ச்சீய்…

* கலைஞர் தன் பரிவாரங்கள் சூழ கார்களில் வந்து, கிழக்கு பதிப்பக ஸ்டால் வாசலில் பார்க் செய்து, ‘திராவிட இயக்க வரலாறு’ வாங்கிவிட்டுப் போகலாம் என்னுமளவுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 10) புத்தகக் கண்காட்சி காலியாகத்தான் இருந்தது.

* ‘பாரா ஏகத்துக்கும் புகழ்ந்துக்கிட்டிருக்காரே, திசை காட்டிப் பறவை இருக்குதா?’ என்று கேட்டபடியே ஆழி ஸ்டாலுக்குள் நுழைந்தார் வலைப்பதிவர் சுரேகா. பேயோனின் புதுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். பாரா இன்று தான் பார்த்தவர்களிடமெல்லாம் பேயோனுக்குத் திசை காட்டிக் கொண்டிருந்தார். ‘முன்னுரையே அவ்வளவு பிரமாதம். அதுக்கே கொடுத்த காசு சரியாப் போச்சு’ என்றார் (விலை ரூ. 100). பேயோன் பாராவைத் தன் கொ.ப.செ.வாக நியமித்துள்ளாரா, அல்லது பாராதான் பேயோனா, இல்லை பாராவுக்கும் பேயோனுக்கும் என்ன உறவு என்றெல்லாம் என்னிடம் வினவினார் ஒரு வலைப்பதிவர்.

* ‘பேயோன்னா யார்னே எனக்குத் தெரியாது. மூஞ்சி தெரியாத ஒரு எழுத்தாளரோட புக்கை நான் எதுக்கு வாங்கிப் படிக்கணும்’ என்பது ஹரன் பிரசன்னாவின் கமெண்ட். எனில் இட்லிவடையின் முகம் பிரசன்னாவுக்குத் தெரியும். அல்லது பிரசன்னாவுக்குத் தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பழக்கம் உண்டு என்பது இங்கே நிரூபணமாகிறது. 😉

* நக்கீரனில் எழுத்தாளர் ஜெகாதாவை முதன் முதலில் சந்தித்தேன். (ஜெகாதா என்றால் ஜெயகாந்தனின் தாசன் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்.) முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தோம். புனைவுகளுக்கான மார்க்கெட் குறைந்துவருவது குறித்து வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார். ‘ஒரு காலத்தில் கதைகள் தவிர வேறெதையும் எழுத மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்த என்னையே வெவ்வேறு விஷயங்களை எழுத வைத்துவிட்டார்கள். இன்றைக்கு அபுனைவுகள் காலத்தின் தேவையாகிவிட்டது’ என்றார்.

* ஸ்பெக்ட்ரம் புத்தகம் குறித்து ஞாநி, பத்ரியுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுடன் நின்று கொண்டிருந்த நண்பர் பாஸ்கர் சக்தியைச் சந்தித்தேன் (சனி அன்று). குதிரை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். இன்னும் பத்துநாள் ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொன்னார். இந்த மார்ச்சில் அழகர்சாமி குதிரையுடன் தியேட்டர்களில் இறங்கலாம்.

* நக்கீரனில் புதிதாக வந்துள்ள சில புத்தகங்கள் கவர்கின்றன. அதில் ஒன்று ஆதனூர் சோழன் எழுதியுள்ள Mr. மனிதன். கற்காலம் முதல் நவ நாகரிகம் வரையிலான மனித இன வரலாறு என்று அட்டை சொல்லியது. ஆதனூர் சோழன் எழுதிய இன்னொரு புத்தகம் ஜோதிபாசு. இயக்குநர் மகேந்திரனின் புதிய நாவல், ‘அந்தி மழை’யை நக்கீரன் வெளியிட்டுள்ளது. சின்னக்குத்தூசி அவர்களில் வெவ்வேறு சுவை கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு ‘பூக்கூடை.’

* கல்கிக்கு முந்தா நேத்து சன் டீவி வழியே ரஜினி மார்கெட்டிங் செய்துள்ளார். இந்த ‘ரஜினி வாய்ஸ்’ மூலம் பொன்னியின் செல்வன் விற்பனை அதிகரிக்கும் என்றெல்லாம்… அடப்போங்க சார். பொன்னியின் செல்வன் – புத்தகக் கண்காட்சியின் நிரந்தர சூப்பர் ஸ்டார்! நக்கீரனில் இந்தமுறை சிறிய தலையணை சைஸுக்கு கெட்டி அட்டை பொன்னியில் செல்வன் – மலிவு விலை பதிப்பாக ரூ 225க்கு கொண்டு வந்திருக்கிறார்கள். புரட்டிப் பார்த்தேன். வேகமாகத் திருப்பினாலோ, நகம் பட்டாலோ காயமடைந்துவிடும் அளவுக்குக் காகிதத் தரம் இருந்தது. நக்கீரன் ஸ்டால் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கடந்த வார இறுதி விற்பனை அமோகம் என்றார். அந்த பொன்னியின் செல்வன் 500 பிரதிகளாவது விற்றிருக்கும் என்றார். காகிதத் தரம் பற்றி வருத்தத்தையும் சொன்னேன். பரிசளிப்பதற்காகவே நிறைய பேர் வாங்கிச் செல்வதாகச் சொன்னார்.

மெகா சைஸ்.. க்ளிக்கிப் பார்க்கவும்

* கிழக்கு நேர் எதிரே Gift Books என்று ஒரு ஸ்டால் இருக்கிறது. பல பிரம்மாண்டமான புத்தகங்கள் சட்டென கவனம் ஈர்க்கின்றன. பெரும்பாலும் காஃபி டேபிள் புத்தகங்கள்தாம். எடுத்து, மேசையில் வைத்து, ஆசை ஆசையாகப் புரட்டிப் பார்த்து, தடவி மகிழ்ந்து, சமர்த்தாக மூடிவைத்துவிட்டு வந்துவிடலாம். வாங்க நினைப்பது வெங்காயத்தனம்!

* கடந்த சில தினங்களில் நான் கவனித்த ஒரு விஷயம், அகம் புறம் அந்தப்புரம் வாங்கிச் செல்பவர்களில் பெரும்பாலோனோர் கணவன் – மனைவியாக இருக்கிறார்கள். ஒன்று கணவனோ, அல்லது மனைவியோ, அல்லது இருவருமோ, ரிப்போர்ட்டரில் தொடரை முழுமையாக (அல்லது பகுதி அளவில்) வாசித்தவர்கள். சீனியர் சிட்டிசனாக என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கண்காட்சியில் சந்திக்கும்போது அதிர்ச்சியடையத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் நான் அதிகம் கையெழுத்திட்ட புத்தகம் அ.பு. அந்தப்புரம்தான். வாசகர்களின் அன்புக்கு நன்றி.

* கணவன் – மனைவிக்கு மட்டும் என்று அட்டையிலேயே குறிப்பிடப்பட்ட இரா. த. சக்திவேல் என்பவர் எழுதிய கவிதைப் புத்தகம் கண்ணில்பட்டது. தலைப்பு : ச்சீய்… புரட்டிப் பார்த்தேன். சில வரிகள் ஈர்த்தன. இருந்தாலும் கவிதை எழுதும் பழக்கத்தையும் கவிதைப் புத்தகங்கள் வாங்கும் வழக்கத்தையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதால் ச்சீயை வைத்துவிட்டேன். தவிர, வாங்கிச் சென்றால் என் மனைவி கோபித்துக் கொள்ளக்கூடும். ஏனென்றால் அவளுக்கு நானே ஒரு கவிதை! ;)))

பாராவின் ‘அப்பன்’ மனசு!

சென்னை புத்தகக் கண்காட்சி 2011, ஜனவரி 8, 9 – சில குறிப்புகள்.

* வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல் மேட்ச் பார்க்க வந்த கூட்டம்போல, சனி ஞாயிறு இரண்டு தினங்களும் சென்னை புத்தகக் கண்காட்சி களை கட்டியது. பார்க்கிங் இடம் கிடைக்காமல் பல கார்கள் திணறிக் கொண்டிருந்தன. என்னதான் கூட்டம் கூடினாலும் நாங்கள் இரண்டு டிக்கெட் கௌண்டர்களுக்கு மேல் திறக்கவே மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பபாஸி, வாசகர்களை வாசலிலேயே நீண்ட க்யூவில் நிற்க வைத்து கடுப்படித்தது.

* வெளியே ப்ளாட்பார கடைகளிலும் ஜேஜேவெனக் கூட்டம். பழைய ஆங்கில நாவல்களும், புகழ்பெற்ற புத்தகங்களின் போலிகளும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தன. சட்டென என் கவனத்தைக் கவர்ந்த ஒரு புத்தகம் – தமிழர் நோபல் பரிசு பெற வழிகள். புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். கையில் எடுத்துப் பார்க்கவில்லை. எனக்கு நோபல் ஆசையில்லாததால், புத்தகத்தை வாங்கத் தோன்றவில்லை.

* இந்த இரு தினங்களிலும் பெங்களூரு வாசகர்கள் அதிகம் வந்திருந்தார்கள். ஞாயிறு இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தால், பெங்களூரு தமிழர் பலர் புத்தக மூட்டைகளோடு ரயிலேறும் அற்புதக் காட்சியைக் கண்டிருக்கலாம். கொசுறு செய்தி : பெங்களூருவின் ஆதி தமிழர், தற்போதைய ‘காந்தி கொலை வழக்கு’ புகழ் எழுத்தாளர் என். சொக்கன், ஜனவரி 11, 12 தினங்களில் சென்னை விஜயம் செய்கிறார்.

* கிழக்கு பதிப்பகத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நெருக்கமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் பல வாசகர்கள், எவையெல்லாம் புதிய புத்தகங்கள், எவை பழைய புத்தகங்கள் என்று பெரும்பாலும் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைகிறார்கள். தங்களுக்குத் தேவையானவற்றை வேகமாக தேடி எடுத்துவிட்டு, விருட்டென பில் போட்டு, கார்டு தேய்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். ‘இதோ இருக்கிறது கிழக்கு’ என்று நேரே கிழக்கு தேடி வந்து புத்தகம் வாங்கும் வாசகர்களையும் பார்க்க முடிகிறது.

* பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கிறது ராஜ ராஜ சோழன். கிழக்கின் தற்போதைய நெம்பர் ஒன் புத்தகம் இதுவே. எழுதிய நண்பர் ராஜ ராஜ கண்ணனுக்கு வாழ்த்துகள்.

* என்னுடைய இந்த வருடப் புத்தகமான கிளியோபாட்ராவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சனியன்று டாப் டென்னில் இருப்பதாக ஹரன் பிரசன்னா தகவல் சொன்னார். கடந்த செவ்வாய் அன்றே புத்தகத்தை வாங்கிச் சென்ற நண்பர் ரகு (உதவி இயக்குநர்), ஞாயிறு அன்று கண்காட்சி வந்தார். கிளியோபாட்ரா குறித்த தன் விமரிசனத்தைச் சொன்னார். (இதுவே எனக்குக் கிடைத்த முதல் விமரிசனம்.) ‘ஒரே நாளில் ஒரே மூச்சில் படித்துவிட முடிந்தது. புத்தகத்தின் மூலம் கிளியோபாட்ராவின் வாழ்க்கைக்கு ஈடாக, சீஸரின் வாழ்க்கையையும், ஆண்டனியின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில் எகிப்தில் உட்கார்ந்துகொண்டு ரோமின் வரலாற்றைப் படித்ததுபோல உள்ளது.’

* புரட்சிக்குக் குறைவாக எதையும் சம்மதிக்காதே! என்ற வாசகத்தில் மேலே லெனினில் ஓவியம். அருகில் பகத் சிங் ஓவியம். இரண்டுமே சுவரில் மாட்டக்கூடியவை. கீழைக்காற்றில் கிடைக்கின்றன. அருகிலேயே ‘நாகரிக கோமாளி’ விசிடி கிடைக்கிறது. இந்தப் படம் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாங்கிப் பார்க்க வேண்டும். கூடவே சார்லி சாப்ளின் டிவிடிக்களும் கிடைக்கின்றன. The Great Dictator இருக்கிறதா என்று தேடினேன். இல்லை.

* சில புத்தகங்களைப் பார்த்தாலே எடுத்துப் பார்க்க வேண்டும் என்று  தோன்றும். அந்த வரிசையில் கிழக்கில் பலரும் எடுத்துப் பார்க்கும் புத்தகம் ‘பேய்.’ ஓரளவு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சில புத்தகங்களை பார்த்தாலே வாங்க வேண்டும் என்று தோன்றும். அந்த வரிசையில் வந்துள்ள இந்த வருடப் புத்தகம் ‘தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி.’ (ஆசிரியர் – தழிழ் பேப்பரின் ‘பெண்மனம் புகழ்’ தமிழ் சுஜாதா). அழகான கட்டமைப்புடன், தெளிவான அச்சுடன் வந்துள்ள இந்தப் புத்தகத்தைப் பரிசாக பலருக்கும் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் சிபாரிசு.

* சென்ற கண்காட்சியில் ஒரு கடையில் சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. இந்தமுறை இதுவரை என் கண்ணில் படவில்லை. பத்ரி, சனி அன்று பெரிய சைஸ் லயன் காமிக்ஸ் தொகுப்புடன் (விலை ரூ. 200) வந்தார். யாரிடமோ சொல்லிவைத்து வாங்கியதாம். லக்கிலுக் வழியாக அவர் கைக்கு வந்ததாம். அந்த காமிக்ஸ் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கவில்லை.

* ரெண்டு புள்ளைங்க. ரெண்டு பேரும் ஓட்டப்பந்தயத்துல வேகமா ஓடுறாங்க. அதைப் பார்க்குற அப்பனோட மனசு, எந்தப் புள்ளை முதல்ல வந்து ஜெயிக்கணும்னு நெனைக்கும்? அப்படிப்பட்ட அப்பன் மனசுடன் கிழக்கில் இருவர்  திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் பாரா. ஒருநாள் அவருடைய புள்ளை ஆர்எஸ்எஸ் முதலில் ஓடி வந்தால், மறுநாள் காஷ்மீர் ஓவர்டேக் செய்கிறது. இன்னொருவர் ஆர். முத்துக்குமார். திராவிட இயக்க வரலாறு பாகம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே கடும்போட்டி (பெரும்பாலான வாசகர்கள் இரண்டு பாகங்களையும் வாங்கிச் செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்). மருதனுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. சென்ற முறை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள், இந்தமுறை தானாகவே முதல் உலகப் போரில் குதித்துவிடுகிறார்கள்.

* இந்தக் கண்காட்சியிலும் கதவு திறந்துதான் கிடக்கிறது. காத்து வரவில்லை. கண்ட கண்ட…

சுஜாதாவின் கொலைகள்

சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.

* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை? இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.

CLOSED

* கடந்த செவ்வாய் முதல் வெள்ளிவரை கண்காட்சியில் கூட்டம் இல்லை, அவ்வளவாக இல்லை, இல்லவே இல்லை. வெளியில் அமைக்கப்பட்டுக்கும் (நான்கோ, ஐந்தோ) டிக்கெட் கௌண்டர்களில் இரண்டு மட்டுமே இயங்கின (சில சமயம் ஒன்று மட்டும்). மற்றவை ‘CLOSED’  என்ற அறிவிப்புடன் காணப்பட்டன. ‘HOUSE FULL’ என்று பலகை மாட்டும் காலமெல்லாம் பு.கண்காட்சிக்கு வருமா என்ன?

* சென்ற வருடம் கிழக்கில் ‘ராஜீவ் கொலை வழக்கு’தான் பெஸ்ட் செல்லர் என்று ஓரிரு நாள்களிலேயே சொல்ல முடிந்தது. இந்தமுறை அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் ஹீரோயிஸம் காட்டுகிறது. சனி, ஞாயிறு கடந்தால்தான் தெரியும். பந்தயத்தில் முன்னணியில் உள்ள கிழக்கு புத்தகங்கள் :  காஷ்மீர், ஸ்பெக்ட்ரம், திராவிட இயக்க வரலாறு, ஆர்எஸ்எஸ், ராஜ ராஜ சோழன், முதல் உலகப் போர்.

சமர்ப்பணம் சொக்கனுக்கு..

* கிழக்கின் சினிமா புத்தகங்களில் இந்த வருடமும் தீனதயாளனின் ‘கமல்’ அதிகம் விற்பனையாகிறது. அதனுடன் போட்டி போடுவது ‘நான் நாகேஷ்.’ (கல்கியில் தொடராக வந்த நாகேஷின் அதிகாரபூர்வ வாழ்க்கை. தொகுப்பு எஸ். சந்திரமௌலி.) கடந்த ஐந்து வருடங்களாக ‘சொல்லிக்கொள்ளும்படியாக’ விற்பனையான சந்திரபாபு இந்தவருடம் விற்பனைக்கு இல்லை. வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

* கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. மாயவலையையும், அகம் புறம் அந்தப்புரத்தையும் வாசகர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்லும்போது…. ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கக்கூடும்.

*  நேற்று கிழக்கில் ஓர் அம்மணி ஆர்வமாக நுழைந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து கேள்விப்பட்டு வந்திருப்பார்போல. உள்ளே செல்லவில்லை. நேராக பில் கௌண்டருக்கு வந்து நின்றார். தன் கையிலிருந்த சிறு நோட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். ‘கொலையுதிர் காலம், மீண்டும் ஒரு கொலை எடுங்க. மேற்கே ஒரு குற்றம் இருக்கா?’ – இதுபோன்ற ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்.

* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘மனவாசம்’ புத்தகமும் அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் வாசம் ரூ. நூறுக்கும், இரண்டாவது ரூ. எழுபதுக்கும் கிடைக்கிறது. மேலும் சில கண்ணதாசனின் புத்தகங்களும் புதிய கட்டமைப்புடன் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளன.

* கடந்த நான்கு நாள்களில் நான்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் ரேவதியின் ‘அப்பள ராஜா’, ‘இசையைக் கேட்குமா பாம்பு?’ – சிறுகதை நூல்கள். இரண்டுமே நடைபாதைக் கடையில் கிடைத்தன. ஹோவர்ட் ஃபாஸ்டின் ‘ஸ்பார்ட்டகஸ் ’ (தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு) – என்.சி.பி.ஹெச்சில் வாங்கினேன். இன்னொரு நூல், அசோகமித்திரன் தொகுத்துள்ள ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அதிலிருந்து சா. கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதை நேற்றிரவு படித்தேன். இன்னும் மனத்துக்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது.

அமைதிப் பேச்சாளர் நாஞ்சில்

* நேற்று கண்காட்சியில் நண்பர் தளவாய் சுந்தரம் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கே நிற்கிறார் என்றால் அருகில் ‘இலக்கிய நிகழ்வு’ ஏதோ நடப்பதாக அர்த்தம். எட்டிப் பார்த்தேன். உயிர் எழுத்து ஸ்டாலில் நாஞ்சில் நாடனின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மனுஷ்யபுத்திரனின் முன்னிலையில் நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஓர் அமைதியான குரல். பேசியது நிச்சயமாக அருகில் நின்றவர்களுக்குக்கூட கேட்டிருக்காது. இந்த அடக்கத்துக்காகவே இவருக்கும் வருடந்தோறும் சாகித்ய அகாடமி கொடுக்கலாம்.

* இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சியில்தான் இருப்பேன். சந்திக்கலாம்.

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.

கருணாநிதியிடம் ஒரு கேள்வி; கலைஞரிடம் ஒரு கேள்வி.

என்றோ வாழ்ந்துவிட்டுப் போன அரசர்களின் ஆட்சி, அரசியல் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் நேற்று வாழ்ந்துவிட்டுப்போன, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அரசியலில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய நிறையறிவு எனக்குக் கிடையாது. தெரிந்துகொள்ள பேராசை உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்காகக் (இரண்டு பாகங்கள்) காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க முக்கிய தலைவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன.

பெரியாரிடம் ஒரு கேள்வி

ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகக் குரல் கொடுத்ததில் தங்களுடைய முன்னோர் என்றால் அது அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய வழிமுறைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் முன்வைத்த தமிழ் பௌத்தத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

அண்ணாவிடம் ஒரு கேள்வி

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – இது தாங்கள் சொன்னதுதான். கடவுளே கிடையாது என்ற பாரம்பரியத்தில் இருந்துவந்த நீங்கள், இதுபோல விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலைகள் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா? கொண்ட லட்சியங்களை நிறைவேற்ற கட்சி அரசியல் துணை போகாது என்று உணர்ந்த தருணம் உண்டா?

கருணாநிதியிடம் ஒரு கேள்வி

எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆரைக் காட்டிலும் அதிகம் புரிந்தவர்கள் நீங்கள். அப்படியிருக்கும்போது யாரை நம்பி (அல்லது எதனால்) எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து விலக்க முடிவுசெய்தீர்கள்? தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக என்றேனும் நினைத்திருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி

கடவுளுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்ட திராவிட இயக்கத்துக்குள் இருந்துகொண்டே, மூகாம்பிகையையும் சங்காராச்சாரியையும் தொழுது, ஆட்சியிலும் நீடித்தது உங்களுடைய பலமா? திராவிட இயக்க ஆதரவாளர்களின் பலவீனமா?

வைகோவிடம் ஒரு கேள்வி

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி தாங்கள்தான் என்று காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்றவை எல்லாம் மார்தட்டிக் கொள்ளும்போது, கட்டமைப்பு ரீதியாக மாநிலம் முழுக்க மதிமுகவைப் பரப்பியிருக்கும் நீங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

கலைஞரிடம் ஒரு கேள்வி

டெல்லியில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் சாதுரியம், பேச்சுத்திறன், ஆங்கிலப்புலமை என்ற மூன்று விஷயங்களும் அத்தியாவசியம். ஈ.வெ.கி. சம்பத், முரசொலி மாறன், வைகோ போன்றவர்கள்தான் திமுகவின் டெல்லி முகங்கள். இருவர் மறைந்துவிட்டார்கள். வைகோ விலகிவிட்டார். இவர்களைப் போல திறமைவாயந்த வேறு எவரும் திமுகவில் இன்று இல்லை அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. ஆக, திமுகவின் டெல்லி அரசியல் இனி எடுபடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தலைவர்களிடம் இருந்து என் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. ஆர். முத்துக்குமாரின் புத்தகங்கள், இதற்குரிய விடைகளைக் கொடுக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க வரலாறு முதல் பாகம் (ரூ. 200), இரண்டாம் பாகம் (ரூ. 200)