செங்கிஸ்கான் எங்க தாத்தா!

The American Journal of Human Genetics என்ற ஆய்வு இதழ், மார்ச் 2003ல்  ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஐரோப்பியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 2000 பேரிடம் மரபணு சோதனை  நடத்தினார்கள். கிடைத்த முடிவு இது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல ஆண்களுக்கு கிட்டத்தட்ட ஒரே  மாதிரியான மரபணு அம்சங்கள் இருந்தன. சோதனையை விரிவாக்கியதில், பசிபிக் முதல் காஸ்பியன் கடல்வரை பதினாறு மில்லியன் ஆண்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.

அதாவது, கிட்டத்தட்ட ஆயிரம் வருடத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரிடமிருந்து தோன்றிய சந்ததி அது. எந்தப் பகுதியில்? யார் அந்த மனிதர்? மங்கோலியா. விடை கிடைத்ததுமே உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.  செங்கிஸ்கான்!

இன்று, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரையைச் சார்ந்தவர்கள்.

0

நெப்போலியன் பற்றி பல இடங்களில் படித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் பற்றியும் படித்திருக்கிறேன். அதேவரிசையில் உள்ள மாவீரரான செங்கிஸ்கான் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆசைப்பட்டேன். சொல்லப்போனால்,  சில பத்திரிகைகளில் வந்த துணுக்குகள், தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள் தவிர – வேறு எதிலுமே (தமிழில்) செங்கிஸ்கான் தட்டுப்படவில்லை.

2008ல் செங்கிஸ்கான் பற்றிய புத்தகம் எழுதவேண்டும் என்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டேன். ஜனவரி முதலே அதற்கான விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் வாங்கினேன். டாகுமெண்டரி, திரைப்படங்கள் தேடிப் பிடித்தேன். (அதிலும் பிபிசி வெளியிட்டுள்ள டாகுமெண்டரி ஈடுஇணையற்றது.) மே மாதம் செங்கிஸ்கான் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன்.

எழுதுவதற்குச் சவாலாகத்தான் இருந்தது. குறிப்பாக மங்கோலிய கலாசாரத்தை சரிவரப் புரிந்துகொண்டால்தான் அடுத்தடுத்த வரிகளை எழுத முடியும் என்ற அளவிலான சவால். அப்புறம் மங்கோலியப் பெயர்கள் – டெமுஜின், ஜமுக்கா, யெசுகெய், சாகெட்டெய், டயாங் கான் – இப்படி ஆள்களின் பெயர்கள். கெரியிட், ஜெர்செட், நய்மன், போர்ஜிகின் – இப்படி இனக்குழுக்களின் பெயர்கள். ஆனான், கெர்லென், புர்கான் கல்டுன் – இப்படி இடங்களின் பெயர்கள். எல்லாமே நாக்கையும் மூக்கையும் சேர்த்துப் பயன்படுத்தி உச்சரிக்க வேண்டிய  வார்த்தைகள். எது இடம், எது இனம், எது பெயர் என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்வதற்குள் அய்யய்யோ!
தனியாக நோட்பேட் ஒன்றில் இம்மாதிரி வார்த்தைகளை எல்லாம் தனித்தனியாக விளக்கங்களுடன் எழுதிவைத்து சில நாள்களுக்கு மனப்பாடம் செய்தேன்.

எழுதும்போதே எனக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது இந்தப் பெயர்கள்தான் – ‘வாசகர்கள் மனத்தில் பெய ர்கள் நிற்குமா? குழப்பத்தைக் கொடுக்குமா? வாசிப்பு வேகத்தைக் கெடுக்குமா?’ அதற்காக டயாங் கானை  ஷாருக் கான் என்று பெயர் மாற்றி எழுத முடியாதே. மங்கோலியக் கடவுளான தெங்ரி மீது பாரத்தைப் போட்டு  விட்டு தொடர்ந்து எழுதினேன்.

டெமுஜின் என்றழைக்கப்படும் செங்கிஸ்கானின் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் சுவாரசியத்துக்கோ,  விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லை. ஆனால் செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின்தான். செங்கிஸ்கான் என்பது மங்கோலியா என்ற ஒரு தேசத்தை அவர் உருவாக்கும்போது கொடுக்கப்படும் பட்டம். அதன் அர்த்தம்  மங்கோலியர்கள் மிகவும் மதிக்கும் ஓநாய்களின் தலைவன்.

அதற்காக ஹாஃப் வே ஓப்பனிங் எல்லாம் கொடுத்து, ‘அவர்தான் செங்கிஸ்கான்’ என்று ஓப்பனிங் சாங் வை த்து, ப்ளாஷ்பேக்குக்குச் சென்று… எழுதும் சரித்திரப் புத்தகத்தின் அழகை நான் பாழாக்க விரும்பவில்லை.

ரிஸ்க்தான் எடுத்தேன். புத்தகத்தில் கிட்டத்தட்ட பாதியில்தான் டெமுஜின், செங்கிஸ்கான் ஆகிறார். ‘என்னய்யா  இது, ஏமாத்தறான். பக்கம் பக்கமா போய்க்கிட்டே இருக்குது, இன்னும் கதாநாயகனே வரலை’ என்று  வாசகன் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டால்? ஆகவே புத்தக்கத்தின் முதல் சேப்டரிலேயே டெமுஜின் = செங்கிஸ்கான் என்று பொடி எழுத்தில் அடிக்குறிப்பு கொடுத்து நிம்மதி அடைந்தேன்.

புத்தகத்தை எழுதி முடிக்க இரு மாதங்கள் பிடித்தன.

0

புத்தகம் வெளியாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. நெப்போலியனை, அலெக்ஸாண்டரை விரும்பும் அளவுக்கு செங்கிஸ்கானையும் தெரிந்துகொள்ள வெகுஜன வாசகர்கள் விரும்புவார்களா என்று எனக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. என் சந்தேகம் நிஷா புயலுக்கு முன்பாகவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. கிழக்கின்  மார்க்கெட்டிங் துறை நண்பர்கள் கொடுக்கும் ரிப்போர்ட், கருத்துகள் எல்லாம் என்னை ஆச்சரியப்படத்தான்  வைக்கின்றன. செங்கிஸ்கானை அமோகமாக விரும்பும் தமிழ் வாசகர்களுக்கு என் நன்றி.

0

வெள்ளிக்கிழமை (26 டிசம்பர்) மாலை ஆறு மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் புத்தகத்தை விமர்சிக்க இருக்கிறார் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ். அன்றைய அறிமுகத்திற்கான இன்னொரு பு த்தகம் நண்பர் குணசேகரன் எழுதிய இருளர்கள் – ஓர் அறிமுகம். அதை விமர்சிக்க இருப்பவர் நண்பர் பிரவாஹன். இரண்டு புத்தகங்களுமே இரு இனங்கள் குறித்தவை. இன மோதல்கள் வராது என்று நம்புவோம்.

வெள்ளிக்கிழமை விழாவுக்கு மங்கோலியர்களின் ஆஸ்தான வாகனமான குதிரையில் அலுவலகத்துக்குச் செல்லலாம் என்றொரு ஆசை. என்னைப்போலவே ஆசைப்பட்டு குணசேகரனும் இருளர்களின் செல்லப்பிராணியோடு வந்துவிட்டால்?

என் அரண்மனை வாழ்க்கை!

ப்போதுதான் முழுதாகச் செய்து முடித்த வீணை போல ஒருத்தி, பார்த்த உடனே எடுத்து வாசிக்கத் தோன்றும் வயலின் போல் ஒருத்தி, விரல்களால் விளையாட விளையாட இன்ப இசையைப் பரப்பும் கிடார் போல் ஒருத்தி, இவளைப் பார்த்துதான் தம்புராவையே வடிவமைத்திருப்பார்களோ என்று சந்தேகக் கேள்வியை எழச் செய்யும் ஒருத்தி, கொடியிடை கொண்ட கோட்டு வாத்தியம் போல் ஒருத்தி, சமபங்கு வளைவுகளாலும் சமபங்கு நெளிவுகளாலும் செய்த சாரங்கிபோல இன்னொருத்தி.

நாற்பது சுந்தரிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு. பரத்பூர் மகாராஜா கிஷன்சிங் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த சுந்தரிகள் என்றால் சும்மாவா?

அந்த மஞ்சள் ஒளியில் நாற்பது தங்க விக்கிரகங்கள் முளைத்து நின்றது போல இருந்தது. ஒவ்வொரு விக்கிரகமும் மெதுவாக, வரிசையாக நீச்சல் குளத்தில் இறங்க ஆரம்பித்தது. மையப்புள்ளி போல மகாராஜா, சுற்றி வட்டமாக இளம்பெண்கள். உல்லாசத்தின் சிரிப்போசை.

ஆட்டத்தின் முக்கியமான கட்டம் ஆரம்பமானது.

‘என்ன தயாரா?’ மகாராஜாவின் கேள்விக்கு நாற்பது குயில்களும் ஒருமித்த குரலில் ‘ம்’ என்றன. மகாராஜா  ‘சொல்லிக் கொடுத்தபடியே’ எல்லாப் பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மெழுகுவர்த்திகளை அங்கங்களுக்கிடையில் வைத்துக் கொண்டனர். ஒவ்வொரு பெண்ணையும் தன் மனம் போன போக்கில் குரலாலும் பின்பு விரலாலும் வருணிக்க ஆரம்பித்தார் கிஷன்சிங்.

‘ஆடி வா, பாடி வா, ஆணழகைத் தேடி வா, பேரின்பம் காணலாம் வா!’

தாமரைகள் தத்தளித்தன. நீர் தெறித்தோ, தண்ணீரில் மூழ்கியோ, தவறி விழுந்தோ மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணைய ஆரம்பித்தன. அணைந்த மெழுகுவர்த்திக்கு உரிய பெண்கள், ஆட்டத்திலிருந்து அவுட். அவர்கள் நீச்சல் குளத்தின் சுற்றுச் சுவரிலும், சந்தன மரப்படிக்கட்டுகளிலும் சென்று உட்கார்ந்து கொண்டனர்.

முப்பத்தெட்டு, இருபத்தியொன்பது, இருபது, பதிமூன்று, ஆறு, மூன்று…

குளத்தின் உள்ளே இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே பாக்கி. அவர்களுக்கு மூச்சு வாங்கியது. திரியில் துடித்துக் கொண்டிருந்த தீபம் போல உள்ளே அவர்களின் மனமும் துடித்துக் கொண்டிருந்தது. ஜெயிக்கப் போவது யார்? மஜாராஜாவும் சே, மகாராஜாவும் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. சுற்றியிருந்த முப்பத்தியெட்டு பேரும் டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தார்கள். நீர் நெருப்பைத் தேடிக் கொண்டிருந்தது.

இறுதியில் ஒருத்தி அணைந்துபோனாள். அணையாதவளை அணைத்துக் கொண்டார் மகாராஜா.

****

ருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிக்கொள்வார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

****

காராஜாவுக்கு முதுகில் அரிப்பெடுக்கிறதா? சுகமாகச் சொறிந்துவிட ஒரு ஆளைப் போடு. பல் துலக்க சலிப்பாக இருக்கிறதா? பக்குவமாகத் தேய்த்துவிட ஒரு பையனைப் போடு. காலைக் கடனை முடித்த பின்பு இடது கையால் கழுவ எரிச்சலாக இருக்கிறதா? இதமாகக் கழுவி விட ஓர் இளஞ்சிட்டை பணியில் அமர்த்து. அட, நீளமான கூந்தலில் பேன் தொல்லையா? தேடிப் பேன் பிடித்து, தீர்த்துக் கட்ட தேர்ந்த வீரன் ஒருவனுக்கு வேலை கொடு.

எது எதற்குத்தான் வேலைக்கு ஆள் வைக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் பிரத்யேகப் பணியாளர்களை நியமனம் செய்திருந்த மகாராஜாக்கள் அநேகம். கபுர்தலா மகாராஜா ஜெகத்ஜித் சிங்கும் அப்படிப்பட்டவரே. சிறிய வயதிலிருந்தே மகா ‘கணம்’ பொருந்தியவராக இருந்ததால், ஜெகத்ஜித் சிங் உடைகளை அணிய, கழற்றி மாற்ற பெரும் சிரமப்பட்டார் ஜெகத்ஜித் சிங். குறிப்பாக பைஜாமா அணியும்போது அவரது பாடு திண்டாட்டமாகிவிடும். பைஜாமா இடுப்பிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடாதபடியாக அதன் நாடாவை எப்படி இறுக்கிக் கட்டவேண்டும் என்ற வித்தை மட்டும் ஜெகத்ஜித் சிங்குக்குப் பிடிபடவே இல்லை.

நாடாவில் முடிச்சுப் போடுவதென்பது அவருக்கு நாடாள்வதைவிட கஷ்டமான விஷயமாகத் தோன்றியது. முடிச்சு போடுவது மட்டுமல்ல, அதனை அவிழ்ப்பதுகூடத்தான். உலகத்திலிருக்கும் ஒட்டு மொத்த சிக்கலும் அவரது பைஜாமா நாடாவின் முடிச்சில் இருப்பதாகவே தோன்றியது. சிறுவனாக இருக்கும்போது பரவாயில்லை. வேலையாள்கள் நாடாவை கட்டியோ, அவிழ்த்தோ விடுவார்கள். வளர்ந்த பின்பு?

ஜெகத்ஜித் சிங், அதற்கெல்லாம் கூச்சப்படவே இல்லை. தனக்கு பைஜாமா நாடாவைக் கட்டி விடுவதற்கென்றும், அவிழ்த்து விடுவதற்கென்றும் தனியாக ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டார். அவர்தான் டிரவுசர் ஆபிசர்.

அந்த ஆபிசரின் பெயர் முஷாஹிப். தன் தலையாய பிரச்னையை எந்தவித தடங்கலுமின்றித் தீர்த்து வைக்கும் ஆபத்பாந்தவனாக இருந்ததால், ஜெகத்ஜித் சிங்குக்கு முஷாஹிப் மீது பிரியம் அதிகம். தான் எங்கு சென்றாலும் உடன் முஷாஹிப்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட. அந்தப்புரத்தில் சேவை செய்ய மற்றவர்கள் இருந்ததால், மகாராஜாவுக்கு முஷாஹிப் தேவைப்படவில்லை….

****

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஒஸ்மான் அலிகான்.

பதவிக்கு வந்ததும் அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

****

ங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Co-வினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர் Imperial Crown of India. 1911ல் டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

****

‘அருமை மக்களே, மருவாதையா புள்ளைங்கள இஸ்கூலுக்கு அனுப்புங்கோ, இல்லாக்காட்டி ரெண்டு அணா அபராதம் கட்டணும். இது மகாராசாவோட உத்தரவு.’

பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் வாசம் வீச ஆரம்பித்தது. வருகைப் பதிவை அதிகரிக்க, அபராதக் கட்டணத்தை ஒரு ரூபாய் என்று உயர்த்தினார். அந்நாளில் எவ்வளவு பெரிய தொகை அது? அவ்வளவெல்லாம் அபராதம் கட்ட முடியுமா என்ன? எங்கே மகாராஜாவின் வீரர்கள் வந்து தங்களைக் கைது செய்துவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயந்தார்கள். ‘ராசா நீ பள்ளிக்கூடத்துக்கே போயிருப்பா’ என்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அனுப்ப ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூட வளாகங்களில் ஓரொன் ஒண்ணு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

அடுத்த பிரச்னை. ‘பொம்பளப் புள்ளைக்கெல்லாம் படிப்பெதற்கு?’ மீண்டும் சாயாஜி ராவ் மிரட்டலைத்தான் முன்வைக்க வேண்டியதிருந்தது. ஆகவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பரோடாவில் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

இன்னொரு பிரச்னை. தீண்டாமை. ‘ஹரிஜன்களோடு எங்க பிள்ளைங்களும் சேர்ந்து படிக்கிறதா?’ சில சாதிக்காரர்கள் கூவ ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூடம் எல்லோருக்கும் பொதுவான இடம். எல்லா பிள்ளைகளும் அங்கு சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் சாயாஜி ராவ். அவரது பகீரத பிரயத்தனங்களால், 1910ல் பரோடா சமஸ்தானம் முழுவதும் இயங்கிக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 2938.

***

மான்க்டென் தலைமையிலான அணிக்கும், உள்ளூர் அணிக்கும் மேட்ச். மைதானத்தில் மக்கள் திரண்டிருந்தார்கள். உள்ளூர் பண்ணையார் ஒருவரது மகளான அவளும் வந்திருந்தாள். மைதானத்துக்குள் மான்க்டென் ‘டாஸ்’ போட்டுக் கொண்டிருக்க, அவரது அணியில் இடம்பெற்றிருந்த கூச் பிகாரின் மகாராஜா ஜெகத்திபேந்தர் அவளுக்கு ‘ரோஸ்’ கொடுக்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தார். டாஸில் வென்ற மான்க்டென், ‘பேட்டிங்’ என்றார். ஆனால் ஜெகத்திபேந்தரின் கண்களில் ‘டேட்டிங்’ கனவுகள்.

மான்க்டெனும் இன்னொரு வீரரும் களமிறங்கினார்கள். ஜெகத்திபேந்தர் அணியின் முக்கிய பௌலர். பேட்டிங் வரிசையில் நம்பர் ஒன்பது. ஆகவே மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். ஒவ்வொரு வீரராக அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். ஓரளவு போராடி ஆடிய மான்க்டெனும் அவுட்டாகி வந்து அமர்ந்தார். நான்கு விக்கெட்டுகள் சரிந்திருந்தன. ‘எங்கே கூச்?’ (ஜெகத்திபேந்தரை ஐரோப்பியர்கள் செல்லமாக அழைப்பது அப்படித்தான்.) தேடினார் மான்க்டென். ‘இங்கேதான் எங்காவது இருப்பார். வந்துவிடுவார்’ என்றார் ஒரு வீரர்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. மான்க்டெனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. தானே கூச்சைத் தேட ஆரம்பித்தார். ‘அடுத்து அவர்தானே களமிறங்க வேண்டும். எங்கே போய்த் தொலைந்தார்?’ வெளியில் சென்று தேடுவதற்காக சிறுவன் ஒருவனை அனுப்பினார்.

அந்தச் சிறுவன் வருவதற்குள் ஒன்பது விக்கெட்டுகள் விழுந்திருந்தன. கடைசி பேட்ஸ்மேன் கூச்சுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். மான்க்டெனுக்கு ரத்தக் கொதிப்பு ஜிவ். ‘எங்கடா அவரு?’

பதில் சொல்லத் தயங்கினான் சிறுவன். அவன் முகமெல்லாம் சிவந்திருந்தது. வெட்கம் வழிய சிரிக்கவேறு செய்தான். ‘அவரு அங்க ஒரு வீட்டுல, மேல் மாடியில..’

‘மேல் மாடியில?’

‘அது வந்து.. அவரு.. பண்ணையாரு பொண்ணுகூட…’

****

அகம், புறம், அந்தப்புரம். குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதோ இன்று, வெள்ளிக்கிழமை வெளியாகிருக்கும் (25-12-2008) ரிப்போர்ட்டர் இதழில் 150வது அத்தியாயம் வெளியாகியிருக்கிறது. ஆகவே ‘மலரும் நினைவுகளாக’ மேலே சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.

பரோடா, அல்வார், கூச் பிகார், பாட்டியாலா, பரத்பூர், ஹைதராபாத், நபா, தோல்பூர், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, குவாலியர், ஜுனாகத் (மேலும் சில) சமஸ்தானங்களின் வரலாறை, மகாராஜாக்களின் வாழ்க்கையைத் திரட்டித் தந்துள்ளேன். அதன் ஊடாக விவரிக்கப்பட்ட பின்னணி விஷயங்கள் ஏராளம். சுருங்கச் சொல்வது இயலாது.

இப்போது மைசூர் மகாராஜாக்களின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில முக்கியமான சமஸ்தானங்களின் வரலாறு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் பின்னணியில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை பிறிதொரு சமயம் பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு என்றும் என் மனமார்ந்த நன்றி.

தமிழ் பதிப்புலக ‘வரலாற்றில்’ முதன்முறையாக…

‘அவ்வளவுதான். இனி நம்மிடம் இருப்பது இரண்டே கப்பல்கள்தான். சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் நிச்சயமாக சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நான் தொலைத்துவிட்டேன். இழந்துவிட்டேன்’ – மனத்தளவில் அந்த முடிவுக்கு வந்திருந்தார் மெகல்லன்.

இருக்கும் இரண்டு கப்பல்களையாவது காப்பாற்றியாக வேண்டிய சூழல். ஆனால் அதற்கும் சோதனை தொடங்கியது. அடுத்ததாக ஒரு சூறாவளி வீச ஆரம்பித்தது. டிரினாடாடையும் விக்டோரியாவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேதோ திசைகளில் எல்லாம் அவை கொண்டு செல்லப்பட்டன.

அந்தச் சூறாவளியும் ஓரளவுக்கு ஓய்ந்தது. டிரினிடாடில் இருந்தபடி கடலைப் பார்த்தார் மெகல்லன். கண்பார்வை தூரத்தில்தான் விக்டோரியா இருந்தது. மனத்துக்குள் மெல்லியதாக ஒரு நிம்மதி படர்ந்தது. ஆனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாதபடி விக்டோரியாவின் பாய்மரத் துணிகள் கிழிந்து தொங்கின. சூறாவளி கொடுத்துவிட்டுப் போன பரிசு.

சில மணி நேரங்கள்கூட மெகல்லனின் நிம்மதி நீடிக்கவில்லை. அடுத்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது. கப்பல்களைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேரலைகல் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

கடல், பேரலைகளால் அந்த இரண்டு கப்பல்களையும் பந்துகள் போல எடுத்து, தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பாறையில் மோதி கப்பல் துண்டு துண்டாகிப் போகலாம் என்ற நிலை.

கப்பல்களில் இருந்த எல்லோரும் இறுக்கமாக எதையாவது பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் அலைகளில் ருத்ர தாண்டவம், சிலரை கடலுக்குள் விழ வைத்தது. கடலுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் தவறி விழுந்தார்கள். அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது.

ஒவ்வொரு நொடியையும் மரண பயமின்றிக் கழிக்க முடியவில்லை. இந்த நிலை இரண்டு நாள்கள் தொடர்ந்தது.

அதுவரை ஆடிய ஆட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைதியாக இருந்தது கடல்.

‘இந்த நிமிடம் வரை உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது. எப்படியோ விக்டோரியாவும் தப்பித்து விட்டது. ஆனால் சான் அண்டோனியாவும்  கான்செப்ஷனும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு பாறையிலோ, குன்றிலோ மோதி சிதைந்து போயிருக்கும். யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா? சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.’

உடலெல்லாம் வலி. மனத்தில் அதைவிட. கடல் அமைதியடைந்திருந்தாலும் மெகல்லனால் அந்த இரவில் தூங்க முடியவில்லை.

இருளை தின்றபடியே மெள்ள மெள்ள ஒளி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த அதிகாலை நேரம். யாரோ தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த மெகல்லன் படாரென எழுந்து உட்கார்ந்தார்.

‘கேப்டன்.. கேப்டன்..’

வெளியே ஹென்றியின் குரல் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து நொண்டியபடியே வெளியே சென்றார். முகம் முழுக்க உற்சாகம் வழிய நின்று கொண்டிருந்தான் ஹென்றி. அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவன் கைகாட்டிய திசையில் மெகல்லனின் பார்வை சென்றது.

நம்பவே முடியாத ஆச்சரியம். தன் கண்களை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு அதே திசையில் நோக்கினார். மெகல்லனின் முகத்தில் புன்னகை, சூரியன் போல உதயமானது. கைகள் கூப்பி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

தூரத்தில் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் வந்து கொண்டிருந்தன.

000

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். பாய்மரக் கப்பல்கள்தான் இருந்தன. கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படையோ – எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கப்பலைச் சீரழிக்கக் காத்திருக்கும். நிலப்பரப்பே இன்றி, பயணம் மாதக் கணக்கில் நீண்டு கொண்டே செல்லும். உணவோ , நீரோ கிடைக்காத அவலநிலையால் மரணம் சகஜம்.

இம்மாதிரியான சூழலில்தான் பயணி மெகல்லன், கடல் வழியாக உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். ஐந்து கப்பல்கள். 241 பேர். 69,800 கி.மீ. பயண தூரம். மூன்று வருடப் பயணம். எத்தனை பேர் பிழைத்து வந்தார்கள்? உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் மெகல்லன் என்பது உண்மைதானா?

புரியும்படியாக புவியியலையும் சொல்லி, கூடவே சுவாரசிய நடையில் வரலாற்றையும் கலந்து சொல்வதென்பது சவால்தான். இதற்கு முன்பாக அண்டார்டிகா குறித்து நான் எழுதிய ‘ஸ்…!’ என்ற புத்தகம் பூரண திருப்தி கொடுத்தது. இந்தவருடம் அதே திருப்தி எனக்கு மெகல்லனில் கிடைத்திருக்கிறது.

மெகல்லன் : ப்ராடிஜி வெளியீடு

சரித்திரத் தேர்ச்சி கொள்

அவன் சொன்னான். நான் படிக்கிறேன். அவ்வளவுதான். படித்ததைப் பகிர்ந்துகொள்ள இது[வும்] ஒரு களம்.

பி.கு: நான் எழுதுவதற்கு முன்னால் கமெண்ட் அளித்த நண்பர் லக்கி லுக்குக்கு நன்றி.