ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல்.

இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக் கொண்டு நம் இந்திய மகாராஜாக்கள் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

Pearl of India என்று பெயரிடப்பட்ட ஒரு ரோல்ஸ்-ராய்ஸை குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வாங்கினார். அதுவே முதல் போணி. பெருமை பொங்க அதனைத் தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜாக்களுக்கும் இந்தச் செய்தி பரவியது.

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘அதென்ன அவரால மட்டும்தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல!’ என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்காரர்களும் அந்தக் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்படியென்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக் கார் வைச்சிருக்கானா, அப்படின்னா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, டாம்பீகமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, ஃபிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

அல்வார் மகாராஜா ஜெய்சிங், ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது அங்கிருந்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்குச் சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை. ‘இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்’ என்ற எண்ணம். ஜெய்சிங்கின் கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும்கோபக்காரர். விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்திலேயே ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆர்டர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஏழு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக்கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக உபயோகிக்கச் சொல்லி கட்டளையிட்டார். அவை குப்பை அள்ளின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளைத் தேடுவதற்கேற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே அம்மாவின் காருக்கு வெளியே அமைச்சர்கள் தொற்றிக் கொண்டு போவார்களே, அதுபோல பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதற்கென வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்குமென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்களை சர்வீஸுக்கு விடும்போது, அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள்.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிவிடுவார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுச் செல்வார்களே, அதேபோல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களையெல்லாம் இறைச்சிக்காகக் கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயைச் சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து. பாட்டியாலா மகாராஜாவிடமிருந்த கார்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு. முதலிடம்? ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு. அவரிடமிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது.

ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் வாசம் வீசியது 1912ல். ஒஸ்மானின் தந்தை, நிஜாம் மெஹ்பூப் அலிகான் 1911ல் ஒரு காரை ஆர்டர் செய்தார். மெஹ்பூபின் விருப்பப்படி கார் பயணத்துக்குத் தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ், மகன் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக் கொண்டார் ஒஸ்மான். எந்தவிதக் கஷ்டமும் அதற்குக் கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனை கார் ஷெட்டில் சிலை போல நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1947ல் அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் எவ்வளவு தெரியுமா?

வெறும் 347.

Leave a Comment