சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’

சினிமாவுக்குப் போன…

(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன!)

தெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா  அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம்  பற்றி கேட்க வேண்டுமா? மர்ம நபர் இயக்கும் ரயில்போல காலம் கடந்துசெல்வதை  அதில்  உணர்ந்து பீதியடைய முடிகிறது.

பிரெட் பஜ்ஜி மடித்து வந்த காகிதத்தில் ரேரெவின் ஏப்ரல் மாதக் கட்டுரை அகப்பட்டது. தான் தங்கியிருந்த தெருவோரங்களை, உல்லாச விடுதிகள் குறித்து அதில் பீற்றியிருந்தார் ரேரெ. அவர் சிறுவயதில் திருட்டு தம் அடிக்க ஒதுங்கும் இடத்தில் தன் வாத்தியாரைத் திட்டி கரித்துண்டால்  எழுதுவாராம். குப்புறப்படுத்துக்கொண்டு ஹோம்வொர்க் எழுதுவாராம். அப்படியே  குறட்டைவிட்டு விடுவாராம். எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவரது நெடுங்கனவாக இருந்திருக்கிறது. சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான் அது சாத்தியமாகியிருக்கிறது.  ஏறக்குறைய எனக்கும் அந்த அனுபவம் உண்டு. சினிமாவில்தான் யாரும் எழுத்துப் பிழைகளைக்  கண்டுகொள்வதில்லை.

எனக்குச் சிறுவயதில் கிறுக்குவதற்கென தனி இடமே இருந்ததில்லை. எதிர்வீட்டு போலீஸ்காரர்  வீட்டுச்சுவரில் கவிதை எழுதி ஏகப்பட்ட முறை அடி வாங்கியிருக்கிறேன். கோயில் பிரகாரம்  எனக்கு பிரசாதம் தரும் இடமாகத் தெரிந்ததே தவிர, எழுத்துப் பிரசவத்துக்குத் தோதான இடமாகத்  தோன்றவில்லை. வீட்டுக் கொல்லையில் மாமரம் மீது ஏறியமர்ந்து எழுதியிருக்கலாம். மாங்காயின்  சுவை என்னை எழுதவிடவில்லை.

பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த உடன் செய்துகொண்ட வசதி, நான்கு கோடு போட்ட நோட்டு  ஒரு டஜன் வாங்கிக் கொண்டேன். கையெழுத்தைச் சரிசெய்ய. அதற்கு ஒரு மேஜை தேவை என்பதை உள்மனம் குத்திக்காட்டியது. தவணை முறையில் வாங்கினேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து  தப்பின்றி, எனக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை எழுதிப் பார்த்து குதூகலித்தது இன்றும் பசுமையாக, நாஞ்சில்நாட்டு பலாச்சுளையின் சுவைபோல நினைவில் நிற்கிறது.

பல வருடங்களாக வேறு வழியின்றி, வீட்டின் ஒற்றைப் படுக்கை அறையில் கணிப்பொறி வைத்து  அமர்ந்து டைப் அடித்துப் பழகினேன். தூங்க வேண்டும் என்றால் மானிட்டரை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட வேண்டும். இந்த வசதியின்மைகள் என்னை ஓர் இலக்கியவாதியாக மாற்றியதில் ஆச்சரியமில்லை. வசதிகளைத் தேற்றுவதற்காக நான் திரைத்துறையை ‘அரைக்கண்’ணால்  வாஞ்சையோடு நோட்டமிட்டுக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.

சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதை எதையெல்லாம் அடையலாம் என்று பகல் கனவு  காண்பது எனக்கு நாவல் எழுதுவதைவிட சுகானுபவமாக இருந்தது. சின்ன வாய்ப்பு ஒன்று  கிடைத்தபோதுகூட நான் என் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்கத் தயங்கவே இல்லை. எழுதுவதற்குத்தான் யோசிக்க வேண்டும், பேசுவதற்கு அல்ல.

லால் பார்க், கப்பன் பார்க், நாகேஸ்வர ராவ் பார்க், மாநகராட்சி பார்க் என்று ஒரு பார்க்கைக்கூட  விடாமல் கொட்டாவி விட்டபடி காவியங்கள் படைத்த எனக்கு கீரின் பார்க்கில் ரூம்போட்டு எழுத  வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. வெறி என்பதுகூட மிகையில்லாத சொல்தான். சினிமா வாய்ப்புகள் அனைத்தையும் சாத்தியமாக்கின. ஒரு நல்ல அறை ஓர் ஊற்றுக்கண். சுத்தமான கழிப்பறையோடு இணைந்த சௌகரியமான அறை, சொர்க்கம். கதைக்கான ஸீன் பிடிப்பது, கம்பா நதியில் மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. நாம் ஒரு நல்ல ஸீனைப் பிடித்துவிட்டோமென்றால் அந்த அறையும் ஸீனும் பின்னிப்பிணைந்து கொள்கின்றன. நினைவுகளின் ஏகாந்தக் கூட்டில் நிலைக்கின்றன.

‘கழுதைப்புலி’ எழுதும்போது சென்னையில் லொங்கடா ஓட்டல் ஒன்றில்தான் எனக்கு அறை  கொடுத்தார்கள். மாநகராட்சி பார்க்கைவிட அங்கே வசதிகள் குறைவுதான் என்றாலும் நறுமணங்களுக்குக் குறைவில்லை. வாடகையும் குறைவே. பஞ்சு இழந்த தலையணை, முடை நாற்றம் வீசும்  மெத்தை. நான்கில் ஒரு காலுக்குப் பதில் செங்கலால் அண்டை கொடுக்கப்பட்ட கட்டில்.  ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே பக்கத்து கட்டடத்தில் நடப்பதைப் பார்க்கும் சுதந்தரம்.  அனைத்தையும் சாத்தியப்படுத்திய அறைகூட எனக்கு சினிமாவின் கருவறையாகத்தான் தோன்றியது.

சமீபத்தில் தங்கிய தாஜ் கோரமண்டல் அறை என்னை வசீகரித்தது. எப்போதாவது இம்மாதிரி  விபத்துகளும் நேர்ந்துவிடுவது உண்டு. ஒருபக்கச் சுவர் முழுவதையும் என் முகத்தை எனக்கே  வெளிச்சம்போட்டுக் காட்டும் கண்ணாடி. பிடித்து கொதிக்கும் குழம்பில் போட்டுவிடலாமா என்று  நாக்கின் வெறியைத் தூண்டும் தொட்டி வண்ண மீன்கள். மார்கழி திருப்பாவைக் குளிரை ரிமோட்டில் கொண்டுவரும் ஏசி. இதையெல்லாம் இழந்து இத்தனைகாலம் அகம் பிரம்மாஸ்மி ருத்ரன்  போல தலைகீழாக நின்று தொலைத்த வாழ்க்கை உறுத்தலாக இருந்தது. தாஜில் என்னால் சிந்திக்கவே இயலவில்லை, வாழ்வைச் சுகித்துக் கிடந்தேன்.

வசதியான அறை ஒன்றை அனுபவித்துத் தீர்த்தபின் மனம் பூனைக்குட்டிபோல அதை நோக்கியே  பாய்கிறது. இப்போது மொட்டைமாடியில் எனக்கான அறையைக் கட்டிவிட்டேன். வீட்டின் கீழ்த்தளத்தில்  இருக்கும்போது நான் தக்காளி ரசம். மேல்தளத்தில் இருக்கும்போது பாதரசம். என்னை நானே  பிரித்துக் கொண்டேன். அறையில் இரண்டு புத்தக அலமாரிகள். ஒன்று குமுதம், விகடன், குங்குமத்துக்கானது. பரபரப்பை, சர்ச்சையைக் கிளப்ப ஏதாவது தூண்டுகோல் வேண்டுமே.  இன்னொரு அலமாரி எப்போதுமே பூட்டு கொண்டது. சாவி தொலைந்துவிட்டது. அது உலக  இலக்கியங்களுக்கானது.

என் அறையே சன்னல்களால் ஆனது போன்று பிரமிக்க வைக்கும். எப்போது வேண்டுமானாலும்  வெயிலும் வெள்ளை நிலாவும் வந்து போகலாம். இன்னும் கட்டுமானப்பணி முடியவில்லை. பக்கத்து  வீட்டு மரத்தில் காய்த்திருக்கும் கொய்யா அடிக்கடி கண்ணை உறுத்துகிறது. எதிர்வீட்டில் அலறும்  மெகா சீரியல் வசனங்கள். கேரளாவை நினைவுபடுத்தும் பக்கத்துவீட்டுப் பாட்டி. அவள் வளர்க்கும்  நாயின் நள்ளிரவு ஊளை. இயற்கையை இழக்க நான் விரும்புவதில்லை.

இந்த அறையின் வளர்ச்சியும் சினிமாவில் என் வளர்ச்சியும் ஒன்றுதான். வளர்ந்து கொண்டிருக்கி÷ றாம். எங்கு வேலை பார்த்தேன், என்ன வேலை பார்த்தேன் என்பதே நினைவிலிருந்து அழிந்து  கொண்டிருக்கிறது. சினிமா, ஒரு சமண முனிவனைப்போல என்னுள் தவமிருக்கிறது. சினிமா  எனக்கு வருமானம் தருகிறது. இரவு எனக்கு வெளிச்சத்தைத் தருகிறது. இரவெல்லாம் தூக்கத்தைத் தொங்கலில் விட்டுவிட்டு கூர்க்காவின் விசிலோசைகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இருளின் கருமை என் எழுத்துகளை,  பஞ்ச் டயலாக்குகளை கணிணியில் செதுக்குகிறது. இரவில் விழித்திருக்க விதிக்கப்பட்டவன், கத்திரி  வெயில் பல்லிளிக்கும் பட்டப்பகலில் தூங்கச் சபிக்கப்படுகிறான். கொசுக்கடியில் அவதிப் படுபவனும் கோடம்பாக்கத்துக்கு வாக்கப்பட்டவனும் இரவில் தூங்குவதில்லை.

இலக்கியம் நாயர் கடை பாக்கியைக்கூட தீர்க்க உதவவில்லை. அதில் கொஞ்சூண்டு பிராய்ந்து  எடுத்து கோடம்பாக்கத்தில் கடைவிரித்திருக்கிறேன். கல்லா நிறைகிறது. சினிமா என் நேசம் அல்ல.  எனக்கு சுவாசம் அல்ல. பேக்கரியைக் கடந்து செல்கையில் மூக்கைத் துளைக்கும் கேக்கின் வாசம்.  கேப்பைக்கூழும் இலக்கியமும் நல்லதுதான், நிலைத்த ருசி கொண்டதல்ல. எனக்கு கேக்தான் பிடித்திருக்கிறது. என்னால் கேக் இன்றி வாழ முடியாது.

இலக்குகள் இல்லாதவனுக்கு இலக்கியம் சுகம். எல்லாம் தேவைப்படுபவனுக்கு மசாலா சினிமாவே  முகம். அது வாழ்ந்து என்னை வாழ்விக்க!

தமிழர்களுக்காக கலைஞர் மீண்டும் உண்ணாவிரதம்!

தன் கட்சி தமிழர்களின் நலனுக்காக கலைஞர் இன்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

குறளின் 134வது அதிகாரம்!

134. தேர்தல் அதிகாரம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்
கூடி இருப்பதே காங்கிரஸ்.

இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்
யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு.

திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வருண்வாயினால் சுட்ட வடு.

வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை
எம்பி எனக்கேட்ட அய்யா.

அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்
முதன்மையாய் இருப்பச் செயல்

கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண
அடுத்த அணியில் சேர்ந்துவிடல்.

தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்
மதுரையில் தோன்றாமை நன்று.

எல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு
சாதிசன ஓட்டே ஓட்டு.

ஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி
பிற்பகல் தாமே வரும்.

அனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்
பயனும் பதவியும் அது.

கட்சிகளுக்கும் உண்டோ கொள்கைதாழ்? தேர்தலில்
பகைஅணியே இடம் தரும்.