‘கல போல வருமா!’

க்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

யாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).

தும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட(?) இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.

தவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.

அஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.

ரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா?’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.

Leave a Comment