முகில்

என்னைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக.

சொந்த ஊர் தூத்துக்குடி. வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான். வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் (1997-2000). பின்பு அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் (2000-2002). மென்பொருள் துறையில் மனம் அவ்வளவாக லயிக்கவில்லை. காரணம் எழுத்தின் மீதிருந்த ஆர்வம்.

ஐந்தாவது படிக்கும்போதிருந்தே டைரி எழுத ஆரம்பித்துவிட்டேன். தினசரி நிகழ்வுகளை அல்ல. என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவேன். அவற்றில் பலவற்றை கவிதை என்று இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறைக்கு எனது அம்மா வழி தாத்தா – ஆச்சி வீட்டுக்கு வெகு ஆர்வமாகச் செல்வேன். காரணம், புத்தகங்கள். 60, 70, 80களில் கல்கி, குமுதம், விகடன்களில் வந்த தொடர்கதைகளைத் தனியாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்த குண்டு குண்டு புத்தகங்களில் எனது வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது.

பள்ளி அளவில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கவிதை மட்டுமல்ல, என்ன போட்டி வைத்தாலும் நானும் பெயர் கொடுத்து கலந்துகொள்வேன், பாட்டுப் போட்டிகளில்கூட. கல்லூரி எனது கவிதை ஆர்வத்தை வளர்த்தது. சுதந்தர தின பொன்விழா கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாவது பரிசு பெற்றது. அப்போதிருந்து, கல்லூரி அளவுகளில் பல்வேறு ஊர்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளுக்கு எனது கல்லூரி சார்பாகச் செல்லும் போட்டியாளராக மாறினேன். வாங்கிய பரிசுகள் சொற்பமே.

எம்.எஸ்.சி படிக்கும்போது விகடன் மாணவ நிருபர் திட்டத்துக்கு குஜராத் பூகம்பம் பற்றி ஒரு கட்டுரையை இணைத்து விண்ணப்பம் செய்தேன். அடுத்தடுத்த சுற்றுகளில் தேர்வாகி, மாணவ நிருபரானேன்.

2003ல் சென்னை வந்தேன். 78 சதவிகித மதிப்பெண்களோடு எம்.எஸ்.சி. முடித்திருந்தேன். சாப்ட்வேர் இன்ஜினியராக மாறுவேன் என்பது என் பெற்றோர்களின் கனவு. ஆனால் எனக்குத் தூக்கத்தில்கூட அப்படி ஒரு கனவு வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையில் சும்மா இருந்தேன். பொழுதைப் போக்க டேட்டா என்ட்ரி வேலைக்கும் சென்றேன். அப்பா பணமெல்லாம் அனுப்பவில்லை. காரணம், அடிக்கடி நானே தூத்துக்குடி சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்.

பின்பு எனது (விகடன் மாணவ நிருபர்) தோழி கார்த்திகா மூலமாக கோகுலம் சுஜாதா, கல்கி ஏக்நாத் அறிமுகம் கிடைத்தது. அங்கே எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் சீதா ரவிக்கு என் எழுத்து பிடித்திருந்தது. கல்கி இதழோடு சென்னை வாசகர்களுக்கு மட்டும் வாராவாரம் இலவச இணைப்பு ஒன்றைத் தயார் செய்யத் திட்டமிட்டார்கள். அது ’சென்னை ஸ்கேன்’. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தார்கள். அப்போது அதற்காகத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் ஆர். முத்துக்குமார், மருதன், ச.ந. கண்ணன்.

கல்கியில் எங்கள் எழுத்தைக் கண்ட பா.ராகவன், கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். பின்பு நான் கிழக்கில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். மற்ற மூவரும் பிறகு இணைந்தார்கள். சுமார் ஆறரை ஆண்டுகள் கிழக்கு ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன்.

வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும், பிறருக்குப் பயன்படும் வகையில் எளிமையான, சுவாரசியமான நூல்களாக எழுதுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். 2009 மே மாதம் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி முடித்த வரலாற்றுத் தொடரான ‘அகம் புறம் அந்தப்புரம்’ (185 அத்தியாயங்கள்) – எனது மனத்துக்கு மிகவும் நெருக்கமான தொடர். இது கிழக்கில் சில பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டு, மிகப் பெரிய புத்தகமாக வெளிவந்து விறுவிறுவென விற்றுத் தீர்த்துவிட்டது. இன்னும் நல்ல முறையில் இந்தப் பிரமாண்ட புத்தகத்தை வெளிக் கொண்டு வருவது என் விருப்பம். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன்.

‘தமிழக அரசியல்’ வாரமிருமுறை இதழில் ‘புத்தம் புது பூமி வேண்டும்’ என்றொரு தொடரை எழுதினேன். உலக வரைபடத்தை உருவாக்கிய பயணிகளின், பயணங்களின் சரித்திரம் இது. 40 அத்தியாயங்கள் மட்டும் வெளிவந்தன. முழுமையான நூல் வடிவில் இதையும் கொண்டு வர விருப்பம்.

‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ – தமிழக அரசியல் இதழில் நான் எழுதி முடித்த இரண்டாவது தொடர் இது. 60 அத்தியாங்கள் கொண்டது. உலகின் தீரவே தீராத மர்ம விஷயங்களை அலசிய தொடர் இது. 2012ன் இறுதிக்குள் வெளிச்சத்தின் நிறம் கருப்பு புத்தகமாக வெளிவர இருக்கிறது.

தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’க்காக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அத்துடன் இந்த வருடத்தில் சினிமாவிலும் எனது முயற்சிகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தேன். அது வெளிவந்திருக்கிறது. எனது முதல் திரைப்பாடல் இது. தற்போது திரைக்கதை, வசனம் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன். வசனகர்த்தாவாக எனது முதல் படமான ‘கலியுகம்’ விரைவில் வெளியாக இருக்கிறது.


Leave a Comment