ஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்!

(இந்தக் கட்டுரை எதற்காக, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். யோசித்துத்தான் தீருவீர்கள் என்றால் பின் உங்கள் இஷ்டம்.)

அமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.

நான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயர் என்பதுகூட அடையாளங்களைத் தொலைத்த சில எழுத்துக்களின் முகம் தொலைத்த கூட்டணி. தன்னை அறிவித்துக் கொள்ள வெறி கொண்டு அலையும் அகங்காரம் பிடித்தவர்களின் பிடிவாதமே முற்றிய நிலையில் நெறிகட்டி அறிவிக்கப்படுகிறது பெயரென! இப்போது சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் தேவையா?!

அப்போது பெயரை எங்கே உபயோகிக்க வேண்டும் என்று கிணற்று நீரின் வறட்சிக் குமிழாகக் கேட்கறீர்களா? உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும்? பிம்பங்களைச் சார்ந்திருத்தலின் வெளிநிலைக்கும் அவதானிப்புகள் வெட்டப்படும் பூரித்த நிலைக்கும் இடைப்பட்ட ஒரு அந்தர நிலையில் ‘பெயர்’ என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

சிலர் என்னிடம் கேட்பார்கள். இலக்கிய உலகில் என் பங்கு என்ன என்று.

கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் என் கால்களைத் தேடி நடந்து கொண்டிருக்கிறேன். இரகசியமாக ஊர்ந்து செல்லும் ஓநாய்கள் வாழும் காட்டில், என் ஒற்றைப் பேனா தீராத அபத்த நிலைகளின் ஊடாக குருதி தெளித்து இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கிக் கொண்டுள்ளது. என் எழுத்துக்களின் கற்பிதங்களால் தமிழ் இலக்கியம் வாழ்விக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் மனநிலை பிழன்ற சிலர், என் படைப்புகளை ‘கழிவுகளின் இழிநிலை’ என்று சொத்தைப் பல் கண்ட சொப்பனம் போல் விமர்சிப்பார்கள். அவர்களுக்கு என் விஸ்தாரமான நுனி பதில் இதுதான்.

என்னை விமர்சிப்பவனின் குரல், முகமற்ற ஒரு டிராகுலாவின் குரலற்ற குரல். பிணவறையின் உள் ஒளிந்து கொண்டு தனக்குத் தானே ஒப்பாரி வைக்கும் நிழலற்ற காட்டேரியின் கதறல் அது. என் ஆழ்ந்த புனைவுகளின் சூடு தாங்காமல் மரங்களற்ற காட்டினில் போய் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட ரத்த அணுக்கள் இல்லாதவனின் பிதற்றல். சடலங்களைப் பற்றி இனி நான் பேசப் போவது இல்லை.

‘பின் நவீனத்துவ’த்தால் வெகுஜன மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன் என்று நீங்கள் சொல்லின் துணையோடு தூர்வாரிக் கேட்கலாம்.

இதற்கு எனது இந்த கவிதை பொத்தாம் பொதுவாக பதிலளிக்கும்.

குப்பை லாரிகளின்
சப்தமற்ற நகர்விலும்
நாசிகளுக்கு அறிவிக்கப்படும்
பால்வெளி வாசனைகள்…

நெருஞ்சி முள்ளின்
தொப்புள் கொடியில்
உபரியாய் முளைத்த
நீள் எலும்புகள்…

குருதிக்கோட்டின்
முள்ளங்கித் தீட்டில்
குதறிக் கொண்ட
ஒற்றை மயிறு…

அண்மைக்கு அப்பால்
ஈயின் நிழலில் ஓய்வுறும்போது
எதிர்கொள்கிறது
சிகரெட்டின் தித்திப்பு!

புரியவில்லையா? வாழ்வின் இருள்வெளிகள் புரிவதில்லை.

சென்றமாதம்தான் பிரபலம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளருக்கு ‘சாதித்த அக்காடம்மி’ விருது கொடுத்தது பற்றி என்னிடம் ஒரு நிருபன் நேரே வந்து கருத்து கேட்டான்.

அறிவிலிகள். விருதுகள் வாங்குவதென்பது, மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதற்குச் சமம். பொதுவாக நான் விருதுகளை வடுக்களின் மேல் வடியும் புரை என நினைக்கிறேன் என்றேன்.

‘கோண பீட’ விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றனவே என்றான் எச்சிலின் எச்சக் குரலோடு.

நான் தீர்க்கத்தின் தீர்ப்பாகவே பதிலளித்தேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இங்கே எவனுக்கும் இல்லை. எனக்கு விருது வழங்க நினைப்பவன் தன்னைத்தானே ஒருமுறை நெருப்பால் எரித்து தன் கற்பின் ஸ்திரத்தை நிரூபிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஜீவி நான் மட்டுமே!

உங்களோட ‘ஓலைத்தகடு’ சிற்றிதழ் மொத்தம் எத்தனை பிரதிகளை எட்டியுள்ளது என்றான் அந்த நிருபன் கணக்குப்பிள்ளையின் கடைசிக் கேள்விபோல்.

என் எழுத்துக்களின் வாசிப்பாளர்கள் என் அக்குளில் இருந்து கிளம்பியவர்கள். நான், என் நிழல், என் நிழலின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் பிரதி பிம்பங்கள் என சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக தாண்டவமாடுகிறது என்றேன் பெருமையின் பித்தமேறி.

என்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றான் அவன் புதைகுழியின் பூரிப்பில் நின்றுகொண்டு.

நான் பொதுவாக உதட்டுச் சாயம் பூச மாட்டேன். என் உதடுகளுக்கு கிளுகிளுப்பாக புன்னகைக்கத் தெரியாது. எனக்கு அகண்ட கவர்ச்சியான உடலமைப்பு கிடையாது. இவற்கெல்லாம் ஒத்துழைக்கும் என் வீட்டு நாய்களை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டி வைக்கப்பட்டிருந்த என் வீட்டு நான்கு கால் மனிதர்களை அவிழ்த்து விட்டேன்.

அவ்வளவுதான். வந்தேறிகளின் வியர்வை பொழியும் அத்துவானக்காட்டில், வயிறூதிக்கிடக்கும் குள்ளநரியைக் குறிபார்த்து இறகுதிர்க்கும் ஒவ்வாமைக் குருவிகளின் கூட்டை நோக்கி ஓடி விட்டான் அந்த நிருபன்.

எதற்கு இப்படி புழக்கத்தில் இல்லாத புரையேறிய வார்த்தைகளை மட்டுமே பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா?

ஒரு எலக்கியவாதின்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆகிப்போச்சு. அதான் இந்த மண்டைக் கர்வத்தோட, வார்த்தைக்கு வார்த்தை வன்முறை கலந்தே பேசிக்கிட்டிருக்கேன். சாயங்காலம் ‘பப்’புக்குப் போகணும். ஐசிஐசிஐ அக்கவுண்ட் நம்பர் தர்றேன். ஒரு டென் தௌஸண்ட் போட்டு விடுறீங்களா?

கோழிகளின் கவனத்துக்கு!

நாமக்கல், பிப். 17 – தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது –

‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கழுதைகள் மன்னிக்கவும்!

(காதலர் தினத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் ராம்சேனாவுக்கும் இத்துனூன்டுகூட தொடர்பில்லை.)

ஆட்டையாம்பட்டி என்றொரு அழகிய குக்கிராமம். (இந்தக் கிராமம் தமிழ்நாட்டில் இல்லை. ஏன் இந்தியாவிலேயே இல்லை. இது ஒரு வெர்ச்சுவல் கிராமம் என்று வைத்துக் கொள்வோமே!) இது திரு மற்றும் திருமதி என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வரும் கதை. அவர்களின் மழலைக் காலத்தில் ஆரம்பித்து இளமைக் காலத்தில் தொடர்வதாக உருவாக்கப்பட்ட கதை.

திருவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். திருமதிக்கு வயது ஆறு மாதமிருக்கும். இரண்டு பேருமே செம அழகாக இருப்பார்கள். ஊரோ கொண்டாடும் அழகு என் சொல்லலாம்.

‘கழுதை கெட்டா குட்டிச் சுவரு’ என்ற ‘திரு’க்குறளுக்கேற்ப ஏதாவது குட்டிச் சுவரைத் தேடிச் சென்று முதுகு சொரிந்து கொண்டிருப்பதுதான் திருவின் முழுநேரப் பொழுதுபோக்கு. இப்படி திரு எல்லாக் குட்டிச் சுவர்களையும் தன் சகாக்களோடு ஆக்கிரமித்துக் கொள்வதால் திருமதி எந்தவொரு சுவரும் கிடைக்காமல் விக்கித்து நிற்பாள்.

(திரு ஒரு ஆண் கழுதை, திருமதி ஒரு பெண் கழுதை என்பதை இங்கே சொல்லிவிடுகிறேன்.)

இப்படி எல்லாச் சுவர்களிலும் திரு தன் முதுகுரேகையை பதித்துவிட,  அதற்குமேல் தன் முதுகு ரேகையை அதில் பதிக்க அருவருப்படைந்து அவஸ்தைப்படுவாள் திருமதி. இப்படி திருவின் மேல் திருமதிக்கு விறுவிறுவென வெறுப்பு வளர்ந்துகொண்டே போனது.

இரண்டு வருடங்கள் கழிந்தன.

அன்று, தான் உண்டு கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு பேப்பரை திருமதிக்கு கொடுத்தான் திரு. ஆனால் திருமதி அதை வாங்கிக் கொள்ளவில்லை. ‘வேண்டாம்’ என மறுத்தபோது திருமதியின் முகத்தில் வெளிப்பட்டது வெட்கம் கலந்த கோபமா, அல்லது வெறுப்பு கலந்த ஆத்திரமா என திருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அந்தப் பேப்பரில் இருந்த வார்த்தைகள் ‘ஓடிப்போகலாமா?’

தினம் தினம் திருமதி செல்லும் பாதையில் ஒரு ஒற்றை ரோஜாவோடு காத்திருப்பான் திரு. ஒருநாளும் அந்த ரோஜாவை வாங்கிக் கொண்டதில்லை திருமதி. அதுக்காக கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீர் விட்டதில்லை திரு. என்ன செய்வான்? வேறேன்ன.. ரோஜாவைத் தின்று விடுவான்.

ஆட்டையாம்பட்டியில் அந்த வருடம் ஐப்பசி தாண்டியும் மழை ஒரு எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. கண்மாய் நிர்வாணமாகக் கிடந்தது. கள்ளிச் செடிகளும், கருவேலம் மரங்களும்தான் பாக்கியிருந்தன.

‘எப்பா பதினைஞ்சு வருசங்கழிச்சு இப்படிப் பஞ்சம் பல்லைக் காட்டுது. நம்ம ஊரு எல்லைச்சாமிக்கு வர்ற வெள்ளிக்கிழம பொங்க வைச்சு  பூசாரி கிட்ட குறி கேட்டுருவோம்!’ என பஞ்சாயத்துப் பெரிசு தன் பஞ்ச் தீர்ப்பை வழங்கினார்.

‘ஏஏஏய்ய்ய்.. நா ஆத்தா வந்திருக்கேன்.. ஊருல நல்ல காரியம் ஏதோ தடங்கலாயிடுச்சு. பெரும் தெய்வக் குத்தம் ஆயிடுச்சு!. மழ தண்ணீ வேணுமுன்னா இளங் கழுதைகளுக்கு கண்ணாலம் செஞ்சு வைக்கிறதுதான் ஒரே பரிகாரம். வர்ற பவுர்ண அன்னிக்கு கண்ணாலம் நடக்காட்டி அடுத்த ஏழு வருசங்களுக்கு பஞ்சந்தேன்.. பட்டினிதேன்!’ – பூசாரி கூறிய வாக்கு திருமதியை பூச்சாண்டி காட்டியது. காரணம் ஊரிலுள்ள ஒரே இளம் பெண் கழுதை அவள் மட்டும்தான். கல்யாணம் சரி. இதற்காக வெளியூரில் அல்லது வெளிநாட்டிலா அவளுக்கு மாப்பிள்ளை தேடப் போகிறார்கள். திரு மட்டும்தான் ஒரே சாய்ஸ்!

நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. போயும் போயும் அவனுக்கா வாழ்க்கைப்பட வேண்டுமென நினைத்த திருமதி அன்று இரவே ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்தாள். பதுங்கிப் பதுங்கி தெருத்தெருவாக ஒதுங்கி ஒதுங்கி அவள் நழுவிக் கொண்டிருக்கும்போதே பார்த்துவிட்டான் திரு. அவள் ஓட, அவன் துரத்த.. அதற்கு மேல் துரத்த முடியாமல் சோர்ந்து போய் தன் சாதகத்தை ஆரம்பித்துவிட்டான் திரு. ஊரே ஒன்று கூடி பிடித்தனர், இருவரையும்!

‘ஏலேய்.. இன்னொரு தெய்வக்குத்தம் நடக்கப் பாத்துச்சுலே! கழுதைய்ங்க தப்பிச்சுப் போயிருந்துச்சுன்னா வேற கழுதைய்ங்களுக்க நாம எங்கிட்டுப் போறது? இந்தக் கல்யாண சோடிகளை நம்மூரு எல்லைச் சாமி கோயில்லயே கட்டிப் போட்டு, காவலா ஒரு ஆளையும் போடுங்கவே!’ என்று ஊர்ப் பெருசு ஒருவர் கூற திருமதிக்கு தலை சுற்றியது.

‘ஒரு பொம்பளையோட மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் புரியும். நம்ம மனசைப் புரிஞ்சுக்குற மாதிரி இங்க எவளுமே இல்லையே’ என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் திருமதி. அவளை சந்தோஷமாக உரசியபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் திரு.

கல்யாண நாள் வந்தது. தனக்கு பட்டுவேட்டிச் சட்டை கிடைக்கும், அவளுக்குச் சின்னாளப் பட்டுச் சீலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த திருவின் நினைப்பில் அரை லாரி மண் விழுந்தது. சிக்கனமாக தண்ணீரைச் செலவழித்து குளிப்பாட்டி விட்டனர். ஏழெட்டு பூக்களால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டு. (மொத்தமே ஏழெட்டு பூக்கள்தாங்க!) திருமதியின் நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்ட பொட்டு. ஊரே கூடி நின்றது. ஒரு மஞ்சள் கயிறுடன் பூசாரி தயாராக இருந்தார்.

கொஞ்சமாவது வெட்கப்படுவாள் மணப்பெண் என எதிர்பார்த்து ஏமாந்தான் திரு. ‘கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சுத்தானே ஆகணும்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் திருமதி.

நையாண்டி மேளம் கொட்ட, வெற்றிலைக் கறை படிந்த வாயோடு புன்னகைத்து திருவின் சார்பில் திருமதிக்குத் தாலி கட்டினார் பூசாரி. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதற்குப் பதிலாக பூசாரியை மிதித்து அவர் வலியால் அலறுவதைப் பார்க்க வேண்டும் என துடித்தாள் திருமதி. பத்மஸ்ரீ வாங்கியது போல் பெருமித்துடன் நின்று கொண்டிருந்தான் திரு.

கல்யாணச் சாப்பாடு என அல்லோகலகல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. திருவுக்கும் திருமதிக்கும் கழுத்தில் போடப்பட்ட அந்த ‘மெகா’ மாலைதான் கல்யாணச் சாப்பாடு. சாப்பிட்ட மக்களெல்லாம் ஏப்பம் விட்ட வாயோடு மழை வருகிறாதா இல்லையா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, சூரியனால் வியர்வை மழை பொழிந்து கொண்டிருந்தது.

ஒரு வாரமாயிற்று. ‘கழுதைக்குத் தெரியுமா காதலோட வாசனை’ என திரு வெறுக்குமளவுக்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்தாள் திருமதி.

‘தாலி கட்டின புருஷனை மதிக்க மாட்டீங்கியே! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?’ கோபமாகக் கத்தினான் திரு.

‘இது தாலிக் கயிறில்ல.. என் கழுத்துல ஏறுன தூக்குக்கயிறு!’ பதிலுக்குக் கத்தினாள் திருமதி. இதுவே வாடிக்கையாயிற்று.

‘மழை பெஞ்சிடுச்சுன்னா இந்தத் தாலியைக் கழட்டி வீசிரலாம். இல்லை சாஸ்திரத்துக்கு கல்யாணம்தான் பண்ணியாச்சே. இனிமே இவன் கூட வாழப் பிடிக்கலன்னு டைவர்ஸ் அப்ளை பண்ணலாமா’ என்றெல்லாம் யோசித்தாள் திருமதி.

மழை வந்த பாடில்லை.

மூன்று மாதங்கள் கழிந்தது. இடைப்பட்ட நாட்களில் திரு-திருமதி ஆதர்ச தம்பதிகளாக மாறிப்போயினர். ‘சோடின்னா இதான்யா சோடி’ என சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்லுமளவுக்கு மாறிப் போயினர்.

மேகம் கருத்தது. ரம்பா, மேனகா, ஊர்வசி என்ற பெயர்கள் கொண்ட மூன்று புயல்கள் அடுத்தடுத்து கரையைக் கடந்தது. கண்மாய் மட்டுமல்ல. ஆட்டையாம்பட்டியே நிறைந்து போனது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.

‘ஏஏய்ய்ய்… மழை நிக்கணும்னா அந்தக் கழுத கழுத்துல கெடக்குற தாலியைக் கழட்டணும். தானா நிக்கும் மழ’ இடுப்பளவு நீரில் ஆவேசமாக வாக்குச் சொன்னார் பூசாரி.

‘நானாடா உங்களைக் கண்ணாலம் பண்ணிவைக்கச் சொன்னேன். யேய் நீங்க நெனைச்சா கட்டுறதுக்கும் தேவையில்லாட்டி எடுக்கறதுக்கும் என் தாலி என்ன சினிமா ஷூட்டிங்குக்கு போட்ட செட்டா! புருசன் உசிரோட இருக்கறப்ப தன் தாலியைக் கழட்டிக் கொடுக்க கலாசாரத்தைக் கட்டிக் காக்குற எந்தப் பொம்பளையும் சம்மதிக்க மாட்டா! முட்டாப் பசங்களா, உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்கடா’ உள்ளுக்குள்ளேயே குமுறினாள் திருமதி.

சிறிசு முதல் பெருசு வரை ஊரே திரண்டு தேடியது திருமதியை.

மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி தண்டவாளத்தின் மேல் ஒரு நிம்மதியான பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் ஜோடிகள்.

கழுத்தில் மஞ்சள் கயிறோடு திருமதி உங்கள் ஊருக்கும் தஞ்சம் புக வரலாம். வந்தால் இந்தக் கட்டுரையை அச்செடுத்து அந்தக் காகிதத்தை அவளிடம் காண்பியுங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவாள்.

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.

போட்டித் தேர்வு. படபடப்புடன் சென்று அமர்ந்திருக்கிறீர்கள். இஷ்ட தெய்வங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கிறார்கள். அந்த நேரத்திலும் பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் பிங்க் நிற சுடிதார் பெண் கவனம் கலைக்கிறாள். தேர்வு அறை கண்காணிப்பாளர் வந்து வினா, விடைத்தாளை நீட்டுகிறார். இப்படி ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.
மொத்த மதிப்பெண்கள் : ஏதோ பார்த்துப் போட்டுக் கொடுப்போம்.

1. சன் பிக்சர்ஸ் வழங்கியதிலேயே உன்னதமான காவியம் எது?
அ) தெனாவெட்டு ஆ) படிக்காதவன் இ) எட்டுமணி செய்திகள்

2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) கொலம்பஸ் ஆ) சயின்ஸ் வாத்தியார் இ) எஸ்.ஜே. சூர்யா

3. இந்தியாவின் கேப்பிடல் (CAPITAL) எது?
அ) InDiA ஆ) india இ) INDIA

4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன?
அ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ) பா.பி.த.

5. ‘எதிர்ச்சொல்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
அ) எதிரெதிர்ச்சொல் ஆ) எதிர்மௌனம் இ) எதிர் இல்லாத சொல்

6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது?
அ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்

7. இந்தக் கேள்வியின் எண் என்ன?

அ) 8 ஆ) 10 இ) 15

8. அ-வும் ஆ-வும் அக்கா தங்கச்சி. ஆ-வும் இ-யும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. இ-யும் ஈ-யும் உறவுமுறை. ஈ-க்கு அ அத்தை. உ-க்கு ஈ சகலை. இ-க்கு உ சம்பந்தி முறை. ஆ-வை, ஈ கல்யாணம் பண்ணினா ஆ-வுக்கு ஈ என்ன வேணும்?
அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்து வீட்டுக்காரன் இ) பங்காளி

9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த வேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்?
அ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி

10. பதவிப்பிரமாணத்தின் போது ஒபாமா சொல்ல மறந்த அந்த வார்த்தை என்ன?
அ) எவனாயிருந்தாலும் வெட்டுவேன். ஆ) ஆசை, தோசை, அப்பளம், வடை  இ) பத்து ரூபாய்க்கு ‘சேஞ்ச்’ இருக்கா?

11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை?
அ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு

12. காற்றுக் குமிழுக்குள் என்ன நிறைந்திருக்கும்?
அ) கொட்டாவி  ஆ) பஞ்சு முட்டாய்  இ) உள்ளீடற்ற வெற்றிடம்.

13. ‘எக்ஸ்’ என்பது ஒரு இரட்டை எண். அதை ‘ஒய்’ ஆல் பெருக்கினால் 12 வரும். 3320 என்பது ‘எக்ஸின்’ ஐந்தரை மடங்கு. ‘ஒய்’ மற்றும் ‘இஸட்’டின் இரு மடங்குக் கூட்டுத்தொகை ‘எக்ஸின்’ மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு. ‘எக்ஸ், ஒய், இஸட்’ – இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக் கழித்தால் இறுதியில் என்ன வரும்?
அ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்

14. கீழ்க்கண்டவற்றில் ‘உயிர்’ எழுத்துகள் எவை?
அ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்

15) இருட்டான அறையொன்றில் நேராக நிற்கும்போது நமது நிழல் எங்கே விழும்?
அ) பக்கத்து வீட்டில் ஆ) உண்டியலில் இ) மொட்டை மாடியில்

16) 9841111111 என்ற எண்ணை டயல் செய்கிறீர்கள். லைன் கிடைக்கவில்லை. உடனே ரீடயல் செய்தால் என்ன எண் டயல் ஆகும்?
அ) 100 ஆ) 9841111112 இ) 98411111119841111111

17) நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா?
அ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) %#@%@(*^&

வில்லு லொள்ளு!

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய்-ன் சமீபகால மசாலா படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் – இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான் இருப்பார்போல.

சரி. இனி கற்பனை. (நிஜமாகக்கூட நடந்திருக்கலாம்.) விஜய் படம் ஒன்றின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு எப்படி ஸீன் டிஸ்கஷன் நடந்திருக்கும்? பார்க்கலாமா.

(‘மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற வாசகத்தை தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்.)

கொத்துப் பரோட்டா டைரக்டர் பிரபுதேவா (அ) பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் சேட் லாலாஜி – இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையாப் பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து ‘ஸ்டண்ட் ஸீன்’ டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) ‘காரியாப்பட்டி’ (தெலுங்குல ‘பிரேம கொடுக்கு’). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் ‘கப்’போட ஸ்டண்ட டிஸ்கஷன்ல பரபரன்னு பொறி பறக்குது. அப்படியே அந்த ‘மூடு’க்கு வந்துட்டீங்களா.. போலாம் ரை ரைட்!

இயக்குநர் : இது க்ளைமாக்ஸ் பைட்டு.
ஸ்டண்ட் : ஆங்.. அது எப்ப வரும்?
இயக்குநர் : இண்டர்வெல் முடிஞ்சதும் ஆரம்பிக்குது. க்ளைமாக்ஸ் வரைக்கும் விடாம உதைக்கிறோம். ஸ்கீரின்ல அப்படியே ரத்தவாடை அடிக்கணும். படம் முடிஞ்சு வெளிய போற ஒவ்வொருத்தணும் உடம்புல மாவுக்கட்டோடத்தான் வீட்டுக்கே போகணும்.
ஸ்டண்ட் : அத்த நம்ம கைல வுடு கண்ணு. புச்சா நெறைய மேட்டர் திங்க் பண்ணி வச்சிக்கீறேன். ஒவ்வொன்னத்தயும் எட்த்து வுட்டேன் வெச்சுக்கோ, ரசிகனுங்க பீஸ் பீஸ் ஆயிடுவானுங்க. நம்ம ஹீரோக்கு மாஸ் மாஸ் பிச்சுக்கும். ஆஹ்ஹாங்!
விஜய் : இல்லீங்ணா, என்னோட மார்க்கெட் போன படத்துல குத்தாட்டம் போட்டு குப்புறப்படுத்துக்கிச்சு. என்னோட ஆக்ஷன் பருப்பு சுத்தமா வேகல. இந்தப் படத்துலயும் பல்லிளிச்சிது வெச்சுக்கோங்க, நானும் ‘குடிச்சுக்கோ முழிச்சுக்கோ’னு காபித்தூள் வெளம்பரத்துக்கு மூஞ்சைக் காட்ட போக வேண்டியதுதான்.
லாலாஜி : ஹீரோ ஸாப், கவலயை வுடுறான். நிம்பள் இந்த பட்துக்கு துட்டை தண்ணியா இறைக்கிறான். டைரக்டர் ஸாப், பட்த்துல பைட்டை பகோத் அச்சா பண்ணுறான்.
இயக்குநர் : ஸீனைச் சொல்லுறேன் கேளுங்க. ஹீரோயினைக் கடத்திட்டு வில்லன் நூறு அடியாட்களோட  பத்து கார்கள்ல 120 கிலோமீட்டர் ஸ்பீடுல போறான்.
ஸ்டண்ட் : இன்னாபா நீ ஸீன் சொல்ற. நான் சொல்றேன் கேட்டுக்கோ. ஹீரோயினை வலிச்சிக்கினு வில்லங்காரன், ஒரு ஆயிரம் அடியாட்களோட, நூறு குவாலிஸ், சுமோவுல, 200 கிலோ மீட்டர் வேகத்துல போறான்.
விஜய் : அப்படிப் போடுங்ணா அருவாளை! இங்க நான் என்ன பண்ணனும்? பரபரன்னு ஆக்ஷன் துள்ளுற மாதிரி அள்ளிவிடுங்கண்ணா.
இயக்குநர் : இதைக் கேள்விப்பட்ட நீங்க, சரசரன்னு உங்க அக்காப் பொண்ணு நடை பழகுற வண்டியில ஏறி வேகமாத் தொரத்த ஆரம்பிக்கிறீங்க.
விஜய் : நடை பழகுற வண்டில்லாம், ரொம்ப லோ பட்ஜெட்டா இருக்கே?
லாலாஜி  : நீங்க கவலே படாதீங்கஜி. நாமே படா காஸ்ட்லியா மூணு சக்ர சைகிள் வெச்சுக்கலாம்.
ஸ்டண்ட் : சூப்பரப்பு. அப்டியே நீங்க மூணு சக்கர சைக்கிள்ல ஏறி ஒக்காந்துக்கினு, 300 கி.மீ. ஸ்பீடுல வில்லன் குரூப்பை சேஸ் பண்ணுறீங்க.
விஜய் : மூணு சக்கர சைக்கிள்ல ஸேஸிங். ஐடியா நியூவா, ப்ரெஷ்ஷா இருக்கு. மேல பில்ட் அப் பண்ணுங்ண்ணா.
இயக்குநர் : ஸேஸ் பண்ணிட்டுப் போறப்பவே, சைட்ல வில்லன் குரூப் ஆஃப் கம்பெனி கார்களையெல்லாம், அப்படியே காலால லேசா எட்டி உதைக்கிறீங்க. ஒவ்வொரு காரும் உயர உயரப் பறந்து நானூறு அடி தள்ளிப் போய் தள்ளாடி விழுது.
ஸ்டண்ட் : பின்னலா இருக்கு. இதுலயும் இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணி, சைக்கிள்ல வேகமாப் போற நீங்க, வில்லனோட கார் முன்னால போய் ஸ்டைலா பதினெட்டு போட்டு நிறுத்துறீங்க. வில்லன் கார் டிரைவர் வேகமா சடன் பிரேக் போட, பின்னால வர்ற அத்தனை வண்டியும் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு முட்டி ஏறி எல்.ஐ.சி. பில்டிங் ஹைட்டுக்கு நட்டுக்கிட்டு நிக்குது.
லாலாஜி : (‘ஜெர்க்’காகி மனத்துக்குள்) என்னாது, எல்.ஐ.சி. ஹைட்க்கு பில்ட் அப் பண்றான். நம்மள் துட்டை கிட்நாப் பண்ணப் பாக்குறான். அரே பாப்ரே!
விஜய் : இந்த இடத்துல என்னைப் பாத்து நடுநடுங்கி வில்லன் கோஷ்டியே பின்னங்கால் உச்சந்தலையில உரச உரச ஓடணும்ணா. அப்படியொரு டுவிஸ்ட்டைச் சொல்லுங்க.
இயக்குநர் : அவ்ளோதானே. இந்தா வைச்சுக்கோங்க. பக்கத்துல இருக்குற பனை மரத்தைப் புடுங்கி 360 டிகிரிக்கு சுழட்டோ சுழட்டுன்னு சுழட்டுறீங்க. அந்து நொந்து போற வில்லன் ஹீரோயினை இழுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற வயக்காட்டுல இறங்கி ஓட ஆரம்பிக்கிறான். விடாம நீங்களும் மூணு சக்கர சைக்கிள்லயே மானாவாரியாத் துரத்துறீங்க.
ஸ்டண்ட் : அப்பாலிக்கா நடக்குறதை நாஞ் சொல்லுறேன் கேட்டுக்கோ சார். அப்டிக்கா ஓடி பக்கத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷன்ல பூந்துடுறான். அப்போ டிரெயின் கரீக்டா வருது. இன்ஜின் டிரைவரை க்ளோஸ் பண்ணிக்கினு, வில்லன் தன் கூட்டாளிங்களோடயும் ஹீரோயினோடயும் டிரெயினை ஓட்ட ஆரம்பிக்கிறான்.
இயக்குநர் : அப்ப நீங்க சைக்கிளை உதறிட்டு, டிரெயினைத் துரத்த ஆரம்பிக்கிறீங்க. வேகமா ஒத்தைத் தண்டவாளம் மேல ஸ்லிப் ஆகாம உங்க ஷூவால ஸ்கேட்டிங் போற மாதிரி சறுக்கிட்டே போறீங்க.
விஜய் : நம்மளோட போன படத்துல வில்லன் ஆட்கள் துப்பாக்கியால சுடறப்போ, எங் கையால குண்டுகளைக் கேட்ச் பிடிக்கற மாதிரி பண்ணுனேன். இந்தப் படத்துல அந்த ஸீனை தூக்கிச் சாப்பிடுற மாதிரி ஏதாவது சொல்லுங்ண்ணா.
ஸ்டண்ட் : ஓடுற டிரெயின்ல இர்ந்து வில்லன் ஆள்கள் டுமீல் டுமீல்னு சுடுறாங்க. நீங்க அசால்ட்டா துப்பாக்கி குண்டுகளை கேட்ச் புடிக்கிறீங்க. அதை அப்படியே உங்க உள்ளங்கையில வெச்சு வில்லன் ஆட்களைப் பாத்து ஊதி விடுறீங்க. அது துப்பாக்கில இருந்து வெளிய போறதோட படா ஸ்பீடாப் போயி அவங்களைத் தாக்கி அழிக்குது. எப்படி?
விஜய் : அரிக்குதுங்ண்ணா! இத நம்ம ரசிகனுங்க தியேட்டர்ல பாக்குறப்போ அப்படியே ஆனந்தக் கண்ணீர் வுட்டு கதறுவாங்கண்ணா.
லாலாஜி : (மனதுக்குள் நொந்தபடி) நிம்பள் வட்டி மேலே வட்டி போட்டு குட்டி போட்ட துட்டை, இவங்கோ குண்டு போட்டே அழிச்சுடுவாங்கோ. ஹே பஹ்வான்!
விஜய் : இதுக்கு மேலே மசாலாத்தனமா ஒண்ணும் பண்ண முடியாதுங்கண்ணா. உச்சத்துக்குப் போயிட்டீங்க.
இயக்குநர் : யாரு சொன்னா? இப்பத்தான் மசாலா அரைக்கவே ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் இருக்கு பாருங்க.
விஜய் : அசத்துறீங்கண்ணா. மேல மீட்டரைப் போடுங்க.
இயக்குநர் : இதே நேரத்துல இன்னொரு வில்லன் பக்கத்து ஊருல இருந்து உங்க அம்மாவையும் தங்கச்சியையும் கடத்திட்டு வாரான். அவனும் அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்ற இன்னொரு டிரெயினைக் கடத்திட்டு உங்களுக்கு எதிர்த்தாப்ல வேகமா வர்றான்.
ஸ்டண்ட் : ஸேஸிங் ‘செம ஸீனா’ப் போவுது நைனா. இப்பவே என் கையி காலெல்லாம் ச்சும்மா ஜிவ்வுங்குது. ஸ்பாட்டுக்கு எப்ப போலாம்னு மண்டைக்குள்ள பட்சி படபடக்குது.
விஜய் : மேல என்ன ஆவும்? டாப் கியர்ல சொல்லுங்கண்ணா!
லாலாஜி : (டென்ஷனில் வியர்வை வழிய வழிய மனதுக்குள்) இதுக்கு மேலே என்னே ஆவும். ஒண்ணுக்கு ரெண்டு டிரெயினா செலவு பண்ணி, நம்பள் கஜானா காலி ஆவும்.
இயக்குநர் : விஜய் சார், நீங்க உங்க லவ்வர் இருக்குற டிரெயினை நிறுத்த முயற்சி பண்ணுறீங்க. அதுக்கு டிரெயின் பின்னாலயே ஸ்கேட்டிங் போற நீங்க, உங்ககிட்ட இருக்குற பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணுறீங்க.
விஜய் : அது எப்டிங்கண்ணா?
ஸ்டண்ட் : வில்லுக்கு ஃபுல்லும் ஆயுதம்!
இயக்குநர் : அதான் மேட்டரு. பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணி டிரெயினை இழுத்துப் பிடிச்சுக் கட்டி நிறுத்துறீங்க.
விஜய் : சூப்பருங்கோ!
லாலாஜி : (கிட்டத்தட்ட அழுதபடி மௌனமாக) நம்பள் மோசம் போயிட்டான், நம்பள் மோசம் போயிட்டான்.
இயக்குநர் : அதே நேரத்துல இன்னொரு வில்லன் டிரெயின், அதான் உங்க அம்மா, தங்கச்சி வர்ற டிரெயின் கொஞ்சம் தள்ளி வேகமா இதே தண்டவாளத்துல தடக்கு தடக்குன்னு வருது. உடனே நீங்க வேகமா அந்த டிரெயினை நோக்கி ஓடுறீங்க. தடக் தடக் தடக் தடக்.. படக் படக் படக் படக்.. படம் பாக்குறவன் எல்லாவனுக்கு பிபி எகிறணும். வேகமா வர்ற டிரெயின் ஓட்டுற வில்லன், பிரேக் பிடிக்கத் தெரியாம தொபீர்னு குதிச்சுடுறான். உங்க அம்மாவுக்கும் பிரேக் போடத் தெரியாது. ரெண்டு டிரெயினும் மோதப் போற அந்த மில்லி செகண்ட். நீங்க ரெண்டு டிரெயின்களுக்கும்  இடையில போயி ரெண்டையும் மோத விடாம உங்க கைகளால தடுத்து நிறுத்துறீங்க.
ஸ்டண்ட் : டாப்போ டாப்பு! ஆக்ஷன் ஆப்பு!
விஜய் : இந்த ஒரு ஸீனுக்கே படம் இருநூறு நாள் ஓடுங்ணா!
லாலாஜி : (வியர்த்து விறுவிறுத்து) ஹே… ராம்ம்ம்! (மயக்கமாகிறார்.)