நீங்க டைரக்டரா?

என்னைச் சந்திக்க வரும் சினிமா நண்பர்களுக்கு எங்கள் அபார்ட்மெண்ட் பூங்கா பிடித்தமான ஓரிடம். ஒருமுறை அங்கே அமர்ந்து பேசும் நண்பர்கள், மறுமுறை வரும்போதும் பூங்காவில் பேசுவதைத்தான் விரும்புவார்கள். நிறைய மரங்கள். சறுக்கு, ஊஞ்சல், சீஸா உள்ளிட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள். நடைபாதை. உட்கார்ந்து பேச சிமெண்ட் பெஞ்சுகள். சாலையை ஒட்டி அமைந்திருந்தாலும் பேசுவதற்கு ஏற்ற அமைதியும் நிழலும் எப்போதும் நிலவும்.

பொதுவாக இயக்குநர்களுடன், உதவி இயக்குநர்களுடன் பூங்காவில் பேசுவது வழக்கம். எனவே அங்கே விளையாடும் குழந்தைகள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இரு தினங்களுக்கு முன்பு நண்பரும், சினிமா நடிகருமான ஒருவருடன் பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகள் சைக்கிளில் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டுக் கொண்டார்கள். இன்று ஓர் அவசர வேலையாக பூங்காவைக் கடக்கும்போது அந்தக் குழந்தைகள் கண்கள் நிறைய கேள்விகளுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அந்த உரையாடல்…

‘அங்கிள் அன்னிக்கு நீங்க பார்க்ல யார்கூட பேசிக்கிட்டிருந்தீங்க?’

‘ம்… அவர் ஒரு நடிகர்.’

‘ஓ… நான் அவரை சினிமால பார்த்திருக்கேன்.’

‘அவர் உங்க ஃப்ரெண்டா?’

‘ஆமா.’

‘உங்களுக்கு சினிமால நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டா?’

‘கொஞ்ச பேரு.’

‘சூர்யா உங்க ஃப்ரெண்டா?’

‘ம்ஹூம்.’

‘கார்த்தி?’

‘எனக்கு சிவகுமாரைத்தான் தெரியும்.’

‘வேற யாரு உங்க ஃப்ரெண்ட்?’

சில நண்பர்களின் பெயரைச் சொன்னேன். குழந்தைகள் எதிர்பார்த்த பெயர்கள் இல்லைபோல. அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவினார்கள்.

‘நீங்க சினிமால இருக்கீங்களா?’

‘ஆமா?’

‘டைரக்டரா?’

‘இல்ல.’

‘புரொடியூசரா?’

‘ம்ஹூம்.’

‘இல்ல.’

‘அப்போ என்னதான் பண்றீங்க?’

‘ரைட்டர்.’

‘எல்லாரையும் இண்டர்வியூ பண்ணுவீங்க. கரெக்டா?’

‘இல்ல. இது வேற.’

‘புரியல. அதை விடுங்க. எப்போ சூர்யாவை ஃப்ரெண்டு பிடிப்பீங்க?’

இதற்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. ‘ஃப்ரெண்ட் ஆன உடனே சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

மேலுள்ள வரியோடு இந்தப் பதிவை முடித்தால், முற்றுப்பெறாததுபோல் தெரியும் என்பதால் கூடுதலாக இந்த வரியையும் சேர்த்துக் கொள்கிறேன் முற்றுப்புள்ளி

பாலா ஒரு யானை!

அவனப் பத்தி நான் பாடப் போறேன் – இவன பத்தி நான் பாடப் போறேன் – அவனும் சரியில்ல இவனுந்தான் சரியில்ல… யாரைத்தான் நான் இப்போ பாடப்போறேன்…

தெரிஞ்சேதான் யுவன், இப்படி ஒரு பாட்டை போட்டுக் குடுத்துருக்காருபோல! அதையும்புரிஞ்சுதான் பாலா, அந்தப் பாட்டை படத்துல உபயோகிக்கவும் இல்ல.

ஹி..ஹி...

படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல ‘டியா டியா டோலே’வென விஷால் குத்தாட்டம் போட ஆரம்பிச்சாரு. அடுத்து ஆர்யா தன் பங்குக்கு காதில் ஹெட்ஃபோனோடு.  அப்புறமா ஆர்யாவும் அவரு அம்மாவும் நாக்கை மடிச்சு ரொம்ப நேரத்துக்கு குத்தாட்டம் போட்டாங்க. ஆட ஆட நமக்குத்தான் மூச்சு வாங்குது. இந்தக் குத்தாட்டங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது (ஓ, இதுதான் கண்டினியூட்டியா!). இதனால் அறியப்படும் நீதியென்னென்னா, விளிம்புநிலை மனிதர்கள் தம் சோகத்தில், சந்தோஷத்தில், பசித்தால், தூக்கம் வந்தால், வயிறு கடமுடாவென்றால், வாந்தி வந்தால்கூட குத்தாட்டம் போடுவார்கள்.

அம்பிகா – பீடி வலிக்குறப்போ தியேட்டரில்  கைதட்டல், ஆர்யா – பூட்டைத் திறக்குறப்போ கைதட்டல், விஷால் – மேடையில நவரச ஆக்டிங் கொடுக்குறப்போ, மரமேறிகிட்டே அழுறப்போ கைதட்டல் – இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட இடங்கள்ல கைதட்டல். நான்கூட டைட்டில் கார்டுல டைரக்‌ஷன் பாலான்னு  போட்டதுல இருந்து, கிளைமாக்ஸ்ல  எ ஃபிலிம் பை பாலான்னு வர்ற வரைக்கும் விடாம கைதட்டிக்கிட்டே இருந்தேன், இண்டர்வெல்லகூட! ஏன்னா இது பாலா படமாச்சே!

படத்துல திடீர்னு சூர்யா நடிச்ச அவரோட வெளம்பரம் ஒண்ணு  பத்து நிமிஷத்துக்கு வந்துச்சு. அது அவரோட அகரம் பவுண்டேஷன் வெளம்பரம். அதுக்கடுத்ததா சரவணா ஸ்டோர்ஸ் வெளம்பரம், நவரத்னா தைல கூல்கூல் வெளம்பரம், ஜோதிகாகூட காப்பி குடிக்கிற வெளம்பரமெல்லாம் தொடர்ந்து வரும்னு நினைச்சு ஏமாந்துட்டேன். அந்த பத்து நிமிஷ அகரம் வெளம்பரம்கூட படத்தோட கதைய எந்த விதத்துலயும் பாதிக்கக்கூடாதுன்னுதான், பாலா படத்துல கதைன்னு ஒண்ணை கமிட் பண்ணிக்கவே இல்ல.

தலைகீழா நின்னு ஆர்யா, நான் கடவுள்ல அவார்டு பெர்பார்மென்ஸ் பண்ணிட்டாரு. ‘மச்சி எனக்கொரு பெர்பார்மன்ஸ் சொல்லேன்’னு விஷாலு அவருகிட்ட கேட்க… அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. இந்தப் படத்துல எதுக்காக விஷால் மாறுகண்ணோட நடிச்சாருன்னு நாமெல்லாம் அதே கண்ணோட்டத்துடன் படம் பார்த்தா ஒருவேளை புரியலாம். அதுல அவரோட உடல்மொழி, குரல்ல எல்லாம் பெண்மைத் தன்மைவேற! பின்நவீனத்துவமா இருக்குமோ? என்ன எழவுக்குன்னு யாமறியோம்; யாமம் அறியலாம்.

அடிமாடைக் கடத்துறாங்க. அதைவைச்சு அடிவயித்தைப் பிசையுற மாதிரி எதாவது சொல்லுவாங்களோன்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் செம ட்விஸ்ட் ஒண்ணு வந்தது. ப்ளூ கிராஸ்காரங்க வந்து மாடுங்களையெல்லாம் அவுத்து உட்டுட்டாங்க. மாடுங்க எல்லாம் பட்டிக்குள்ள இருந்து கூட்டமா வெளியேறுன சமயத்துல, ரசிகர்களும் அதேமாதிரி வெளியேறி இருக்கணும். அஞ்சறிவு ஜீவனுங்களுக்கு இருந்த அறிவு, ஆறறிவு ரசிகர்களுக்கு இல்ல. ஏன்னா இது பாலா படமாச்சே!

விஷாலோட நடிப்பு? அதையெல்லாம் பாராட்டலாம். ஆனா இங்க என்ன ‘தனிநடிப்பு போட்டியா’ நடக்குது. அவரு ஸ்டேஜ் ஏறி ஸோலோவா திறமையைக் காட்டுறதுக்கு. கதையே இல்லாத படத்துல அவரு கதறிக் கதறி நடிச்சாலும் எதுவுமே ஒட்டலியே. ஆர்யா வேற தன் பங்குக்கு பாறைமேல நின்னு பத்து நிமிஷத்துக்கு திறமை காட்டுறாரு. அந்த பெரிய மனுஷன் ஹைனஸும்  (பேரென்ன, ஆங்.. எம்.ஜே. குமாரு!) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு?  ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல்!!! (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க!)

பலகோடி மதிப்புள்ள மரம் உள்ள லாரியை எடுத்துக்கிட்டு விஷால் போனாரே, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க. நான் கடவுள்ல ஆர்யா, வில்லனை புதர் மறைவுல எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுனாரோ, அதையேத்தான் இதுல விஷாலும் பண்ணிருக்காருன்னு புரிஞ்சுக்கணும். ஆர்கே எதுக்கு, ஹைனஸோட ப்ளாஷ்பேக் என்ன, காதலிகளோட தேவை என்ன – இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா பாலா பட கதாநாயகப் பாத்திரம் யாராவது வந்து என் குரல்வளையைக் கடிச்சுத் துப்பிருவாங்களோன்னு பயப்படுறதால…

தியேட்டரை விட்டு வெளியேவரும்போது, என்னோட சக ரசிகர்கள் எல்லாரோட முகத்தையும் பார்த்தேன். வெள்ளைத்துணியால தாடையோட சேர்த்து தலைல ஒரு கட்டு போட்டுருந்துச்சு. நெத்தியில ஒத்த ரூபாயும் தெரிஞ்சுது. நான் என் கட்டை அவுத்துட்டு, என்  நெத்தியில இருந்த ஒத்த ரூபாய எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வீட்டுக்கு நடந்தேன்.

ஒல்லியாகவே இருந்தாலும் பாலா ஒரு  யானை. யானைக்கும்…

(பின்குறிப்பு : இதுவரை பாலாவின் படங்களை நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவையாகத்தான் பார்த்திருக்கிறேன். அவன் இவன் தந்த ஏமாற்றத்தின் விளைவே இந்த விமரிசனம்.)