கருணாநிதியிடம் ஒரு கேள்வி; கலைஞரிடம் ஒரு கேள்வி.

என்றோ வாழ்ந்துவிட்டுப் போன அரசர்களின் ஆட்சி, அரசியல் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் நேற்று வாழ்ந்துவிட்டுப்போன, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அரசியலில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய நிறையறிவு எனக்குக் கிடையாது. தெரிந்துகொள்ள பேராசை உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்காகக் (இரண்டு பாகங்கள்) காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க முக்கிய தலைவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன.

பெரியாரிடம் ஒரு கேள்வி

ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகக் குரல் கொடுத்ததில் தங்களுடைய முன்னோர் என்றால் அது அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய வழிமுறைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் முன்வைத்த தமிழ் பௌத்தத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

அண்ணாவிடம் ஒரு கேள்வி

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – இது தாங்கள் சொன்னதுதான். கடவுளே கிடையாது என்ற பாரம்பரியத்தில் இருந்துவந்த நீங்கள், இதுபோல விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலைகள் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா? கொண்ட லட்சியங்களை நிறைவேற்ற கட்சி அரசியல் துணை போகாது என்று உணர்ந்த தருணம் உண்டா?

கருணாநிதியிடம் ஒரு கேள்வி

எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆரைக் காட்டிலும் அதிகம் புரிந்தவர்கள் நீங்கள். அப்படியிருக்கும்போது யாரை நம்பி (அல்லது எதனால்) எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து விலக்க முடிவுசெய்தீர்கள்? தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக என்றேனும் நினைத்திருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி

கடவுளுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்ட திராவிட இயக்கத்துக்குள் இருந்துகொண்டே, மூகாம்பிகையையும் சங்காராச்சாரியையும் தொழுது, ஆட்சியிலும் நீடித்தது உங்களுடைய பலமா? திராவிட இயக்க ஆதரவாளர்களின் பலவீனமா?

வைகோவிடம் ஒரு கேள்வி

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி தாங்கள்தான் என்று காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்றவை எல்லாம் மார்தட்டிக் கொள்ளும்போது, கட்டமைப்பு ரீதியாக மாநிலம் முழுக்க மதிமுகவைப் பரப்பியிருக்கும் நீங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

கலைஞரிடம் ஒரு கேள்வி

டெல்லியில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் சாதுரியம், பேச்சுத்திறன், ஆங்கிலப்புலமை என்ற மூன்று விஷயங்களும் அத்தியாவசியம். ஈ.வெ.கி. சம்பத், முரசொலி மாறன், வைகோ போன்றவர்கள்தான் திமுகவின் டெல்லி முகங்கள். இருவர் மறைந்துவிட்டார்கள். வைகோ விலகிவிட்டார். இவர்களைப் போல திறமைவாயந்த வேறு எவரும் திமுகவில் இன்று இல்லை அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. ஆக, திமுகவின் டெல்லி அரசியல் இனி எடுபடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தலைவர்களிடம் இருந்து என் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. ஆர். முத்துக்குமாரின் புத்தகங்கள், இதற்குரிய விடைகளைக் கொடுக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க வரலாறு முதல் பாகம் (ரூ. 200), இரண்டாம் பாகம் (ரூ. 200)