சென்னை புத்தகக் கண்காட்சி 16.01.2014

விற்க அதற்குத் தக!

பொதுவாக காணும் பொங்கல் அன்று சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும். மாலை ஆறு மணிக்கு மேல் உள்ளே நுழையும்போதே மூச்சு முட்டும். ஆனால், இன்று?

புத்தகக் கண்காட்சி அரங்கினுள்ளே ஒரு புட்ஃபால் கோல் போஸ்ட்டையும் உள்ளடக்கி கடைக்கள் அமைத்துள்ளார்கள். அந்த கோல் போஸ்ட்டைக் குறிவைத்து சில கடைக்காரர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். (வயிற்றெரிச்சலை வேறு எப்படிச் சொல்ல?)

‘வருடந்தோறும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஸ்டேட்மெண்ட். ‘அது பொய்’ என்று சொல்கிறது நிகழ்காலம்.

‘சுத்தமா விளம்பரமே இல்லை. வழக்கத்தைவிட விளம்பரம் ரொம்பக் குறைவு. மக்களுக்கு புக்ஃபேர் நடக்குறதே தெரியலை’ என்பது ஒரு பதிப்பகத்தாரின் கருத்து. ‘பொருளாதார மந்தம். புக் விலையெல்லாம் அதிகமாயிட்டே போகுது. அதான் மக்கள் வாங்குறதைக் குறைச்சுக்கிட்டாங்க’ என்பது ஒரு கடைக்காரரின் ஸ்டேட்மெண்ட். ‘பொங்கலுக்கு வெளியூருக்குச் சென்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சென்னைவாசிகளெல்லாம் நாளைக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் சந்தோஷப்பட வைக்கும்’ என்பது என் எண்ணம்.

இன்று, இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன். எம்.ஜி.ஆர். பேட்டிகள் தொகுப்பு. கிருபாகரன் என்பவர் தொகுத்துள்ள இந்தப் புத்தகத்துக்காக பல பேட்டிகளைக் கொடுத்து உதவியவர், எனது நீண்ட நாளைய நண்பரான ஜெயபாபு. இவர் பழைய பத்திரிகைகள், புகைப்படங்கள் சேகரிப்பாளர். புத்தகம் பல இடங்களில் கிடைக்கிறது.

வாங்கிய இரண்டாவது புத்தகம், அடைபட்ட கதவுகளின் முன்னால். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் அனுபவங்களைச் சொல்லும் புத்தகம். அந்தத் தாயார் ஸ்டாலில் இருந்தார்கள். பில் போட்டுக் கொடுத்தார்கள். (திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றிய பதிப்பகம் ஸ்டால் எண் 273 – 94430 58565.)

டிஸ்கவரி புக் பேலஸில் சட்டென ஒரு புத்தகத்தின் தலைப்பு கவர்ந்திழுத்தது. ‘விற்க அதற்குத் தக!’ – விற்பனையாளர்களுக்கான கையேடு. ஆனால், அட்டை வடிவமைப்பும், புத்தக வடிவமைப்பும் ஆக மோசம். விற்பனை குறித்த அந்தப் புத்தகம் தன்னைத் தானே விற்றுக்கொள்ளும் தரத்தில் இல்லாதது சோகமே.

டிஸ்கவரி புக் பேலஸில் கண்ட இன்னொரு விஷயம், பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி. எம்பி3 வடிவில். ஆறு சிடிக்கள் என்று நினைக்கிறேன். சுமார் 78 மணி நேரம் ஓடக்கூடியது. நல்ல முயற்சி. (ஸ்டால் எண் 700)

என்னுடைய புத்தகங்களில் சென்ற வருட வெளியீடான வெளிச்சத்தின் நிறம் கருப்பு – இந்த வருடமும் நல்ல வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதை வாங்கிய ஒரு தம்பதி என்னிடம் பேசினார்கள். ‘உங்க புக்ல கிளியோபாட்ராதான் முதல்ல படிச்சோம். கீழ வைக்கவே முடியாம படிச்சு முடிச்சுட்டுதான் எழுந்தோம். வரலாறை இவ்வளவு சுவாரசியமா சொல்றது ஆச்சரியமான விஷயம்’ என்று தங்கள் கருத்தைச் சொன்னார்கள். இது போன்ற வாசகர்கள்தான் அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்கத் தேவையான சக்தியை, உற்சாகத்தைக் கொடுக்கிறார்கள். எதற்கு உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்பதற்கு ஓர் அர்த்தம் வேண்டுமே.

 

 

Leave a Comment