ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம் – இது எனது புதிய புத்தகம். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 448 பக்கங்கள். 300 ரூபாய். கடைகளில், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்துக்காக நான் எழுதிய முன்னுரை இங்கே.

மீண்டும் ஹிட்லர்?
ஹிட்லரைப் பற்றிய புத்தகமா? ஏற்கெனவே சந்தையில் பல புத்தகங்கள் இருக்கிறதே. இன்னொரு புத்தகம் எதற்கு எழுதப்படவேண்டும்?

இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கும்முன் எனக்கான அடிப்படைக் கேள்விகூட இதுதான்.

பேசப் பேசத் தீராத விஷயங்கள் கொண்ட வாழ்க்கை – பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து எழுதினாலும் வீரியமும் சுவாரசியமும் குறையாத பாத்திரம் – இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினரையும் ‘இப்படிக்கூட ஒருவன் வாழ்ந்திருக்க முடியுமா?’ என்று நடுநடுங்க வைக்கும் குணாதிசயம் – கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பிறவி ஹிட்லர். ஆகவே, ஹிட்லரில் மையம் கொண்டேன்.

சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னைக் கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது. அது ஏன்? பின்னணி என்ன? இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது இப்புத்தகம்.

வளமிக்கக் குடும்பத்தில், பலமானவாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை? என்ன மாதிரியான மனநிலை?

இந்தப் புத்தகத்தில் ஹிட்லருக்குள்ளிருந்தும் பேசியிருக்கிறேன். ஹிட்லருக்கு வெளியிலிருந்தும் பேசியிருக்கிறேன். அறிந்த நிகழ்வுகளின் அறியப்படாத ரகசியங்களைப் விவரித்திருக்கிறேன். சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தைத் தந்திருக்கிறேன். பதியப்பட்ட காட்சிகளின் பதியப்படாத கோணங்களைக் காட்டியிருக்கிறேன். மறைக்கப்பட்ட உண்மைகளை, மறுக்கப்பட்ட சர்ச்சைகளைப் பதிந்திருக்கிறேன். அன்பர் ஹிட்லரின் அந்தரங்கத்தையும் அதனளவில் அணுகியிருக்கிறேன்.

தமிழ் வாசகர்களுக்கு ஹிட்லர் குறித்த புதிய தரிசனங்களை இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்…

முகில்
26.07.2014

*

புத்தகத்தை வாங்க :

SixthSense Publication :

10/2(8/2), Police Quarters Road

T.Nagar,Chennai-600017

(Backside of Nathella,South Usman Road)

Phone: 044-24342771, 044-65279654, 7200050073

10 % சலுகையில் வாங்க : chennaishopping.com

http://bit.ly/1sqTSiH

Dial For Books :

+91-94459 01234 | +91-9445 97 97 97

 

 

 

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 100

அல்வா.

இந்த ஒரு  வார்த்தையை வைத்துக் கொண்டு உங்கள் மனத்தில் தோன்றும் அர்த்தமுள்ள கேள்விகளைக் கேளுங்கள்.

உதாரணத்துக்கு…

அல்வாவைக் கண்டுபிடித்தது யாராக இருக்கும்? அல்வாவின் ஆதி வடிவம் எப்படி இருந்திருக்கும்? அது வேறு நாட்டின் இனிப்பு பதார்த்தம் என்றால் இந்தியாவுக்குள், தமிழ்நாட்டுக்குள் எப்படி புகுந்திருக்கும்? இல்லை, இங்கு நம்மவர்களின் பாரம்பரிய பதார்த்தம் என்றால், இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், பிற கண்டங்களுக்கும் எப்படி பரவியிருக்கும்? உலகில் இன்று எத்தனை விதமான அல்வாக்கள் உள்ளன?

இன்னும் பல கேள்விகள் உதிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதே, தேடித் தொகுப்பதே, தொகுத்ததைக் காட்சிப்படுத்துவதே ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் மையக்கரு. அல்வாவையே எடுத்துக் கொள்வோம். அல்வா என்றதும் நமக்கு திருநெல்வேலியின் நினைவும் நெய்யாக ஒட்டிக் கொண்டு வரும். ஆக, திருநெல்வேலிக்கு அல்வா எப்படி நுழைந்தது, எவ்விதம் பெயர் பெற்றது, திருநெல்வேலியில் அல்வா எப்படி தயாராகிறது என்பதையும் சேர்த்து காட்சிப்படுத்துவது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் சிறப்பு.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆரம்பமான முதல் எபிசோடிலிருந்தே பெருத்த வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோடுகளின் ‘ஆய்வு – எழுத்து’ பணியை அன்பிற்குரிய பா. ராகவன் மேற்கொண்டார். 31-வது எபிசோடிலிருந்து நிகழ்ச்சிக்கான ‘ஆய்வு – எழுத்து’ப் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். இதோ நாளைய எபிசோட் (16 மார்ச் 2014, ஞாயிறு) கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் 100வது எபிசோட். இந்த சிறப்பு எபிசோடில் பிஸ்கட்டின் வரலாறு பேசப்படுகிறது.

புதிய தலைமுறை டீவியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களாக புதுயுகம் டீவியில் வாரம் இருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அல்வா, பிஸ்கட், கத்தரிக்காய் என ஏதாவது ஓர் உணவுப்பொருளை எடுத்துக் கொண்டு அதன் வரலாற்றை, உணவுக் குறிப்புகளை கொடுப்பது ஒருவிதம். அல்லது, கும்பகோணம், தூத்துக்குடி, கோவா என்று ஊர்களுக்குச் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றைப் பேசியபடி, அந்தந்த மண்ணுக்கான பாரம்பரிய உணவுகளை, சிறப்பு சுவையைப் பேசுவது இன்னொரு விதம். இந்த இரண்டு விதங்களிலும் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

எபிசோடுகள் வளர வளர, இந்த நிகழ்ச்சிக்கான எழுத்துப்பணி மிகவும் சவாலானது. காரணம் ‘கூறியது கூறல்’ ஆகிவிடக்கூடாதல்லவா. அதே சமயம், நாம் கருவாக எடுத்துக் கொண்டிருக்கும் உணவு குறித்து வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு சமையல் செய்ய அதிகம் வாய்ப்பிருக்காது. உதாரணம், நாவல் பழம் குறித்த வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு பதார்த்தங்கள் அதிக அளவில் செய்ய இயலாது. ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டால், அதன் வரலாறு பேசலாம், அதைக் கொண்டு பதார்த்தங்களும் செய்யலாம். ஆனால், நினைத்த நேரத்தில் ஆரஞ்சைப் படம் பிடிக்க முடியாது. அதற்கான சீஸன் வரும்வரை காத்திருக்க வேண்டும் – அதற்கான நல்ல தோட்டம் கிடைக்க வேண்டும். தவிர, படப்பிடிப்பு குழுவினர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஊருக்கு ஓட வேண்டும். நேர நெருக்கடி. ஆக, அதற்கு ஏற்றாற்போலும் ‘பாடுபொருளைத்’ தேர்ந்தெடுக்க வேண்டும்.  இப்படிப் பல சவால்கள்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது விஷயங்களை யோசிப்பது, வரலாற்றைத் தேடிப் பிடிப்பது, அந்தந்த பாடுபொருளுக்கேற்ப விதவிதமான சுவாரசியமான வரலாற்றைச் சேர்ப்பது என மிகுந்த மனமகிழ்வுடன் இந்த ‘ஆய்வு – எழுத்துப்’ பணியை செய்து வருகிறேன். ‘அடை’ என்பதற்கான வரலாறு என்னவாக இருக்க முடியும்? டபரா செட் எப்படி உருவாகியிருக்கும்? சட்னியின் வரலாறு என்ன? அம்மிக்கு வரலாறு உண்டா? இந்திய சமையலறைகளுக்கு மிக்ஸி வந்த வரலாறு என்ன? இப்படிப் பலப்பல சுவாரசியமான கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது என்பது… எனக்குப் பிடித்திருக்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டோம் என்று எண்ணும்போது திருப்தி. மகிழ்ச்சி. மனநிறைவு. உணவும் வரலாறும் பேசும் தமிழின் முதல் நிகழ்ச்சி இதுவே. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கலாமே தவிர, இதைவிடச் சிறந்த நிகழ்ச்சியை உருவாக்குவது என்பது ஆகப்பெரிய சவால்.

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு (நான் அறிந்த/அறியாத ஒவ்வொருவருக்கும் என்) வாழ்த்துகள். நிகழ்ச்சியின் அகமாகவும் புறமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கு என் வாழ்த்துகள். புதிய தலைமுறை, புதுயுகம் சேனல்களுக்கு என் நன்றி.

இன்னும் பேசப்பட வேண்டிய சுவையான வரலாறு ஏராளம் இருக்கிறது. பணி தொடர்கிறது.

பாப்பா பாட்டு!

அழுது கொண்டிருந்த என் மகளைச் சமாதானப்படுத்தும் விதமாக நானே ஒரு பாடலை பாட ஆரம்பித்தேன். குழந்தை சமாதானமாவதுபோலத் தோன்றியது. எனக்குள் உற்சாகம். பாடல் வளர்ந்தது. இடையிடேயே பாடல் வரிகளுக்கேற்ப உடல்மொழியை மாற்றிக் கொண்டேன். குரலையும் மாற்றிக் கொண்டேன். என் மகளுக்கு பாடல் மிகவும் பிடித்துப் போனது. பல நேரங்களில் அவளைக் குஷிப்படுத்த, தூங்க வைக்க இந்தப் பாடலைத்தான் பாடுவேன். இதே பாடலை என் மனைவி பாடினால், மகள் தடுத்து நிறுத்தி விடுவாள். இது அவளுக்கு ‘அப்பா பாட்டு.’ அப்பா மட்டுமே பாட வேண்டும். சுமார் ஒரு வருடமாக இந்தப் பாடலை என் மகளுக்காக, மெருகேற்றி, நீட்டித்து பாடிக் கொண்டே இருக்கிறேன்.

இந்தப் பாடல் உங்களுக்குக் கூட உதவலாம். மெட்டு பற்றி கவலைப்பட வேண்டாம். குழுந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் பாடினால் போதும். விலங்குகளின் ஓசை, பறவைகளின் ஓசையைத் தேவைக்கேற்ப கலந்துகொண்டால், அப்படியே சின்னதாக நடனமாடினால், குழந்தைகள் குதூகலிப்பார்கள்.

பாடல் இதோ:

குயிலு என்ன பண்ணுச்சாம்?

குயிலு என்ன பண்ணுச்சாம்?

குக்கூ குக்கூ கூவிச்சாம்!

குக்கூ குக்கூ கூவிச்சாம்!

மயிலு என்ன பண்ணுச்சாம்?

மயிலு என்ன பண்ணுச்சாம்?

தைத்தை தைத்தை ஆடிச்சாம்!

தைத்தை தைத்தை ஆடிச்சாம்!

மான் என்ன பண்ணுச்சாம்?

மான் என்ன பண்ணுச்சாம்?

துள்ளித் துள்ளி ஓடிச்சாம்!

துள்ளித் துள்ளி ஓடிச்சாம்!

குரங்கு என்ன பண்ணுச்சாம்?

குரங்கு என்ன பண்ணுச்சாம்?

வாழைப்பழம் கேட்டுச்சாம்!

வாழைப்பழம் கேட்டுச்சாம்!

காக்கா என்ன பண்ணுச்சாம்?

காக்கா என்ன பண்ணுச்சாம்?

வடை வேணும் கேட்டுச்சாம்!

வடை வேணும் கேட்டுச்சாம்!

குருவி என்ன பண்ணுச்சாம்?

குருவி என்ன பண்ணுச்சாம்?

அரிசி கொத்தித் தின்னுச்சாம்!

அரிசி கொத்தித் தின்னுச்சாம்!

கரடி என்ன பண்ணுச்சாம்?

கரடி என்ன பண்ணுச்சாம்?

தேன் வேணும் கேட்டுச்சாம்!

தேன் வேணும் கேட்டுச்சாம்!

ஆமை என்ன பண்ணுச்சாம்?

ஆமை என்ன பண்ணுச்சாம்?

மெதுமெதுவா நகர்ந்துச்சாம்!

மெதுமெதுவா நகர்ந்துச்சாம்!

தவளை என்ன பண்ணுச்சாம்?

தவளை என்ன பண்ணுச்சாம்?

தாவித் தாவி குதிச்சுச்சாம்!

தாவித் தாவி குதிச்சுச்சாம்!

சிங்கம் என்ன பண்ணுச்சாம்?

சிங்கம் என்ன பண்ணுச்சாம்?

(சிங்கம்போல கர்ஜித்து) கத்திச்சாம்!

(சிங்கம்போல கர்ஜித்து) கத்திச்சாம்!

யானை என்ன பண்ணுச்சாம்?

யானை என்ன பண்ணுச்சாம்?

(யானைபோல பிளிறி) கத்துச்சாம்!

(யானைபோல பிளிறி) கத்துச்சாம்!

முயல் என்ன பண்ணுச்சாம்?

முயல் என்ன பண்ணுச்சாம்?

கேரட் வேணும் கேட்டுச்சாம்!

கேரட் வேணும் கேட்டுச்சாம்!

வாத்து என்ன பண்ணிச்சாம்?

வாத்து என்ன பண்ணிச்சாம்?

குவாக் குவாக் கத்துச்சாம்!

குவாக் குவாக் கத்துச்சாம்!

***

பாடல் இத்துடன் முடிவதில்லை. கொக்கு, கோழி, நரி, புலி, எறும்பு, அணில், சிறுத்தை, பூனை, நாய் – என சேர்த்து பாடிக் கொண்டே போகலாம்.

ஏதாவது புத்தகங்களில் பறவைகள், விலங்குகளைப் பார்க்கும்போதோ, டிஸ்கவரி, அனிமல் பிளானெட் வகையறா சேனல்களைப் பார்க்கும்போதோ, அதில் வரும் உயிரினங்களுக்கான பாடல் வரியை நான் பாட, என் மகள் அதைப் பொருத்திப் பார்த்து புரிந்துகொள்கிறாள்.

ஏட்டுக் கல்வியைவிட, பாட்டுக் கல்வி என்றைக்குமே சிறந்ததுதானே!

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.

சரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா!

இங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.

தன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா?, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள்?, லைட்டை எப்போது அணைப்பீர்கள்? ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா? – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

தொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)

என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.

மகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.

அடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.

விடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.

அம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.