எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.

போட்டித் தேர்வு. படபடப்புடன் சென்று அமர்ந்திருக்கிறீர்கள். இஷ்ட தெய்வங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கிறார்கள். அந்த நேரத்திலும் பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் பிங்க் நிற சுடிதார் பெண் கவனம் கலைக்கிறாள். தேர்வு அறை கண்காணிப்பாளர் வந்து வினா, விடைத்தாளை நீட்டுகிறார். இப்படி ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.
மொத்த மதிப்பெண்கள் : ஏதோ பார்த்துப் போட்டுக் கொடுப்போம்.

1. சன் பிக்சர்ஸ் வழங்கியதிலேயே உன்னதமான காவியம் எது?
அ) தெனாவெட்டு ஆ) படிக்காதவன் இ) எட்டுமணி செய்திகள்

2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) கொலம்பஸ் ஆ) சயின்ஸ் வாத்தியார் இ) எஸ்.ஜே. சூர்யா

3. இந்தியாவின் கேப்பிடல் (CAPITAL) எது?
அ) InDiA ஆ) india இ) INDIA

4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன?
அ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ) பா.பி.த.

5. ‘எதிர்ச்சொல்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
அ) எதிரெதிர்ச்சொல் ஆ) எதிர்மௌனம் இ) எதிர் இல்லாத சொல்

6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது?
அ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்

7. இந்தக் கேள்வியின் எண் என்ன?

அ) 8 ஆ) 10 இ) 15

8. அ-வும் ஆ-வும் அக்கா தங்கச்சி. ஆ-வும் இ-யும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. இ-யும் ஈ-யும் உறவுமுறை. ஈ-க்கு அ அத்தை. உ-க்கு ஈ சகலை. இ-க்கு உ சம்பந்தி முறை. ஆ-வை, ஈ கல்யாணம் பண்ணினா ஆ-வுக்கு ஈ என்ன வேணும்?
அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்து வீட்டுக்காரன் இ) பங்காளி

9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த வேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்?
அ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி

10. பதவிப்பிரமாணத்தின் போது ஒபாமா சொல்ல மறந்த அந்த வார்த்தை என்ன?
அ) எவனாயிருந்தாலும் வெட்டுவேன். ஆ) ஆசை, தோசை, அப்பளம், வடை  இ) பத்து ரூபாய்க்கு ‘சேஞ்ச்’ இருக்கா?

11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை?
அ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு

12. காற்றுக் குமிழுக்குள் என்ன நிறைந்திருக்கும்?
அ) கொட்டாவி  ஆ) பஞ்சு முட்டாய்  இ) உள்ளீடற்ற வெற்றிடம்.

13. ‘எக்ஸ்’ என்பது ஒரு இரட்டை எண். அதை ‘ஒய்’ ஆல் பெருக்கினால் 12 வரும். 3320 என்பது ‘எக்ஸின்’ ஐந்தரை மடங்கு. ‘ஒய்’ மற்றும் ‘இஸட்’டின் இரு மடங்குக் கூட்டுத்தொகை ‘எக்ஸின்’ மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு. ‘எக்ஸ், ஒய், இஸட்’ – இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக் கழித்தால் இறுதியில் என்ன வரும்?
அ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்

14. கீழ்க்கண்டவற்றில் ‘உயிர்’ எழுத்துகள் எவை?
அ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்

15) இருட்டான அறையொன்றில் நேராக நிற்கும்போது நமது நிழல் எங்கே விழும்?
அ) பக்கத்து வீட்டில் ஆ) உண்டியலில் இ) மொட்டை மாடியில்

16) 9841111111 என்ற எண்ணை டயல் செய்கிறீர்கள். லைன் கிடைக்கவில்லை. உடனே ரீடயல் செய்தால் என்ன எண் டயல் ஆகும்?
அ) 100 ஆ) 9841111112 இ) 98411111119841111111

17) நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா?
அ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) %#@%@(*^&

Leave a Comment