சொதப்பல் ஸ்டாரின் அடுத்த மூவ்! – மிஸ்டர். காக்கையார்

ங்கிருந்தோ லவட்டிய ஊசிப்போன வடையுடன் ஸ்டைலாக வந்து உட்கார்ந்தார் காக்கையார்.

‘என்ன அமெரிக்கா ரிட்டர்ன் மாதிரி ஸ்டைலா வர்றீர்?’ என்றோம்.

‘எவன் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனா சூப்பர் ஸ்டார் போயிட்டு வந்தா மட்டும் மேட்டர் ‘சொத்’துனு ஆயிருது’ – காக்கையார் கச்சேரியை ஆரம்பித்தார். நாமும் கேள்விகளை அவிழ்த்துவிட்டு ஸ்ருதி ஏற்றினோம்.

‘முடிவா சூப்பர் ஸ்டார் என்னதான் சொல்ல வர்றாராம்?’

‘நான் முடிவெடுத்துதான் ஆகணும்னு யாரும் முடிவா என்னை முடிவெடுக்கச் சொல்ல முடியாது. அப்படி நான் முடிவெடுக்கணும்னு நினைச்சா முடிவுல என்ன முடிவெடுத்துருக்கிறேன்னு என்னாலேயே சொல்ல முடியாது.’

‘என்னய்யா அது, ஏற்கெனவே பன்ச்சர் ஆகிக்கிடக்குற இமேஜை பன்ச் டயலாக் விட்டு மேலும் பாழ்படுத்துறார்.’

‘படுத்தத்தான் செய்யுறார். அதுதாங்காம, கோவையில அவர்கிட்ட கேட்காமலேயே கட்சி, கொடின்னு ஆரம்பிச்ச ரசிகர் மன்றத்தினர், அடுத்த எலெக்ஷன்ல வடிவேலுவுக்கு ஆதரவா களமிறங்கப் போறாங்களாம்’ என்று புது ஸ்கூப் நியூசைக் கிளப்பிவிட, நிமிர்ந்து உட்கார்ந்தோம். ‘நாயர் கடையில சாயா சொல்லியாச்சா?’ என்றபடியே வடையைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார் காக்கையார்.

‘ஆமா ரஜினி, தன் பொண்ணு சௌந்தர்யாவுக்கு ஏதோ ரகசிய ப்ராஜெக்ட் அசைன் பண்ணியிருக்காராமே?’ – காக்கையாரிடம் கொக்கி போட்டுப் பார்த்தோம்.

‘அதற்குள் விஷயம் வெளியில் கசிந்துவிட்டதா’ என்று செல்லமாகச் சலித்துக் கொண்டவர், தொடர்ந்தார். ‘குசேலனில் குளத்தில் டால்பின் விட்ட சௌந்தர்யாவின் க்ரியேடிவிட்டி குறித்து ரஜினிக்கு எப்போதுமே பெருமிதம் உண்டாம். சக்கரகட்டி படத்தில் ‘சின்னம்மா’ பாடலில் மம்மியை எல்லாம் மானாவாரியாக அலையவிட்டு, தனது அழகியலை நிரூபித்த மகளை உச்சி முகர்ந்து பாராட்டினாராம் சூப்பர் ஸ்டார். கூடவே, ‘சுல்தான் தி வாரியர்’ பொம்மைப் படத்தின் கதையைக் கொஞ்சம் மாற்றி அதில் அரசியல் போர்ஷனை அதிகமாக்கச் சொல்லியிருக்கிறாராம். ஷங்கரிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி ‘முதல்வன்’ பட அரசியல் காட்சிகள் சிலவற்றை அதில் அப்படியே இடம்பெறச் செய்யப் போகிறாராம். கொதித்துப் போயிருக்கும் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தவே இந்த முயற்சி’ – காக்கையார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடான சாயா வந்து சேர்ந்தது.

‘ஆமா, சேனல்காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் நாளைக்கு ஏதோ அவசரமா மீட்டிங் போடப்போறாங்களே, என்ன விஷயம்?’ – காக்கையாரைத் தூண்டினோம்.

‘எல்லாம் சூப்பர் ஸ்டார் விஷயமாத்தான். இனிமே ரஜினி மேட்டரை யாரும் கவர்-ஸ்டோரியா போட்டு பத்திரிகை சர்குலேஷனைக் குறைச்சுக்க வேண்டாம்னு முடிவெடுக்கப்போறாங்களாம். எந்தச் சேனல்ல ரஜினி படம் போட்டாலும், ‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது’ மாதிரி, சூப்பர் ஸ்டாருக்குச் சொந்தமில்லாத, அடுத்தவங்க எழுதிக் கொடுத்த பன்ச் டயலாக்கை எல்லாம் ‘கட்’ பண்ணிட்டுத்தான் ஒளி பரப்பப்போறாங்களாம்.’

‘ஆமா, ரஜினி அடுத்து அமெரிக்காவுக்குப் போறதுக்கு முன்னாடி ஹைதராபாத் விசிட் செய்யப்போறாராமே. உண்மையா?’ – அடுத்த கேள்வியைத் தவழ விட்டோம்.

சாயாவை பாயாபோல் உறிஞ்சிமுடித்த காக்கையார், கண்கள் மின்ன தொடர்ந்தார். ‘ஹைதராபாத் விசிட்டுக்கு ரஜினி ப்ளான் பண்ணுனது உண்மைதான். ‘ஏன் சிரு, இப்படி கட்சியெல்லாம் ஆரம்பிச்சு என்னைச் சிக்கல்ல மாட்டிவிட்டுட்டீங்க’ன்னு சிரஞ்சீவியைப் பார்த்து, உரிமையோட கண்டிக்கிறதுக்காகவாம். ஆனா விஷயத்தைக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி, எங்க ரஜினி, ஹைதராபாத் வந்து நேர்ல சந்திச்சா, தன்னோட இமேஜ் சரி ஞ்சிடுமோன்னு பயந்து, எங்கியோ குக்கிராமத்துல தலைமறைவா இருக்கிறாராம்.’

சொல்லிமுடித்த காக்கையார் அடுத்த நிமிடமே பறபற!

நானும் கடத்தல்காரர்களும்!

நான் அந்தக் காரியத்தில் இறங்கியதை ஆர்வம் என்று சொன்னால் மகா அபத்தம். ஆர்வக்கோளாறு என்று சொல்வதே உத்தமம். விகடனில் நான் மாணவ நிருபராகச் சேர்ந்திருந்த சமயம். ஆரம்ப மாதங்களில் ‘எத்தை அனுப்பினால் பப்ளிஷ் ஆகும்’ என்ற வித்தை பிடிபடாமல், ‘கண்டதை’யும் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில மட்டும் ஏரியா நியூஸாக பிட்டு பிட்டாக வந்து கொண்டிருந்தன.

இரண்டு மாதங்களாக ஜூனியர் விகடன் பெரிய கட்டுரை எதுவும் வரவில்லையே என்ற கவலை. எனக்குமுன் எங்கள் ஊரில் மாணவர் நிருபராக இருந்த கோமதி சங்கர், உதவிக்கு வந்தார். இரண்டு பேருமே சேர்ந்து விஷயங்கள் பிடிக்கலாம் என்றார்.

‘நீ ஸ்ரீவைகுண்டம் போ. மணல் கடத்தல் மேட்டர். அங்கிருந்து தாமிரபரணி ஆத்தங்கரைக்குப் போய், கொள்ளை நடக்குற இடத்துல போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்துடு. மத்த விஷயங்களை நான் பார்த்துக்கிறேன். அங்கே பஸ்-ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே  தினமலர் நிருபர் ஆபிஸ் போட்டிருக்கிறார். அவரைப் பார். உதவி பண்ணுவார்.’

ஆர்வமாகத் தலையாட்டினேன். ‘போற இடத்துல பார்த்துப் பேசு. பத்திரிக்கைக்காரன்னு சொல்லாதே. ரிஸ்க்கு. வேற ஏதாவது சொல்லி ஸ்பாட்டுக்குப் போய் போட்டோ எடுத்துரு’ – இப்படி அவர் சொன்னதும்தான் எனக்குள் கொஞ்சம் பயம் முளைக்க ஆரம்பித்தது.

நான் ஒன்றும் திரண்ட தோள்கள் கொண்ட பலசாலி அல்ல. ஒரு நாற்பத்து நான்கு கி லோ இருந்திருப்பேன். பேச்சு சாதுர்யம்கூட அப்போது கிடையாது. என் கையில் இருந்தது ஸூம் இன், வைட் ஆங்கிள் வசதிகளெல்லாம் இல்லாத சாதாரண யாஸிகா ஸ்டில்-கேமராதான். ஏதோ ஒரு குருட்டு தைரியம். தூத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைக்கு மதிய நேரத்தில் பேருந்து ஏறினேன். எனக்குத் தோள்கொடுக்க, பொழுதுபோகாமல் வீட்டிலிருந்த நண்பன் சொக்கலிங்கமும் உடன் வந்தான். அவனும் பலசாலி அல்ல. பேச்சுத் திறமை அவனுக்கும் ம்ஹூம்.

மாலையில் ஸ்ரீவையை அடைந்தோம். தினமலர் நண்பரைப் பார்த்தோம். ‘ஸ்பாட்டுப் போக  ஆட்டோ பிடிச்சுக்கோங்க. பத்திரிகைன்னு சொல்லாதீங்க. வேற ஏதாவது சொல்லிக்கோங்க’ – அவர் வழிகாட்டினார். ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தோம்.

‘அண்ணாச்சி, ஆட்டோ வருமா? இங்க ஆத்தங்கரையில அரிய மூலிகைச் செடியெல்லாம் இருக்குதாமே. பார்க்கணும். போக வர எவ்வளவு ஆகும்?’

ஆட்டோ ஏறினோம். ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தபடியே சென்றோம். ‘நாங்க  திருநெல்வேலி யூனிவர்சிட்டிலதான் படிக்கிறோம் அண்ணாச்சி. பாட்டனி. இந்த மூலிகைச் செடியை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு, பறிச்சு, காயவைச்சு நோட்டுல ஒட்ட ணும். அது ஒரு ப்ராஜெக்டு.’

இப்படியெல்லாம் சரளமாகப் பொய் பேச முடிந்தது. எனக்கே ஆச்சரியம்தான். போகும்  வழியிலேயே மணல் டிராக்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ‘இதெல்லாம் எங்க  போகுது அண்ணாச்சி?’ – அப்பாவிபோலக் கேட்டேன்.

‘எல்லாம் ஆத்துல மண் அள்ளுற வண்டிங்க.’

‘எங்க கொண்டு போவாங்க?’

‘என்னப்பா, இது தெரியாதா? விக்குறதுக்குதான்.’

அந்த டிராக்டர்களை ஆட்டோவிலிருந்தே போட்டோ எடுக்க ‘என் ஆர்வக்கோளாறு’  துடித்தது. ‘வேண்டாமடா, ஸ்பாட்டுல போட்டோ எடுக்குறதுதான் முக்கியம்’ என்று என் ஆறாவது அறிவு அடக்கியது. ஆற்றங்கரையை அடைந்தோம். ‘இன்னும் நிறைய  செடியெல்லாம் இருக்குற இடத்துக்குப் போங்க, அண்ணாச்சி’

சிறிது தொலைவில் சிலர் மணல் அள்ளி டிராக்டர்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். இறங்கி புதர்களை எல்லாம் பார்த்து இது என்ன,  அது என்ன என்று கேட்க ஆரம்பித்தேன். சொக்கலிங்கத்திடம் கண்ணைக் காண்பித்தேன். அவன் ஆட்டோக்கார அண்ணாச்சியை சற்றே தள்ளி அழைத்துச் சென்றான். தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தைப் பார்த்து ‘அது என்ன மரம் அண்ணாச்சி?’ என்றான்.  அங்கே ஒரு வேப்பமரம் நின்று கொண்டிருந்தது.

அப்படியே அங்குள்ள செடிகளைப் புகைப்படம் எடுப்பதுபோல, மணல் அள்ளுபவர்களைப்  படம் எடுப்பதே என் திட்டம். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. ஃப்ளாஷ் இல்லாமல் போட்டோ எடுக்க முடியாது. ஃப்ளாஷ் போட்டு எடுத்தால்.. அய்யய்யோ!

வேறு வழியில்லை. அப்போது புகைப்படம் ஏதும் எடுக்க முடியவில்லை. ஸ்ரீவைக்குத் திரும்பினோம். ஆட்டோவைக் கட் செய்துவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கே முந்தைய இரவு பிடிபட்ட மண்லாரி நின்று கொண்டிருந்தது. போட்டோ எடுத்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரிடம் சில தகவல்களைத் திரட்டினேன். ஊர் திரும்பினோம்.

மறுநாள். சொக்கலிங்கமும் வந்தான். அதே ஸ்ரீவை. அதே ஆட்டோக்கார அண்ணாச்சி. அதே பொய்களே போதுமானதாக இருந்தது. அதே இடம். மண் எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். 24 மணி நேர சேவைபோல! சில புதர்களைப் போட்டோ எடுத்துவிட்டு, அதேபோக்கில் டிராக்டரையும்  எடுத்துவிட்டேன்.

கொள்ளையர்கள் பார்த்துவிட, நானும் சொக்கலிங்கமும் கேமராவும் கையுமாக மணல்வெளியில் உயிர்பயத்தில் தலைதெறிக்க ஓட, டிராக்டர்களும் லாரிகளும் எங்களைத் துரத்த… இந்தக்  கற்பனைக் காட்சிகள் எதுவும் நிகழவில்லை.

ஊர் திரும்பி, போட்டோவைக் கழுவக் கொடுத்தேன். மோசமில்லை. நான் திரட்டிய விஷயங்களை கோமதி சங்கரிடம் சொன்னேன். அப்போது மணல் கடத்தலுக்கு எதிராக கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீவை தாசில்தாரிடம் கோமதி சங்கர் பேசினார். கட்டுரையை அனுப்பினோம். வெளிவந்தது. ஜூவியில் ஒன்றரைப் பக்கம். நான் எடுத்த புகைப்படம். கீழே மாணவ நிருபர் ஐகானோடு என் பெயர்.

என் தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட்டம் தோன்றியதுபோல இருந்தது. அன்று கடத்தல்காரர்களிடம் சிக்கியிருந்தால் தலை இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

(அந்தக் கட்டுரை கைவசம் இல்லை. அதன் ஸ்கேன் பிரதியை நாளை தருகிறேன்.)

நான் யார்?

Mugil

இந்த உலகத்தில் எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி இதுதான்.
எங்கிருந்து வந்தேன்?
எங்கே இருக்கிறேன்?
எங்கே சென்று கொண்டிருக்கிறேன்?
நான்
என்பது என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என் ஆழ்மனத்தின் அடியோட்ட இடைவெளியில் அமர்ந்து ஆசனம் செய்தபடியே யோசித்தபோது கிடைத்த பதில்கள்…

தூத்துக்குடியிலிருந்து வந்தேன். சென்னையில் இருக்கிறேன். தினமும் அலுவலகம் முடிந்ததும் பனகல் பார்க் வழியாக அசோக் நகருக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நான் என்பது ஆழ்வார்ப்பேட்டை சூர்யாஸ் ஹோட்டலில் முப்பத்துச் சொச்ச ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு பதார்த்தம்.

என்ன செய்ய, தமிழ் சினிமா கொஞ்சம் அதிகமாகப் பார்த்து மாசுபட்டுக் கிடக்கும் மனம், ஆரம்ப பில்ட்-அப் இன்றி எதையும் எழுத விடமாட்டேன் என்கிறது. சரி, என்னைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக.

பிறந்த ஊர் கோவை. வளர்ந்தது படித்தது எல்லாம் தூத்துக்குடி. வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் (1997-2000). பின்பு அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் (2000-2002). மென்பொருள் துறையில் மனம் அவ்வளவாக லயிக்கவில்லை. காரணம் எழுத்தின் மீதிருந்த ஆர்வம்.

ஐந்தாவது படிக்கும்போதிருந்தே டைரி எழுத ஆரம்பித்துவிட்டேன். தினசரி நிகழ்வுகளை அல்ல. என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவேன். அவற்றில் பலவற்றை கவிதை என்று இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறைக்கு எனது அம்மா வழி தாத்தா – ஆச்சி வீட்டுக்கு வெகு ஆர்வமாகச் செல்வேன். காரணம், புத்தகங்கள். 60, 70, 80களில் கல்கி, குமுதம், விகடன்களில் வந்த தொடர்கதைகளைத் தனியாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்த குண்டு குண்டு புத்தகங்களில் எனது வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது.

பள்ளி அளவில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கவிதை மட்டுமல்ல, என்ன போட்டி வைத்தாலும் நானும் பெயர் கொடுத்து கலந்துகொள்வேன், பாட்டுப் போட்டிகளில்கூட. கல்லூரி எனது கவிதை ஆர்வத்தை வளர்த்தது. சுதந்தர தின பொன்விழா கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாவது பரிசு பெற்றது. அப்போதிருந்து, கல்லூரி அளவுகளில் பல்வேறு ஊர்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளுக்கு எனது கல்லூரி சார்பாகச் செல்லும் போட்டியாளராக மாறினேன். வாங்கிய பரிசுகள் சொற்பமே.

எம்.எஸ்.சி படிக்கும்போது விகடன் மாணவ நிருபர் திட்டத்துக்கு குஜராத் பூகம்பம் பற்றி ஒரு கட்டுரையை இணைத்து விண்ணப்பம் செய்தேன். அடுத்தடுத்த சுற்றுகளில் தேர்வாகி, மாணவ நிருபரானேன்.

2003ல் சென்னை வந்தேன். 78 சதவிகித மதிப்பெண்களோடு எம்.எஸ்.சி. முடித்திருந்தேன். சாப்ட்வேர் இன்ஜினியராக மாறுவேன் என்பது என் பெற்றோர்களின் கனவு. ஆனால் எனக்குத் தூக்கத்தில்கூட அப்படி ஒரு கனவு வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையில் சும்மா இருந்தேன். பொழுதைப் போக்க டேட்டா என்ட்ரி வேலைக்கும் சென்றேன். அப்பா பணமெல்லாம் அனுப்பவில்லை. காரணம், அடிக்கடி நானே தூத்துக்குடி சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்.

பின்பு எனது (விகடன் மாணவ நிருபர்) தோழி கார்த்திகா மூலமாக கோகுலம் சுஜாதா, கல்கி ஏக்நாத் அறிமுகம் கிடைத்தது. அங்கே எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் சீதா ரவிக்கு என் எழுத்து பிடித்திருந்தது. கல்கி இதழோடு சென்னை வாசகர்களுக்கு மட்டும் வாராவாரம் இலவச இணைப்பு ஒன்றைத் தயார் செய்யத் திட்டமிட்டார்கள். அது ’சென்னை ஸ்கேன்’. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தார்கள். அப்போது அதற்காகத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் ஆர். முத்துக்குமார், மருதன், ச.ந. கண்ணன்.

கல்கியில் எங்கள் எழுத்தைக் கண்ட பா.ராகவன், கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். பின்பு நான் கிழக்கில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். மற்ற மூவரும் பிறகு இணைந்தார்கள். கிழக்கு முதன்மைத் துணை ஆசிரியராக என் பயணம் தொடர்கிறது.

சரித்திரத் தேர்ச்சி கொள்

அவன் சொன்னான். நான் படிக்கிறேன். அவ்வளவுதான். படித்ததைப் பகிர்ந்துகொள்ள இது[வும்] ஒரு களம்.

பி.கு: நான் எழுதுவதற்கு முன்னால் கமெண்ட் அளித்த நண்பர் லக்கி லுக்குக்கு நன்றி.