தலைநகரம் ‘100′

ஒரு சதுர மைல் என்றால் 640 ஏக்கர். இருபத்தெட்டு சதுர மைல் என்றால்? பெருக்கினால் கால்குலேட்டர் காட்டும் எண் 17920 ஏக்கர். 1911ல் டெல்லியில் நடக்கவிருந்த தர்பாருக்காக அவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்பட்டது.

எதற்காக என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, தர்பார் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

தர்பார் என்பது பெர்சிய மொழிச்சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் அரசர் தலைமையில் கூடுவார்கள். பொதுவாக அரசரைப் புகழ்ச்சியால் சொறிந்து விடுவார்கள். விருந்தினரைச் சந்திப்பார்கள். ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் என்றால் கேளிக்கையாகக் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். அவ்வப்போது மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது நிறைவேற்றப்படுவதும் உண்டு.

பிரிட்டிஷார், தங்களை இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, இந்த தர்பார் கலாசாரத்தைத் தாங்களும் பின்பற்ற நினைத்தார்கள். மகிழ்ச்சியான விஷயங்களைக் கொண்டாடுவதற்கு மட்டும் இந்தியாவில் தர்பாரைக் கூட்டலாம் என்று முடிவெடுத்தார்கள். 1877, ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. இந்தியாவின் பேரரசியாக குயின் விக்டோரியா அறிவிக்கப்பட்டார். தர்பாரில் பல மகாராஜாக்களும், சில ராஜாக்களும் கலந்து கொண்டு அந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள்.

1903ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங்காக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் கர்ஸன்.

ஆனால், கிங் ஏழாம் எட்வர்டும் தர்பாருக்கு வராமல் அல்வா கொடுக்க, கர்ஸன் நொந்து போனார். எட்வர்ட்டுக்குப் பதிலாக அவரது சகோதரர் இளவரசர் ஆர்தர் வந்தார். தர்பார் ஒப்புக்கு நடந்தது.

1911ல் அடுத்த தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும், குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவிக்க வேண்டுமல்லவா. எவ்வளவு கொண்டாட்டமான விஷயம் அது. யாரங்கே, டெல்லியில் அடுத்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் தர்பாரைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

அணிவகுப்பு மரியாதை

அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக ஹார்டிங் (ஏச்ணூஞீடிணஞ்ஞு) இருந்தார். கிங்கின் இந்தியப் பிரதிநிதியாக பொறுப்பில் இருந்த அவர், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்து தன் ‘ராஜ விசுவாசத்தை’ அரங்கேற்ற நினைத்தார். 1911, டிசம்பரில் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தன.

டெல்லியின் வடக்குப் பகுதியில் மாபெரும் நிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலிலேயே பார்த்தோமே, 17920 ஏக்கர். அப்போதுதான் அங்கு மக்காச்சோள அறுவடை முடிந்திருந்தது. அந்த விளைநிலத்தைச் சமப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாயின. எங்கெங்கு என்னென்ன எப்படியெப்படி அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வரைபடமும் தயாரானது.

தேவையான இடங்களில் தற்காலிகப் பாதைகள் அமைக்கப்பட்டன. நாற்பது மைல்களுக்கு தார்ச்சாலை போடப்பட்டது. அடுத்ததாக இருப்புப் பாதைகள் முளைக்க ஆரம்பித்தன. பதினாறு குட்டி ரயில் நிலையங்கள் தோன்றின. தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு ரயில்கள் வர ஆரம்பித்தன.

கிங் ஜார்ஜ் தங்குவதற்காகவும், பதவியேற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப்பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் 233 இடங்களில் தனித்தனியே முகாம்கள் அமைப்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தான மகாராஜாக்களும் ராஜாக்களும் குட்டி ராஜாக்களும் தங்குவதற்காக அந்த முகாம்கள்.

அதிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற இருபத்தொரு குண்டு மரியாதை கொண்ட பெரிய சமஸ்தான மகாராஜாக்களுக்குரிய முகாம்கள் என்பது சற்றே பெரியதாக, கிங் முகாமுக்கு அருகிலேயே இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல தரம் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கூலியாள்கள், கூடாரங்கள் அமைப்பதற்காக வெட்டவெளி மொட்டை வெயிலில் உழைத்தார்கள்.

ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்குரிய முகாமில் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ‘ஆளுயரக் கண்ணாடியால் கூடாரம் நிறைந்திருக்க வேண்டுமா? அமைச்சுக்கோ. கூடாரத்துக்குள்ளேயே ரோல்ஸ்-ராய்ஸ் வந்து செல்ல வேண்டுமா? ஓட்டிக்கோ. தங்கத்தாலான டாய்லெட்டில் இரண்டுக்குச் சென்று பழக்கமா? போய்க்கோ.’ இவைதவிர மகாராஜாக்கள், தங்கள் சொந்த உபயோகத்திற்காக குதிரைகள், யானைகள், கார்கள் எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் மின் கம்பங்கள். அதுபோக முகாமுக்கு முகாம் தனித்தனியே விளக்குகள், அலங்கார விளக்குகள். தர்பார் நடக்கவிருந்த காலம் குளிர்காலம் என்பதால் கிங்கின் கூடாரத்தில் மட்டும் மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் குளிர்காய, மார்பிள்களாலான கணப்பு அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை தண்ணீர் வசதி. பைப்பைத் திறந்தால், ஷவரைத் திறந்தால் தண்ணீர் சொய்ங்!

பதவியேற்பு விழாவுக்கான மேடை தனியாக பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓர் உயரமான மண்டபம். அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற டூம். மண்டபத்தைச் சுற்றி ஷாமியானா. பல்வேறு அலங்காரங்கள். அந்த நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்தன.

நவம்பரின் இறுதி வாரத்தில் இந்தியாவே டெல்லியை நோக்கி நகருவது போலொரு உணர்வு. எல்லா சமஸ்தானங்களிலிருந்தும் மகாராஜாக்களும் ராஜாக்களும் மற்றவர்களும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். மாடு, குதிரை, யானை வண்டிகள் முதல் மோட்டார் வண்டிகள் வரை சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதியில் டெல்லி சிவந்தது.

கிங்கும் குயினும் படு அமர்க்களமான வரவேற்புடன் இந்தியாவுக்கு வந்திறங்கினார்கள். பம்பாய்க்கும், அப்போதைய தலைநகரமான கல்கத்தாவுக்கெல்லாம் சென்றுவிட்டு, டிசம்பர் 7 அன்று பதவியேற்பு முகாமுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வைஸ்ராய் ஹார்டிங்கின் ஏற்பாடுகளைக் கண்டு மனம் குளிர்ந்தார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் பூமியும் குளிர்ந்தது. பருவம் தப்பி வந்த மழை. மிஸ்டர். வருணன் வந்து விளையாட்டிவிட்டுப் போனார். பல மாதங்கள் பாடுபட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். குறிப்பாக போட்டு வைத்திருந்த இருப்புப்பாதையில் பாதி காணாமல் போயிருந்தது. பல கூடாரங்கள் பிய்ந்து தொங்கின. விழா மேடை அலங்காரங்கள் உள்பட அனைத்தும் சர்வ நாசம். விழா நடப்பது சந்தேகம்தான், கிங் கிளம்பிவிடுவார் என்று பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

வைஸ்ராய் ஹார்டிங், தவிதவித்துப் போனார். விழாவுக்கு மூன்றே நாள்கள்தான் பாக்கியிருந்தன. ஆயிரக்கான கூலி ஆள்களையும், ராணுவ வீரர்களையும் முடுக்கி விட்டார். ‘எல்லாத்தையும் சரி பண்ணுங்க. ஒரு சொட்டுத் தண்ணிகூட உள்ள தேங்கி இருக்கக்கூடாது. எல்லாம் மழைக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அதேமாதிரி ஆகிடணும். கமான் குவிக்.’ கிட்டத்தட்ட மிரட்டத்தான் செய்தார். டிசம்பர் 12ல் தர்பார். அதற்கு முந்தைய நாளே எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. வருணன் ரீ-என்ட்ரி கொடுத்துவிடுவாரோ என்று பயந்து ஹார்டிங் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். வானம் பொய்த்துவிட்டது.

இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Coவினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. 6100 சிறிய வைரக்கற்களோடு, மரகதம், ரத்தினம், நீலக் கற்களும் பதிக்கப்பட்ட அந்தக் கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், Imperial Crown of India. டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. 1911 டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார்*. குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

(* அந்தக் கீரிடத்தின் எடை அதிகமாக இருந்தது. ‘தலை வலிக்குதுப்பா’ என்று எரிச்சலடைந்தார் ஜார்ஜ். தர்பார் நிகழ்வுகளுக்குப் பின் ஜார்ஜ், மீண்டும் அந்தக் கீரிடத்தை அணியவில்லை. அவருக்குப் பின்னும் யாரும் அதை அணியவில்லை. Imperial Crown of India – இப்போது லண்டன் டவரில் ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.)

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிற பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் ஒன்று காத்திருந்தது. கூண்டுள்ள வண்டி அது. ஜார்ஜும் மேரியும் ஏறி அமர்ந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க, தர்பார் மண்டபத்தை நோக்கி சாரட் நகர்ந்தது.

மகாராஜாக்கள், ராஜாக்கள், குட்டி ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ‘தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட’ இருக்கைகளில் கிங்குக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின் முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். அந்த மைதானத்தில் பல சமஸ்தானங்களைச் சேர்ந்த வீரர்கள் வியர்வை வழிய வழிய வரிசை கட்டி நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ‘வரவழைக்கப்பட்டிருந்தார்கள்’. எனவே கூட்டம் ஓஹோ!

சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் வந்து நின்றது. அந்த மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட கிங்கும் குயினும் இறங்கி மண்டபத்திலுள்ள சிம்மாசனங்களை நோக்கி நடந்தார்கள். சிறுவர்களும் வால்போல. கிங்குக்குரிய மரியாதை பதவியேற்பு மரியாதையாக நூற்றியொரு முறை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King – வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே ஆரம்பமானது.

அடுத்த நிகழ்ச்சி என்ன? ஒவ்வொரு மகாராஜாவாக தர்பார் மண்டபத்துக்கு வந்து கிங்குக்கும் குயினுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அதாவது சிரம் தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டும் என்று முன்பாகவே வைஸ்ராய் ஹார்டிங்கிடமிருந்து எல்லா மகாராஜாக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் இருபத்தியொரு குண்டு மரியாதை கொண்ட ஹைதராபாத், பரோடா, குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்களும் மாபெரும் சமஸ்தானத்தின் மகாராஜாக்கள்தான். கிங் போலவே எங்களுக்கும் மரியாதை அதிகம்தான். நாங்கள் ஏன் கிங்குக்கு குனிந்து வணக்கம் வைக்க வேண்டும்? பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவுக்கு மட்டுமே இப்படி கேட்கும் தைரியம் இருந்தது. ஆனால் நேரடியாகக் கேட்காமல் நாகரிகமாக ஒரு கடிதம் எழுதி வைஸ்ராய்க்கு அனுப்பினார். ‘ஒரு வேண்டுகோள். எல்லா மகாராஜாக்களும் மரியாதை செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, சிறிய சமஸ்தான மகாராஜாக்கள் மட்டும் கிங்குக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் மாற்றம் செய்யலாமே.’

பரோடா மகாராஜா

ஆனால் சாயாஜி ராவின் அந்த வேண்டுகோள் கண்டுகொள்ளப்படவில்லை. தர்பாருக்கு வந்த மகாராஜாக்களுக்கு ‘கிங்குக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும்’ என்று வகுப்பு எடுக்கப்பட்டது. ஒத்திகை செய்தும் காண்பிக்கப்பட்டது. அதாவது கிங்குக்கு முன் சென்று நின்று மூன்று முறை குனிந்து வணக்கம் வைக்க வேண்டும். கையோடு எடுத்து சென்றிருக்கும் பரிசுப் பொருள்களைக் கொடுத்து கௌரவிக்க வேண்டும். பின்பு முதுகைக் காட்டாமல் அப்படியே ரிவர்ஸ் கியரில் கொஞ்ச தூரத்துக்கு கீழே விழாமல் வந்தபின்பே திரும்பிச் செல்ல வேண்டும். சாயாஜி ராவின் கவனத்துக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் வரவில்லை. அவருக்கு ஒத்திகை பற்றியும் எதுவும் தெரியாது.

தர்பாரில் மரியாதை செய்யும் படலம் ஆரம்பமானது. இந்தியாவின் மிகவும் உயரிய, செல்வாக்கு மிகுந்த சமஸ்தானமான ஹைதராபாத்தின் நிஜாமுக்கு முதல் மரியாதை. அதாவது அவர்தான் முதலில் கிங்குக்கு நலுங்கு செய்ய அழைக்கப்பட்டார். அப்போதுதான் ஹைதராபாத்தின் நிஜாமாகப் பதவியேற்றிருந்த கஞ்ச மகாபிரபு ஒஸ்மான் அலிகான், கிங்கை நோக்கி வந்தார். முறைப்படி மூன்று முறை குனிந்து வணக்கம் வைத்தார். அரை மனத்துடன் மரகத நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ரிவர்ஸ் கியரில் கிளம்பினார்.

அடுத்த மரியாதைக்குரியவர் பரோடா மகாராஜாதான். தர்பாருக்காக வந்திருந்த மகாராஜாக்களெல்லாம் உற்சவர் போல ஏகப்பட்ட நகைகளைச் சாத்திக் கொண்டு வந்திருந்தார்கள். படு ஆரம்பரமான உடை வேறு. எல்லோரும் பலவித கற்கள் பதிக்கப்பட்ட உடைவாள் வைத்திருந்தார்கள். ஆனால் மற்றவர்களைவிட சாயாஜி ராவ் மிக எளிமையாக வந்திருந்தார்.

குஜராத் பாணி வெள்ளை நிற பட்டுடை. தலைப்பாகை. சின்னதாக ஒரு வைரப்பதக்கம். கழுத்தில் ஒரு முத்துமாலை. அதைக்கூட திடீரெனத் தன் மகனுக்கு அணிவித்துவிட்டார். அவர் இடையில் உடை வாள் இல்லை. தங்கக் கைப்பிடி உடைய கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு கிங்கை நோக்கிச் சென்றார். தனக்கு முன் சென்ற நிஜாம் எப்படி மரியாதை செய்தார் என்றெல்லாம் சாயாஜி ராவ் கவனிக்கவில்லை.

கிங் முன் சென்று நின்றார். ஒருமுறை குனிந்து வணக்கம் வைத்தார். நகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். பின் முதுகைக் காட்டியபடி திரும்பி வந்துவிட்டார். வைஸ்ராய் ஹார்டிங்குக்குக் காதில் புகை. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சாயாஜி ராவ், கிங்கை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் எதுவும் அறியாதவராக தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார் சாயாஜி ராவ்.

அடுத்ததாக குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்கள் மரியாதை செய்தார்கள். அதற்குப் பின் ரேங்க் வாரியாக. அவ்வளவு ஆடம்பரமான உடைகளுடன், நகைகளுடன் மகாராஜாக்கள் கேட் வாக் சென்றதைப் பார்க்கும்போது பேஷன் ஷோ போலத்தான் இருந்தது. பன்னா என்ற சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா, கிங்கின் அரியணை மேல் சொருகி வைத்துக் கொள்ள 12 இன்ச் விட்டமுள்ள, ரத்தினக் குடை ஒன்றைக் கொடுத்தார். இப்படி விதவிதமான பரிசுகள் குவிந்து கொண்டிருந்தன.

கிங்குக்கு மரியாதை

அடுத்ததாக இந்தூர் மகாராஜா திகோஜி ராவ் கிங்கை நோக்கி புயல் வேகத்தில் கிளம்பினார். தங்க, வெள்ளி பட்டைகளுடன் கூடிய பட்டுடை. உடலெங்கும் ஆபரணங்கள். இடையில் வாள். அதுபோக கையில் தங்கத்தலான, மரகதக் கல் கைப்பிடி கொண்ட கைத்தடி வேறு. அவ்வளவு உபரி எடையையும் சுமந்து கொண்டு, அந்தப் பளபளா தரையில் கால் பதித்த திகோஜி ராவ், தத்தக்கா பித்தக்காவெனத் தடுமாறி விழுந்தார். கைத்தடி ரெண்டு துண்டாகிப் போனது. நான்கைந்து பணியாளர்கள் வந்து அவரைத் தூக்கிவிடும்படி ஆகிவிட்டது. அதற்குப் பின் திகோஜி, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, வெகு ஜாக்கிரதையாக நடந்து சென்று கிங்குக்கு கும்பிடு போட்டார்.

இப்படி ஒவ்வொருத்தராக வந்து குனிந்து நிமிர்ந்து சென்று கொண்டே இருக்க, நீண்ட நேரத்துக்கு அசுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது தர்பார். சில சின்ன ராஜாக்கள், கிங்குக்கு கும்புடு போட ஆர்வம் காட்டினார்கள். ஆனால் தகுதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தியாவின் அப்போதைய தலைநகரம் கல்கத்தா. அது இந்தியாவின் கிழக்கு மூலையில் இருந்தது. எனவே இந்தியாவின் மையத்திலுள்ள டெல்லியைத் தலைநகரமாக வைத்துக் கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்திருந்தது. அந்த தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் அந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

‘இனி இந்தியாவின் தலைநகரமாக டெல்லி செயல்படும்.’

இன்றோடு நூறாண்டுகள் கழிந்துவிட்டன.

Leave a Comment