் குழந்தை மனம் படைத்தவர்களுக்கு மட்டும். சுட்டி விகடனில் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

ராவணன் தெரியுமா உங்களுக்கு… ஆமா பத்து தலைகளோட ‘பந்தா’வா ராமாயணத்துல  வருவாரே, அவரேதான்! ராவணன் இன்னிக்கு நம்ம கூட வாழ்ந்தார்னா, ‘அய்யோ பாவம்  அந்த அங்கிள்’னு நீங்க ‘உச்’ கொட்டுவீங்க. ஏன் தெரியுமா?

* தினமும் காலைல 320 பற்களைத் தேடிப்புடிச்சு ‘ஈ’ தேய்க்கணுமா, பாவம், அதுக்கே  எவ்வளவு நேரமாகும்!

* செல்போன்ல யாராவது ராவணனைக் கூப்பிட்டாங்கன்னா, ‘எந்தக் காதுல வைச்சுப்  பேசலாம்’னு குழம்பிப் போயிடுவாரு!

* இப்ப ராவணனுக்கு முதல் தலையில இருக்குற மூக்குல ஜலதோஷம் பிடிச்சா  அவ்வளவுதான். அப்புறம் பத்து மூக்குக்கும் பரவிடும். ‘அச்’னு ஒரு தும்மல் வந்துச்சுன்னா,  தொடர்ந்து ஒரே தும்மல் சத்தமாத்தான் இருக்கும்!

* ராவணனுக்கு ‘ஷேவ்’ பண்ண எவ்ளோ நேரமாகும்! முதல் முகத்துல இருந்து வரிசையா ‘ஷேவ்’ பண்ணிக்கிட்டே கடைசி முகத்துக்கு வர்றதுக்குள்ள முதல் முகத்துல தாடி முளைச்சிருமோ?!

* ராவணனுக்கு ஒரு தலையில ‘பொடுகு’ வந்தா, எல்லாத் தலைகளுக்கும் பரவிடுமா?  ஹைய்யோ, அப்ப குளிக்கணும்னா எவ்ளோ ஷாம்பு ஆகும்?

* ஸ்கூல்ல மிஸ் ‘2 X 3’ எவ்வளவுன்னு ராவணனைக் கேட்கறப்போ, நாலாவது வாய்  ‘6’-ன்னும் அஞ்சாவது வாய் ‘8’ன்னும் சொல்லிச்சுன்னா அவரு என்ன பண்ணுவாரு!?

* நாம அடிக்கடி தலையில அடிச்சு ‘எல்லாம் என் தலையெழுத்து’ன்னு சொல்லுவோமே,  அதை ராவணன் எப்படிச் சொல்லுவாரு?

* தனக்கு பிடிச்சவங்களுக்கு ‘கிஸ்’ கொடுக்கணும்னா ராவணன் எந்த உதட்டால கொடுப்பாரு?

* ஒரு தலைக்கு ‘ஹேர்-கட்’ பண்ண 40 ரூபாய்னா, பாவம் ராவணனுக்கு முடிவெட்ட  மட்டுமே, 400 ரூபாய் செலவாகிடும்ல!

* ஸ்கூல் பஸ்ல போகணும்னா எப்பவுமே ராவணனுக்கு கடைசி சீட்தான். அங்கதானே  அவரால உட்கார முடியும்!

இப்ப, சொல்லுங்க, ராவணன் பாவம்தானே!