மன்மத அம்பு

கூடம் முழுக்க ஆண் வாசனை. கமல் வயதை (பதினைந்து) ஒத்தப் பையன்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடிக் கொண் டிருந்தார்கள். ஒன்றரை டஜன் தேறும். டான்ஸ் ரிகர்ஸல். தமிழ்நாட்டில் கமலை யாரும் சட்டை செய்யவில்லை. மஹாராஷ்டிரா வரவேற்றது. அம்மாவின் கை வளையல்களே முதலீடு. மும்பை தவிர மற்ற இடங்களிளெல்லாம் கமலின் நடனக்குழு பறந்து பறந்து ஆடியது – பாங்க்ரா, கதக், மயில் டான்ஸ். மகாராஷ்டிரா காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
‘கமல் புதுசா ஒரு பொண்ணு உன்னைப் பார்க்கணும்னு வந்ததிருக்கா’ – சத்யப்ரியா கமலிடம் கூறினார். (பின்னாளில் கமலுடன் ஜோடியாக‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ படத்தில் நடித்தவர். இப்போது அம்மா நடிகை.)
கமலுக்கு அப்போது மராத்தியோ, இந்தியோ தெரியாது. அந்தப் புதிய பெண்ணை முதன் முதலில் பார்த்தபோது எதுவுமே பேசத் தோன்றவில்லை. சந்தித்த வேளையிலேயே கமல் தனக்குள் காதல் அரும்பிவிட்டதை உணர்ந்தார்.
பெயரைக்கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவளை கிருஷ்ணகுமாரி என்று அழைத்தார்கள். அந்த அழகை வருணிக்க வார்த்தைகளைத் தேடுவதிலேயே கமல் நேரத்தை செலவிட்டார். கமலின் நடனக்குழுவில் ஆட விருப்பம் தெரிவித்து வந்திருந்தாள். அவளை மனதார வரவேற்றார்.
‘என்னடா இவன் கிருஷ்ணகுமாரியோடயே சுத்தறான் எப்பவும். மச்சான், மச்சம்டா உனக்கு. இன்னும் முளைச்சு வெளியில வரல மீசை. அதுக்குள்ள லவ்வு!’ – குழுவினர் கமலைக் கலாய்த்தனர்.
உதிர்வதற்காகவே மலரும் பூபோல கமலோடு ஆடத் தொடங்கிய சில வாரங்களிலேயே அகால மரணம் அடைந்தாள் கிருஷ்ணகுமாரி.
கமலின் காதல் சோகத்தைக் கால்கள் பேசின. தன்னையே மறந்து ஆடத் தொடங்கினார். எம்பி எம்பி குதித்து ஆடியதில் பந்து கிண்ண மூட்டு விலகி மேடைக்கு வெளியே விழுந்தார். உயிரைப் பிழியும் வலி. சிவாலயா நடனக் குழு பாதியிலேயே சென்னைக்குத் திரும்பியது.

*

தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளர் வேலை. கமல் சம்பாதிக்க ஆரம்பித்தார். ஒரு பாடலுக்கு இருநூறு, முன்னூறு என்று கம்பெனிக்கு ஏற்றவாறு கிடைத்தது. குட்டி நடிகனாக கமலைக் கொஞ்சிய கலைஞர்கள் அவரை இப்போது நடன உதவியாளராகவேப் பார்த்தார்கள். கமலும் தன் எல்லையில் எட்டி நின்று அவர்களுக்கு ஆடக் கற்றுத் தந்தார்.

கமலின் மூட் இப்போது திசைமாறி இருந்தது. நிறையவே ரகம் ரகமாகப் பெண்கள் அவரைப் பாதித்தார்கள். திரையுலகில் மிக இயல்பாக அமைகிற சுகம் அது.

‘டெம்ப்டேஷன்ஸ் ரொம்ப ஜாஸ்தி இந்த ஃபீல்டுல. ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்வார் தங்கப்பன் மாஸ்டர். ஏதாவது பெண்ணோட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா ‘டேய் அரட்டை அடிக்காத. வேலையைப் பாரு’ன்னு சொல்வார்.’

*

‘நான் சொல்றதைக் கேளு. ஒரு மந்திரம் கத்துத் தரேன். திரும்பத் திரும்பச் சொல்லு.’
‘அது சான்ஸ் வாங்கித் தருமா?’
கமல் தந்தையிடம் ஆவேசமாகக் கேட்டார். அப்பா அழுத்தம் திருத்தமாக அந்த வாசகத்தைக் கூறினார்.
‘நான் தேய்ந்து அழிவேனேயன்றி துருப்பிடித்து அழிய மாட்டேன். இதைச் சொல்லிண்டே இரு. படம் வரலன்னாலும் பக்குவம் கிடைக்கும். உன் அம்மா கருத்துப்படி எதைச் செய்யறியோ அதைத் திருந்த செய். சிறந்த டான்ஸ் மாஸ்டர்னு பேர் வாங்கு முதல்ல’
‘நான் மைசூர் கிளம்பறேன். நான் அவனில்லை ஷூட்டிங்’.
‘இன்னொரு விஷயம்…’ அப்பா தயங்கினார்.
‘சொல்லுங்க சீக்கிரம்…’
‘பீடி-சிகரெட், பொண்ணு, தண்ணி எதுலயும் ஈடுபட மாட்டேன்னு சத்தியம் செய்.’
‘காந்தி கதையா மறுபடியும்’
‘ஆமாம். வீணா கெட்டுப் போகாதே. இன்னும் ஒழுங்கா நடிக்கவே ஆரம்பிக்கல. உடம்பு முக்கியம்.’
‘நான் ஏன் பிறந்தேன் ஷூட்டிங்லயே எம்.ஜி.ஆர் சொல்லி எக்சர்சைஸ் பண்ணத் தொடங்கினேன். அவர் எனக்கு வாத்தியார் இதுல. நீங்க சொன்னதுல ரெண்டு ஓகே. சிகரெட், தண்ணி ‘கப்பு’ – விட்டுடலாம். மூணாவது முடியும்னு படல. வரட்டுமா.’
‘யூ டோன்ட் நோ’ இது கமலின் பன்ச் டயலாக். ராகத்தோடு பெண்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேனில் பேசினார். போன் நம்பர் கொடுப்பார். அது கமலின் நிஜமான தொலைபேசி எண் என்று மார்கழி இரவுகளில் எட்டரை மணியிலிருந்து ரசிகைகள் மாறி மாறிப் பேசி அழைத்தனர். அது உதயம் புரொடக்ஷன்ஸ் போன் நம்பர். சில விஐபி விசிறிகளுக்கு கமலின் நிஜமான எண் தெரியும். அவர்களும் உரிமையுடன் கமலிடம் உறவாடினார்கள்.

‘ரசிகைகள் எனக்கே புல்லரிக்க கன்னம் சிவக்க போனிலேயே முத்தமிட்டுப் பேசியது ஆசை மொழிகள்.’

*

கமல் பாலசந்தரின் ஆள் என்ற முத்திரை பலமாகக் குத்தப்பட்டது. அவருக்கு வேலை இருந்தாலும் இல்லையென்றாலும் கலாகேந்திராவுக்குப் போய் வந்தார். கமலுக்கு வாய்த்த மற்ற படங்களில் அவர் மேனி அழகை மட்டுமே காட்ட முயற்சித்தனர்.
‘Girls Hero, Sex Symbolனு என்னைச் சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கலை. பொம்பிளை ஜெயமாலினி மாதிரி ஆம்பிளை ஜெயமாலினியா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்களோன்னுகூட நினைச்சேன். இந்த இமேஜ் அட்டை மாதிரி என்னோட ஒட்டிட்டு இருக்கு. இது போய் நான் ஆக்டர்னு பேர் வாங்கணும்.’

*

வாணியுடனான காதலும் நாளொரு நளினமும் பொழுதொடு பொலிவுமாக வளர்ந்தது.
‘முதல் பரிசு Brute Perfume. அதற்குப் பின் ரெகுலரா கொலோன்கள் சட்டைகள் வாங்கி அனுப்புவேன். வெளி நாடுகளுக்குப் போகும் போதும் நிறைய வாங்கி வந்து தந்திருக்கிறேன். Elite of Madras என்று சொல்லக் கூடிய நண்பர்கள் மூலம். ‘அவருக்கு ஒரு பார்சல் தரணும். எனக்காக ப்ளீஸ் எடுத்துண்டு போறீங்களா’ என்பேன்.
கமல், அவர்கள் வீட்டுக்குப் போய் கிஃப்ட் பார்சல்களை வாங்கிக் கொள்வார்.’
சென்னையில் கிடைக்காத சராஹ் சட்டைகள் மும்பையில் மேல்தட்டு மக்களிடையே பிரபலம். அந்த ஷர்ட் வகைகளில் CD என்று போட்டிருக்கும். கமலுக்கென அவற்றை அனுப்பிக் கொண்டே இருந்தார் வாணி. கமலுக்கும் ‘சராஹ்’ பிடித்துவிட்டது. சதா சர்வ காலம் வாணியின் சராஹ் சட்டைகள் கமலைத் தழுவிய படியே வலம் வந்தன. வாணி சென்னைக்கு வரும்போதெல்லாம் மன்னி கலாட்டா செய்தார்.
‘இதோ பார். உன் ஷர்ட் தொங்குது. இதன் பேர் வாணி ஷர்ட். கவச குண்டலம் மாதிரி இதையே அவன் நாலு நாளாப் போட்டுண்டு இருக்கான். அது கிழியற வரைக்கும் விடமாட்டான் போலிருக்கு.’
இடையில் அவள் ஒரு தொடர்கதையின் வங்காள வடிவத்துக்காக கல்கத்தா போனார். இரண்டு நாள்களில் சென்னையில் பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சி. கமல் – ஸ்ரீப்ரியா நடிக்க கே. பாலசந்தர் இயக்கும் நாடகம் ஒன்றும் அதில் இடம் பெறவிருந்தது. அதற்கான ஒத்திகை வேறு.

கல்கத்தாவில் மாலா சின்ஹாவுக்கு கமலை விடவே மனசு வரவில்லை. மிக மூத்த நடிகை. ஆனாலும் சவுகார் ஜானகி போல் இளமையாக வாழ நிறைய முயற்சிகள் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக கமலை Can I kiss you? என்று மாலா சின்ஹா மரியாதை நிமித்தமாகக் கேட்டார்.

மறுக்க மனம் வரவில்லை கமலுக்கு. சரி என்றார். இச் என்ற சத்தத்தோடு அவர் நெற்றியில் மாலாவின் லிப்ஸ்டிக் வளர்பிறையாகி பதிந்தது.

*

‘திருமணம் என்ற பழைய சட்டத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லாதவன் நான். ஒரு பெண்ணின் நட்பும் உறவும் அவசியப்படும்போது மட்டும் கூடுவது நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனமானது. நான் மணக்கப் போகும் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு அகராதியில் நட்பு, காதல் என்ற இரண்டு விளக்கங்களே காணப்பட்டன.
‘நட்புத் திருமணம்’ என்ற வழக்கமில்லாத வார்த்தையைவிட காதல் என்பது பத்திரிகைகாரர்களுக்கு வசதியாக இருந்தது. ஆகவே அந்தப் பழையப் பெயர் பலகையையே நானும் கழுத்தில் கட்டிக் கொண்டு விட்டேன்.
மொத்தத்தில் இது என் சகஜீவிகளையும் என்னையும் சண்டை இல்லாமல் திருப்திப்படுத்தும் ஏற்பாடு. எனக்குப் பிடித்திருக்கிறது.’
கமலின் வாணியுடனான திருமண அறிவிப்பு கட்டுரை அது.

*

சரிகாவைக் கண்டதும் எஸ்.பி.எம். யூனிட்டில் ஆச்சர்யம் காட்டினார்கள். திடீரென்று ஓர் இளம்நடிகையுடன் கமல் செட்டுக்கு வந்திருக்கிறாரே, நமக்கெல்லாம் அவரை அறிமுகப்படுத்துவாரா என்று ஆர்வம் தலை தூக்கியது. எட்டாவது ஃப்ளோர் எதிர்பார்ப்பில் இருக்க கமல் கிண்டல் அடித்தார்.

‘உங்க யாருக்கும் அவங்கள அறிமுகப்படுத்தமாட்டேன். அவங்க எனக்கு மட்டும் ஃப்ரண்டு.’

*

2002ல் கமலின் இரு படங்களிலும் சிம்ரன் கதாநாயகி. பஞ்ச தந்திரத்தில் நகைச்சுவையாக சிம்ரனுக்கு சக்களத்திப் போர். போட்டிப் பாடல், அதைவிட கமல் – சிம்ரன் ரகசியக் காதலை குழந்தைகளும் உணரும் வகையில் ஒரு டூயட்.
‘என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா?
ஊரெங்கும் வதந்திகாற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா?
வளைக்க முயன்றது யாரு
நீயா நானா?
வளைந்து கொடுத்தது யாரு
நீயா நானா?
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது.’
சிம்ரனோடு தொடர்ந்தது தோழமையா அல்லது காதலா என்பதை கமல் மட்டுமே அறிவார். அது இரண்டும் அற்றதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பஞ்சதந்திரம் படத்துக்கு விளம்பர பரபரப்பை ஏற்படுத்தியது.

*

‘ஹலோ நான் டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் பேசறேன். பஞ்ச தந்திரம்னு ஒரு படம் பண்றேன். கமல் சார் நடிக்கிறாரு. சிம்ரன் கதாநாயகி. உங்களுக்கு ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு. நீங்க செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்.’
‘ஸாரி மிஸ்டர் ரவி. கமல் சாரோட ஹீரோயினா நாலு பெமிலியர் மூவில நடிச்சுட்டேன், மறுபடியும் சின்ன வேஷம் பண்ணா சரி வராது. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ. எனிவே என்னை ஞாபகம் வெச்சிருந்து கூப்பிட்டதுக்கு நன்றி.’

ரவிகுமாருக்கு ஏமாற்றமாகிவிட்டது. கவுதமி வீட்டில் மீண்டும் போன் ஒலித்தது. இந்த முறை கமல் லைனில் இருந்தார்.
‘வை டோன்ட் வீ மீட் அகெயின் கவுதமி?’

மந்திரம்போல் ஒலித்தது. கமலின் குரல். சந்தித்தார்கள். இணைந்தார்கள். வழக்கமான காஸ்ட்யூம் டிஸைனர் போஸ்ட், குடும்பத் தலைவி அந்தஸ்து இரண்டும் காலியாகவே
இருந்தது. கவுதமி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கவுதமி, கமலின் பெண்களுக்கும் அம்மா ஆனார். சுப்புலட்சுமி கமலை அப்பா என்று அழைத்தார்.

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. கவுதமியும் கமலுக்காக வழக்கம்போல் மேக்-அப் சாமான்கள் வாங்கினார். கவுதமியுடனான உறவு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கமலுக்கு வழங்கியது.

*

பா. தீனதயாளன் எழுதி சென்ற வருடம் வெளியாகி ஹிட் ஆன கமல் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

படங்கள் நன்றி : எஸ்.வி. ஜெயபாபு.

கமலஹாசனின் குடும்பப் பாடல்!

லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன?

ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை.

அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் பாடும்போது ஏதோ வேண்டுமென்றே குரல் மாற்றி பாடுவதுபோலத் தெரிகிறது. மொத்தத்தில் இந்தப் பாடல் இந்த ஆல்பத்தின் நெம்பர் ஒன் பாடல்.

அல்லா ஜானே ரீமிக்ஸ்… ஷ்ருதிஹாசனின் குரலில். சிக்னலில் ஆரஞ்சிலிருந்து ரெட்டுக்கு மாறுவதற்குமுன் வேகமாக வண்டியில் கடந்துபோவதுபோல உச்சரிப்புகளில் வேகம். ரசிப்புக்குரியதாகப் படவில்லை. ஆல்பத்தில் எண்ணிக்கைக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

நிலை வருமா? – அடுத்த பாடல். பாம்பே ஜெயஸ்ரீ, கமலின் குரல்கள். கேட்கக் கேட்க ஒருவேளை பிடிக்கலாம். நின்றே கொல்லும் தெய்வங்களும் – இன்றே கொல்லும் மதப்பூசல்களும் – ஒன்றே செய்யும் என உணரும் – நன்றே செய்யும் நிலைவருமா? – யாருடைய வரிகள்? ஏதோ ஒரு பிரபல எழுத்தாளர் தான் ஷ்ருதிஹாசனின் இசையமைப்பில் பாடல் எழுதுவதாக குமுதத்தில் மகிழ்ச்சி பிதுங்க பேட்டி கொடுத்ததாக ஞாபகம். அது ‘அல்லா ஜானே’ என்று சக நண்பர்கள் சொல்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – தீம் மியூஸிக். சம்பவானி யுகே யுகே என அடிக்கடி ஒலிக்கிறது. ‘ஐ ஆம் தி நியூ ஃபேஸ் ஆஃப் டெரர்!’ என்று பல குரல்கள் வசனம் பேசுகின்றன. இது இந்து தீவிரவாதத்தைக் குறிக்கும் பாடல் என்று யாராவது களமிறங்கி பாடலுக்கு பாப்புலாரிட்டி கொடுக்காமலிருந்தால் சரி.

வானம் எல்லை – ப்ளாஸேவின் கரடுமுரடு RAP-ல் ஷ்ருதிஹாசனுக்கு அறிமுகம் கொடுத்து ஆரம்பமாகிறது பாடல். ஷ்ருதியின் குரல் ஸ்டைலிஷாக வெளிப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல் பத்தோடு பதினொன்று.

கமலஹாசன் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்கிறார் என்றால் முதலிலேயே அதன் மூலப்படத்தை பார்த்துவிடுவேன். வசூல்ராஜாவின் அறிவிப்பு வந்த உடனேயே முன்னா பாய் பார்த்து விட்டேன். வசூல்ராஜா எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படுத்தாத படம். காரணம் கிரேஸி மோகன். ஆனால் முன்னா பாய் அளவுக்கு வசூல் ராஜாவில் சில காட்சிகளில் அழுத்தம் இல்லை என்பதே என் கருத்து.

உன்னைப் போல் ஒருவனின் மூலப்படமான தி வெட்நெஸ்டே பார்த்துவிட்டேன். அது மிகவும் பிடித்தது. பார்க்கலாம். அது அதுவாகவே வருகிறதா அல்லது கமலின் வாசனையோடு புதிதாக வருகிறதா என்று.

குருதிப்புனல்போல இந்தப் படத்துக்கும் பாடல்கள் தேவையில்லை. ஆல்பத்தில் தீம் மியூஸிக், ரீமிக்ஸ் தவிர மூன்று பாடல்கள் இருக்கின்றன. A Shruthi hassan Musical என்று போடுவதற்காக இருக்கலாம். ரீரெகார்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பாடல்களில் ஷ்ருதிஹாசன் ஈஸியாகப் பாஸ் செய்துவிட்டார். ஆனால் எந்தப் பாடலுமே உருக்கவும் இல்லை, அதே சமயம் உறுத்தவும் இல்லை.