கம்யூனிஸத்துக்குத் தடை!

‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற திரைப்படத்தில் நான் எழுதிய முதல் திரைப்படப் பாடலான ‘போகாமல் ஒருநாளும்’  என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. சென்ற வாரம் படத்தின் பாடல்கள் வெளியாயின. எனது பாடல் வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் குமாருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். முதல் படம், ‘துள்ளித் திரிந்த காலம்.’ அதில் ‘ஜெயந்த்’ என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார். கணேஷ் குறித்த எனது பழைய பதிவு ஒன்று இங்கே.

ஏதோ செய்தாய் என்னை – படத்துக்காக ஜாலியான காலேஜ் பாடல் ஒன்று தேவைப்பட்டபோது கணேஷ் என்னை அழைத்தார். சற்றே சவாலான விஷயங்கள் எழுத வேண்டியிருந்தால் என்னை கணேஷ் அழைப்பது வழக்கம். ‘வழக்கமான பல்லவி, சரணம் பாணியில் பாடல் அமைய வேண்டாம். இந்தப் பாடலை நான் Reggae வடிவத்தில் கொடுக்கப் போகிறேன். நீங்கள் எழுதுங்கள். எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. மெட்டை பிறகு யோசித்துக் கொள்ளலாம்’ – கணேஷ் எனக்கு கட்டற்ற சுதந்தரம் வழங்கினார்.

அவர் சொன்ன Reggae பாடல் வடிவம் குறித்து அப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஜமைக்காவைச் சேர்ந்த ஓர் இசை வடிவம் என்று தெரிந்துகொண்டேன். சில Reggae பாடல்களைக் கேட்கச் சொல்லி கணேஷ் பரிந்துரைத்தார். கேட்டேன். சில ஐடியாக்கள் தோன்றின. டைரக்டர் எல்வின், கணேஷ், நான் மூவரும் கலந்துரையாடினோம். ‘ஒரு கல்லூரியின் பல்வேறு இடங்களை, கல்லூரி வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை கேலியாக இரண்டிரண்டு வரிகளில் சொல்வதாகப் பாடலை அமைக்கலாம்’ என்று முடிவு செய்தோம்.

திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரைத் துணைக்கழைத்துக் கொண்டு, பழமொழிகள், பழைய பாடல்கள் உதவியுடன் வரிகளை எழுதினேன். மெட்டுக்குள் உட்கார வேண்டும், மீட்டர் இடிக்கக்கூடாது போன்ற சங்கடங்கள் இல்லாததால் எளிதாகவே பாடல் வரிகள் வந்து விழுந்தன. ஒரு சில திருத்தங்களுக்குப் பிறகு பாடல் என் தரப்பில் முழுமை பெற்றது. அதன்பின் கணேஷ்தான் அதனை இசையமைக்க மிகவும் மெனக்கிட்டிருக்க வேண்டும். பாடலின் Chorus-ஆக வரும் ஆங்கில வரிகளை, ஜார்ஜியனா எழுதினார்கள். இவர்கள், பாடகி ஷாலினியின் அம்மா என்பது தகவலுக்காக. படத்தில் வரும் ஒரு ஆங்கிலப் பாடலும் இவர்களது கைவண்ணமே.

கல்லூரி ஜாலி பாடலுக்கு நாங்கள் 2010ன் ஆரம்பத்தில் வைத்த பெயர் College Anthem. (அதாவது லவ் அன்தேம், சச்சின் அன்தேம் எல்லாம் வருவதற்கு முன்பாகவே தோன்றிய யோசனை இது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் மை லார்ட்! 😉 )

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கல்லூரிகளின் பெயரை எல்லாம் ராப் பாணியில் வேகமாக அடுக்கி, This is an anthem for every college என்று சொல்லிவிட்டு பாடலுக்குள் செல்லலாம் என்பது என் யோசனை. ஏனோ அது நிறைவேற்றப்படவில்லை. பாடல் ஏற்கெனவே நீளமாக இருப்பதே காரணமாக இருக்கலாம்.

சரி, நான் எழுதிய பாடல் வரிகள், பாடலின் முறையான வடிவம் இதுதான். பாடலை இங்கே கேட்டுக் கொண்டே, வரிகளைப் படித்துக் கொள்ளுங்கள். கீழே வாருங்கள்… இன்னும் சில விஷயங்களை வைத்திருக்கிறேன்.

படம் : ஏதோ செய்தாய் என்னை

பாடல் : முகில்

Chorus வரிகள் : ஜார்ஜியானா

Opening

ராத்திரி நேரம் தூக்கம் எதுக்கு?

போதும் உறக்கம் – போர்வை விலக்கு.

இளமை இருக்கு! இரவைச் செதுக்கு!

Verse 1

Canteen

போகாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

போண்டாவில் வாய் வைக்க வேண்டாம்

டீ என்னும் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டாம்

டிரீட்டுன்னா கேன்டீனா? வேண்டவே வேண்டாம்

Verse 2

Hostel

தீராது விளையாட்டு தினமும்தான் இங்கே – திருட்டு

தம்முக்கும் பியருக்கும் என்றென்றும் பங்கே

எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் – கம்யூனிஸம்!

எல்லோரும் நம்ம சொந்தம் – ஹாஸ்டலிஸம்!

Verse 3

Exam

காக்க காக்க – காக்க காக்க – கைபிட்டு காக்க

நோக்க நோக்க – நோக்க நோக்க – Next Bench நோக்க!

Distinction வாங்கத்தான் அலையுது ஒரு குரூப்பு

Just Pass போதுமடா – சொல்லுறான் நம்ம மாப்பு!

Verse 4

Arrears

அரியர்ஸ் வெச்சா தப்பில்ல

அதை வைக்காத வாழ்க்கையிலே கிக் எதுவும் இல்லை

அரியர்ஸ் இல்லா ஸ்டூடண்ட் அரை ஸ்டூடண்ட்

அதை முடிக்காத ஸ்டூடண்ட் Ever ஸ்டூடண்ட்

Pre Chorus

Library புத்தகத்தில் Love Letter விதைப்போம்

Physics Labக்குள் Chemistry வளர்ப்போம்

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Verse 5

Class Room

Class Room என்பது சட்டசபை போல!

வெளிநடப்பு செய்வதே தினம் எங்கள் வேலை!

போர்டில் உள்ள பாடத்தை நோட்டில் எழுத மாட்டோம்

நெஞ்சில் உள்ள காதலை Bench-ல் எழுதி வைப்போம்

Verse 6

Boys & Girls

Boys

எந்த ஃபிகருமே நல்ல ஃபிகருதான் லவ்வரா நினைக்கையிலே

அவ நல்லவளாவதும் கெட்டவளாவதும் Love Propose செய்கையிலே

Girls

எந்தப் பையனுமே ரொம்ப உத்தமன்தான் லவ் சொல்லும் போதினிலே – நாங்க

Yes சொன்ன பின்னாலே ஜொள்விட்டுப் போறானே இன்னொருத்தி பின்னாலே!

Pre Chorus

Collage Culturals – சைட் அடிக்கும் Carnival

Collage Election – Politics Practical

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Interlude

Bridge

கட் அடிப்போம் சைட் அடிப்போம்

பிட் அடிப்போம் பியர் அடிப்போம்

ஆனாலும் படிப்போம் காலேஜை முடிப்போம்

மம்மி டாடி கனவை மறக்காம மதிப்போம்

Pre Chorus

ஆயிரந்தான் வந்தாலும் விலகாது நட்பு

ஆயுளுக்கும் நம்ம கைவிடாது நட்பு

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

***

சிடிக்களிலும் சரி, இணையத்தில் கிடைக்கும் பாடலிலும் சரி, சன் மியூஸிக்கில் ஒளிபரப்பப்பட்டதிலும் சரி, பாடலில் எந்தவித பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் இந்தப் பாடல் சென்சாரில் சிக்கித் தவித்ததாகக் கேள்விப்பட்டேன். தியேட்டருக்கு வரும்போது சில இடங்களில் மௌனமான வாயசைப்புடன்தான் பாடல் ஒலிக்குமாம்.

சட்டசபை குறித்த வரிக்கு ஆட்சேபணை தெரிவித்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அது பொய்த்தது.

அதில்லாமல் மூன்று இடங்களில் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்களாம்.

1. ராகிங் என்ற வார்த்தை பாடலில் வரக்கூடாதாம்.

2. திருட்டு தம், பியர் என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாதாம்.

3. கம்யூனிஸம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாதாம்.

ராகிங் என்ற வார்த்தையின்றி கல்லூரி குறித்த பாடல் முழுமை பெறாது என்பதால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தவிர, இந்தப் பாடல் மூலமாகத்தான் ராகிங், நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. நேரடியாகவோ, இலைமறை காயாகவோ ராகிங் இன்றுவரை கல்லூரிகளில் ஓர் அங்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது.

பாடலில் அடுத்து தம், பியருக்கு தடை போட்டிருக்கிறார்கள். அது இந்தச் சமூகத்துடனும் சினிமா காட்சிகளுடனும் பின்னிப் பிணைந்ததல்லவா. எனில், தற்போது வெளிவரும் படங்களில் பாதி காட்சிகள் வெட்டியெறியப்பட வேண்டுமே. திரையில் தோன்றி சிகரெட் பிடிக்கலாம், மது அருந்தலாம். அதற்கு ‘மது, புகை கேடு’ என்ற ரீதியான அறிவிப்பைப் போட்டுக் கொண்டால் போதுமானது. ஆனால் அவற்றை பாடலில் உபயோகித்தால் தெய்வ குற்றம் என்பதைப் புரிந்துகொண்டேன். நாட்டில்தான் புகை, மதுவை முற்றிலுமாகத் தடை செய்ய முடியவில்லை. டாஸ்மாக்கை வைத்துதான் அரசாங்கமே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலாவது மது, புகை, ராகிங் உள்ளிட்டவை இன்றி புனிதப் பாடலாக வெளிவருவதில் எனக்கு சந்தோஷமே.

ஆனால் அடுத்த விஷயம்தான் எனக்குப் புரியவில்லை. இந்த ‘கம்யூனிஸம்’ என்ன பாவம் செய்தது? ‘எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் கம்யூனிஸம்’ என்பது பொதுவாகச் சொல்வதுதானே. அதில் என்ன பிரச்னை? கம்யூனிஸம் என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் உள்ள அரசியல் சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

தோழர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒருவேளை, யாருக்குமே புரியாத வகையில் டைலோமோ, டயோரியா, ங்கொக்கமக்கா, ங்கொய்யால வகையறா வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் கொண்டு பாடல் எழுதப்பட்டிருந்தால் ஆரத்தழுவி வரவேற்றிருப்பார்கள்போல.

பின்குறிப்பு :

1. இப்படியெல்லாம் சென்சார் கட் கிடைத்தால் அதை வைத்து ஏதோ சர்ச்சை கிளப்புவதும், படத்துக்கான பப்ளிசிட்டி தேடுவதும் சினிமாக்காரர்களின் இயல்பு. ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் விஷயத்தை என்னிடம் எளிமையாக எடுத்துச் சொன்ன நண்பர் கணேஷுக்கு என் நன்றிகள்.

2. திவாகர் என்ற நண்பரும் இந்தப் படம் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். அவர் எழுதிய ‘காதில் மட்டும் இன்பமா’ – ஏற்கெனவே பலரது காதுகளிலும் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்துவிட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

 

வாகை சூட வா – விமரிசனம்

செங்கலோடு செங்கலாக சூளையில் வெந்து கொண்டிருக்கும் பாவப்பட்ட மக்களின் அறிவுக் கண்களை, கல்விக் கண்களைத் திறக்கப் போராடும் ஓர் இளைஞனின் கதையை செஃபியா டோனில் செதுக்கியிருக்கும் அற்புதப் படைப்பு.

கிராமத்துக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை வைத்து ‘சர்க்கார்’ வேலை வாங்கிவிடலாம் என்ற நிர்பந்தத்தால் ‘கண்டெடுத்தான்காடு’ கிராமத்துக்குள் வாத்தியாராக நுழைகிறார் விமல். அந்த அப்பாவி மக்கள், சூளை முதலாளியிடம் (பொன்வண்ணன்) வாங்கிய கடனுக்காக அடிமைப்பட்டு, அவரைக் கடவுளாக நினைத்துக்கொண்டு காலமெல்லாம் பிள்ளை குட்டிகளோடு கல் அறுத்துக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்க்கிறார். அவர்கள் ஏமாற்றப்படுவதை ப் பெரும்பாடுபட்டு உணர வைக்கிறார். குழந்தைகளைக் கல்வியின் பக்கம் இழுக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளும் திருப்பங்களும், அந்த மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை உருவாக்குவதுதான் கதை.

கண்டெடுத்தான்காடு சூளையின் சூட்டை, ஏசி தியேட்டரின் ரசிகனும் உணருமளவுக்கு இயல்பான திரைப்படத்தைத் தந்த இயக்குநர் சற்குணத்தை காலத்துக்கும் பாராட்டலாம். களவாணியில் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இரண்டாவது படத்தில் கமர்ஷியலாக இறங்காமல், குழந்தைத் தொழிலாளர்கள் மேல் அக்கறை கொண்டு படம் எடுத்ததற்காக அவருக்கு ஓராயிரம் பூங்கொத்து. பாரதிராஜாவைப் போல, கிராமத்துக் காவியங்களைப் படைக்க கோலிவுட்டுக்கு இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார்.

‘விவரங்கெட்டவர்’ என வெள்ளந்தி மக்களிடமே பெயரெடுக்கும் அச்சுபிச்சு வாத்தியார் கதாபாத்திரத்தில் பிசகின்றிப் பொருந்துகிறார் விமல். தன்னிடம் குறும்பு செய்யும் சிறுவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது, ஆடு துரத்த பயந்து ஓடுவது, கதாநாயகியிடம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பது என எந்தவித ஹூரோயிஸமும் இல்லாத கேரக்டர். உடல்மொழியில் ஜெமினியை நினைவுபடுத்துகிறார். டயலாக் டெலிவரியிலும் வெரைட்டி காட்டினால் அடுத்தடுத்த உயரங்களுக்குச் செல்லலாம்.

அழகைக் குறைக்கும் ஒப்பனையிலும் அழகழகான பாவனைகளால் அம்சமாகக் கண்களில் நிறைகிறார் அறிமுக நாயகி இனியா. சோறு கொடுக்காமல் விமலைச் சுற்ற விட்டு, பின் காதல்கொண்டு விமலையே சுற்றிச் சுற்றி வரும் கிராமத்துக் குறும்புப்பெண் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். விருதுகள் நிச்சயம்.

கதாநாயகனின் அப்பாவாக வெகுசில காட்சிகளில் வந்து போனாலும் பாக்யராஜுக்கு நினைவில் நிற்கும் பாத்திரம். குருவிக்காரர், டூநாலெட்டு, வைத்தியர் என சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அத்தனை இயல்பு. இவர்கள் எல்லோருக்கும் மேலே போட்டியே இன்றி முதலிடம் பெறுபவர்கள் படத்தில் வாழ்ந்துள்ள சிறுவர்கள்தாம்.

1966ன் கிராமம் அச்சு அசலாகத் திரையில் விரிகிறது. களிமண் காடு, பனையேறும் மீன், அழுக்கு மக்கள், அகண்ட ஆகாயம், மின்சாரமறியாத இரவு, பாடல் காட்சிகள் என கேமராமேன் ஓம்பிரகாஷ் ரசித்து ரசித்துப் படமாக்கியிருக்கிறார். ரேடியோ, ஷேவிங் கத்தி, பவுடர் டப்பா, பாத்திர பண்டங்கள், தூண்டில், டப்பா பஸ் என ஒவ்வொரு விஷயத்தையும் உருவாக்கிய கலை இயக்குநர் சீனுவுக்கு இது முதல் படமாம். அசத்தல்.

‘செங்கசூளைக்காரா…’ என்ற ஆரம்பப் பாடலிலேயே தனித்துத் தெரிகிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். எந்தப் பாடலும் சோடைபோகவில்லை. ‘போறானே’, ‘சாரக்காத்து’ பாடல்கள் எல்லாம் ‘என்றும் இனியவை’ பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

ப்ளாக் அண்ட் ஒயிட் பழைய பாடல்களை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தியிருப்பது ரசனை. ‘நான் பேச நினைப்பதெல்லாம்…’  – காதல் தூதுப் பாடலாகியிருப்பது கவிதை. சுட்டுவைக்கப்பட்டிருக்கும் செங்கல்களுக்கிடையில் ஒரே ஒரு செங்கலில் மட்டும் ‘அ’ எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சிலிர்ப்பு. எந்தக் காட்சிகளும் ‘க்ளிஷே’வாக இல்லாமலிருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் சற்றே வேகம் குறைவான திரைக்கதையின் போக்கு மட்டும் மைனஸ். குழந்தைகளின் படிப்பறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘பளீர்’ காட்சிகள் இல்லையென்பது ஏமாற்றம்.

இருந்தாலும் ஆயிரம் கருப்பு வெள்ளை சினிமாக்கள் செய்யாத தமிழர்களின் கலாசாரப் பதிவை இந்த ஒற்றைப் படம் அருமையாகச் செய்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில் தமிழ் கிராமங்கள் இப்படித்தான் இருந்தன என்று காட்சிப்படுத்தும் செல்லுலாய்ட் ஆவணம் இனி இதுவே. கமர்ஷியலாக ‘வாகை சூடா விட்டாலும்’, நல்ல திரைப்படம் என்ற வகையில் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

ரஜினிகாந்த் 1982

‘புதியவர்கள் சிலர் வந்து என்னை நடிக்க அழைத்தார்கள். நீங்கள் நடிப்பதாகச் சம்மதம் தெரிவித்தால் போதும், பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

என் பெயரை விளம்பரப்படுத்தி என்னைக் கொண்டு ஆதாயம் பெற வேண்டும் என்பது இவர்களது முதல் குறிக்கோள். எனக்கு ஆதாயமாக இருக்கக்கூடிய பெரிய பேனர்களை நான் தேர்ந்தெடுப்பதில் என்ன தப்பு? டென்ஷன் எல்லாம் எனக்குப் பிடிக்காது. என் படத்தை இடைஞ்சல்கள், தகராறு இல்லாமல் ஒழுங்காக எடுத்து முடிப்பார்களா என்பதில்தான் நான் அக்கறை செலுத்துவேன். என் பட முதலாளிகளுக்கு எப்படிப்பட்ட கேரக்டரில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பது தெரியாமல் போகுமா.

என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான காரெக்டர்கள், லட்சியப் படம், புதுமைப் படைப்பு என்றெல்லாம் நான் வீணே அலட்டிக் கொள்வதில்லை.’

-ரஜினிகாந்த் (மே 1982-பொம்மை)

(நன்றி: பா. தீனதயாளன்)

பாலா ஒரு யானை!

அவனப் பத்தி நான் பாடப் போறேன் – இவன பத்தி நான் பாடப் போறேன் – அவனும் சரியில்ல இவனுந்தான் சரியில்ல… யாரைத்தான் நான் இப்போ பாடப்போறேன்…

தெரிஞ்சேதான் யுவன், இப்படி ஒரு பாட்டை போட்டுக் குடுத்துருக்காருபோல! அதையும்புரிஞ்சுதான் பாலா, அந்தப் பாட்டை படத்துல உபயோகிக்கவும் இல்ல.

ஹி..ஹி...

படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல ‘டியா டியா டோலே’வென விஷால் குத்தாட்டம் போட ஆரம்பிச்சாரு. அடுத்து ஆர்யா தன் பங்குக்கு காதில் ஹெட்ஃபோனோடு.  அப்புறமா ஆர்யாவும் அவரு அம்மாவும் நாக்கை மடிச்சு ரொம்ப நேரத்துக்கு குத்தாட்டம் போட்டாங்க. ஆட ஆட நமக்குத்தான் மூச்சு வாங்குது. இந்தக் குத்தாட்டங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது (ஓ, இதுதான் கண்டினியூட்டியா!). இதனால் அறியப்படும் நீதியென்னென்னா, விளிம்புநிலை மனிதர்கள் தம் சோகத்தில், சந்தோஷத்தில், பசித்தால், தூக்கம் வந்தால், வயிறு கடமுடாவென்றால், வாந்தி வந்தால்கூட குத்தாட்டம் போடுவார்கள்.

அம்பிகா – பீடி வலிக்குறப்போ தியேட்டரில்  கைதட்டல், ஆர்யா – பூட்டைத் திறக்குறப்போ கைதட்டல், விஷால் – மேடையில நவரச ஆக்டிங் கொடுக்குறப்போ, மரமேறிகிட்டே அழுறப்போ கைதட்டல் – இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட இடங்கள்ல கைதட்டல். நான்கூட டைட்டில் கார்டுல டைரக்‌ஷன் பாலான்னு  போட்டதுல இருந்து, கிளைமாக்ஸ்ல  எ ஃபிலிம் பை பாலான்னு வர்ற வரைக்கும் விடாம கைதட்டிக்கிட்டே இருந்தேன், இண்டர்வெல்லகூட! ஏன்னா இது பாலா படமாச்சே!

படத்துல திடீர்னு சூர்யா நடிச்ச அவரோட வெளம்பரம் ஒண்ணு  பத்து நிமிஷத்துக்கு வந்துச்சு. அது அவரோட அகரம் பவுண்டேஷன் வெளம்பரம். அதுக்கடுத்ததா சரவணா ஸ்டோர்ஸ் வெளம்பரம், நவரத்னா தைல கூல்கூல் வெளம்பரம், ஜோதிகாகூட காப்பி குடிக்கிற வெளம்பரமெல்லாம் தொடர்ந்து வரும்னு நினைச்சு ஏமாந்துட்டேன். அந்த பத்து நிமிஷ அகரம் வெளம்பரம்கூட படத்தோட கதைய எந்த விதத்துலயும் பாதிக்கக்கூடாதுன்னுதான், பாலா படத்துல கதைன்னு ஒண்ணை கமிட் பண்ணிக்கவே இல்ல.

தலைகீழா நின்னு ஆர்யா, நான் கடவுள்ல அவார்டு பெர்பார்மென்ஸ் பண்ணிட்டாரு. ‘மச்சி எனக்கொரு பெர்பார்மன்ஸ் சொல்லேன்’னு விஷாலு அவருகிட்ட கேட்க… அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. இந்தப் படத்துல எதுக்காக விஷால் மாறுகண்ணோட நடிச்சாருன்னு நாமெல்லாம் அதே கண்ணோட்டத்துடன் படம் பார்த்தா ஒருவேளை புரியலாம். அதுல அவரோட உடல்மொழி, குரல்ல எல்லாம் பெண்மைத் தன்மைவேற! பின்நவீனத்துவமா இருக்குமோ? என்ன எழவுக்குன்னு யாமறியோம்; யாமம் அறியலாம்.

அடிமாடைக் கடத்துறாங்க. அதைவைச்சு அடிவயித்தைப் பிசையுற மாதிரி எதாவது சொல்லுவாங்களோன்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் செம ட்விஸ்ட் ஒண்ணு வந்தது. ப்ளூ கிராஸ்காரங்க வந்து மாடுங்களையெல்லாம் அவுத்து உட்டுட்டாங்க. மாடுங்க எல்லாம் பட்டிக்குள்ள இருந்து கூட்டமா வெளியேறுன சமயத்துல, ரசிகர்களும் அதேமாதிரி வெளியேறி இருக்கணும். அஞ்சறிவு ஜீவனுங்களுக்கு இருந்த அறிவு, ஆறறிவு ரசிகர்களுக்கு இல்ல. ஏன்னா இது பாலா படமாச்சே!

விஷாலோட நடிப்பு? அதையெல்லாம் பாராட்டலாம். ஆனா இங்க என்ன ‘தனிநடிப்பு போட்டியா’ நடக்குது. அவரு ஸ்டேஜ் ஏறி ஸோலோவா திறமையைக் காட்டுறதுக்கு. கதையே இல்லாத படத்துல அவரு கதறிக் கதறி நடிச்சாலும் எதுவுமே ஒட்டலியே. ஆர்யா வேற தன் பங்குக்கு பாறைமேல நின்னு பத்து நிமிஷத்துக்கு திறமை காட்டுறாரு. அந்த பெரிய மனுஷன் ஹைனஸும்  (பேரென்ன, ஆங்.. எம்.ஜே. குமாரு!) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு?  ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல்!!! (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க!)

பலகோடி மதிப்புள்ள மரம் உள்ள லாரியை எடுத்துக்கிட்டு விஷால் போனாரே, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க. நான் கடவுள்ல ஆர்யா, வில்லனை புதர் மறைவுல எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுனாரோ, அதையேத்தான் இதுல விஷாலும் பண்ணிருக்காருன்னு புரிஞ்சுக்கணும். ஆர்கே எதுக்கு, ஹைனஸோட ப்ளாஷ்பேக் என்ன, காதலிகளோட தேவை என்ன – இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா பாலா பட கதாநாயகப் பாத்திரம் யாராவது வந்து என் குரல்வளையைக் கடிச்சுத் துப்பிருவாங்களோன்னு பயப்படுறதால…

தியேட்டரை விட்டு வெளியேவரும்போது, என்னோட சக ரசிகர்கள் எல்லாரோட முகத்தையும் பார்த்தேன். வெள்ளைத்துணியால தாடையோட சேர்த்து தலைல ஒரு கட்டு போட்டுருந்துச்சு. நெத்தியில ஒத்த ரூபாயும் தெரிஞ்சுது. நான் என் கட்டை அவுத்துட்டு, என்  நெத்தியில இருந்த ஒத்த ரூபாய எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வீட்டுக்கு நடந்தேன்.

ஒல்லியாகவே இருந்தாலும் பாலா ஒரு  யானை. யானைக்கும்…

(பின்குறிப்பு : இதுவரை பாலாவின் படங்களை நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவையாகத்தான் பார்த்திருக்கிறேன். அவன் இவன் தந்த ஏமாற்றத்தின் விளைவே இந்த விமரிசனம்.)

ஆரண்ய காண்டம்

* ‘இது ஒரு வித்தியாசமான படம். தமிழில் இதுவரை செய்யப்படாத முயற்சி’ – என்றெல்லாம் டைரக்டர் எங்கேயும் பேட்டி கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவே நிஜம்.

* ஒரு கதாபாத்திரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், என்ன உடல்மொழி தேவை, என்ன மேனரிஸம் – எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து மெனக்கிட்டுச் செதுக்கியிருக்கும் இயக்குநரின் உழைப்பு அபாரம். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வுக்கென தனி விருது இருந்தால் இந்தப் படத்துக்குக் கொடுக்கலாம்.

* வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் அள்ளுகின்றன. (வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.) சில முக்கியமான இடங்களில் புரியவில்லை. வசனம் புரியாமல் போனதால் படத்தின் கதை ஓட்டமே பலருக்குப் புரியவில்லை என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

* வர வர சினிமாக்களில் சிறுவர், சிறுமியராக நடிக்கும் சைல்ட் ஆர்ட்டிஸ்களிடம் மாஸ் ஹீரோக்கள் எல்லாம் டியூசன் போக வேண்டும்போல. இந்தப் படத்தில் கொடுக்காப்புள்ளியாக வரும் சிறுவன் அசால்ட்டாக அசத்துகிறான். டயலாக் டெலிவரியிலும், முக பாவனைகளிலும் ஏக உயரத்தில் நிற்கிறான், ஸாரி நிற்கிறார்.

* காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதை என்பதால் படத்தை முதல் ஸீனிலிருந்து பார்த்தால் மட்டுமே கதையைப் புரிந்து படத்தோடு ஒன்றிப் போக முடியும். அரைமணி நேரம் கழித்து சாவகாசமாக தியேட்டருக்குள் நுழைந்த பின்வரிசை நபர்கள், ‘கதையே இல்லாம என்னத்தை படம் எடுத்திருக்கானுக…’ என்று டைரக்டரை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

* படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் பின்னணி இசை. பாடல்களே இல்லாத ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா. வாழ்த்துகள். ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் சித்தம் கலங்கடிக்கும் இடிஇசையைத் திணிக்காமல், புத்தம்புது விதமாக வயலினும் பிற வாத்தியங்களும் அந்தக் குரூரத்தை மென்மைப்படுத்துகின்றன. இம்மாதிரியான முயற்சிகளை யுவன் தொடர வேண்டும்.

* கேமரா வினோத். புதியவர் என்று நினைத்தேன். வசந்தின் ரிதம், அப்பு படங்கள் செய்துவிட்டு, பின் ஹிந்திக்குச் சென்றவர் என்றது கூகுள். பல காட்சிகள் இருள் சூழ்ந்தவை இருந்தும் மணிரத்னத்தனமாக இல்லாதது பெரிய ப்ளஸ்.

* சிறிய படம்தான். இருந்தாலும் எடிட்டர்கள் (பிரவீன், ஸ்ரீகாந்த்) சில காட்சிகளை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பொறுமையிழந்து கத்தும்போது தோன்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சியில், சம்பத் உயிர் பிழைக்க ஓடும் காட்சியில் ஏதோ வித்தியாசமாகச் சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. அது என்னவென்று என் பாமர அறிவுக்குப் புரியவில்லை.

* படத்தில் மெல்லிய நகைச்சுவையை வசனங்கள் மூலமாகவே ஆங்காங்கே கிரீம்போல தடவியிருப்பது இறுக்கத்தைக் குறைக்கிறது.

* நடிப்பில் முதலிடம் பசுபதியாக வரும் சம்பத்துக்கு. அடுத்தது கொடுக்காப்புள்ளியாக அந்தச் சிறுவனுக்கு. மூன்றாவது கஜேந்திரன் பாத்திரத்தில் வரும் ராம்போ ராஜ்குமாருக்கும், சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவுக்கும்.

* இந்தப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்து ஓடினால் ரசனை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மகிழலாம். குழந்தைகளை அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பெண்கள் இம்மாதிரி படங்களை ரசிக்க மாட்டார்கள் என்று நாம் என்ன சொல்வது?

* தியேட்டரில் சென்று பார்த்தால் மட்டுமே ஆரண்ய காண்டத்தை உணர்ந்து ரசிக்க முடியும். டிவிடியிலோ, பிற்காலத்தில் டீவியில் ஒளிபரப்பாகும்போதோ பார்த்தால் நிச்சயம் பொறுமையைச் சோதிக்கவே செய்யும். ஆகவே நல்ல சினிமா ரசிகர்களே…