சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 21, 2013

இன்று புத்தகக் கண்காட்சி காற்று வாங்கும் என்று எதிர்பார்த்து போன எனக்கு அதிர்ச்சி. மாலை 6 மணிக்குமேல் ஓரளவு நல்ல கூட்டம். கடைகளில் வியாபாரமும் ஓகே. நாளைக்கும் இதே அளவு கூட்டத்தை எதிர்பார்க்கலாம். புதன் – அன்று கடைசி தினம் என்பதால் சொல்லவே தேவை இல்லை.

நாளை மதியம் 2 மணிபோல சென்றுவிட்டால், புத்தகங்களைத் தேடி வாங்க வசதியாக இருக்கும் என்று திட்டமிட்டுள்ளேன்.

திருமகள் நிலையத்துக்கு பாலகுமாரன் வந்திருந்தார். ஏற்கெனவே வாங்க நினைத்திருந்த ‘என்னைச் சுற்றி சில நடனங்கள்’ புத்தகம் வாங்கி, அவரிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். நான் பாலகுமாரனை வார இதழ்களில் வாசித்துள்ளேன். அதிகம் வாசித்ததில்லை. மேற்சொன்ன புத்தகம் அவரது கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் வாங்கினேன். ஒரு வகையில் இது அவரது ஆட்டோபயாகிராபி என்றுகூட சொல்லலாம்.

நண்பர் ஆர். முத்துக்குமார் வித்தியாசமான ஒரு புத்தகத்தை வாங்கியிருந்தார். என்ன பதிப்பகம், ஆசிரியர் பெயர் எல்லாம் நினைவில் நிற்கவில்லை. ஆனால், புத்தகத்தின் பெயர் என்றைக்கும் மறக்காது – ‘பெரிய புடுங்கி’. ஒரு பத்திரிகையாளரின் அனுபவ நூல் இது. (Karunakaran Perumal கவனத்துக்கு.)

பத்ரியைச் சந்தித்தேன். நேற்றைய கிழக்கு ஹிட் லிஸ்ட்டில் வாத்யார் சுஜாதாவும் இணைந்திருந்தார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஓஹோ. சாருவின் ஜீரோ டிகிரியும் டாப் டென்னில் வரக்கூடும் என்று சொன்னார்.

பெரிகாம் (ஸ்டால் எண் 585, 586) என்ற கடையில் மூன்று நூல்கள் கவனம் ஈர்த்தன. வாருங்கள் வீடு கட்டலாம், கம்பி வளைப்போர் கையேடு, கொத்தனார் கையேடு. மூன்றையும் எழுதிய ஆசிரியர் டாக்டர் என்.வி. அருணாசலம். யாருக்காவது பயன்படும் என்பதால் இங்கே இந்தத் தகவல்.

புக் வேர்ல்ட் லைப்ரரி என்ற ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் – இந்த முறை இரண்டு வரிசைகள் ஸ்டால்கள் அமைத்துள்ளார்கள். எல்லாம் பிற நாடுகளில் இருந்து கண்டெய்னர்களில் மொத்தமாக வரும் புத்தகங்கள். இங்கே உள்ள புத்தகக் கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை. பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட், காஃபி டேபிள் வகையறா புத்தங்கள். பல நல்ல, சுவாரசியமான, அரிய புத்தகங்கள் உள்ளன. ஸ்டால் எண் : 108, 436-437

திருத்தம் : தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளுக்கு கழிவு இல்லை என்று நேற்று எழுதியிருந்தேன். மன்னிக்கவும். 10 சதவிகிதம் கொடுக்கிறார்கள்.

கேண்டீன் குறிப்பு : எதுவுமில்லை.

Leave a Comment