கவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு

சுஜாதா, பா.விஜய் மற்றும் பலர்

எனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

எனக்கு சுஜாதா அனுப்பிய பதில்

டிசம்பர் 11க்கான எனது கட்டுரை.

(மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்னால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.)

பருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு சினிமாவின் பாடல்வரி அல்லது சொந்தத்தில் எழுதிய சில வரிகள் இருக்கும். ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகளை உடைத்து எழுதி யிருந்தால் அது கவிதை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.

நானும் அப்படிப்பட்ட கவிஞனாகத்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில டைரிகளில் என்னுடைய சமூகக் கோபங்கள், ஏக்கங்கள், தேசப்பற்று,  அப்புறம் பருவப்பற்று எல்லாமே மோனை தப்பாத வார்த்தைகளில் அடுக்கடுக்கு வரிகளில் ‘கவிதையாக’த் தவழ்ந்தன. அந்தப் பாவத்தில் வைரமுத்துவுக்குப் பெரும்பங்கு உண்டு. (என்னைப்போல பலரும் தங்களைக் கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டு உருவகப்படுத்திக் கொண்டு திரிவதற்குக் காரணமும் அவர்தான் என்றே நினைக்கிறேன்.)

பத்தாம் வகுப்பில் நான் படித்த தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எனது நண்பன் மைக்கேல் ஞானராஜ் முதல் பரிசு பெற்றான். என்னைவிட அவன்  எதுகை, மோனைகள் நன்றாகப் போடுவான், கூடவே கையெழுத்தும் அழகாக இருக்கும். ஆகவே என்னுடைய மாடர்ன் ஆர்ட் கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. அதற்கே வானத்தில் மிதந்தேன், இந்தச் சமூகம் என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்துவிட்டது என்று.

கல்லூரியில் எனது கவிதை வேட்கைக்கு வெறித்தனமாகத் தீனி போட்டார்கள். ‘கோவில்பட்டியில்  ஒரு கவிதைப்போட்டி. நீ போயிட்டு வா. தலைப்பு இதுதான் – சும்மா கிடைத்ததா சுதந்தரம்! காலேஜ் ஆபிஸ்ல சொல்லி பணம் வாங்கிக்கோ. ஆல் தி பெஸ்ட்’ – ஆர்வமாகக் கலந்துகொள்வேன். பல போட்டிகளுக்கு கவிதை எழுதி தபாலில் அனுப்ப வேண்டியதிருக்கும். செய்திருக்கிறேன். வாங்கிய பரிசுகள் வெகுசிலவே. இருந்தாலும் வெளிஉலக, மேடை அனுபவங்களைச் சம்பாதித்தேன். அந்தச் சமயங்களில் என்னை நம்பி ஊக்கப்படுத்திய பேராசிரியர் (அமரர்) நம்பி நாராயணனுக்கு என் வணக்கங்கள்.

பிஎஸ்சி கெமிஸ்ட்டிரி, எம்எஸ்சி தகவல்தொழில்நுட்பம் – ஐந்து வருட கல்லூரி காலம். வகுப்பை  கட் அடிக்க மாட்டேன். ஆனால் என் நோட்டுகளில் கவிதை என்ற பெயரில் ஏதாவது நிரம்பிக் கொண்டே இருக்கும். என் கவிதைகளை ரசிக்க, ஊக்கப்படுத்தும் விதத்தில் நண்பர்களும் கிடைத்தார்கள். இடைப்பட்ட ஒரு வருடத்தில் எனது வ.உ.சி கல்லூரியின் பொன்விழா வந்தது. பல்வேறு விஷயங்களைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கவிதைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. தெர்மாகோல், ஸ்கெட்ச், சார்ட், க்ரையான் சகிதமாக நண்பர்கள் என் கவிதைகளுக்காக பல இரவுகள் உழைத்தார்கள்.

காட்சிப்படுத்தினேன். கருத்துகளை எழுத நான் வைத்திருந்த நோட்புக் நிரம்பியது. பலர் நேரடியாகவே பாராட்டினார்கள். பிறவியிலேயே கண் தெரியாத ஒரு மனிதனின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்றொரு கவிதை எழுதியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரி அங்கு வந்தார்கள். நானே அந்தக் கவிதையை வாசித்துக் காண்பித்தேன். ‘என்னோட உணர்வுகளை எப்படி நீங்க சரியாப் புரிஞ்சுக்கீட்டிங்க?’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா?’ – நிறைய விசாரிப்புகள். இன்னும் ஒரே வருடத்தில் சொந்தக் காசிலேயே (அதாவது அப்பா காசில்)  கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்ற ‘வேட்கை’ வேர்பிடித்து வளர்ந்தது.

விகடன் மாணவ நிருபராக ஒரு வருடம் பணியாற்றிய தெம்பு வேறு. எம்எஸ்சி முடித்துவிட்டு ( 2002 செப்டெம்பர்) நண்பர்களோடு தூத்துக்குடியில் வணிக நிறுவனங்களுக்கான சிறு சிறு ப்ரா ஜெக்ட்டுகள் மட்டும் செய்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த ஆபரேஷனை ஆரம்பித்தோம்.

எழுதுவதை ஊக்கப்படுத்துவதில் எனது அப்பாவுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. பைனான்ஸ்  பண்ண ‘ரெட்டை ரெடி’ என்றார்கள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஓர் அப்பா? கவிதை எழுதுவதற்காக நான் பயன்படுத்திய பெயர் ‘முகில்’ – என் அன்புச் சகோதரி அகிலா வைத்த பெயர். நண்பர்கள் எனது  கவிதைகளை எல்லாம் படித்து ‘தரமான’ கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். பார்த்திபனின் கிறுக்கல்கள் வடிவமைப்பு எங்களை மிகவும் பாதித்திருந்தது. அதே மாதிரி ஒரு புத்தகம் போட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துவிட்டு, சோடா குடித்தோம். இருந்தும் மயக்கம் தெளியவில்லை.

கவிதைகள் அடங்கிய டம்மி பிரதிகள் சிலவற்றை சில விஜபிக்களுக்கு அனுப்பினேன். அணிந்துரை இல்லாவிடில் அது என்ன கவிதைப் புத்தகம்? தாமரை மணாளன், தென்கச்சி சுவாமிநாதன், பா.  விஜய் – அணிந்துரை தந்தார்கள்.

ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும்.  என்ன செய்யலாம்? நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம்  என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…

சரி பதிப்பகத்தின் பெயர்? நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த்,  சொக்கலிங்கம், முருகேஷ் – ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த  பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது – துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.

‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது  கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ…  காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’

ஆ... புத்தகம்
ஆ... புத்தகம்

அடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை  ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான்.  யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி!’

தன் மௌஸே தனக்குதவி – நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த  மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)

எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா?’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’

அருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம்? எத்தனை பக்கம்?  பேப்பர் என்ன வேணும்? அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம்? சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே  செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.

சுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத)  முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக  ஆரம்பித்தன.

வெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா? அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள்? பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்?

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

அதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா,  அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)

விழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா  உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம்.  வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது.

விழாவில் மைக்கேல்
விழாவில் மைக்கேல்

எதிர்பார்த்ததைவிட அரங்கில் கூட்டம். எல்லாம் வித்தியாசமான அழைப்பிதழ் செய்த வேலை.  ஒவ்வொருவராகப் பேசினார்கள். யார் புத்தகத்தை வெளியிடப்போகிறார்கள் என்று எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று எனக்குள் படபடப்பு. விஐபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடக்கூட செய்தார்கள். புத்தக வெளியீட்டு நேரம். தொகுப்பாளர் சங்கரேஸ்வரன் என்ற நண்பர் புத்தகத்தை  வெளியிடப்போகும் நபர் பற்றி சூடுபறக்கப் பேசி ஆவலைத் தூண்டினார். அவருக்கும்கூட அது யாரென்று தெரியாது.

அப்போது அரங்கத்தில் ஒரு வாசல் வழியே பிரசன்னமானார் மகாகவி. ஆரவாரம். கைதட்டல்.  வந்து ‘ஆ’வை எடுத்து வெளியிட்டார். ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள். …தன் மகனை சான்றோன்  என.. அதுவும்தான்.

மகாகவி புத்தகத்தை எடுத்து மேடையிலுள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் மேடையேறிய பாரதியாருக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் அந்தக் கணத்திலிருந்தே கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ‘டேய் கோமதிநாயகம், உன் கை நடுங்குதுடா. மானத்தை வாங்கதடா!’ – அவனது காதில் கிசுகிசுத்தேன். பிரயோசனமில்லை. பாரதிக்குரிய கம்பீரத்தை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு மெள்ள கீழிறங்கிப் போனான் நண்பன் கோமதி நாயகம்.

(இன்று டிசம்பர் 11. மகாகவியே, உமது ஜனன நாளில் கோமதி நாயகத்தை மன்னித்துவிடவும். இப்போது அவன் புள்ளகுட்டிக்காரன். வெளீயிட்டுவிழாவில் பாரதியைக் காண இங்கே க்ளிக்கவும்.)

நானும் கடத்தல்காரர்களும்!

நான் அந்தக் காரியத்தில் இறங்கியதை ஆர்வம் என்று சொன்னால் மகா அபத்தம். ஆர்வக்கோளாறு என்று சொல்வதே உத்தமம். விகடனில் நான் மாணவ நிருபராகச் சேர்ந்திருந்த சமயம். ஆரம்ப மாதங்களில் ‘எத்தை அனுப்பினால் பப்ளிஷ் ஆகும்’ என்ற வித்தை பிடிபடாமல், ‘கண்டதை’யும் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில மட்டும் ஏரியா நியூஸாக பிட்டு பிட்டாக வந்து கொண்டிருந்தன.

இரண்டு மாதங்களாக ஜூனியர் விகடன் பெரிய கட்டுரை எதுவும் வரவில்லையே என்ற கவலை. எனக்குமுன் எங்கள் ஊரில் மாணவர் நிருபராக இருந்த கோமதி சங்கர், உதவிக்கு வந்தார். இரண்டு பேருமே சேர்ந்து விஷயங்கள் பிடிக்கலாம் என்றார்.

‘நீ ஸ்ரீவைகுண்டம் போ. மணல் கடத்தல் மேட்டர். அங்கிருந்து தாமிரபரணி ஆத்தங்கரைக்குப் போய், கொள்ளை நடக்குற இடத்துல போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்துடு. மத்த விஷயங்களை நான் பார்த்துக்கிறேன். அங்கே பஸ்-ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே  தினமலர் நிருபர் ஆபிஸ் போட்டிருக்கிறார். அவரைப் பார். உதவி பண்ணுவார்.’

ஆர்வமாகத் தலையாட்டினேன். ‘போற இடத்துல பார்த்துப் பேசு. பத்திரிக்கைக்காரன்னு சொல்லாதே. ரிஸ்க்கு. வேற ஏதாவது சொல்லி ஸ்பாட்டுக்குப் போய் போட்டோ எடுத்துரு’ – இப்படி அவர் சொன்னதும்தான் எனக்குள் கொஞ்சம் பயம் முளைக்க ஆரம்பித்தது.

நான் ஒன்றும் திரண்ட தோள்கள் கொண்ட பலசாலி அல்ல. ஒரு நாற்பத்து நான்கு கி லோ இருந்திருப்பேன். பேச்சு சாதுர்யம்கூட அப்போது கிடையாது. என் கையில் இருந்தது ஸூம் இன், வைட் ஆங்கிள் வசதிகளெல்லாம் இல்லாத சாதாரண யாஸிகா ஸ்டில்-கேமராதான். ஏதோ ஒரு குருட்டு தைரியம். தூத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைக்கு மதிய நேரத்தில் பேருந்து ஏறினேன். எனக்குத் தோள்கொடுக்க, பொழுதுபோகாமல் வீட்டிலிருந்த நண்பன் சொக்கலிங்கமும் உடன் வந்தான். அவனும் பலசாலி அல்ல. பேச்சுத் திறமை அவனுக்கும் ம்ஹூம்.

மாலையில் ஸ்ரீவையை அடைந்தோம். தினமலர் நண்பரைப் பார்த்தோம். ‘ஸ்பாட்டுப் போக  ஆட்டோ பிடிச்சுக்கோங்க. பத்திரிகைன்னு சொல்லாதீங்க. வேற ஏதாவது சொல்லிக்கோங்க’ – அவர் வழிகாட்டினார். ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தோம்.

‘அண்ணாச்சி, ஆட்டோ வருமா? இங்க ஆத்தங்கரையில அரிய மூலிகைச் செடியெல்லாம் இருக்குதாமே. பார்க்கணும். போக வர எவ்வளவு ஆகும்?’

ஆட்டோ ஏறினோம். ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தபடியே சென்றோம். ‘நாங்க  திருநெல்வேலி யூனிவர்சிட்டிலதான் படிக்கிறோம் அண்ணாச்சி. பாட்டனி. இந்த மூலிகைச் செடியை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு, பறிச்சு, காயவைச்சு நோட்டுல ஒட்ட ணும். அது ஒரு ப்ராஜெக்டு.’

இப்படியெல்லாம் சரளமாகப் பொய் பேச முடிந்தது. எனக்கே ஆச்சரியம்தான். போகும்  வழியிலேயே மணல் டிராக்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ‘இதெல்லாம் எங்க  போகுது அண்ணாச்சி?’ – அப்பாவிபோலக் கேட்டேன்.

‘எல்லாம் ஆத்துல மண் அள்ளுற வண்டிங்க.’

‘எங்க கொண்டு போவாங்க?’

‘என்னப்பா, இது தெரியாதா? விக்குறதுக்குதான்.’

அந்த டிராக்டர்களை ஆட்டோவிலிருந்தே போட்டோ எடுக்க ‘என் ஆர்வக்கோளாறு’  துடித்தது. ‘வேண்டாமடா, ஸ்பாட்டுல போட்டோ எடுக்குறதுதான் முக்கியம்’ என்று என் ஆறாவது அறிவு அடக்கியது. ஆற்றங்கரையை அடைந்தோம். ‘இன்னும் நிறைய  செடியெல்லாம் இருக்குற இடத்துக்குப் போங்க, அண்ணாச்சி’

சிறிது தொலைவில் சிலர் மணல் அள்ளி டிராக்டர்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். இறங்கி புதர்களை எல்லாம் பார்த்து இது என்ன,  அது என்ன என்று கேட்க ஆரம்பித்தேன். சொக்கலிங்கத்திடம் கண்ணைக் காண்பித்தேன். அவன் ஆட்டோக்கார அண்ணாச்சியை சற்றே தள்ளி அழைத்துச் சென்றான். தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தைப் பார்த்து ‘அது என்ன மரம் அண்ணாச்சி?’ என்றான்.  அங்கே ஒரு வேப்பமரம் நின்று கொண்டிருந்தது.

அப்படியே அங்குள்ள செடிகளைப் புகைப்படம் எடுப்பதுபோல, மணல் அள்ளுபவர்களைப்  படம் எடுப்பதே என் திட்டம். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. ஃப்ளாஷ் இல்லாமல் போட்டோ எடுக்க முடியாது. ஃப்ளாஷ் போட்டு எடுத்தால்.. அய்யய்யோ!

வேறு வழியில்லை. அப்போது புகைப்படம் ஏதும் எடுக்க முடியவில்லை. ஸ்ரீவைக்குத் திரும்பினோம். ஆட்டோவைக் கட் செய்துவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கே முந்தைய இரவு பிடிபட்ட மண்லாரி நின்று கொண்டிருந்தது. போட்டோ எடுத்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரிடம் சில தகவல்களைத் திரட்டினேன். ஊர் திரும்பினோம்.

மறுநாள். சொக்கலிங்கமும் வந்தான். அதே ஸ்ரீவை. அதே ஆட்டோக்கார அண்ணாச்சி. அதே பொய்களே போதுமானதாக இருந்தது. அதே இடம். மண் எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். 24 மணி நேர சேவைபோல! சில புதர்களைப் போட்டோ எடுத்துவிட்டு, அதேபோக்கில் டிராக்டரையும்  எடுத்துவிட்டேன்.

கொள்ளையர்கள் பார்த்துவிட, நானும் சொக்கலிங்கமும் கேமராவும் கையுமாக மணல்வெளியில் உயிர்பயத்தில் தலைதெறிக்க ஓட, டிராக்டர்களும் லாரிகளும் எங்களைத் துரத்த… இந்தக்  கற்பனைக் காட்சிகள் எதுவும் நிகழவில்லை.

ஊர் திரும்பி, போட்டோவைக் கழுவக் கொடுத்தேன். மோசமில்லை. நான் திரட்டிய விஷயங்களை கோமதி சங்கரிடம் சொன்னேன். அப்போது மணல் கடத்தலுக்கு எதிராக கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீவை தாசில்தாரிடம் கோமதி சங்கர் பேசினார். கட்டுரையை அனுப்பினோம். வெளிவந்தது. ஜூவியில் ஒன்றரைப் பக்கம். நான் எடுத்த புகைப்படம். கீழே மாணவ நிருபர் ஐகானோடு என் பெயர்.

என் தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட்டம் தோன்றியதுபோல இருந்தது. அன்று கடத்தல்காரர்களிடம் சிக்கியிருந்தால் தலை இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

(அந்தக் கட்டுரை கைவசம் இல்லை. அதன் ஸ்கேன் பிரதியை நாளை தருகிறேன்.)

நான் யார்?

Mugil

இந்த உலகத்தில் எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி இதுதான்.
எங்கிருந்து வந்தேன்?
எங்கே இருக்கிறேன்?
எங்கே சென்று கொண்டிருக்கிறேன்?
நான்
என்பது என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என் ஆழ்மனத்தின் அடியோட்ட இடைவெளியில் அமர்ந்து ஆசனம் செய்தபடியே யோசித்தபோது கிடைத்த பதில்கள்…

தூத்துக்குடியிலிருந்து வந்தேன். சென்னையில் இருக்கிறேன். தினமும் அலுவலகம் முடிந்ததும் பனகல் பார்க் வழியாக அசோக் நகருக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நான் என்பது ஆழ்வார்ப்பேட்டை சூர்யாஸ் ஹோட்டலில் முப்பத்துச் சொச்ச ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு பதார்த்தம்.

என்ன செய்ய, தமிழ் சினிமா கொஞ்சம் அதிகமாகப் பார்த்து மாசுபட்டுக் கிடக்கும் மனம், ஆரம்ப பில்ட்-அப் இன்றி எதையும் எழுத விடமாட்டேன் என்கிறது. சரி, என்னைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக.

பிறந்த ஊர் கோவை. வளர்ந்தது படித்தது எல்லாம் தூத்துக்குடி. வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் (1997-2000). பின்பு அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் (2000-2002). மென்பொருள் துறையில் மனம் அவ்வளவாக லயிக்கவில்லை. காரணம் எழுத்தின் மீதிருந்த ஆர்வம்.

ஐந்தாவது படிக்கும்போதிருந்தே டைரி எழுத ஆரம்பித்துவிட்டேன். தினசரி நிகழ்வுகளை அல்ல. என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவேன். அவற்றில் பலவற்றை கவிதை என்று இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறைக்கு எனது அம்மா வழி தாத்தா – ஆச்சி வீட்டுக்கு வெகு ஆர்வமாகச் செல்வேன். காரணம், புத்தகங்கள். 60, 70, 80களில் கல்கி, குமுதம், விகடன்களில் வந்த தொடர்கதைகளைத் தனியாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்த குண்டு குண்டு புத்தகங்களில் எனது வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது.

பள்ளி அளவில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கவிதை மட்டுமல்ல, என்ன போட்டி வைத்தாலும் நானும் பெயர் கொடுத்து கலந்துகொள்வேன், பாட்டுப் போட்டிகளில்கூட. கல்லூரி எனது கவிதை ஆர்வத்தை வளர்த்தது. சுதந்தர தின பொன்விழா கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாவது பரிசு பெற்றது. அப்போதிருந்து, கல்லூரி அளவுகளில் பல்வேறு ஊர்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளுக்கு எனது கல்லூரி சார்பாகச் செல்லும் போட்டியாளராக மாறினேன். வாங்கிய பரிசுகள் சொற்பமே.

எம்.எஸ்.சி படிக்கும்போது விகடன் மாணவ நிருபர் திட்டத்துக்கு குஜராத் பூகம்பம் பற்றி ஒரு கட்டுரையை இணைத்து விண்ணப்பம் செய்தேன். அடுத்தடுத்த சுற்றுகளில் தேர்வாகி, மாணவ நிருபரானேன்.

2003ல் சென்னை வந்தேன். 78 சதவிகித மதிப்பெண்களோடு எம்.எஸ்.சி. முடித்திருந்தேன். சாப்ட்வேர் இன்ஜினியராக மாறுவேன் என்பது என் பெற்றோர்களின் கனவு. ஆனால் எனக்குத் தூக்கத்தில்கூட அப்படி ஒரு கனவு வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையில் சும்மா இருந்தேன். பொழுதைப் போக்க டேட்டா என்ட்ரி வேலைக்கும் சென்றேன். அப்பா பணமெல்லாம் அனுப்பவில்லை. காரணம், அடிக்கடி நானே தூத்துக்குடி சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்.

பின்பு எனது (விகடன் மாணவ நிருபர்) தோழி கார்த்திகா மூலமாக கோகுலம் சுஜாதா, கல்கி ஏக்நாத் அறிமுகம் கிடைத்தது. அங்கே எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் சீதா ரவிக்கு என் எழுத்து பிடித்திருந்தது. கல்கி இதழோடு சென்னை வாசகர்களுக்கு மட்டும் வாராவாரம் இலவச இணைப்பு ஒன்றைத் தயார் செய்யத் திட்டமிட்டார்கள். அது ’சென்னை ஸ்கேன்’. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தார்கள். அப்போது அதற்காகத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் ஆர். முத்துக்குமார், மருதன், ச.ந. கண்ணன்.

கல்கியில் எங்கள் எழுத்தைக் கண்ட பா.ராகவன், கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். பின்பு நான் கிழக்கில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். மற்ற மூவரும் பிறகு இணைந்தார்கள். கிழக்கு முதன்மைத் துணை ஆசிரியராக என் பயணம் தொடர்கிறது.