ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்

‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.

‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.

‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.

‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.

எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.

நான் வியந்தேன்.

ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.

டைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.

புலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.
ஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.

‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.

மிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார்.  இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.

நாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.
குபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.

‘கட்’ என்றார் ராமண்ணா.

சமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.

அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’

0

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று  சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க  வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான்  கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

0

எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்'(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.

சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.

உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.

“என்ன சாப்பிடலையா?” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.

“சாப்பாடு இன்னும் வரலை!”

“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.

அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.

சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.

படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.

0

சந்திரபாபு பற்றி புத்தகம் எழுதுகிறேன் என்றதும் எல்லோரின் புருவமும் அனிச்சையாக உயர்ந்தது. தகவல் திரட்டச் சென்றபோது ஒரு சிலர் மட்டும் சண்டை போட்டனர். சிலர் ஒதுங்கிப் போயினர். சிலர் அலைய வைத்தனர். ‘என்ன மிஸ்டர் பாபு, இப்படி படுத்துறீங்க’ன்னு நான் கோபமான நேரத்துல ‘அட பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டிருக்கப் போற’ன்னு சந்திரபாபுவே என் மனசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் என் செல்போன் ரிங் டோன்கூட ‘குங்குமப் பூவே’ன்னு கூவ ஆரம்பிச்சிடுச்சு!

2006 ஜனவரியில் வெளியான கண்ணீரும் புன்னகையும் புத்தகத்துக்கு இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. சந்திரபாபு குறிஞ்சிப்பூ.

லொள்ளு அவார்ட்ஸ் 2008

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

சிறந்த குடும்பச் சித்திரம்

சிறந்த உண்மை விளம்பி

சிறந்த சுய விளம்பரதாரர்

சிறந்த ஆக்‌ஷன் காட்சி

சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல்

சிறந்த உலக சினிமா

சிறந்த ரங்க ராட்டினம்

சிறந்த காதல் காட்சி

சிறந்த ட்யூப் லைட்

வாழ்நாள் சாதனையாளர் விருது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.)

கண்ணம்மாபேட்டையில் ஔவையார்!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்ற பாடல்  அது நாக்க முக்க. காதலில் விழுந்தேன் மூலம் நிச்சயமாக திரைத் துறையில் எழுந்துள்ளார் அவர்.

நல்லது. வாழ்த்துகள்.

ஏற்கெனவே அவர் அளித்த ‘டைலாமோ’ வகைப் பாடல்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.  அதனால் ஏற்பட்டுள்ள தெம்பில் கொஞ்சம் தவறாக யோசித்துவிட்டார் போலும். தான் எதைச்  செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் தயார் என்று.

சமீபத்தில் தநா07அல 4777 படத்தின் பாடல்கள் குறித்து சில பத்திரிகைகளில் படித்தேன். குறிப்பாக ஔவையார் அருளிய ஆத்திச்சூடியை இந்தத் தலைமுறைக்கும் சேர்க்கும்படியாக என் ஸ்டைலில்  கொடுத்துள்ளேன் என்று ஆண்டனி தெரிவித்திருந்தார்.

அந்தப் பாடலைக் கேட்டேன். மீண்டும் ஒருமுறை கேட்கத் தோன்றவில்லை. வருத்தம் மேலிட இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

ஆத்திச்சூடி சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல். சிறுவர், சிறுமியர் சொல்லிச்  சொல்லி மனத்தில் பதியவைத்துக்கொள்ளும் வகையில் சின்னச் சின்ன வரிகளால் எளிமையாக  அமைக்கப்பட்டது. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அன்று வழக்கத்திலிருந்த  திண்ணைப்பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப்படுகிற மெக்காலே கல்வி முறை வரை  பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக தமிழ் கற்கும்போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லி த்தருகின்ற பொருட்டு அவ்வையின் ஆத்திச்சூடியைக் கொண்டு கற்பிப்பதை தமிழாசிரியர்கள்  கடைபிடித்து வருகின்றார்கள்.

ஆத்திச்சூடியின் அருமை, தொன்மை என்னவென்று விஜய் ஆண்டனிக்குத் தெரிந்திருக்கலாம்.

என்ன சூழ்நிலையோ அல்லது யார் ஆசைப்பட்டார்களோ அல்லது அவருக்கே தோன்றியதா  என்னவென்று தெரியவில்லை. நியூ ஏஜ் ஆத்திச்சூடி என்ற பெயரில் ஔவையாரைக் கண்ணம்மா பேட்டையில் நிறுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. அதுவும் ராப் குத்து என்ற பெயரில்  ஆத்திச்சூடியின் அகர வரிசையை கன்னாபின்னாவென்று கலைத்துப் போட்டுள்ளார்.

அதுவும் ஆத்திச்சூடி என்ற வார்த்தை இடையிடையே மலச்சிக்கலுடையவனின் குரலில் வெளிவருகிறது. பாடலில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கிலம் அதிகம். தான் புரியாத வார்த்தைப்  பாடல்களை உருவாக்குவதன் காரணத்தையும் சொல்லியுள்ளார். ‘கேளு மவனே கேளு, நீ வாயை  மூடிட்டு கேளு.’

பாடலின் இடையே தமிழ்த்தாயின் (அவலக்)குரல் ஒலிக்கிறது. ‘அய்யய்யோ இது என்னயா பாட்டா  படிக்கிறாங்க.. கொலை வெறி புடிச்சு அலையறாங்க…’ – அந்தக் குரலுக்குச் சொல்லப்படும் பதில்  ‘போடி!’ சகிக்கவே முடியாதபடி பாடலில் இறுதியில் சாவுக்குத்து.

ஆக, ஒரு கலைஞராக தான் செய்வதை அந்தப் பாடலிலேயே நியாயப்படுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. ரசிகர்கள் இந்தப் பாடலையும் ரசிக்கலாம். இருந்தாலும் சராசரி திரை இசை ரசிகனாக  நான் விஜய் ஆண்டனிக்குச் சொல்ல விரும்புவது இதுதான்.

‘சார், சர்க்கரைப் பொங்கலுக்குத் தொட்டுக்கொள்ள கோழிக் குழம்பு சரிப்படாது.’

****

இந்தப்பாடலின் ரிஷிமூலம் நதிமூலம் குறித்து நிமல் அவர்கள் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி இரண்டு சுட்டிகளை மட்டும் கொடுத்துள்ளேன்.

திரைப்படத்திலுள்ள ஆத்திச்சூடி பாடல் :

http://tinyurl.com/a9cu7s

நிமல் குறிப்பிடும் தினேஷ் கனகரத்தினம் பாடலைக் கேட்க – சுராங்கனி எம்பி3 பாடல்.

நாயகன் எம்.என். நம்பியார்

நம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான் நடக்காது.


நம்பியார் : ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.
நம்பியார் : தோல்வியையே அறியாதவன் நான்.
எம்.ஜி.ஆர் : தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார் : நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர் : உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
நம்பியார் : ஆ…

***

தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர்  அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறி யிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி.

திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

***

கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். எம்.ஜி.ஆரோடு  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜியோடு ‘உத்தமபுத்திரன்’ – மறக்க முடியாதவை.

‘திகம்பர சாமியார்’ – நம்பியார் கதாநாயகனாகப் பதினொரு வேடங்கள் அணிந்து நடித்த படம். அந்த மர்மக்கதை சினிமா பெரும் வெற்றியும் பெற்றது. மக்களைப் பெற்ற  மகராசியில் ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ என்று எம்.என். ராஜத்தோடு நம்பியார் பாடும்  டூயட், என்றும் இனியது.

பக்தி படங்களில் வைணவம் சார்ந்த கதைகள் ஓடாது என்று தமிழ் சினிமாவில் ஒரு  செண்டிமெண்ட் உண்டு. அதை முறியடித்துக் காட்டுகிறோம் என்று ‘சுப்ரபாதம்’ என்றொரு படம் எடுத்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள பல வைணவத்தலங்களில் கதை நகரும். நம்பியார் இதில் பக்தராக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை.

***

அகில இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஐயப்ப பக்தரான நம்பியார்தான் குருசாமி.  அமிதாப் பச்சன் உள்பட பல நட்சத்திரங்கள் அவரோடு சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

சுத்த சைவத்தைக் கடைபிடித்து வந்த நம்பியார் பசும்பால்கூட சாப்பிட மாட்டாராம்.  பொதுவாக அந்தக்கால பத்திரிகைகளில்கூட நம்பியார் பற்றி அவ்வளவு விஷயங்கள்  வந்ததில்லை. தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு அவர் இடம் கொடுத்ததில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்பதைக் கொள்கையாக கடைபிடித்த நம்பியார், பத்திரிகையாளர்களையும் பெரும்பாலும் தவிர்த்தே வந்தார்.

1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நம்பியாரைக் கௌரவப்படுத்தும்விதமாக யாரும்  எந்தவிருதும் அளித்ததில்லை.

***

சந்திரபாபு, எம்.ஆர். ராதா – வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளேன். நம்பியாரைப் பதிவு  செய்யும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தப்படுகிறேன். முன்பு கல்கியில் நம்பியார்  குறித்த ஒரு தொடர் வந்துள்ளது.

# இந்தக் கட்டுரைக்காக குறிப்புகள் தந்து உதவிய நண்பர் பா. தீனதயாளனுக்கு நன்றி.

பூ பூ மாரி!

சசி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘பூ’ என்ற படத்திலிருந்து ‘ச்சூ ச்சூ மாரி’ என்றொரு பாடலை நேற்று கேட்டேன். பாடியிருப்பவர்கள் (பார்த்தசாரதி, ஸ்ரீமதி, எஸ். மிருதுளா) குழந்தைகள் என்றே நினைக்கிறேன். அல்லது குழந்தைக் குரலில்கூட பாடியிருக்கலாம். எப்போதும் கேட்கலாம். குழந்தைகளாக மாறலாம். கிழவர்களி்ன்  மனத்துக்குள்கூட குழந்தைத் துள்ளலைக் கொடுக்கும் சக்தி இந்தப் பாடலுக்கு  இருப்பதாகவே உணர்கிறேன்.

ஏதோ நாட்டுப்புறப்பாடலைத்தான் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள் என்று தோன்றியது. பின்புதான் பாடல் நா. முத்துக்குமார் என்று தெரிந்தது. அவரது சிறந்த பாடல்களில்  இதுவும் ஒன்று. வாழ்த்துகள்.

பாடல் வரிகளுக்கு :
http://sriramsongs.blogspot.com/2008/10/blog-post_22.html

பாடலைக் கேட்க :
http://alltamilmp3songs.blogspot.com/search/label/Poo%20MP3%20Songs