சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

தலைநகரம் ‘100′

ஒரு சதுர மைல் என்றால் 640 ஏக்கர். இருபத்தெட்டு சதுர மைல் என்றால்? பெருக்கினால் கால்குலேட்டர் காட்டும் எண் 17920 ஏக்கர். 1911ல் டெல்லியில் நடக்கவிருந்த தர்பாருக்காக அவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்பட்டது.

எதற்காக என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, தர்பார் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

தர்பார் என்பது பெர்சிய மொழிச்சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் அரசர் தலைமையில் கூடுவார்கள். பொதுவாக அரசரைப் புகழ்ச்சியால் சொறிந்து விடுவார்கள். விருந்தினரைச் சந்திப்பார்கள். ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் என்றால் கேளிக்கையாகக் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். அவ்வப்போது மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது நிறைவேற்றப்படுவதும் உண்டு.

பிரிட்டிஷார், தங்களை இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, இந்த தர்பார் கலாசாரத்தைத் தாங்களும் பின்பற்ற நினைத்தார்கள். மகிழ்ச்சியான விஷயங்களைக் கொண்டாடுவதற்கு மட்டும் இந்தியாவில் தர்பாரைக் கூட்டலாம் என்று முடிவெடுத்தார்கள். 1877, ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. இந்தியாவின் பேரரசியாக குயின் விக்டோரியா அறிவிக்கப்பட்டார். தர்பாரில் பல மகாராஜாக்களும், சில ராஜாக்களும் கலந்து கொண்டு அந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள்.

1903ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங்காக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் கர்ஸன்.

ஆனால், கிங் ஏழாம் எட்வர்டும் தர்பாருக்கு வராமல் அல்வா கொடுக்க, கர்ஸன் நொந்து போனார். எட்வர்ட்டுக்குப் பதிலாக அவரது சகோதரர் இளவரசர் ஆர்தர் வந்தார். தர்பார் ஒப்புக்கு நடந்தது.

1911ல் அடுத்த தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும், குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவிக்க வேண்டுமல்லவா. எவ்வளவு கொண்டாட்டமான விஷயம் அது. யாரங்கே, டெல்லியில் அடுத்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் தர்பாரைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

அணிவகுப்பு மரியாதை

அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக ஹார்டிங் (ஏச்ணூஞீடிணஞ்ஞு) இருந்தார். கிங்கின் இந்தியப் பிரதிநிதியாக பொறுப்பில் இருந்த அவர், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்து தன் ‘ராஜ விசுவாசத்தை’ அரங்கேற்ற நினைத்தார். 1911, டிசம்பரில் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தன.

டெல்லியின் வடக்குப் பகுதியில் மாபெரும் நிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலிலேயே பார்த்தோமே, 17920 ஏக்கர். அப்போதுதான் அங்கு மக்காச்சோள அறுவடை முடிந்திருந்தது. அந்த விளைநிலத்தைச் சமப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாயின. எங்கெங்கு என்னென்ன எப்படியெப்படி அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வரைபடமும் தயாரானது.

தேவையான இடங்களில் தற்காலிகப் பாதைகள் அமைக்கப்பட்டன. நாற்பது மைல்களுக்கு தார்ச்சாலை போடப்பட்டது. அடுத்ததாக இருப்புப் பாதைகள் முளைக்க ஆரம்பித்தன. பதினாறு குட்டி ரயில் நிலையங்கள் தோன்றின. தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு ரயில்கள் வர ஆரம்பித்தன.

கிங் ஜார்ஜ் தங்குவதற்காகவும், பதவியேற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப்பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் 233 இடங்களில் தனித்தனியே முகாம்கள் அமைப்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தான மகாராஜாக்களும் ராஜாக்களும் குட்டி ராஜாக்களும் தங்குவதற்காக அந்த முகாம்கள்.

அதிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற இருபத்தொரு குண்டு மரியாதை கொண்ட பெரிய சமஸ்தான மகாராஜாக்களுக்குரிய முகாம்கள் என்பது சற்றே பெரியதாக, கிங் முகாமுக்கு அருகிலேயே இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல தரம் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கூலியாள்கள், கூடாரங்கள் அமைப்பதற்காக வெட்டவெளி மொட்டை வெயிலில் உழைத்தார்கள்.

ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்குரிய முகாமில் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ‘ஆளுயரக் கண்ணாடியால் கூடாரம் நிறைந்திருக்க வேண்டுமா? அமைச்சுக்கோ. கூடாரத்துக்குள்ளேயே ரோல்ஸ்-ராய்ஸ் வந்து செல்ல வேண்டுமா? ஓட்டிக்கோ. தங்கத்தாலான டாய்லெட்டில் இரண்டுக்குச் சென்று பழக்கமா? போய்க்கோ.’ இவைதவிர மகாராஜாக்கள், தங்கள் சொந்த உபயோகத்திற்காக குதிரைகள், யானைகள், கார்கள் எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் மின் கம்பங்கள். அதுபோக முகாமுக்கு முகாம் தனித்தனியே விளக்குகள், அலங்கார விளக்குகள். தர்பார் நடக்கவிருந்த காலம் குளிர்காலம் என்பதால் கிங்கின் கூடாரத்தில் மட்டும் மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் குளிர்காய, மார்பிள்களாலான கணப்பு அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை தண்ணீர் வசதி. பைப்பைத் திறந்தால், ஷவரைத் திறந்தால் தண்ணீர் சொய்ங்!

பதவியேற்பு விழாவுக்கான மேடை தனியாக பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓர் உயரமான மண்டபம். அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற டூம். மண்டபத்தைச் சுற்றி ஷாமியானா. பல்வேறு அலங்காரங்கள். அந்த நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்தன.

நவம்பரின் இறுதி வாரத்தில் இந்தியாவே டெல்லியை நோக்கி நகருவது போலொரு உணர்வு. எல்லா சமஸ்தானங்களிலிருந்தும் மகாராஜாக்களும் ராஜாக்களும் மற்றவர்களும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். மாடு, குதிரை, யானை வண்டிகள் முதல் மோட்டார் வண்டிகள் வரை சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதியில் டெல்லி சிவந்தது.

கிங்கும் குயினும் படு அமர்க்களமான வரவேற்புடன் இந்தியாவுக்கு வந்திறங்கினார்கள். பம்பாய்க்கும், அப்போதைய தலைநகரமான கல்கத்தாவுக்கெல்லாம் சென்றுவிட்டு, டிசம்பர் 7 அன்று பதவியேற்பு முகாமுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வைஸ்ராய் ஹார்டிங்கின் ஏற்பாடுகளைக் கண்டு மனம் குளிர்ந்தார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் பூமியும் குளிர்ந்தது. பருவம் தப்பி வந்த மழை. மிஸ்டர். வருணன் வந்து விளையாட்டிவிட்டுப் போனார். பல மாதங்கள் பாடுபட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். குறிப்பாக போட்டு வைத்திருந்த இருப்புப்பாதையில் பாதி காணாமல் போயிருந்தது. பல கூடாரங்கள் பிய்ந்து தொங்கின. விழா மேடை அலங்காரங்கள் உள்பட அனைத்தும் சர்வ நாசம். விழா நடப்பது சந்தேகம்தான், கிங் கிளம்பிவிடுவார் என்று பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

வைஸ்ராய் ஹார்டிங், தவிதவித்துப் போனார். விழாவுக்கு மூன்றே நாள்கள்தான் பாக்கியிருந்தன. ஆயிரக்கான கூலி ஆள்களையும், ராணுவ வீரர்களையும் முடுக்கி விட்டார். ‘எல்லாத்தையும் சரி பண்ணுங்க. ஒரு சொட்டுத் தண்ணிகூட உள்ள தேங்கி இருக்கக்கூடாது. எல்லாம் மழைக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அதேமாதிரி ஆகிடணும். கமான் குவிக்.’ கிட்டத்தட்ட மிரட்டத்தான் செய்தார். டிசம்பர் 12ல் தர்பார். அதற்கு முந்தைய நாளே எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. வருணன் ரீ-என்ட்ரி கொடுத்துவிடுவாரோ என்று பயந்து ஹார்டிங் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். வானம் பொய்த்துவிட்டது.

இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Coவினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. 6100 சிறிய வைரக்கற்களோடு, மரகதம், ரத்தினம், நீலக் கற்களும் பதிக்கப்பட்ட அந்தக் கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், Imperial Crown of India. டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. 1911 டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார்*. குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

(* அந்தக் கீரிடத்தின் எடை அதிகமாக இருந்தது. ‘தலை வலிக்குதுப்பா’ என்று எரிச்சலடைந்தார் ஜார்ஜ். தர்பார் நிகழ்வுகளுக்குப் பின் ஜார்ஜ், மீண்டும் அந்தக் கீரிடத்தை அணியவில்லை. அவருக்குப் பின்னும் யாரும் அதை அணியவில்லை. Imperial Crown of India – இப்போது லண்டன் டவரில் ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.)

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிற பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் ஒன்று காத்திருந்தது. கூண்டுள்ள வண்டி அது. ஜார்ஜும் மேரியும் ஏறி அமர்ந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க, தர்பார் மண்டபத்தை நோக்கி சாரட் நகர்ந்தது.

மகாராஜாக்கள், ராஜாக்கள், குட்டி ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ‘தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட’ இருக்கைகளில் கிங்குக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின் முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். அந்த மைதானத்தில் பல சமஸ்தானங்களைச் சேர்ந்த வீரர்கள் வியர்வை வழிய வழிய வரிசை கட்டி நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ‘வரவழைக்கப்பட்டிருந்தார்கள்’. எனவே கூட்டம் ஓஹோ!

சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் வந்து நின்றது. அந்த மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட கிங்கும் குயினும் இறங்கி மண்டபத்திலுள்ள சிம்மாசனங்களை நோக்கி நடந்தார்கள். சிறுவர்களும் வால்போல. கிங்குக்குரிய மரியாதை பதவியேற்பு மரியாதையாக நூற்றியொரு முறை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King – வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே ஆரம்பமானது.

அடுத்த நிகழ்ச்சி என்ன? ஒவ்வொரு மகாராஜாவாக தர்பார் மண்டபத்துக்கு வந்து கிங்குக்கும் குயினுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அதாவது சிரம் தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டும் என்று முன்பாகவே வைஸ்ராய் ஹார்டிங்கிடமிருந்து எல்லா மகாராஜாக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் இருபத்தியொரு குண்டு மரியாதை கொண்ட ஹைதராபாத், பரோடா, குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்களும் மாபெரும் சமஸ்தானத்தின் மகாராஜாக்கள்தான். கிங் போலவே எங்களுக்கும் மரியாதை அதிகம்தான். நாங்கள் ஏன் கிங்குக்கு குனிந்து வணக்கம் வைக்க வேண்டும்? பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவுக்கு மட்டுமே இப்படி கேட்கும் தைரியம் இருந்தது. ஆனால் நேரடியாகக் கேட்காமல் நாகரிகமாக ஒரு கடிதம் எழுதி வைஸ்ராய்க்கு அனுப்பினார். ‘ஒரு வேண்டுகோள். எல்லா மகாராஜாக்களும் மரியாதை செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, சிறிய சமஸ்தான மகாராஜாக்கள் மட்டும் கிங்குக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் மாற்றம் செய்யலாமே.’

பரோடா மகாராஜா

ஆனால் சாயாஜி ராவின் அந்த வேண்டுகோள் கண்டுகொள்ளப்படவில்லை. தர்பாருக்கு வந்த மகாராஜாக்களுக்கு ‘கிங்குக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும்’ என்று வகுப்பு எடுக்கப்பட்டது. ஒத்திகை செய்தும் காண்பிக்கப்பட்டது. அதாவது கிங்குக்கு முன் சென்று நின்று மூன்று முறை குனிந்து வணக்கம் வைக்க வேண்டும். கையோடு எடுத்து சென்றிருக்கும் பரிசுப் பொருள்களைக் கொடுத்து கௌரவிக்க வேண்டும். பின்பு முதுகைக் காட்டாமல் அப்படியே ரிவர்ஸ் கியரில் கொஞ்ச தூரத்துக்கு கீழே விழாமல் வந்தபின்பே திரும்பிச் செல்ல வேண்டும். சாயாஜி ராவின் கவனத்துக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் வரவில்லை. அவருக்கு ஒத்திகை பற்றியும் எதுவும் தெரியாது.

தர்பாரில் மரியாதை செய்யும் படலம் ஆரம்பமானது. இந்தியாவின் மிகவும் உயரிய, செல்வாக்கு மிகுந்த சமஸ்தானமான ஹைதராபாத்தின் நிஜாமுக்கு முதல் மரியாதை. அதாவது அவர்தான் முதலில் கிங்குக்கு நலுங்கு செய்ய அழைக்கப்பட்டார். அப்போதுதான் ஹைதராபாத்தின் நிஜாமாகப் பதவியேற்றிருந்த கஞ்ச மகாபிரபு ஒஸ்மான் அலிகான், கிங்கை நோக்கி வந்தார். முறைப்படி மூன்று முறை குனிந்து வணக்கம் வைத்தார். அரை மனத்துடன் மரகத நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ரிவர்ஸ் கியரில் கிளம்பினார்.

அடுத்த மரியாதைக்குரியவர் பரோடா மகாராஜாதான். தர்பாருக்காக வந்திருந்த மகாராஜாக்களெல்லாம் உற்சவர் போல ஏகப்பட்ட நகைகளைச் சாத்திக் கொண்டு வந்திருந்தார்கள். படு ஆரம்பரமான உடை வேறு. எல்லோரும் பலவித கற்கள் பதிக்கப்பட்ட உடைவாள் வைத்திருந்தார்கள். ஆனால் மற்றவர்களைவிட சாயாஜி ராவ் மிக எளிமையாக வந்திருந்தார்.

குஜராத் பாணி வெள்ளை நிற பட்டுடை. தலைப்பாகை. சின்னதாக ஒரு வைரப்பதக்கம். கழுத்தில் ஒரு முத்துமாலை. அதைக்கூட திடீரெனத் தன் மகனுக்கு அணிவித்துவிட்டார். அவர் இடையில் உடை வாள் இல்லை. தங்கக் கைப்பிடி உடைய கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு கிங்கை நோக்கிச் சென்றார். தனக்கு முன் சென்ற நிஜாம் எப்படி மரியாதை செய்தார் என்றெல்லாம் சாயாஜி ராவ் கவனிக்கவில்லை.

கிங் முன் சென்று நின்றார். ஒருமுறை குனிந்து வணக்கம் வைத்தார். நகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். பின் முதுகைக் காட்டியபடி திரும்பி வந்துவிட்டார். வைஸ்ராய் ஹார்டிங்குக்குக் காதில் புகை. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சாயாஜி ராவ், கிங்கை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் எதுவும் அறியாதவராக தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார் சாயாஜி ராவ்.

அடுத்ததாக குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்கள் மரியாதை செய்தார்கள். அதற்குப் பின் ரேங்க் வாரியாக. அவ்வளவு ஆடம்பரமான உடைகளுடன், நகைகளுடன் மகாராஜாக்கள் கேட் வாக் சென்றதைப் பார்க்கும்போது பேஷன் ஷோ போலத்தான் இருந்தது. பன்னா என்ற சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா, கிங்கின் அரியணை மேல் சொருகி வைத்துக் கொள்ள 12 இன்ச் விட்டமுள்ள, ரத்தினக் குடை ஒன்றைக் கொடுத்தார். இப்படி விதவிதமான பரிசுகள் குவிந்து கொண்டிருந்தன.

கிங்குக்கு மரியாதை

அடுத்ததாக இந்தூர் மகாராஜா திகோஜி ராவ் கிங்கை நோக்கி புயல் வேகத்தில் கிளம்பினார். தங்க, வெள்ளி பட்டைகளுடன் கூடிய பட்டுடை. உடலெங்கும் ஆபரணங்கள். இடையில் வாள். அதுபோக கையில் தங்கத்தலான, மரகதக் கல் கைப்பிடி கொண்ட கைத்தடி வேறு. அவ்வளவு உபரி எடையையும் சுமந்து கொண்டு, அந்தப் பளபளா தரையில் கால் பதித்த திகோஜி ராவ், தத்தக்கா பித்தக்காவெனத் தடுமாறி விழுந்தார். கைத்தடி ரெண்டு துண்டாகிப் போனது. நான்கைந்து பணியாளர்கள் வந்து அவரைத் தூக்கிவிடும்படி ஆகிவிட்டது. அதற்குப் பின் திகோஜி, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, வெகு ஜாக்கிரதையாக நடந்து சென்று கிங்குக்கு கும்பிடு போட்டார்.

இப்படி ஒவ்வொருத்தராக வந்து குனிந்து நிமிர்ந்து சென்று கொண்டே இருக்க, நீண்ட நேரத்துக்கு அசுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது தர்பார். சில சின்ன ராஜாக்கள், கிங்குக்கு கும்புடு போட ஆர்வம் காட்டினார்கள். ஆனால் தகுதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தியாவின் அப்போதைய தலைநகரம் கல்கத்தா. அது இந்தியாவின் கிழக்கு மூலையில் இருந்தது. எனவே இந்தியாவின் மையத்திலுள்ள டெல்லியைத் தலைநகரமாக வைத்துக் கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்திருந்தது. அந்த தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் அந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

‘இனி இந்தியாவின் தலைநகரமாக டெல்லி செயல்படும்.’

இன்றோடு நூறாண்டுகள் கழிந்துவிட்டன.

லோடியின் கையாலாகாத்தனம்!

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இதற்கு முன்பு இத்தனை போலீஸை நான் பார்த்ததில்லை. ‘பயணிகள் தவிர யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது’ என்ற அறிவிப்பு இரு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலித்துக் கொண்டிருந்தது. யாருக்கும் பிளாட்பார டிக்கெட் வழங்கப்படவில்லை. பயணிகளின் மெகா பெட்டிகள் முதற்கொண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் வரை, ‘ மெட்டல் நாய்கள்’ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தன.

வயதான பெண்மணி ஒருவர், இரண்டு கனமான பெட்டிகளை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தார். ரயிலேற்றி விட வந்த பெண்மணியின் டிரைவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போர்ட்டர்களும் கண்களில் தென்படவில்லை.

‘எங்க தாத்தாவுக்கு பெட்டி நம்பரு, சீட் நம்பெரல்லாம் சரியா பாத்து ஏறத் தெரியாதுங்க … ஏத்தி விட்டுட்டு உடனே வந்துடுறேன்’ என ஒரு பேரன் போலீஸிடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

என் முதுகில் ஒரு பை; கைகளில் இரண்டு. முதல் பை சோதனையிடப்பட்டது. பீப் பீப் பீப்….

‘என்ன இருக்கு உள்ள?’ – மீசைக்கார போலீஸ் முறைத்தபடி கேட்டார்.

‘ஹேண்டி கேமரா…’

அடுத்தது முதுகுப்பை. மீண்டும் பீப் பீப் பீப்….

‘இதுல என்ன?’

‘லேப்-டாப் இருக்கு.’

மீண்டும் முறைப்பு. மூன்றாவது பை. பிரித்து மேய்ந்தார்.

‘இது என்னப்பா ஒரே வயரா இருக்குது?’

‘லேப்-டாப் சார்ஜர். அது கேமரா சார்ஜர்…’

‘ஏம்ப்பா ஒரே வயரா கொண்டு வந்து தாலியறுக்கிறீங்க… ரெண்டு நாளைக்கு யாரும் வயர் கியர்லாம் கொண்டு வராதீங்க. ரோதனையா இருக்குது. எடுத்துட்டுப் போங்க…’

என் மூன்று பைகளும் அள்ளிக் கொண்டு பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தேன். எனக்கான பெட்டி கட்டக்கடைசியில் இருந்ததால் நன்கு பழகிய முத்துநகர் எக்ஸ்பிரஸே முதன் முதலாக மிக பிரமாண்டமாகத் தெரிந்தது. எனக்கான  பெட்டியில் ஏறினேன். உள்ளே, பயணிகளின் எண்ணிக்கையைவிட போலீஸாரின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தது. ரயில் கிளம்பியது. பொதுவாக மதுரையில்தான் பெட்டிகள் பயணிகளால் பூரணத்துவம் அடையும். அதுவரை பல இருக்கைகள் காலியாகத்தான் கிடக்கும்.

‘…வானத்து இந்திரரே  வாருங்கள் வாருங்கள்… பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்…’  – நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகிலிருந்து பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு போலீஸ்கார இளைஞரின்  மொபைல் அது. கால் மேல் போட்டு படுத்தபடி ஏகாந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். நரை மீசை போலீஸ் ஒருவர் கையில் சாப்பாட்டு பார்சலுடன் அங்கே வந்தார். ‘..இப்பவே தின்னுருவோம். சாத்தூர் தாண்டியாச்சுனா கூட்டம் குமிய ஆரம்பிச்சுரும்.’

பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். ஒவ்வொருத்தர் பெயராக வாசித்து ‘அட்டெண்டெஸ்’ எடுத்தார். ‘உள்ளேன் ஐயா’ உச்சரித்தோம். எல்லோரிடமும் அடையாள அட்டை கேட்டு நிதானமாகப் பரிசோதனை செய்தார். ‘ஒரிஜினலா?’ என்ற துணைக் கேள்வியையும் கேட்கத் தவறவில்லை.  கொஞ்ச நேரத்தில்இன்னொரு அதிகாரி வந்தார். அவரும்  அடையாள அட்டையைப் பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் முறுக்கு மீசை ரயில்வே போலீஸ் ஒருவர் வந்து சம்பந்தமில்லாமல் அடையாள அட்டை கேட்டார். ஒரு கயிறு கிடைத்திருந்தால் எனது PAN அட்டையை கழுத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பேன் (என் கழுத்தில்தான்).

சில பெட்டிகள் கடந்து சென்று இன்னொரு நண்பனைப் பார்த்துவிட்டு வந்தேன். எந்தப் பெட்டியிலுமே இஸ்லாமியர்கள் யாரும் தென்படவில்லை. ஒரு பெட்டியின் வாசலுக்கருகில் வட இந்திய இளைஞன் ஒருவனிடம் பரிசோதகர் கத்திக் கொண்டிருந்தார். ‘யுவர் டிக்கெட் ஈஸ் இன்வேலிட். இட் ஈஸ் ஈடிக்கெட். அண்ட் இட் ஈஸ் இன் வெயிட்டிங் லிஸ்ட் தேர்ட்டி ஃபைவ்…’

அந்த இளைஞன் என்னென்னமோ சொல்லிப் பார்த்தான். இன்னொரு போலீஸ்காரர் அங்கே வந்தார். பரிசோதகரிடம் இருந்து டிக்கெட்டை வாங்கி, இளைஞன் கையில் திணித்தார்.

‘நோ மோர் ஸ்பீச்… கெட் டவுன் கம்மிங்  ஸ்டேஷன்…’

இளைஞன் வாயடைத்துப் போனது அவரது மிரட்டலினாலா அல்லது ஆங்கிலத்தாலா என்பது எனக்குப் புரியவில்லை.

சாப்பிட்டு முடித்தேன். விருதுநகரில் நின்ற ரயில் புறப்பட்டது. ஓர் அம்மணி என் இருக்கைக்கு அருகிலுள்ள சைட் லோயரில் வந்து அமர்ந்தார். பரிசோதகர் வந்தார். அம்மணி டிக்கெட்டையும் தனது அடையாள அட்டையையும் அவசரமாக நீட்டினார்.

‘குணசீலன் யாரு?’

‘என் வீட்டுக்காரரு. அவரு வரலை.’

‘இது தட்கல் டிக்கெட். அவரு ஐடிதான் ரிசர்வ் பண்றப்ப கொடுத்திருக்காரு. அவரு வரலேன்னா இந்த டிக்கெட் செல்லாது.’

‘அவரால வர முடியல. நான் வந்திருக்கேன். என்கிட்ட ஐடி கார்ட் இருக்குது.’

‘என்னமா நீ புரியாம பேசற? அவருல்ல வரணும்’ – பரிசோதகரின் குரல் உயர்ந்தது.

‘அவரால வர முடியலீங்க. அதான் நான் வந்திருக்கேன்ல. டிக்கெட்ல எம்பேரு இருக்குல ‘ – அம்மணியின் குரலும் அதிர்ந்தது.

‘ரூல்ஸ்லாம் மாத்தியாச்சு. அவரு வந்தாத்தான் டிக்கெட்டு செல்லும்’

‘அதென்னங்க அநியாயம்? ஒருத்தர் வரமுடியேலேன்னா அதுக்கான காசையும் பிடுங்கிக்கீறீங்க. மத்தவங்களும் அந்த டிக்கெட்ல போவ முடியாதுன்னா என்ன அர்த்தம்?’

‘ரூல்ஸ் ரூல்ஸ்தான். நான் ஒண்ணும் பண்ண முடியாது’

வாக்குவாதம் தொடர்ந்தது.

*

சமீபத்தில் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில பொன்னான, அருமையான, மெச்சத்தகுந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* பயணத்துக்கு முந்தைய தினத்தில்தான் பதிவு செய்ய முடியும். (அன்றைக்கு ரயில் கிடைக்கவேண்டுமென்றால் நாம் பூர்வஜென்மத்தில் சில டன்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு உச்சநடிகரின் மருமகன்போல அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம்  ஏழுமலையானுக்கு ஒரு மொட்டையாவது வேண்டிக் கொள்ள வேண்டும். தட்கலில்  டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் நாம் மீட்டர் வட்டிக்குக் கடன்வாங்கிக் கொண்டோ அல்லது சொந்த வீட்டை அடமானம் வைத்துவிட்டோ பேருந்து நிலையத்துக்கு ஓட வேண்டியதுதான். டிக்கெட் வாங்க வக்கிருக்க  வேண்டுமல்லவா!)

* தட்கலில் ஒரு டிக்கெட்டில் அதிகபட்சம் நான்கு பயணிகள் பயணம் செய்ய முடியும். (ஐந்தோ, ஆறோ நபர்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் ஐந்தாவது ஆறாவது நபரைக் கழட்டி விடுங்கள்; முடிந்தால் கொன்று விடுங்கள். அந்த ஐந்தாவது நபருக்கு தனி டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஆணவமே உங்களை அழித்துவிடும்.)

* தட்கல் டிக்கெட் எடுக்கும்போது எந்தப் பயணியின் அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பித்திருக்கிறோமோ அந்நபர் நிச்சயம் பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணி வராதபட்சத்தில் அந்த டிக்கெட் செல்லாது. பிற பயணிகளும் அந்த டிக்கெட் மூலம் பயணம் செய்ய முடியாது. (ஆகவே முன்பதிவில் அடையாள அட்டை சமர்ப்பித்துள்ள பிரகஸ்பதி, ரயில் ஏறுவதற்கு முன் கோமாவில் விழுந்தாலோ, லாரியில் அடிபட்டுச் செத்தாலோகூட பிரச்னையில்லை. அடையாள அட்டையுடன் சேர்த்து அந்நபரையும் தூக்கிக் கொண்டு போய்விடுங்கள். அந்தப் பிரகஸ்பதி ரயில் ஏறுவதற்கு முன் காணாமல் போய்விட்டால்கூட எப்படியோ தேடிப் பிடித்து இழுத்துவந்துவிடுங்கள். இல்லையேல் உங்கள் டிக்கெட் செல்லாது. நீங்கள் அந்த ரயிலில் பயணம் செய்ய அருகதை அற்றவர். தேசத் துரோகி!)

*

வாக்குவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

பரிசோதகர், சில நூறு ரூபாய் அபராதம் எழுதி, ரசீது நீட்டி, அம்மணியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தார். அம்மணி என்பதால் இந்தக் கரிசனம். ஒருவேளை வேறு ஆணாக இருந்திருந்தால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம்.

ரயில் மதுரையை அடைந்தது. பத்து நிமிடங்களாவது நிற்கும் என்பதால் பிளாட்பாரத்தில் இறங்கி நின்றேன். பக்கத்து பெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் போலீஸாரும் ரயில்வே ஊழியர்களும் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

‘எவனோ ஒருத்தன் டாய்லெட்குள்ள போய்ட்டு ரொம்ப நேரம் வெளிய வரலியாம்.’ ஒரு பயணி சொன்னார்.

‘வர்றப்பவே என்னத்தையாவது இழுத்துக்கிட்டு வாங்க… இருக்கற பிரஷர் போதாதுன்னு இது வேறயா!’ – ஒரு போலீஸ்காரர் அங்கலாய்த்தார்.

‘ரயிலைக் கிளப்பிற வேணாம். சொன்னதுக்கு அப்புறம் கெளப்புனா போதும்’ – ஒரு போலீஸ்காரர் சொல்ல,  ஊழியர் ஒருவர் ஓடினார்.

அந்த டாய்லெட்டின் கதவு தட்டு தட்டென்று தட்டப்பட்டது. திறக்கப்படவில்லை. நல்லவேளை, இடைப்பட்ட நேரத்தில் ‘ரயிலில் தீவிரவாதி பதுங்கல்’ என்ற ப்ளாஷ்நியூஸ் எந்த சேனலிலும் ஓடியிருக்காது என்று நம்புகிறேன்.

பெட்டிக்கு வெளியே இருந்த சன்னல் வழியாக, உள்ளே இருக்கும் நபரை நோட்டம் விட்டார்கள்.

‘ஏ.. போதைல கெடக்குறாம்பா… எழவு…’

‘ஒரு பெரிய கொம்பா எடுத்துட்டு வாப்பா’

‘இரும்புத் தடி ஏதாவது இருக்குமா?’

‘கதவை ரெண்டு தட்டு தட்டி, நெம்பித் தெறங்கப்பா..’

சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. போதை ஆசாமியை இழுத்துக் கொண்டு வந்து வெளியே தள்ளினார்கள். ரயில் கிளம்புவதற்கான ஹார்ன் ஒலித்தது. ஏறினேன். போலீஸார் அவனது போதையைத் தெளிவிக்க மண்டகப்படியை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கு மேலும் கண் விழித்திருந்தால் உலகம் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் என்பதால் எனக்கான அப்பர்-பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. மணி பன்னிரண்டைத் தொட்டது. என் கைக்கடிகாரத்தில் தேதி மாறியது. டிசம்பர் 6.

சிறிது நேரத்தில் என்னையறியாமலேயே தூங்கிப் போனேன்.

திடீரென ஓர் உருவம் என் கண் முன் தோன்றியது. அந்நபரை எங்கேயோ, ஏதோ ஓவியத்தில் பார்த்தது போல இருந்தது. யாரென்று பிடிபடவில்லை. என் முன் வந்த அவர், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். ‘யார் நீங்கள்?’ – கேட்டேன்.

‘என்னைத்தான் உனக்குத் தெரியுமே. உனது முகலாயர்கள் புத்தகத்தில்கூட எழுதியிருக்கிறாயே. டெல்லியின் கடைசி சுல்தான்…’

‘இப்ராஹிம் லோடியா நீங்கள்?’

‘ம்…

‘ஏன் அழுகிறீர்கள்?’

‘என்னை மன்னித்து விடு. நான் மட்டும் அன்றைக்கு பானிபட் போரில் தோற்றுப் போகாமல் இருந்திருந்தால், பாபர் உள்ளே வந்து கோலோச்சியிருக்க முடியாது. இந்தியாவில் முகலாயப் பேரரசே அமைந்திருக்காது. மசூதியும் கட்டியிருக்க மாட்டார்கள். டிசம்பர் ஆறுக்காக பலரும் அவதிப்படும் நிலை உருவாகியிருக்காது.’

லோடியின் அழுகை நிற்கவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் சென்றேன்…

தாம்பரம் வந்துவிட்டதென நண்பன் எழுப்பினான்.

மயிலாப்பூரில் மார்க்கோ போலோ!

‘தன்னைத் தானே பலி கொடுக்கத் துணிந்த மாவீரன்!’

இந்தக் கோஷம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அழகாக வடிவமைக்கப்பட்ட தேர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக ஒருவன் அமர்ந்திருந்தான். பார்த்தால் அரசன் போலவோ, முக்கிய அமைச்சர் போலவோ, வசதிமிகுந்த செல்வந்தன் போலவோ தெரியவில்லை. சாதாரணமான ஆள்தான். அவன் கையில் கத்திகளை ஏந்தியிருந்தான். பலரும் ஒன்றுகூடி அந்தத் தேரை வீதி வீதியாக இழுத்துச் சென்றார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மார்க்கோ போலோவுக்கு அவர்கள் எழுப்பிய அந்த கோஷத்துக்கான அர்த்தம் விளங்கவில்லை. விசாரித்தார்.

அவன் ஒரு குற்றவாளி. அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், இஷ்ட தெய்வத்துக்குத் தம்மைப் பலி கொடுக்குமாறு விண்ணப்பம் வைக்கலாம். அதற்கான அனுமதி கிடைத்தால், குற்றவாளியின் சொந்த பந்தங்கள் அவனை இதுபோல தேரில் வைத்து நகரம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்வார்கள். தெய்வத்துக்காக, தன்னைத் தானே பலி கொடுக்க முன்வந்த அவனை வாழ்த்தி கோஷமிடுவார்கள். அவன் கையில் பன்னிரண்டு கூரிய கத்திகள் வழங்கப்பட்டிருக்கும். தேர், பலி பீடத்துக்குச் சென்றதும் குற்றவாளியே முதலில் இரு கத்திகளால் தன் தொடைகள் இரண்டில் குத்திக் கொள்வான். வலிமிகுதியில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அலறுவான். பின் உடலில் பிற பாகங்களில் மற்ற கத்திகளை இறக்க ஆரம்பிப்பான். பேரலறலோடு பன்னிரண்டாவது கத்தியை இதயத்தில் இறக்கி, இறந்து போவான்.

பின் சொந்த பந்தங்களால் அவனது உடல், தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படும். தகன நெருப்பில் அவனது மனைவியும் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்
(சதி). அப்படி நெருப்பில் இறங்க மறுப்பவளை, எல்லோரும் திட்டுவார்கள். அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளிவிட்டு விடுவார்கள். கணவனுக்காக மனைவி மட்டுமல்ல, அரசன் இறந்தால் அவருக்கு நெருக்கமான சில நூறு வீரர்களும் இதுபோல நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். இவ்வாறு நெருப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களுடைய மறுபிறப்பில் அவர்களுடனேயே பிறந்து பணிவிடை செய்வார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை.

அன்றைய தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற சில விஷயங்களைக் கண்டு, வெலவெலத்துப் போனார் மார்க்கோ போலோ. அதே சமயம் இன்னொரு விஷயம் அவரை ஆச்சரியப்படுத்தியது. அது தமிழர்களின் சுத்தம். ‘இங்குள்ளவர்கள் தினமும் இருவேளை குளிக்கிறார்கள். குளித்த பின்பே உணவருந்துகிறார்கள். அதுவும் வலக்கையால் மட்டும். இடது கையை உடலின் மறைவு உறுப்புகளைச் சுத்தம் செய்யவும், மற்ற விரும்பத்தகாத வேலைகள் செய்ய மட்டுமே உபயோகிக்கிறார்கள். குவளைகளில் உதடுகளை வைத்து உறிஞ்சி நீரை அருந்துவதில்லை. தலைக்கு மேலே உயர்த்தி வாயினுள் ஊற்றுகிறார்கள். அந்நியர்களுக்குத் தம் குவளைகளில் நீர் கொடுக்க மறுக்கிறார்கள். பதிலாக அவர்களுடைய பாத்திரங்களிலோ, கைகளைக் குவிக்க வைத்தோ நீரை ஊற்றுகிறார்கள்.’

வெத்தலையைப் போட்டேன்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி என்பதுபோல ரசித்து ரசித்து ‘தாம்பூலம்’ குறித்து எழுதி வைத்துள்ளார் மார்க்கோ போலோ. பொதுவாக அனைவருமே ஒருவகை பச்சை இலையோடு, வாசனை பொருள்கள், கற்பூரம், நீர்த்த சுண்ணாம்பு சேர்த்து மென்றபடி இருக்கிறார்கள். அது புத்துணர்வு கொடுப்பதோடு உடல் நலத்திற்கும் நன்மை செய்கிறது. அவ்வப்போது அதன் மூலம் சுரக்கும் எச்சிலைத் துப்புகிறார்கள். எதிரியை அவமானத்தப்படுத்த வேண்டுமென்றால், அந்நபரைத் தேடிச் சென்று முகத்திலேயே உமிழ்கிறார்கள். அவமானப்படுத்தப்பட்ட நபர் அரசரிடம் சென்று முறையிடலாம். அரசர், சம்பந்தப்பட்ட இருவரையும் வரவழைத்து கையில் வாள், கேடயத்தை வழங்குவார். மைதானத்தில் இருவரும் போரிட ஆரம்பிப்பார்கள். மக்கள் ஆர்ப்பரிக்க, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று அரசர் மகிழ, இருவரில் யாராவது ஒருவர் கொல்லப்படும்வரை சண்டை தொடரும்.

தமிழகத்தில் மார்க்கோ போலோ சுற்றிய இடங்களில் முக்கியமானது மயிலாப்பூர். இந்தியா முழுவதும் பரவியுள்ள பிராமணர்களின் பூர்விக இடம் அதுதான் என்கிறார். தோள் வழியே மார்பின் முன்பும் முதுகுக்குப் பின்பும் தொங்கும் பருமனான ஒரு பருத்தி நூலை வைத்து அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கண்டுகொள்ளலாம். அவர்கள் நேர்மையானவர்கள். வெளி வியாபாரிகள், புதியவர்கள் அவர்களை நம்பி பொருள்களை ஒப்படைத்தால் அதை நல்ல முறையில் வியாபாரம் செய்து முறையாக கணக்கை ஒப்படைப்பார்கள். வெளியே கிளம்பும்போது ஏதாவது விஷச் சிலந்தி கண்ணில் தென்பட்டால் அது எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப வியாபார முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல வெளியே கிளம்பும் சமயத்தில் யாராவது தும்மிவிட்டால் அவ்வளவுதான். வேலையைக் கைவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள்.

மார்க்கோ போலோ மயிலை கபாலீஸ்வரரைத் தரிசித்தாரா, தெப்பக்குளத்தில் முதுகு தேய்த்துக் குளித்தாரா, கற்பகாம்பாள் மெஸ்ஸில் மெதுவடை சாப்பிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படியே மயிலையிலிருந்து பொடிநடையாக சாந்தோம் புனித தாமஸ் தேவாலயத்துக்குச் சென்றிருக்கிறார் என்பது மட்டும் அவரது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தாமஸ், இந்துக்களால் கொல்லப்பட்டார், எதிரிகளால் கொல்லப்பட்டார் என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு. ஆனால் மார்க்கோ போலோ, அதுகுறித்த வேறொரு தகவலை எழுதி வைத்துள்ளார். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான தாமஸ், கி.பி. 72 சமயத்தில் சென்னை, சின்ன மலை (Little Mount) பகுதிக்கு வந்துள்ளார். அங்கே மயில்கள் அதிகம். கௌவி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன், மயிலை வேட்டையாட ஈட்டி ஒன்றை எறிய, அது தாமஸைத் தாக்கியது. அவர் ஆண்டவருக்கு நன்றி சொன்னபடியே இறந்தார். அவரது உடல் மயிலையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.

அந்த ஆலயத்தில் புனித தாமஸின் கல்லறையைத் தரிசித்ததாக மார்க்கோ போலோ குறிப்பிட்டுள்ளார். அது கி.பி. 1292 சமயத்தில் இருந்திருக்கலாம். (பின் பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் அங்கே பெரிய ஆலயத்தை எழுப்பியுள்ளனர். காலப்போக்கில் அது சிதைந்து போனது. தற்போதுள்ள சாந்தோம் தேவாலயம், 1893ல் பிரிட்டிஷாரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது என்பதெல்லாம் உபரி விஷயங்கள்.)

கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும், புனித தாமஸ் கொல்லப்பட்ட தலத்திற்குப் பாதயாத்திரையாக வருவதை மார்க்கோ போலோ கண்டார். செந்நிறமாக அங்கே காணப்படும் மண்ணை பயபக்தியுடன் அள்ளிக் கொண்டு சென்றார்கள். எதற்கு என்று விசாரித்தார். ‘நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இந்த மண்ணை நீரில் கலந்து கொடுத்தால் அவர்களுடைய நோயெல்லாம் குணமாகிவிடும்.’

தமிழகத்திலேயே மர்பிலி என்ற மலைப்பிரதேச மக்களுடைய ‘வைர வேட்டை’ குறித்து மார்க்கோ சொல்லியுள்ள தகவல்கள் விநோதமானவை. செங்குத்தான பாறைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும் கொண்ட இந்தப் பிரதேசத்தில் வைரங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால் அங்கே மனிதனால் செல்ல முடியாது. விஷப் பாம்புகளும் அதிகம். அவற்றை வேட்டையாடவே கழுகுகளும் பருந்துகளும் நிறைந்துள்ளன. இந்தச் சூழலிலும் அந்தப் பறவைகள் மூலமாகவே வைர வேட்டை நடத்தப்படுகிறது. எப்படி?

வைர வேட்டைக்காரர்கள், உயரமான இடங்களில் நின்று கொண்டு, வைரங்கள் கிடக்கும் பள்ளத்தாக்குகளில் இறைச்சித் துண்டுகளை எறிகிறார்கள். கழுகுகளும் பருந்துகளும் அந்தத் துண்டுகளை எடுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்கு வருகின்றன. பின் வேட்டைக்காரர்கள் பறவைகளை விரட்டிவிட்டு, அந்த இறைச்சித் துண்டுகளைக் கைப்பற்றுகிறார்கள். அதில் வைரங்கள் ஒட்டியிருக்கும். பறவைகள் இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டுவிடும் பட்சத்தில், அவை எச்சமிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். அவை வைரம் நிறைந்த கழிவுகள். நம்பவே முடியாத இந்த ‘வைர வேட்டை’ நிகழ்ந்த இடமான மர்பிலி பிரதேசம் எங்கே இருக்கிறது என்பது குறித்த குழப்பங்கள் இன்றும் உள்ளன.

பழைய காயல். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். அங்கே சென்ற மார்க்கோ போலோ, காயல் என்ற பெயரில் அதைக் குறிப்பிட்டுள்ளார். ‘மாபரின் (தமிழகம்) மிக முக்கியமான துறைமுக, வணிக நகரம் இது. ஏடன், அரேபிய நாடுகளிலிருந்து இங்கே வரும் கப்பல்கள் மூலமாக குதிரைகளும் பிற பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளி தேசங்களிலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் அனைத்துமே காயலுக்கு வராமல் சென்றதில்லை.’

(மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் இருந்து)

 

றிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.

 

1985

வீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.

நான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

பெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்!)

பேபி கிளாஸ் - 1985

டீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா? ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா? என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா? அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)

மதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.

பேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு!

காலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்…

என்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)

பாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா?) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.

காலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.

கொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா?

அம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.

பெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.

காரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…

ஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’கலாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்!

’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.

முதலாளி : மையா மையா!

வேலைக்காரன் : என்ன ஐயா?

முதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.

’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.

பொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.

றிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…

2010ல் எனது பள்ளி

இப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.

‘எட்டா எட்டா அறுவத்துநாலு…

ஒம்பித்தெட்டு எழுவத்திரண்டு..

பைத்தெட்டு எண்பது…’

(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)