கம்யூனிஸத்துக்குத் தடை!

‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற திரைப்படத்தில் நான் எழுதிய முதல் திரைப்படப் பாடலான ‘போகாமல் ஒருநாளும்’  என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. சென்ற வாரம் படத்தின் பாடல்கள் வெளியாயின. எனது பாடல் வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் குமாருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். முதல் படம், ‘துள்ளித் திரிந்த காலம்.’ அதில் ‘ஜெயந்த்’ என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார். கணேஷ் குறித்த எனது பழைய பதிவு ஒன்று இங்கே.

ஏதோ செய்தாய் என்னை – படத்துக்காக ஜாலியான காலேஜ் பாடல் ஒன்று தேவைப்பட்டபோது கணேஷ் என்னை அழைத்தார். சற்றே சவாலான விஷயங்கள் எழுத வேண்டியிருந்தால் என்னை கணேஷ் அழைப்பது வழக்கம். ‘வழக்கமான பல்லவி, சரணம் பாணியில் பாடல் அமைய வேண்டாம். இந்தப் பாடலை நான் Reggae வடிவத்தில் கொடுக்கப் போகிறேன். நீங்கள் எழுதுங்கள். எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. மெட்டை பிறகு யோசித்துக் கொள்ளலாம்’ – கணேஷ் எனக்கு கட்டற்ற சுதந்தரம் வழங்கினார்.

அவர் சொன்ன Reggae பாடல் வடிவம் குறித்து அப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஜமைக்காவைச் சேர்ந்த ஓர் இசை வடிவம் என்று தெரிந்துகொண்டேன். சில Reggae பாடல்களைக் கேட்கச் சொல்லி கணேஷ் பரிந்துரைத்தார். கேட்டேன். சில ஐடியாக்கள் தோன்றின. டைரக்டர் எல்வின், கணேஷ், நான் மூவரும் கலந்துரையாடினோம். ‘ஒரு கல்லூரியின் பல்வேறு இடங்களை, கல்லூரி வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை கேலியாக இரண்டிரண்டு வரிகளில் சொல்வதாகப் பாடலை அமைக்கலாம்’ என்று முடிவு செய்தோம்.

திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரைத் துணைக்கழைத்துக் கொண்டு, பழமொழிகள், பழைய பாடல்கள் உதவியுடன் வரிகளை எழுதினேன். மெட்டுக்குள் உட்கார வேண்டும், மீட்டர் இடிக்கக்கூடாது போன்ற சங்கடங்கள் இல்லாததால் எளிதாகவே பாடல் வரிகள் வந்து விழுந்தன. ஒரு சில திருத்தங்களுக்குப் பிறகு பாடல் என் தரப்பில் முழுமை பெற்றது. அதன்பின் கணேஷ்தான் அதனை இசையமைக்க மிகவும் மெனக்கிட்டிருக்க வேண்டும். பாடலின் Chorus-ஆக வரும் ஆங்கில வரிகளை, ஜார்ஜியனா எழுதினார்கள். இவர்கள், பாடகி ஷாலினியின் அம்மா என்பது தகவலுக்காக. படத்தில் வரும் ஒரு ஆங்கிலப் பாடலும் இவர்களது கைவண்ணமே.

கல்லூரி ஜாலி பாடலுக்கு நாங்கள் 2010ன் ஆரம்பத்தில் வைத்த பெயர் College Anthem. (அதாவது லவ் அன்தேம், சச்சின் அன்தேம் எல்லாம் வருவதற்கு முன்பாகவே தோன்றிய யோசனை இது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் மை லார்ட்! 😉 )

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கல்லூரிகளின் பெயரை எல்லாம் ராப் பாணியில் வேகமாக அடுக்கி, This is an anthem for every college என்று சொல்லிவிட்டு பாடலுக்குள் செல்லலாம் என்பது என் யோசனை. ஏனோ அது நிறைவேற்றப்படவில்லை. பாடல் ஏற்கெனவே நீளமாக இருப்பதே காரணமாக இருக்கலாம்.

சரி, நான் எழுதிய பாடல் வரிகள், பாடலின் முறையான வடிவம் இதுதான். பாடலை இங்கே கேட்டுக் கொண்டே, வரிகளைப் படித்துக் கொள்ளுங்கள். கீழே வாருங்கள்… இன்னும் சில விஷயங்களை வைத்திருக்கிறேன்.

படம் : ஏதோ செய்தாய் என்னை

பாடல் : முகில்

Chorus வரிகள் : ஜார்ஜியானா

Opening

ராத்திரி நேரம் தூக்கம் எதுக்கு?

போதும் உறக்கம் – போர்வை விலக்கு.

இளமை இருக்கு! இரவைச் செதுக்கு!

Verse 1

Canteen

போகாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

போண்டாவில் வாய் வைக்க வேண்டாம்

டீ என்னும் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டாம்

டிரீட்டுன்னா கேன்டீனா? வேண்டவே வேண்டாம்

Verse 2

Hostel

தீராது விளையாட்டு தினமும்தான் இங்கே – திருட்டு

தம்முக்கும் பியருக்கும் என்றென்றும் பங்கே

எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் – கம்யூனிஸம்!

எல்லோரும் நம்ம சொந்தம் – ஹாஸ்டலிஸம்!

Verse 3

Exam

காக்க காக்க – காக்க காக்க – கைபிட்டு காக்க

நோக்க நோக்க – நோக்க நோக்க – Next Bench நோக்க!

Distinction வாங்கத்தான் அலையுது ஒரு குரூப்பு

Just Pass போதுமடா – சொல்லுறான் நம்ம மாப்பு!

Verse 4

Arrears

அரியர்ஸ் வெச்சா தப்பில்ல

அதை வைக்காத வாழ்க்கையிலே கிக் எதுவும் இல்லை

அரியர்ஸ் இல்லா ஸ்டூடண்ட் அரை ஸ்டூடண்ட்

அதை முடிக்காத ஸ்டூடண்ட் Ever ஸ்டூடண்ட்

Pre Chorus

Library புத்தகத்தில் Love Letter விதைப்போம்

Physics Labக்குள் Chemistry வளர்ப்போம்

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Verse 5

Class Room

Class Room என்பது சட்டசபை போல!

வெளிநடப்பு செய்வதே தினம் எங்கள் வேலை!

போர்டில் உள்ள பாடத்தை நோட்டில் எழுத மாட்டோம்

நெஞ்சில் உள்ள காதலை Bench-ல் எழுதி வைப்போம்

Verse 6

Boys & Girls

Boys

எந்த ஃபிகருமே நல்ல ஃபிகருதான் லவ்வரா நினைக்கையிலே

அவ நல்லவளாவதும் கெட்டவளாவதும் Love Propose செய்கையிலே

Girls

எந்தப் பையனுமே ரொம்ப உத்தமன்தான் லவ் சொல்லும் போதினிலே – நாங்க

Yes சொன்ன பின்னாலே ஜொள்விட்டுப் போறானே இன்னொருத்தி பின்னாலே!

Pre Chorus

Collage Culturals – சைட் அடிக்கும் Carnival

Collage Election – Politics Practical

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Interlude

Bridge

கட் அடிப்போம் சைட் அடிப்போம்

பிட் அடிப்போம் பியர் அடிப்போம்

ஆனாலும் படிப்போம் காலேஜை முடிப்போம்

மம்மி டாடி கனவை மறக்காம மதிப்போம்

Pre Chorus

ஆயிரந்தான் வந்தாலும் விலகாது நட்பு

ஆயுளுக்கும் நம்ம கைவிடாது நட்பு

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

***

சிடிக்களிலும் சரி, இணையத்தில் கிடைக்கும் பாடலிலும் சரி, சன் மியூஸிக்கில் ஒளிபரப்பப்பட்டதிலும் சரி, பாடலில் எந்தவித பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் இந்தப் பாடல் சென்சாரில் சிக்கித் தவித்ததாகக் கேள்விப்பட்டேன். தியேட்டருக்கு வரும்போது சில இடங்களில் மௌனமான வாயசைப்புடன்தான் பாடல் ஒலிக்குமாம்.

சட்டசபை குறித்த வரிக்கு ஆட்சேபணை தெரிவித்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அது பொய்த்தது.

அதில்லாமல் மூன்று இடங்களில் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்களாம்.

1. ராகிங் என்ற வார்த்தை பாடலில் வரக்கூடாதாம்.

2. திருட்டு தம், பியர் என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாதாம்.

3. கம்யூனிஸம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாதாம்.

ராகிங் என்ற வார்த்தையின்றி கல்லூரி குறித்த பாடல் முழுமை பெறாது என்பதால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தவிர, இந்தப் பாடல் மூலமாகத்தான் ராகிங், நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. நேரடியாகவோ, இலைமறை காயாகவோ ராகிங் இன்றுவரை கல்லூரிகளில் ஓர் அங்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது.

பாடலில் அடுத்து தம், பியருக்கு தடை போட்டிருக்கிறார்கள். அது இந்தச் சமூகத்துடனும் சினிமா காட்சிகளுடனும் பின்னிப் பிணைந்ததல்லவா. எனில், தற்போது வெளிவரும் படங்களில் பாதி காட்சிகள் வெட்டியெறியப்பட வேண்டுமே. திரையில் தோன்றி சிகரெட் பிடிக்கலாம், மது அருந்தலாம். அதற்கு ‘மது, புகை கேடு’ என்ற ரீதியான அறிவிப்பைப் போட்டுக் கொண்டால் போதுமானது. ஆனால் அவற்றை பாடலில் உபயோகித்தால் தெய்வ குற்றம் என்பதைப் புரிந்துகொண்டேன். நாட்டில்தான் புகை, மதுவை முற்றிலுமாகத் தடை செய்ய முடியவில்லை. டாஸ்மாக்கை வைத்துதான் அரசாங்கமே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலாவது மது, புகை, ராகிங் உள்ளிட்டவை இன்றி புனிதப் பாடலாக வெளிவருவதில் எனக்கு சந்தோஷமே.

ஆனால் அடுத்த விஷயம்தான் எனக்குப் புரியவில்லை. இந்த ‘கம்யூனிஸம்’ என்ன பாவம் செய்தது? ‘எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் கம்யூனிஸம்’ என்பது பொதுவாகச் சொல்வதுதானே. அதில் என்ன பிரச்னை? கம்யூனிஸம் என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் உள்ள அரசியல் சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

தோழர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒருவேளை, யாருக்குமே புரியாத வகையில் டைலோமோ, டயோரியா, ங்கொக்கமக்கா, ங்கொய்யால வகையறா வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் கொண்டு பாடல் எழுதப்பட்டிருந்தால் ஆரத்தழுவி வரவேற்றிருப்பார்கள்போல.

பின்குறிப்பு :

1. இப்படியெல்லாம் சென்சார் கட் கிடைத்தால் அதை வைத்து ஏதோ சர்ச்சை கிளப்புவதும், படத்துக்கான பப்ளிசிட்டி தேடுவதும் சினிமாக்காரர்களின் இயல்பு. ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் விஷயத்தை என்னிடம் எளிமையாக எடுத்துச் சொன்ன நண்பர் கணேஷுக்கு என் நன்றிகள்.

2. திவாகர் என்ற நண்பரும் இந்தப் படம் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். அவர் எழுதிய ‘காதில் மட்டும் இன்பமா’ – ஏற்கெனவே பலரது காதுகளிலும் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்துவிட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

 

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

லொள்ளு விருதுகள் 2011

 

mounaguru

 

mayakam enna
 

pulivesham
 

aaranyakandam
 
AZKuthirai
 
paranormal activity
 
mankatha
 
DTM
 
nadunisinai
 
sattapadi
 
vaagaiSva
 
KungFu Panda
 
vanthan vendran
 
MI4
 
kullanarik
 
the hangover
 
singampuli
 
tintin
 
osthe
 
yudham sei
 

சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் பல சமயங்களில் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு வாழும் பொதுமக்களுக்கான விருது:

porali

தலைநகரம் ‘100′

ஒரு சதுர மைல் என்றால் 640 ஏக்கர். இருபத்தெட்டு சதுர மைல் என்றால்? பெருக்கினால் கால்குலேட்டர் காட்டும் எண் 17920 ஏக்கர். 1911ல் டெல்லியில் நடக்கவிருந்த தர்பாருக்காக அவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்பட்டது.

எதற்காக என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, தர்பார் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

தர்பார் என்பது பெர்சிய மொழிச்சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் அரசர் தலைமையில் கூடுவார்கள். பொதுவாக அரசரைப் புகழ்ச்சியால் சொறிந்து விடுவார்கள். விருந்தினரைச் சந்திப்பார்கள். ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் என்றால் கேளிக்கையாகக் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். அவ்வப்போது மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது நிறைவேற்றப்படுவதும் உண்டு.

பிரிட்டிஷார், தங்களை இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, இந்த தர்பார் கலாசாரத்தைத் தாங்களும் பின்பற்ற நினைத்தார்கள். மகிழ்ச்சியான விஷயங்களைக் கொண்டாடுவதற்கு மட்டும் இந்தியாவில் தர்பாரைக் கூட்டலாம் என்று முடிவெடுத்தார்கள். 1877, ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. இந்தியாவின் பேரரசியாக குயின் விக்டோரியா அறிவிக்கப்பட்டார். தர்பாரில் பல மகாராஜாக்களும், சில ராஜாக்களும் கலந்து கொண்டு அந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள்.

1903ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங்காக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் கர்ஸன்.

ஆனால், கிங் ஏழாம் எட்வர்டும் தர்பாருக்கு வராமல் அல்வா கொடுக்க, கர்ஸன் நொந்து போனார். எட்வர்ட்டுக்குப் பதிலாக அவரது சகோதரர் இளவரசர் ஆர்தர் வந்தார். தர்பார் ஒப்புக்கு நடந்தது.

1911ல் அடுத்த தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும், குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவிக்க வேண்டுமல்லவா. எவ்வளவு கொண்டாட்டமான விஷயம் அது. யாரங்கே, டெல்லியில் அடுத்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் தர்பாரைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

அணிவகுப்பு மரியாதை

அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக ஹார்டிங் (ஏச்ணூஞீடிணஞ்ஞு) இருந்தார். கிங்கின் இந்தியப் பிரதிநிதியாக பொறுப்பில் இருந்த அவர், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்து தன் ‘ராஜ விசுவாசத்தை’ அரங்கேற்ற நினைத்தார். 1911, டிசம்பரில் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தன.

டெல்லியின் வடக்குப் பகுதியில் மாபெரும் நிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலிலேயே பார்த்தோமே, 17920 ஏக்கர். அப்போதுதான் அங்கு மக்காச்சோள அறுவடை முடிந்திருந்தது. அந்த விளைநிலத்தைச் சமப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாயின. எங்கெங்கு என்னென்ன எப்படியெப்படி அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வரைபடமும் தயாரானது.

தேவையான இடங்களில் தற்காலிகப் பாதைகள் அமைக்கப்பட்டன. நாற்பது மைல்களுக்கு தார்ச்சாலை போடப்பட்டது. அடுத்ததாக இருப்புப் பாதைகள் முளைக்க ஆரம்பித்தன. பதினாறு குட்டி ரயில் நிலையங்கள் தோன்றின. தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு ரயில்கள் வர ஆரம்பித்தன.

கிங் ஜார்ஜ் தங்குவதற்காகவும், பதவியேற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப்பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் 233 இடங்களில் தனித்தனியே முகாம்கள் அமைப்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தான மகாராஜாக்களும் ராஜாக்களும் குட்டி ராஜாக்களும் தங்குவதற்காக அந்த முகாம்கள்.

அதிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற இருபத்தொரு குண்டு மரியாதை கொண்ட பெரிய சமஸ்தான மகாராஜாக்களுக்குரிய முகாம்கள் என்பது சற்றே பெரியதாக, கிங் முகாமுக்கு அருகிலேயே இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல தரம் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கூலியாள்கள், கூடாரங்கள் அமைப்பதற்காக வெட்டவெளி மொட்டை வெயிலில் உழைத்தார்கள்.

ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்குரிய முகாமில் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ‘ஆளுயரக் கண்ணாடியால் கூடாரம் நிறைந்திருக்க வேண்டுமா? அமைச்சுக்கோ. கூடாரத்துக்குள்ளேயே ரோல்ஸ்-ராய்ஸ் வந்து செல்ல வேண்டுமா? ஓட்டிக்கோ. தங்கத்தாலான டாய்லெட்டில் இரண்டுக்குச் சென்று பழக்கமா? போய்க்கோ.’ இவைதவிர மகாராஜாக்கள், தங்கள் சொந்த உபயோகத்திற்காக குதிரைகள், யானைகள், கார்கள் எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் மின் கம்பங்கள். அதுபோக முகாமுக்கு முகாம் தனித்தனியே விளக்குகள், அலங்கார விளக்குகள். தர்பார் நடக்கவிருந்த காலம் குளிர்காலம் என்பதால் கிங்கின் கூடாரத்தில் மட்டும் மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் குளிர்காய, மார்பிள்களாலான கணப்பு அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை தண்ணீர் வசதி. பைப்பைத் திறந்தால், ஷவரைத் திறந்தால் தண்ணீர் சொய்ங்!

பதவியேற்பு விழாவுக்கான மேடை தனியாக பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓர் உயரமான மண்டபம். அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற டூம். மண்டபத்தைச் சுற்றி ஷாமியானா. பல்வேறு அலங்காரங்கள். அந்த நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்தன.

நவம்பரின் இறுதி வாரத்தில் இந்தியாவே டெல்லியை நோக்கி நகருவது போலொரு உணர்வு. எல்லா சமஸ்தானங்களிலிருந்தும் மகாராஜாக்களும் ராஜாக்களும் மற்றவர்களும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். மாடு, குதிரை, யானை வண்டிகள் முதல் மோட்டார் வண்டிகள் வரை சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதியில் டெல்லி சிவந்தது.

கிங்கும் குயினும் படு அமர்க்களமான வரவேற்புடன் இந்தியாவுக்கு வந்திறங்கினார்கள். பம்பாய்க்கும், அப்போதைய தலைநகரமான கல்கத்தாவுக்கெல்லாம் சென்றுவிட்டு, டிசம்பர் 7 அன்று பதவியேற்பு முகாமுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வைஸ்ராய் ஹார்டிங்கின் ஏற்பாடுகளைக் கண்டு மனம் குளிர்ந்தார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் பூமியும் குளிர்ந்தது. பருவம் தப்பி வந்த மழை. மிஸ்டர். வருணன் வந்து விளையாட்டிவிட்டுப் போனார். பல மாதங்கள் பாடுபட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். குறிப்பாக போட்டு வைத்திருந்த இருப்புப்பாதையில் பாதி காணாமல் போயிருந்தது. பல கூடாரங்கள் பிய்ந்து தொங்கின. விழா மேடை அலங்காரங்கள் உள்பட அனைத்தும் சர்வ நாசம். விழா நடப்பது சந்தேகம்தான், கிங் கிளம்பிவிடுவார் என்று பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

வைஸ்ராய் ஹார்டிங், தவிதவித்துப் போனார். விழாவுக்கு மூன்றே நாள்கள்தான் பாக்கியிருந்தன. ஆயிரக்கான கூலி ஆள்களையும், ராணுவ வீரர்களையும் முடுக்கி விட்டார். ‘எல்லாத்தையும் சரி பண்ணுங்க. ஒரு சொட்டுத் தண்ணிகூட உள்ள தேங்கி இருக்கக்கூடாது. எல்லாம் மழைக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அதேமாதிரி ஆகிடணும். கமான் குவிக்.’ கிட்டத்தட்ட மிரட்டத்தான் செய்தார். டிசம்பர் 12ல் தர்பார். அதற்கு முந்தைய நாளே எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. வருணன் ரீ-என்ட்ரி கொடுத்துவிடுவாரோ என்று பயந்து ஹார்டிங் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். வானம் பொய்த்துவிட்டது.

இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Coவினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. 6100 சிறிய வைரக்கற்களோடு, மரகதம், ரத்தினம், நீலக் கற்களும் பதிக்கப்பட்ட அந்தக் கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், Imperial Crown of India. டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. 1911 டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார்*. குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

(* அந்தக் கீரிடத்தின் எடை அதிகமாக இருந்தது. ‘தலை வலிக்குதுப்பா’ என்று எரிச்சலடைந்தார் ஜார்ஜ். தர்பார் நிகழ்வுகளுக்குப் பின் ஜார்ஜ், மீண்டும் அந்தக் கீரிடத்தை அணியவில்லை. அவருக்குப் பின்னும் யாரும் அதை அணியவில்லை. Imperial Crown of India – இப்போது லண்டன் டவரில் ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.)

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிற பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் ஒன்று காத்திருந்தது. கூண்டுள்ள வண்டி அது. ஜார்ஜும் மேரியும் ஏறி அமர்ந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க, தர்பார் மண்டபத்தை நோக்கி சாரட் நகர்ந்தது.

மகாராஜாக்கள், ராஜாக்கள், குட்டி ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ‘தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட’ இருக்கைகளில் கிங்குக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின் முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். அந்த மைதானத்தில் பல சமஸ்தானங்களைச் சேர்ந்த வீரர்கள் வியர்வை வழிய வழிய வரிசை கட்டி நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ‘வரவழைக்கப்பட்டிருந்தார்கள்’. எனவே கூட்டம் ஓஹோ!

சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் வந்து நின்றது. அந்த மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட கிங்கும் குயினும் இறங்கி மண்டபத்திலுள்ள சிம்மாசனங்களை நோக்கி நடந்தார்கள். சிறுவர்களும் வால்போல. கிங்குக்குரிய மரியாதை பதவியேற்பு மரியாதையாக நூற்றியொரு முறை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King – வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே ஆரம்பமானது.

அடுத்த நிகழ்ச்சி என்ன? ஒவ்வொரு மகாராஜாவாக தர்பார் மண்டபத்துக்கு வந்து கிங்குக்கும் குயினுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அதாவது சிரம் தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டும் என்று முன்பாகவே வைஸ்ராய் ஹார்டிங்கிடமிருந்து எல்லா மகாராஜாக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் இருபத்தியொரு குண்டு மரியாதை கொண்ட ஹைதராபாத், பரோடா, குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்களும் மாபெரும் சமஸ்தானத்தின் மகாராஜாக்கள்தான். கிங் போலவே எங்களுக்கும் மரியாதை அதிகம்தான். நாங்கள் ஏன் கிங்குக்கு குனிந்து வணக்கம் வைக்க வேண்டும்? பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவுக்கு மட்டுமே இப்படி கேட்கும் தைரியம் இருந்தது. ஆனால் நேரடியாகக் கேட்காமல் நாகரிகமாக ஒரு கடிதம் எழுதி வைஸ்ராய்க்கு அனுப்பினார். ‘ஒரு வேண்டுகோள். எல்லா மகாராஜாக்களும் மரியாதை செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, சிறிய சமஸ்தான மகாராஜாக்கள் மட்டும் கிங்குக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் மாற்றம் செய்யலாமே.’

பரோடா மகாராஜா

ஆனால் சாயாஜி ராவின் அந்த வேண்டுகோள் கண்டுகொள்ளப்படவில்லை. தர்பாருக்கு வந்த மகாராஜாக்களுக்கு ‘கிங்குக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும்’ என்று வகுப்பு எடுக்கப்பட்டது. ஒத்திகை செய்தும் காண்பிக்கப்பட்டது. அதாவது கிங்குக்கு முன் சென்று நின்று மூன்று முறை குனிந்து வணக்கம் வைக்க வேண்டும். கையோடு எடுத்து சென்றிருக்கும் பரிசுப் பொருள்களைக் கொடுத்து கௌரவிக்க வேண்டும். பின்பு முதுகைக் காட்டாமல் அப்படியே ரிவர்ஸ் கியரில் கொஞ்ச தூரத்துக்கு கீழே விழாமல் வந்தபின்பே திரும்பிச் செல்ல வேண்டும். சாயாஜி ராவின் கவனத்துக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் வரவில்லை. அவருக்கு ஒத்திகை பற்றியும் எதுவும் தெரியாது.

தர்பாரில் மரியாதை செய்யும் படலம் ஆரம்பமானது. இந்தியாவின் மிகவும் உயரிய, செல்வாக்கு மிகுந்த சமஸ்தானமான ஹைதராபாத்தின் நிஜாமுக்கு முதல் மரியாதை. அதாவது அவர்தான் முதலில் கிங்குக்கு நலுங்கு செய்ய அழைக்கப்பட்டார். அப்போதுதான் ஹைதராபாத்தின் நிஜாமாகப் பதவியேற்றிருந்த கஞ்ச மகாபிரபு ஒஸ்மான் அலிகான், கிங்கை நோக்கி வந்தார். முறைப்படி மூன்று முறை குனிந்து வணக்கம் வைத்தார். அரை மனத்துடன் மரகத நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ரிவர்ஸ் கியரில் கிளம்பினார்.

அடுத்த மரியாதைக்குரியவர் பரோடா மகாராஜாதான். தர்பாருக்காக வந்திருந்த மகாராஜாக்களெல்லாம் உற்சவர் போல ஏகப்பட்ட நகைகளைச் சாத்திக் கொண்டு வந்திருந்தார்கள். படு ஆரம்பரமான உடை வேறு. எல்லோரும் பலவித கற்கள் பதிக்கப்பட்ட உடைவாள் வைத்திருந்தார்கள். ஆனால் மற்றவர்களைவிட சாயாஜி ராவ் மிக எளிமையாக வந்திருந்தார்.

குஜராத் பாணி வெள்ளை நிற பட்டுடை. தலைப்பாகை. சின்னதாக ஒரு வைரப்பதக்கம். கழுத்தில் ஒரு முத்துமாலை. அதைக்கூட திடீரெனத் தன் மகனுக்கு அணிவித்துவிட்டார். அவர் இடையில் உடை வாள் இல்லை. தங்கக் கைப்பிடி உடைய கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு கிங்கை நோக்கிச் சென்றார். தனக்கு முன் சென்ற நிஜாம் எப்படி மரியாதை செய்தார் என்றெல்லாம் சாயாஜி ராவ் கவனிக்கவில்லை.

கிங் முன் சென்று நின்றார். ஒருமுறை குனிந்து வணக்கம் வைத்தார். நகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். பின் முதுகைக் காட்டியபடி திரும்பி வந்துவிட்டார். வைஸ்ராய் ஹார்டிங்குக்குக் காதில் புகை. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சாயாஜி ராவ், கிங்கை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் எதுவும் அறியாதவராக தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார் சாயாஜி ராவ்.

அடுத்ததாக குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்கள் மரியாதை செய்தார்கள். அதற்குப் பின் ரேங்க் வாரியாக. அவ்வளவு ஆடம்பரமான உடைகளுடன், நகைகளுடன் மகாராஜாக்கள் கேட் வாக் சென்றதைப் பார்க்கும்போது பேஷன் ஷோ போலத்தான் இருந்தது. பன்னா என்ற சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா, கிங்கின் அரியணை மேல் சொருகி வைத்துக் கொள்ள 12 இன்ச் விட்டமுள்ள, ரத்தினக் குடை ஒன்றைக் கொடுத்தார். இப்படி விதவிதமான பரிசுகள் குவிந்து கொண்டிருந்தன.

கிங்குக்கு மரியாதை

அடுத்ததாக இந்தூர் மகாராஜா திகோஜி ராவ் கிங்கை நோக்கி புயல் வேகத்தில் கிளம்பினார். தங்க, வெள்ளி பட்டைகளுடன் கூடிய பட்டுடை. உடலெங்கும் ஆபரணங்கள். இடையில் வாள். அதுபோக கையில் தங்கத்தலான, மரகதக் கல் கைப்பிடி கொண்ட கைத்தடி வேறு. அவ்வளவு உபரி எடையையும் சுமந்து கொண்டு, அந்தப் பளபளா தரையில் கால் பதித்த திகோஜி ராவ், தத்தக்கா பித்தக்காவெனத் தடுமாறி விழுந்தார். கைத்தடி ரெண்டு துண்டாகிப் போனது. நான்கைந்து பணியாளர்கள் வந்து அவரைத் தூக்கிவிடும்படி ஆகிவிட்டது. அதற்குப் பின் திகோஜி, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, வெகு ஜாக்கிரதையாக நடந்து சென்று கிங்குக்கு கும்பிடு போட்டார்.

இப்படி ஒவ்வொருத்தராக வந்து குனிந்து நிமிர்ந்து சென்று கொண்டே இருக்க, நீண்ட நேரத்துக்கு அசுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது தர்பார். சில சின்ன ராஜாக்கள், கிங்குக்கு கும்புடு போட ஆர்வம் காட்டினார்கள். ஆனால் தகுதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தியாவின் அப்போதைய தலைநகரம் கல்கத்தா. அது இந்தியாவின் கிழக்கு மூலையில் இருந்தது. எனவே இந்தியாவின் மையத்திலுள்ள டெல்லியைத் தலைநகரமாக வைத்துக் கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்திருந்தது. அந்த தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் அந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

‘இனி இந்தியாவின் தலைநகரமாக டெல்லி செயல்படும்.’

இன்றோடு நூறாண்டுகள் கழிந்துவிட்டன.

லோடியின் கையாலாகாத்தனம்!

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இதற்கு முன்பு இத்தனை போலீஸை நான் பார்த்ததில்லை. ‘பயணிகள் தவிர யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது’ என்ற அறிவிப்பு இரு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலித்துக் கொண்டிருந்தது. யாருக்கும் பிளாட்பார டிக்கெட் வழங்கப்படவில்லை. பயணிகளின் மெகா பெட்டிகள் முதற்கொண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் வரை, ‘ மெட்டல் நாய்கள்’ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தன.

வயதான பெண்மணி ஒருவர், இரண்டு கனமான பெட்டிகளை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தார். ரயிலேற்றி விட வந்த பெண்மணியின் டிரைவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போர்ட்டர்களும் கண்களில் தென்படவில்லை.

‘எங்க தாத்தாவுக்கு பெட்டி நம்பரு, சீட் நம்பெரல்லாம் சரியா பாத்து ஏறத் தெரியாதுங்க … ஏத்தி விட்டுட்டு உடனே வந்துடுறேன்’ என ஒரு பேரன் போலீஸிடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

என் முதுகில் ஒரு பை; கைகளில் இரண்டு. முதல் பை சோதனையிடப்பட்டது. பீப் பீப் பீப்….

‘என்ன இருக்கு உள்ள?’ – மீசைக்கார போலீஸ் முறைத்தபடி கேட்டார்.

‘ஹேண்டி கேமரா…’

அடுத்தது முதுகுப்பை. மீண்டும் பீப் பீப் பீப்….

‘இதுல என்ன?’

‘லேப்-டாப் இருக்கு.’

மீண்டும் முறைப்பு. மூன்றாவது பை. பிரித்து மேய்ந்தார்.

‘இது என்னப்பா ஒரே வயரா இருக்குது?’

‘லேப்-டாப் சார்ஜர். அது கேமரா சார்ஜர்…’

‘ஏம்ப்பா ஒரே வயரா கொண்டு வந்து தாலியறுக்கிறீங்க… ரெண்டு நாளைக்கு யாரும் வயர் கியர்லாம் கொண்டு வராதீங்க. ரோதனையா இருக்குது. எடுத்துட்டுப் போங்க…’

என் மூன்று பைகளும் அள்ளிக் கொண்டு பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தேன். எனக்கான பெட்டி கட்டக்கடைசியில் இருந்ததால் நன்கு பழகிய முத்துநகர் எக்ஸ்பிரஸே முதன் முதலாக மிக பிரமாண்டமாகத் தெரிந்தது. எனக்கான  பெட்டியில் ஏறினேன். உள்ளே, பயணிகளின் எண்ணிக்கையைவிட போலீஸாரின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தது. ரயில் கிளம்பியது. பொதுவாக மதுரையில்தான் பெட்டிகள் பயணிகளால் பூரணத்துவம் அடையும். அதுவரை பல இருக்கைகள் காலியாகத்தான் கிடக்கும்.

‘…வானத்து இந்திரரே  வாருங்கள் வாருங்கள்… பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்…’  – நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகிலிருந்து பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு போலீஸ்கார இளைஞரின்  மொபைல் அது. கால் மேல் போட்டு படுத்தபடி ஏகாந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். நரை மீசை போலீஸ் ஒருவர் கையில் சாப்பாட்டு பார்சலுடன் அங்கே வந்தார். ‘..இப்பவே தின்னுருவோம். சாத்தூர் தாண்டியாச்சுனா கூட்டம் குமிய ஆரம்பிச்சுரும்.’

பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். ஒவ்வொருத்தர் பெயராக வாசித்து ‘அட்டெண்டெஸ்’ எடுத்தார். ‘உள்ளேன் ஐயா’ உச்சரித்தோம். எல்லோரிடமும் அடையாள அட்டை கேட்டு நிதானமாகப் பரிசோதனை செய்தார். ‘ஒரிஜினலா?’ என்ற துணைக் கேள்வியையும் கேட்கத் தவறவில்லை.  கொஞ்ச நேரத்தில்இன்னொரு அதிகாரி வந்தார். அவரும்  அடையாள அட்டையைப் பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் முறுக்கு மீசை ரயில்வே போலீஸ் ஒருவர் வந்து சம்பந்தமில்லாமல் அடையாள அட்டை கேட்டார். ஒரு கயிறு கிடைத்திருந்தால் எனது PAN அட்டையை கழுத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பேன் (என் கழுத்தில்தான்).

சில பெட்டிகள் கடந்து சென்று இன்னொரு நண்பனைப் பார்த்துவிட்டு வந்தேன். எந்தப் பெட்டியிலுமே இஸ்லாமியர்கள் யாரும் தென்படவில்லை. ஒரு பெட்டியின் வாசலுக்கருகில் வட இந்திய இளைஞன் ஒருவனிடம் பரிசோதகர் கத்திக் கொண்டிருந்தார். ‘யுவர் டிக்கெட் ஈஸ் இன்வேலிட். இட் ஈஸ் ஈடிக்கெட். அண்ட் இட் ஈஸ் இன் வெயிட்டிங் லிஸ்ட் தேர்ட்டி ஃபைவ்…’

அந்த இளைஞன் என்னென்னமோ சொல்லிப் பார்த்தான். இன்னொரு போலீஸ்காரர் அங்கே வந்தார். பரிசோதகரிடம் இருந்து டிக்கெட்டை வாங்கி, இளைஞன் கையில் திணித்தார்.

‘நோ மோர் ஸ்பீச்… கெட் டவுன் கம்மிங்  ஸ்டேஷன்…’

இளைஞன் வாயடைத்துப் போனது அவரது மிரட்டலினாலா அல்லது ஆங்கிலத்தாலா என்பது எனக்குப் புரியவில்லை.

சாப்பிட்டு முடித்தேன். விருதுநகரில் நின்ற ரயில் புறப்பட்டது. ஓர் அம்மணி என் இருக்கைக்கு அருகிலுள்ள சைட் லோயரில் வந்து அமர்ந்தார். பரிசோதகர் வந்தார். அம்மணி டிக்கெட்டையும் தனது அடையாள அட்டையையும் அவசரமாக நீட்டினார்.

‘குணசீலன் யாரு?’

‘என் வீட்டுக்காரரு. அவரு வரலை.’

‘இது தட்கல் டிக்கெட். அவரு ஐடிதான் ரிசர்வ் பண்றப்ப கொடுத்திருக்காரு. அவரு வரலேன்னா இந்த டிக்கெட் செல்லாது.’

‘அவரால வர முடியல. நான் வந்திருக்கேன். என்கிட்ட ஐடி கார்ட் இருக்குது.’

‘என்னமா நீ புரியாம பேசற? அவருல்ல வரணும்’ – பரிசோதகரின் குரல் உயர்ந்தது.

‘அவரால வர முடியலீங்க. அதான் நான் வந்திருக்கேன்ல. டிக்கெட்ல எம்பேரு இருக்குல ‘ – அம்மணியின் குரலும் அதிர்ந்தது.

‘ரூல்ஸ்லாம் மாத்தியாச்சு. அவரு வந்தாத்தான் டிக்கெட்டு செல்லும்’

‘அதென்னங்க அநியாயம்? ஒருத்தர் வரமுடியேலேன்னா அதுக்கான காசையும் பிடுங்கிக்கீறீங்க. மத்தவங்களும் அந்த டிக்கெட்ல போவ முடியாதுன்னா என்ன அர்த்தம்?’

‘ரூல்ஸ் ரூல்ஸ்தான். நான் ஒண்ணும் பண்ண முடியாது’

வாக்குவாதம் தொடர்ந்தது.

*

சமீபத்தில் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில பொன்னான, அருமையான, மெச்சத்தகுந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* பயணத்துக்கு முந்தைய தினத்தில்தான் பதிவு செய்ய முடியும். (அன்றைக்கு ரயில் கிடைக்கவேண்டுமென்றால் நாம் பூர்வஜென்மத்தில் சில டன்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு உச்சநடிகரின் மருமகன்போல அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம்  ஏழுமலையானுக்கு ஒரு மொட்டையாவது வேண்டிக் கொள்ள வேண்டும். தட்கலில்  டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் நாம் மீட்டர் வட்டிக்குக் கடன்வாங்கிக் கொண்டோ அல்லது சொந்த வீட்டை அடமானம் வைத்துவிட்டோ பேருந்து நிலையத்துக்கு ஓட வேண்டியதுதான். டிக்கெட் வாங்க வக்கிருக்க  வேண்டுமல்லவா!)

* தட்கலில் ஒரு டிக்கெட்டில் அதிகபட்சம் நான்கு பயணிகள் பயணம் செய்ய முடியும். (ஐந்தோ, ஆறோ நபர்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் ஐந்தாவது ஆறாவது நபரைக் கழட்டி விடுங்கள்; முடிந்தால் கொன்று விடுங்கள். அந்த ஐந்தாவது நபருக்கு தனி டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஆணவமே உங்களை அழித்துவிடும்.)

* தட்கல் டிக்கெட் எடுக்கும்போது எந்தப் பயணியின் அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பித்திருக்கிறோமோ அந்நபர் நிச்சயம் பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணி வராதபட்சத்தில் அந்த டிக்கெட் செல்லாது. பிற பயணிகளும் அந்த டிக்கெட் மூலம் பயணம் செய்ய முடியாது. (ஆகவே முன்பதிவில் அடையாள அட்டை சமர்ப்பித்துள்ள பிரகஸ்பதி, ரயில் ஏறுவதற்கு முன் கோமாவில் விழுந்தாலோ, லாரியில் அடிபட்டுச் செத்தாலோகூட பிரச்னையில்லை. அடையாள அட்டையுடன் சேர்த்து அந்நபரையும் தூக்கிக் கொண்டு போய்விடுங்கள். அந்தப் பிரகஸ்பதி ரயில் ஏறுவதற்கு முன் காணாமல் போய்விட்டால்கூட எப்படியோ தேடிப் பிடித்து இழுத்துவந்துவிடுங்கள். இல்லையேல் உங்கள் டிக்கெட் செல்லாது. நீங்கள் அந்த ரயிலில் பயணம் செய்ய அருகதை அற்றவர். தேசத் துரோகி!)

*

வாக்குவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

பரிசோதகர், சில நூறு ரூபாய் அபராதம் எழுதி, ரசீது நீட்டி, அம்மணியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தார். அம்மணி என்பதால் இந்தக் கரிசனம். ஒருவேளை வேறு ஆணாக இருந்திருந்தால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம்.

ரயில் மதுரையை அடைந்தது. பத்து நிமிடங்களாவது நிற்கும் என்பதால் பிளாட்பாரத்தில் இறங்கி நின்றேன். பக்கத்து பெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் போலீஸாரும் ரயில்வே ஊழியர்களும் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

‘எவனோ ஒருத்தன் டாய்லெட்குள்ள போய்ட்டு ரொம்ப நேரம் வெளிய வரலியாம்.’ ஒரு பயணி சொன்னார்.

‘வர்றப்பவே என்னத்தையாவது இழுத்துக்கிட்டு வாங்க… இருக்கற பிரஷர் போதாதுன்னு இது வேறயா!’ – ஒரு போலீஸ்காரர் அங்கலாய்த்தார்.

‘ரயிலைக் கிளப்பிற வேணாம். சொன்னதுக்கு அப்புறம் கெளப்புனா போதும்’ – ஒரு போலீஸ்காரர் சொல்ல,  ஊழியர் ஒருவர் ஓடினார்.

அந்த டாய்லெட்டின் கதவு தட்டு தட்டென்று தட்டப்பட்டது. திறக்கப்படவில்லை. நல்லவேளை, இடைப்பட்ட நேரத்தில் ‘ரயிலில் தீவிரவாதி பதுங்கல்’ என்ற ப்ளாஷ்நியூஸ் எந்த சேனலிலும் ஓடியிருக்காது என்று நம்புகிறேன்.

பெட்டிக்கு வெளியே இருந்த சன்னல் வழியாக, உள்ளே இருக்கும் நபரை நோட்டம் விட்டார்கள்.

‘ஏ.. போதைல கெடக்குறாம்பா… எழவு…’

‘ஒரு பெரிய கொம்பா எடுத்துட்டு வாப்பா’

‘இரும்புத் தடி ஏதாவது இருக்குமா?’

‘கதவை ரெண்டு தட்டு தட்டி, நெம்பித் தெறங்கப்பா..’

சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. போதை ஆசாமியை இழுத்துக் கொண்டு வந்து வெளியே தள்ளினார்கள். ரயில் கிளம்புவதற்கான ஹார்ன் ஒலித்தது. ஏறினேன். போலீஸார் அவனது போதையைத் தெளிவிக்க மண்டகப்படியை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கு மேலும் கண் விழித்திருந்தால் உலகம் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் என்பதால் எனக்கான அப்பர்-பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. மணி பன்னிரண்டைத் தொட்டது. என் கைக்கடிகாரத்தில் தேதி மாறியது. டிசம்பர் 6.

சிறிது நேரத்தில் என்னையறியாமலேயே தூங்கிப் போனேன்.

திடீரென ஓர் உருவம் என் கண் முன் தோன்றியது. அந்நபரை எங்கேயோ, ஏதோ ஓவியத்தில் பார்த்தது போல இருந்தது. யாரென்று பிடிபடவில்லை. என் முன் வந்த அவர், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். ‘யார் நீங்கள்?’ – கேட்டேன்.

‘என்னைத்தான் உனக்குத் தெரியுமே. உனது முகலாயர்கள் புத்தகத்தில்கூட எழுதியிருக்கிறாயே. டெல்லியின் கடைசி சுல்தான்…’

‘இப்ராஹிம் லோடியா நீங்கள்?’

‘ம்…

‘ஏன் அழுகிறீர்கள்?’

‘என்னை மன்னித்து விடு. நான் மட்டும் அன்றைக்கு பானிபட் போரில் தோற்றுப் போகாமல் இருந்திருந்தால், பாபர் உள்ளே வந்து கோலோச்சியிருக்க முடியாது. இந்தியாவில் முகலாயப் பேரரசே அமைந்திருக்காது. மசூதியும் கட்டியிருக்க மாட்டார்கள். டிசம்பர் ஆறுக்காக பலரும் அவதிப்படும் நிலை உருவாகியிருக்காது.’

லோடியின் அழுகை நிற்கவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் சென்றேன்…

தாம்பரம் வந்துவிட்டதென நண்பன் எழுப்பினான்.