சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 19, 2013

பொங்கல் விடுமுறை முடிந்தும் இன்னமும் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த வருடம் புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCAவுக்கு மாற்றப்பட்டிருப்பதுகூட பலர் அறியாத விஷயம். விளம்பரங்கள் போதவே போதாது.

அப்படியே தப்பித் தவறி அறிந்தவர்கள் YMCA மைதானத்தை அடைந்து, பின் உள்ளே ரெண்டு கிலோ மீட்டர் நாக்கு தள்ள நடந்து வந்தால் மட்டுமே, புத்தகக் கண்காட்சிக்கான டிக்கெட் கௌண்டரை அடையலாம். வாகனங்களில் வந்தால் பார்க்கிங் செய்வதற்குள் மூட்-அவுட் ஆகிவிடுகிறது.

டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலமா, அல்லது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று வயோதிக அன்பர்கள் யோசிப்பது உறுதி. இந்த முறை 750 ஸ்டால்கள். எக்ஸ்ட்ரா வரிசைகள். இத்தனைக் கடைகளைப் பார்த்தே தீர வேண்டுமா என்று மலைப்பு ஏற்படுவதும் நிச்சயம். அதுவும் குறுகலான நடைபாதையில், நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் புகுந்து புத்தகத்தை வாங்கித்தான் தீர வேண்டுமா என்ற சலிப்பு கண்டிப்பாக ஏற்படும். பாதையில் நடக்கும்போது கவனமாக நடந்தாலே ஓரிரு முறை தடுக்கிவிழும் அதிர்ஷ்ட சம்பவங்களும் நடக்கும். ஆக, இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு துன்பியல் சம்பவமாகத்தான் நிகழ்ந்து வருகிறது.

ஆனால், பபாஸியின் (தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்) இத்தனைச் சதிகளையும் மீறி, இன்றைக்கு வாசகர்கள் குவிந்துவிட்டார்கள். கடந்த எட்டு நாள்கள் வியாபாரமே இன்றி தவித்த கடைக்காரர்கள் முகத்தில் இன்றைக்கு கொஞ்சூண்டு புன்னகை.

இன்றைக்கு நான் சில கடைகளுக்கு மட்டுமே சென்று பார்த்தேன். புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. கடைசி மூன்று நாள்கள் புத்தகங்கள் வாங்க வேண்டும்.

சில கடைக்காரர்கள், வாசகர்களைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவிக் கூவி கடைக்குள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். யாரையும் கூவி அழைக்கக்கூடாது என்பது பபாஸியின் விதி. இந்த முறை அது கிடையாதுபோல.

கடந்த நாள்களில், முதல் மூன்று வரிசைகளில் மட்டுமே கூட்டம் நிறைந்திருந்ததாகவும், மற்ற வரிசைகளுக்கு வர இயலாமல் வாசகர்கள் களைப்படைந்து விட்டதாகவும் பலர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு எல்லா வரிசையிலும் கூட்டம் ஓஹோ. நாளை இதைவிட அதிகமாக கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

‘ஃபோர் ஸ்டால் என்ற விஷயத்தைத் தூக்கிவிட்டு, த்ரீ ஸ்டால்கள் அமைத்திருப்பது பெரிய மைனஸ்.  கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு, வாடகை மூலம் அதிக வருமானம் பார்ப்பதே பபாஸியின் ஒரே நோக்கம். அதனால் புத்தக விற்பனை பாதிப்பது குறித்து அவர்களுக்கு கவலையே கிடையாது. கேட்டால், ‘இருக்குற இடத்துல புத்தகம் வித்துக்கிறது அவனவன் திறமை’ என்று பதில் சொல்கிறார்கள்’ என வருத்தப்பட்டார் பதிப்பக நண்பர் ஒருவர்.

விகடனில் – வட்டியும் முதலும், கிழக்கில் – பிரபல கொலை வழக்குகள் ஆகிய புத்தகங்கள் நம்பர் ஒன் ஸ்நானத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சிக்ஸ்த் சென்ஸில் வெளியாகியுள்ள எனது ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அப்பதிப்பக நண்பர் பாண்டியன் சொன்னார். அங்கே புதிய பதிப்பாக வெளியாகியுள்ள சந்திரபாபு புத்தகத்தை 40+ வயதுடையவர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றதைக் கண்டேன். சந்திரபாபு மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார் என்பதில் எனக்கு திருப்தி.

நாளை மதியம் முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். நிறைய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.

 

 

Leave a Comment