தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)

‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.

‘அதோட பேரு என்ன தெரியுமா?’ – நான் கேட்டேன்.

‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’

‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா?’

‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’

பாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.

கூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.

அதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு சென்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப்  சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.

ஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.

சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.

நண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.

அண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'

தொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் விஷயங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.

பாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.

‘சார் டிபன் வாங்கணுமா?’

‘அப்புறம் சொல்றேன்…’

அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.

‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’

(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )

அண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான  ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.

அதற்குப் பின்?

நான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ?) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.

நண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.

எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்?
ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன்
கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)
ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக…
கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்…
ராம : நான் யார் தெரியுமா? ராமன்! தசரத மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
கா.வ.: (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.
ராம : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்து தாரங்களை மணக்கலாமே. அரசீ! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள்; அடிமையாக வாழ்கிறேன். கண்ணே உன்னைக் கண்டதுமே காதல்…
கா.வ.: காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே, என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?
ராம : பொறுமைக்கும் அளவுண்டு… பொன்மானே!
கா.வ.: நீ எருமை
ராம : நான் ஆண்.. ஆரியன்!
கா.வ.: அசல் கோழை!
ராம : நீ தனிமையில் இருக்கிறாய்.
கா.வ.: நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக்குண்டு.
ராம : உன்னை அடையாது விடமாட்டேன். (தாவிப் பிடிக்கிறான்)
கா.வ.: உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது. (எட்டி உதைக்கிறாள். ராமன் கத்துகிறான்.)
ராம : தம்பி லட்சுமணா ஓடிவாயேன். அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போராளே, அவளை உருக்குலைத்து விடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி.. தம்பி… (லட்சுமணன் ஓடிவந்து காமவல்லியைத் தடுக்கிறான்.)
லட்சுமணன் : ஏய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி…
கா.வ.: மானத்தை விட்டவனே, மரியாதையாகப் பேசு.
(இருவருக்கும் ஏற்பட்ட வாள் சண்டையில் லட்சுமணன் அவளது மூக்கையும் காதையும் வெட்டிவிடுகிறான்.)
கா.வ.: அய்யோ, அண்ணா! போய்விட்டதே தமிழன் பெருமை! ஆரியன் என்னை அவமானப்படுத்தி விட்டானே!
(காமவல்லி அங்கிருந்து அலறி ஓடுகிறாள். தான் சந்திக்கும் கரன், தூஷ்ணனிடம் ராமனும் லட்சுமணும் தனக்கு செய்த அவமானங்களைச் சொல்லிக் கதறுகிறாள்.
கா.வ.: என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள், பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா! (சாகிறாள்.)

**
மானைப் பிடிக்கச் சென்றிருக்கிறான் ராமன். சீதைக்குக் காவலிருக்கிறான் லட்சுமணன். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, லட்சுமணன் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது அங்கு வரும் ராவணனை சீதை வரவேற்கிறாள்.)

ராவணன் : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்.
சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை.
ராவ : இல்லை உன் உருவம். பேரழகி, நீ யாரோ?
சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்.
ராவ : ஜானகி… ராமனின் மனைவி.
சீதை : ஆமாம்.
ராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவற்றின் அமைப்புக்கே எடுத்துக்காட்டு!
சீதை : பெரியவரே! உங்கள் பிரியமொழிகள் என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!
ராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்… வேல்விழி…
சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போது உரையாடும் தாங்கள் யாரோ?
ராவ : நான் இலங்கையின் வேந்தன்… ராவணன்.
சீதை : (திடுக்கிட்டு) ராவணன்! ராட்சதன்!
ராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள், நான் மனிதன்… மறத்தமிழர் மன்னன்.
சீதை : (நடுங்கிக்கொண்டே) காமவல்லியின் அண்ணன்.
ராவ : ஆமாம்.
சீதை : அய்யோ, மோசம் வந்துவிட்டதே, நாதா! லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!
ராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க.
சீதை : ஏன் இங்கு வந்தாய் நான் தனிமையாக இருக்கும்போது?
ராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்கு புத்தி கற்பிக்க.
சீதை : அதற்கு அவரிடம் போ.
ராவ : இல்லை, அவன் வரவேண்டும் என்னிடம்.
சீதை : அதற்காக.
ராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்.
சீதை : அது அநீதி! (கத்துகிறாள்)
ராவ : இல்லை; அரச மரபு.
சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.
ராவ : நீ பாவிகளின் மனைவி. என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய். அந்த ஒரு குற்றத்துக்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னை அல்ல; உன் கணவனை.
சீதை : அதற்கு?
ராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு. (நெருங்கிப் பிடிக்கிறான். சீதை அலறுகிறாள்.)
சீதை : வேண்டாம்! என்னை விட்டுவிடு.
ராவ : விட்டுவிடலாம். அதனால் அந்த மட்ட ரகங்களுக்குப் புத்தி வந்துவிடாது. உம் வந்துவிடு.
(அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு தேரிலே ஏறிப்போகிறான்.)

***

தன் படத்தில் ராவணனை நல்லவனாகக் காட்டுகிறார் மணிரத்னம் என்ற பேச்சு பரவலாக இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு முன்பே ஆர். எஸ். மனோகர் தனது லங்கேஸ்வரன் நாடகத்தில் அசல் ராவணனைக் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் பெரியார், எம்.ஆர். ராதா. எழுத்தின் மூலம் பெரியார், தமிழர்களுக்கான ஒரிஜினல் ராமாயணத்தை உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார். எம்.ஆர். ராதா, தனது ராமாயணம் நாடகம் மூலம் செய்த பகுத்தறிவுப் புரட்சி மிரட்டலானது. எம்.ஆர்.ராதா, ராமன் கதாபாத்திரத்தில் நடித்த ராமாயணம் நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகளுக்கான வசனங்களைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

நாடகத்தில் ராமனாக எம்.ஆர். ராதா (குனிந்திருப்பவர்)

நாடகத்தின் முழு வசனமும் என்னிடம் உள்ளது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக தகவல் திரட்டும்போது பெரியார் திடல் நூலகத்தில் எனக்கு இந்த நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடித்த, எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் இருந்த சிலரோடு பேசியிருக்கிறேன். அவர்களது அனுபவங்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். ராதா நடித்து அந்த நாடகத்தைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ராதாவின் நாடகம் You Tubeல் கிடைத்தால் எப்படி இருக்கும்!

***

நாடகம் குறித்து அண்ணாதுரை

நடிகவேள் இராதா நடத்தும் ‘இராமாயணம்’ நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாகக் கூறிக்கொண்டு, கம்பன் தமிழகத்தாருக்கு கரைபடிந்த காவியத்தை தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் தேவகதை ஆக்கப்பட்டது. இன்று நடைபெற்று வரும் ‘கலாச்சாரப் போரின்’ விளைவாக, ஆரிய காவியங்களின் உண்மைகளும் தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன.

குத்தூசி எஸ். குருசாமி

வடநாட்டில் இராவணனைப் போன்ற உருவத்தைச் செய்து தீயிட்டுக் கொழுத்துகின்றனர். அதுபோல தென்னாட்டில் தமிழகத்தில் ஆரிய இராமனைப் போன்ற உருவஞ்செய்து கொழுத்தப்படும் நிலையை உண்டாக்க வேண்டும். தமிழன் வீட்டில் இராமன் படம் இருத்தல் கூடாது. இராமன் தமிழ் இனத்தின் எதிரி என்பதை உணர வேண்டும். இதுவே இந்நாடகத்தின் இலட்சியம்.

பெரியார்

நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வி. எஸ். சந்தானம் அய்யங்கார்

நண்பர் இராதா அவர்கள் நடத்தும் இராமாயணத்தைப் பார்க்கா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். பலர் சாஸ்திரத்துக்கு முரண்பாடாய் இருப்பதாக என் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வியுற்றேன். அப்படி நினைப்பவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்களென்பது திண்ணம். தற்காலம் இராதா அவர்கள் விபரமாக உண்மையை (இராமாயணம்) எடுத்துக் காட்டுகிறார்கள். இதை எவ்விதத்திலும் முறை தவறுதல் என்று பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் கூற ஞாயமில்லை.

அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க  எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை  நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர்,  நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற  வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா  ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே  பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து  டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’  என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு  பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை  நம்பினார். 1956 –  எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த  அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு  ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம்  நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா?  பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா?  எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய  வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ  என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ –  எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர்  சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு  சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம்  ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த  ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின்  தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப  அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார்  கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர்.  வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார்.  ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே  மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை  உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.

********

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ  சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட  மனிதரின் வாழ்க்கை வரலாறு.

சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு  எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்  எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால்  மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர்  என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும்  மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே  தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும்  எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம்  ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில்  சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா.  தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக  நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.

புத்தகத்தை வாங்க.

தீனதயாளனின் பிற புத்தகங்கள்.

புத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.

தேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.

கணக்கு பரிட்சையும் சில கெட்ட கனவுகளும்

பத்தாம் வகுப்புவரை நான் கணக்கில் புலியாக இல்லாவிட்டாலும் புள்ளிமானாகவாவது இருந்தேன். அப்போது 92 மார்க் எடுத்ததாக ஞாபகம். பளஸ் ஒண்ணுக்குப் பிறகுதான் எனக்கும் கணக்குக்குமான பிணக்குகள் ஆரம்பித்தன. இண்டக்ரேஷன் எல்லாம் இன்ஜெக்‌ஷனாக வலித்தது. டெட்டர்மினேஷனைப் பார்க்கும்போது அது என்னை டெர்மினேட் பண்ண வந்த அவதாரமாகத் தோன்றியது.

எப்படியாவது என்னை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டுமென்ற அவாவில் அப்பா, தனியாக கணக்குக்கென்று ட்யூஷன் எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆசிரியரின் பெயர் அனந்த நாராயணன். பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே காலை, மாலை வேளைகளில் பல பேட்ச்களாக ட்யூஷன் எடுப்பார். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் சிறப்பு வகுப்புகள் உண்டு. என்னோடு பல கணிதப் புலிகள் படித்தார்கள்.

‘பள்ளியிலும் இதே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ட்யூஷனினும் அதையே எடுக்கிறார். தொடர்ந்து இதையே பல வருடங்கள் செய்துகொண்டிருந்தால்…’ – அவர் கால்குலஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது என் சிந்தனையில் இப்படி ஏதாவது கால்குலேஷன் ஓடிக் கொண்டிருக்கும்.

என் சக ட்யூஷன் நண்பர்கள் எல்லாம் நேரம், நாள் தவறாது ட்யூஷனுக்குச் சென்று வந்தார்கள். எனக்குத்தான் பிடிக்கவில்லை. அவரையா, கணக்கையா என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி பெரும்பாலும் மட்டம் போட்டு விடுவேன். அவ்வப்போது சென்று வந்தேன். நான் போனாலே ஒருமாதிரியாக நக்கலாகப் பார்ப்பார். எனக்கு அது பழகிப் போயிருந்தது.

ப்ளஸ் ஒன்னிலும் சரி, ப்ளஸ் டூவிலும் சரி. பள்ளித்தேர்வுகளில் கணக்கில் தட்டுத்தடுமாறி எழுபது எடுத்துவிடுவேன். எப்போதாவது நூறு வரை செல்வதுண்டு. ‘பொறியியல் கல்லூரிக்குச் சேர எல்லாவற்றிலும் அறுபது சதவிகிதம் வேண்டுமாமே. எப்படியாவது எடுத்துவிடு. நான் உன்னைச் சேர்த்துவிடுகிறேன்.’ அப்பா அடிக்கடி சொன்ன வாசகம். என்னால் இயன்ற அளவு முயற்சி செய்தேன்.

அதென்னமோ தெரியவில்லை, கணக்கு பரிட்சைக்கு முந்தைய இரவுகளில்லாம் எனக்கு ஒரு கனவு வரும். அதாவது நான் பரிட்சை எழுத முடியாமல்போவது போலவோ அல்லது நான் ஹாலுக்குள் நுழையும் சமயத்தில் பரிட்சை முடிந்துவிடுவது போலவோ அல்லது நான் வேறு பரிட்சை என்று நினைத்து படித்துக்கொண்டு போனால் கணக்குக்கான வினாத்தாள் வழங்கப்படுவதுபோலவோ. இப்படி கெட்ட கனவுகள் என் தூக்கத்தைக் கெடுக்கும்.

கனவுகளை எல்லாம் கடந்து ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்தேன். கணக்கு நூற்றியிருவது வருமா? வினாத்தாளை வைத்து மார்க் போட்டுப் பார்த்தேன். பாஸ் ஆகிவிடுவேன் என்று தெரிந்தது. அடுத்து நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் அப்பா சேர்த்துவிட்டார்கள். அங்கும் கணக்கு பளிப்பு காட்டியது.

நுழைவுத்தேர்வு, அப்புறம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தன. மற்ற எல்லாமே 140க்கு மேல். கணக்கில் சதம். பத்தாவது வகுப்பில் எடுக்க நினைத்தது அப்போதுதான் கைகூடியிருந்தது. இருநூறுக்கு நூறு என்றால் எல்லோரும் ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ என்றா சொல்வார்கள்.

‘பரவால்ல விடு. இப்போதைக்கு காலேஜ்ல சேர்ந்துக்கோ. கணக்குக்கு மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் டெஸ்ட் எழுது. நூத்தியிருவது எடுத்துரு. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போயிடு.’ அப்பா ஊக்கப்படுத்தினார்கள். தலையாட்டினேன். பிஎஸ்ஸி கெமிஸ்டிரியில் சேர்ந்துகொண்டேன். இம்ப்ரூவ்மெண்ட் எழுதினேன். அந்தமுடிவும் வந்தது. ஏற்கெனவே எடுத்ததைவிட குறைவான மார்க் வந்துவிடக்கூடாது என்று மட்டும்தான் எனக்கு பயம்.

அதிகமாகவே வந்தது. 104. இப்படியே நாலு நாலா இம்ப்ரூவ்மெண்ட் ஆனா, இன்ஜினியரிங் போய்ச்சேர பல வருடங்கள் பிடிக்குமெனத் தோன்றியது. வேதியியலையே தொடர்ந்தேன்.

கல்லூரியிலும் துணைப்பாடமாக கணக்கு படுத்தியது. மொத்தம் 4 தாள்கள். கண்டமாகத் தெரிந்தன. முதல் தாளில் தேறிவிட்டேன். இரண்டாவதில், அந்தப் பேறு பெற்றேன். அரியர். பிறகு ஒருவருடம் கழித்து அதை திரும்ப எடுத்துவிட்டேன். ஆனால் அந்த வருடம் எழுதிய நாலாவது கணக்குத் தாளில் சொற்ப மதிப்பெண்களில் கோட்டை விட்டுவிட்டேன். மீண்டும் ஒருமுறை அந்தப் பாடத்தைப் படித்து தேர்வு எழுதும் மனோதிடம், பொறுமை எனக்கில்லை.

‘அஞ்சு மார்க்குதானே குறையுது. ரீவேல்யூஸன் போடு. பாஸ் ஆக்கிருவாங்க’ – நண்பர்கள் யோசனை சொன்னார்கள். செய்தேன். மறுகூட்டலில் தேறினேன்.

பிஎஸ்ஸி முடித்து எம்சிஏ படிப்பதாக ஒரு திட்டம். மூன்று இடங்களில் ஸீட்டும் கிடைத்தன. நல்லவேளை. எம்எஸ்ஸி ஐடி சேர்ந்துவிட்டேன். அதில் கணக்கு கிடையாது. எம்சிஏ சேர்ந்திருந்தால் கணக்குகளை எல்லாம் தாண்டி அதை முடித்திருக்க மாட்டேன் என்றே இப்போதும் தோன்றுகிறது.

பழைய கணக்கு பரிட்சை கனவுகள் இப்போதும் எப்போதாவது வருவதுண்டு. ஆனால் நிஜத்தில் ‘இனிமே வாழ்க்கைல கணக்கு பரிட்சையே கிடையாதுடா!’ என்கிற நினைப்பே சுகமாக இருக்கிறது.